Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 34

செல்வாவை சந்தித்ததற்கு மறுநாள் காலையில் தீபக் தன்னுடைய பள்ளித்தோழி சாம்பவியினுடைய வீட்டிற்கு சென்று திவ்யாவின் திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு வர அன்று மாலை ட்யூட்டியிலிருந்து வந்த தன் மகளிடம் ரேணுகா,

"பவிம்மா...... இன்னிக்கு மார்னிங் உன் ப்ரெண்டு தீபக் உனக்கு இன்விடேஷன் குடுக்க நம்ம வீட்டுக்கு வந்துருந்தார்டா; அவரு தங்கச்சி திவ்யா உன் ஜுனியராமே.... அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாம்! நீ கண்டிப்பா அந்த மேரேஜ் அட்டெண்ட் பண்ணனும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க!" என்று சொன்ன தன்னுடைய அம்மாவை கழுத்தில் கைகோர்த்து கட்டிக் கொண்ட சாம்பவி,

"வாவ்; திவ்ஸ்க்கு மேரேஜா! சூப்பர்; நீ என்ன பண்ற; உன் புருஷனையும் அன்னிக்கு லீவ் போடச் சொல்லிடு! நாம திவ்ஸோட மேரேஜ கண்டிப்பா அட்டெண்ட் பண்றோம். ஓகேவா ரேணு?" என்று அவரிடம் கேட்டு தன் அன்னையின் கன்னத்தில் தன் மூக்கினால் உரசி,

"ஏய்.... ஏன்டீ இப்டி அழிச்சாட்டியம் பண்ற?" என்று திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் அவள் செய்வதைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.

"யாருடா பவி இந்த திவ்யா? ஸ்கூல் ப்ரெண்டா? அம்மாக்கு தெரியாது?" என்று கேட்ட தன்னுடைய அன்னையிடம்,

"அதாம்மா! ப்ளஸ்டூவுல கேங்க் கேங்கா பிரிஞ்சு சண்ட போட்டுட்டு இருப்போம்னு சொல்லியிருந்தேன்ல? அதுல ஒரு கேங்க் தீபக்கோடது! தீபக்கோட சிஸ்டர் தான் இந்த திவ்யா! அண்ணனோட கூட ரொம்ப ஒட்ட மாட்டா; சாம் அக்கா, சாம் அக்கான்னு எம்பின்னாடியே சுத்தி சுத்தி வருவா. ரொம்ப இன்னொசென்ட் கேரக்டர்மா; இப்ப எப்டி இருக்காளோ? தீபக் என்ன செஞ்சுட்டு இருக்கானோ? வீட்ல வந்து இன்வைட் பண்ணியிருக்கான்னு வேற சொல்ற; கண்டிப்பா பங்ஷன்ல கலந்துக்குறோம். டாடிட்ட சொல்லிடு! ஒரு நல்ல கிப்ட்டா நீயே வாங்கி வச்சிடும்மா!" என்று சொன்னாள் சாம்பவி.

"ப்ரெண்டுக்கு கல்யாணம்னா என்ன மாதிரி கிப்ட் வாங்குறது? சரி ஓகே! நான் ஷாப்ல போயி பார்த்துட்டு உனக்கு மெசேஜ் பண்றேன் விடு; சரி, ரொம்ப நாளா டச்ல இல்லங்குற; அப்ப அந்தப்பொண்ணுக்கு கால் பண்ணி விஷ் பண்ண வேண்டியதுதானடீ; இன்விடேஷன்ல மொபைல் நம்பர் பார்த்த மாதிரி நியாபகம்..... இருக்கான்னு செக் பண்ணு பவிம்மா!" என்று சொன்ன தன் அன்னையிடம்,

"ம்ப்ச்! முதல்ல சூடா ஏதாவது குடிக்கக் குடு ரேணு! ரொம்ப டயர்டா இருக்கு; இன்னிக்கு ரெண்டு ரூட் கேனல், ஒரு எக்ஸ்ட்ராக்ஷன்னு லன்ஞ்ச்ல இருந்து உட்காரவே டைம் இல்ல! ரிலாக்ஸ்டா ஒரு குளியல போட்டு, வண்டிக்கு சூடா ஒரு கப் பெட்ரோல போட்டுட்டு தான் எந்த வேலையா இருந்தாலும் பாக்கப்போறேன்!" என்று தன் அன்னையிடம் சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்றாள் சாம்பவி.

செல்வா இங்கிருந்து கிளம்பிய பிறகு சாம்பவி தனக்குள் ஒடுங்கி எப்போதும் அவளது அறைக்குள் முடங்குவதைப் பார்க்க பொறுக்காத ரேணுகா சாம்பவியின் அம்மம்மா, தாத்தா இருந்த அறையை தான் எடுத்துக் கொண்டு தனக்கு எதிரே சற்று தள்ளியிருந்து அவர் இதுவரை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த அறையை தன்னுடைய மகளுக்கென ஒதுக்கி அவளது சாமான்கள் அனைத்தையும் மேலிருந்து கீழிறக்கி கொண்டு வந்து ஒரே நாளில் அந்த அறையை செட் செய்து விட்டார்.

அன்று வழக்கம்போல மேலை ஏறப்போன சாம்பவியை படிக்கட்டில் ஏறும் முன் வழிமறத்தவர் அவளிடம்,

"இனிமே உன்னோட ரூம் கீழ இருக்கு பவி! உன் பீரோவை மட்டும் அப்பா வந்ததுக்கு அப்புறம் கீழ கொண்டு வர அரேன்ஜ் பண்ண சொல்றேன்; அதுவரைக்கும் கபோர்ட்ல க்ளோத்ஸ வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்க!" என்று உறுதியான குரலில் சாம்பவியிடம் சொன்னார்.

"யாரக் கேட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க மிஸஸ் சபாபதி! டோண்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ்!" என்று கோபக்குரலில் சொன்ன சாம்பவியை ஓங்கி ஒரு அறை வைத்தார் ரேணுகா.

"அ......ம்மா! ஏய்; ஆர் யூ நட்ஸ்?" என்று தன் கன்னத்தை பற்றிக் கொண்டு பேசியவளிடம்,

"யூ கேன் ஸே லைக் தட் ட்டூ!
இப்ப எப்டி கூப்ட? அம்மான்னா? தட்ஸ் ரைட்! இனிமேலும் என்னை நீ அப்டித்தான் கூப்டணும்! மை ஸ்வீட் லிட்டில் கேர்ள்! ப்ரெஷ் அப் ஆகிட்டு சாப்ட வா!" என்று சொல்லி விட்டு அவள் மறுகன்னத்தை லேசாக கிள்ளி முத்தமிட்டு விட்டுப் போனார் ரேணுகா.

விவரம் தெரிந்த நாளில் இருந்து அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்த ஒரு சிறு பெண்ணுக்கு இந்த பெண்மணியின் ஒப்பனையில்லாத பரிசுத்தமான பாசம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்துப் போய் விட்டது. மிஸஸ் சபாபதி ப்ளஸ்டூ பாதி நிறைவுறுவதற்குள் சாம்பவிக்கு மம்மி ஆனார். முழுதாக நிறைவுறுவதற்குள் அம்மா ஆகிப் போனார்.

சாம்பவி ப்ளஸ்டூ தேர்வு எழுதி முடித்ததும் சபாபதி, ரேணுகாவுடன், தன் மகளை அழைத்துக் கொண்டு கொல்கத்தா வந்திருந்தார்.

"என்ன டாடி..... திடீர்னு ட்ரிப் எல்லாம்? எதுக்கு இங்க வந்துருக்கோம்? ஸ்ட்ரெஸ் ரிலாக்ஷேஷனுக்காகவா?" என்று கேட்ட தன்னுடைய மகளிடம் சிறு யோசனைக்குப் பின்,

"வித்யா இங்க தான்டா இருக்கா! நீ அவள மீட் பண்ணனும்னு நினைச்சா ஒருதடவ போய் பார்த்துட்டு வரலாம்!" என்றார் மெல்லிய குரலில்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு சபா? எப்ப இன்னொரு குழந்தைய பத்தி என்னால நினைச்சுக்கூட பாக்க முடியாதுன்னு உங்க கிட்ட சொன்னனோ, அப்போலேர்ந்து பவி தான் நம்ம பொண்ணு! இவள இப்ப இவளோட அம்மாட்ட அனுப்புறதையும் என்னால நினைச்சுக்கூட பாக்க முடியாது! பவி...... அம்மா உன்னை நல்லாப் பார்த்துப்பேன்டா; நீ வேற எங்கயும் போகாத! அங்க உனக்கு ஏதாவது டிஸ்அப்பாயின்மெண்ட்ஸ் இருக்கலாம்! இந்த ஒரு விஷயத்துல அப்பா பேச்ச கேக்காதடா!" என்று பதறியவரின் கண்களில் துளியளவும் நடிப்பு இல்லை. அங்கே இருந்ததெல்லாம் பாசம், பாசம், பாசம்.......மட்டுமே!

தன்னுடைய தந்தையை தாண்டி நின்று கொண்டிருந்தவரின் எதிரே வந்து ரேணுகாவின் மார்பில் முகம் பதித்துக் கொண்டவள்,

"ம்மா...... நான் இந்த ரூம விட்டுக் கூட எங்கயும் வெளிய போகல. நாம நாளைக்கே சென்னை கிளம்பலாம்! நீங்க டென்ஷன் ஆகாதீங்க!" என்றவள் தன் தந்தையிடம்,

"ஸாரிப்பா! அந்த லேடி எனக்கு அந்த லேடியாவே இருக்கட்டும். அம்மா தான் இங்க இருக்காங்களே? எதுக்கு வேற யாரையோ போய் பார்த்துட்டு இருக்கணும்? ஏதாவது டெஸிஷன் எடுக்கறதுனா இனிமே அம்மாட்டயும், எங்கிட்டயும் ஒருவார்த்த கன்சல்ட் பண்ணிட்டு எடுங்க; ஊட்டி, லடாக், ராஜஸ்தான் இப்டி நிறைய டூர்ஸ் போகணும்னு நான் நினைச்சு வச்சுருந்தேன்! என்னை அநாவசியமா இங்க கூட்டிட்டு வந்து டைம், மணி ரெண்டையும் வேஸ்ட் பண்ணிட்டீங்க!" என்று சொன்ன சாம்பவியிடம் விழிகளில் இருந்த வெளியில் தெறித்த நீருடன்,

"நல்லா சொல்லு! அப்டியாவது உங்க டாடிக்கு அறிவு வரட்டும்!" என்று சொன்னார் ரேணுகா.

அன்று தொடங்கிய அந்தக் குடும்பத்தின் மனமகிழ்ச்சி இன்று வரை கொஞ்சங்கூட குறையவில்லை. அம்மா என்ற அழைப்பு சாம்பவி வளர வளர ரேணும்மா ஆனது. பின் அவள் கல்லூரிக்கு, வேலைக்கு செல்ல ஆரம்பித்ததில் இருந்து ரேணு ஆகி விட்டது.

கூட்டில் அமர்ந்திருக்கும் தன் குஞ்சுப்பறவையை வெளியே அழைத்து வந்து பரந்த உலகத்தை காட்டுவது போல் ரேணுகா தன் மகளுக்கு வெளி உலகத்தைக் காட்டினார். தைரியம் ஊட்டினார். நல்ல நண்பர்களுடன் தன் மகளை வெளியூர்களுக்கு எல்லாம் அனுப்பி வைத்தார். அடிப்படை சமையலை கற்றுக் கொடுத்தார். மொத்தத்தில் இவர்கள் இருவரும் ஜோடி போட்டுக் கொண்டதால் சபாபதி ஒற்றை ஆளாய் போகும் அளவிற்கு சாம்பவி ரேணுகாவுடன் ஒட்டிக் கொண்டாள்.

தனக்காக இன்னொரு குழந்தையை வேண்டாம் என்று சொன்ன தன் அம்மாவிடம் உங்கள் குழந்தை எந்த க்ரேடில் இருக்கிறது என்று கேட்ட தன்னுடைய அதிகப்பிரசிங்கித்தனத்தை நினைத்து வருந்தினாள் சாம்பவி.

தோள் வரை தொக்கி நின்ற அவளது கூந்தல் இப்போது முதுகு வரை அடர்த்தியாக வளர்ந்திருந்தது. அவளுடைய ஆசைக்காக ரோலர் ஸ்கேட்டிங்கும், அம்மாவின் ஆசைக்காக வீணையும் கற்று இந்த இரண்டு கலையும் எனக்கு கொஞ்சம் பரிச்சயம் என்ற அளவில் இருந்த போது நேரமின்மை காரணமாக இரண்டையும் விட்டு விட்டாள்.

அவ்வப்போது ரோட்டில், கடைத்தெருவில், காலேஜ் பஸ்ஸிற்காக காத்திருக்கும் நேரத்தில் காது வரை முடி மறைத்த பரட்டையான ஹேர்ஸ்டைலில் யாரையாவது பார்த்தால் என்றால் அன்று முழுவதும் அவள் மனதிற்குள் இருந்து "என்னாமே..... செல்வாவ நீ மறந்தே போய்க்கினியா?" என்ற குரல் மறுபடியும் மறுபடியும் அவளுக்கு கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் அவன் இவளை நினைத்து ஜபித்துக் கொண்டிருந்த அளவுக்கு, இவள் அவனை நினைத்தாளா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும்!

மகளின் திருமண விஷயத்திலும் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை சபாபதி எப்போதோ தன் மகளிடமே தெளிவாக உரைத்து விட்டார்.

"பவி..... உன்னோட கல்யாணம்; உன்னோட டெஸிஷன் தான்! நீ யாரை மாப்பிள்ளைன்னு சொல்றியோ, அந்த பையனோட கேரக்டர், பேக்ரௌண்ட், பேமிலி ஸ்டேட்டஸ் இதல்லாம் வெரிஃபை பண்ண வேண்டியது மட்டுந்தான் எங்களோட வேல. ஆனா மாப்ளய செலக்ட் பண்ண வேண்டியது உன்னோட வேல! அந்தப் பையன் யாரா வேணாலும் இருக்கலாம். ஆனா நல்ல பையனா இருக்கணும்! அது ஒண்ணுதான் எங்களோட ரொக்வொயர்மெண்ட்!" என்று அவள் ஒரு தனியார் மருத்துவமனையில் டென்டிஸ்டாக அப்பாயின்ட்மெண்ட் வாங்கிய பத்தாவது நாளில் அவளது தந்தை அவளிடம் சொல்லி விட்டார்.

அவர் இந்த வார்த்தைகளை சொல்லி முழுதாக இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. இன்று அவனை அழைத்துப் பேசினால், நாளை காலையில் கண்முன்னே வந்து நிற்பான் தான்! ஆனாலும் சாம்பவிக்கு செல்வாவை கூப்பிடுவதற்கு ஏதோ ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. அவள் பேச்சை கொஞ்சமாவது மதித்து அவன் வாழ்வில் சொல்லிக்கொள்ளும் படியாக ஏதாவது ஒரு சாதனையாவது செய்திருப்பானா? கண்டிப்பாக வாகை செல்வன் தான் அவளுடைய எதிர்கால கணவனாக வர வேண்டுமா? அவனுக்கு நாம் ஒரு நம்பிக்கையை தானே
விதைத்திருந்தோம்? அவனிடம் வேறு எந்த ஒரு தீர்க்கமான முடிவும் சொல்லவில்லையே.....? என்று அவளுக்குள்ளாகவே கேட்டு குழம்பிக் கொண்டிருந்தாள்.

வாகை செல்வனின் உரிமை உணர்வும், சாம்பவியின் குழப்ப உணர்வும் எந்த இடத்தில் சந்தித்துக் கொள்ளப்போகிறது என்பது காலத்தின் கைகளிலா, செல்வாவின் கைகளிலா, இல்லை சாம்பவியின் கைகளிலா என்ற கேள்வி இப்போது வரை விடை தெரியாத கேள்வியாக தான் இருக்கிறது!

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro