Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 34

திங்கட்கிழமை மாலை ஆறே முக்கால் மணியளவில் வெள்ளையும் ஆரஞ்சுமாக பூக்களிட்ட ஒரு டாப்ஸூடன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்திருந்தாள் வதனி.

வாசலிலேயே அவளைப் பார்த்து விட்டவன் அவளது உடையைப் பார்த்து விட்டு எரிச்சலுடன் ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

"பொடவ மாத்துறதற்கு சோம்பேறியா இருக்குமுன்னு சொல்லிட்டு இப்ப வீட்லயே ஒக்காரப் போறா இவ..... நீ கெளம்பாம இருக்குறதுக்கு எத்தாம்பெரிய ப்ளான போட்டுருந்தாலும் எங்கிட்ட அது ஒன்னும் வேலைக்காகாதுடீ செல்லம்!" என்று மனதிற்குள்ளாக அவளிடம் பேசியவன் அவளை கண்டும் காணாதது போல்
கட்டிலில் கிடந்தான்.

வாசலில் செருப்பை கழற்றி விட்டு மேலே ஏறாமல் அப்படியே நேராக
முகிலிடம் வந்து அமர்ந்தவளிடம்,

"வந்துட்டியா தங்கம்? ஒனக்காக தான் ஜெயனு இம்புட்டு நேரமா காத்துக்கிட்டு இருக்குறான்; இன்னிக்கு அவன் சேக்காளி பசங்களுக்கு பொறந்தநாளாம்ல? ஒங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூப்ட்டுருக்குறதா ஜெயனு சொன்னாப்ல! டீ எடுத்தாரவா கண்ணு? குடிச்சுட்டு அங்க கெளம்புறீங்களா?" என்று கேட்டார் முகிலமுதம்.

"இல்ல முகில்ம்மா; எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு; இன்னிக்கு பேங்க்ல நெறய வேலை; நஸார் ஸார் வீட்ல பர்த்டே பங்ஷனுக்கு ஜெயன மட்டும் போயிட்டு வரச் சொல்றீங்களா? இல்ல நீங்களும் அவனுமா போயிட்டு வாங்களேன்; நைட்டுக்கு நான் வீட்ல சிம்பிளா ஏதாவது வச்சுக்குறேன்.....!" என்று வதனி முகிலிடம் கேட்க அவளது பேச்சை காதிலேயே வாங்காதவன் போல ஜெயன் கட்டிலில் படுத்துக் கொண்டு தன்னுடைய மொபைலில் யூடியூப்பில் ஏதோ ஒரு ட்ராவல்ஸ் vlog ஐ பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஜெயனு.... வதனிப்புள்ளைக்கு அலுப்பா இருக்குதாம். நஸாரு வீட்டுக்கு நீ மட்டும் போயிட்டு வர்றியாய்யா?" என்று வதனியை ஒரு பார்வை பார்த்த படி தன் மகனிடம் கேட்டார் முகிலமுதம்.

"நான் மட்டுமா போறதுக்கு எதுக்கு அங்க போயிக்கிட்டு? நானும் அங்க போகல அமுதாம்மா!" என்று சொன்னவன் கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டான்.

"ஏய்..... நீ பாட்டுக்கு படுத்துக்கிட்டு
அங்க போகலன்னு சொன்னா என்ன அர்த்தம்? உன்னைய உன் ப்ரெண்ட் எதிர்பார்ப்பாருல்ல? நீ போகலையின்னா வருத்தப்பட மாட்டாரா? ஆயிரத்து முந்நூறு ரூபா குடுத்து ஹசன், ஃபைசல் ரெண்டு பேருக்காகவும் வாங்குன டான்ஸிங் ரோபோட்டையும், ஏரோப்ளைனையும் என்ன செய்றது?" என்று கேட்டவளை லேசாக தலையை தூக்கிப் பார்த்தவன்,

"ரெண்டு பொம்மையவும் நானே வச்சிக்கிட்டு ஜாலியா வெளையாடுவேன். நான் சின்னப்புள்ளயா இருந்தப்ப எனக்கு இப்டியெல்லாம் வெலஒசந்த வெளாட்டு சாமான அமுதாம்மாவும், எங்கப்பாவும்  வாங்கித் தந்ததேயில்ல! அதுனால வாங்கி வச்ச சாமான் வீணாகிடுமுன்னு நீ ஒண்ணும் கவலப்படாத. மேல போயி மூஞ்சி கீஞ்சிய கழுவிட்டு, நைட்டு சாப்பாட்டுக்கு கீழ எறங்கி வா!" என்று அவளிடம் சொன்னவன் இப்போதும் படுத்திருந்த அதே நிலையிலேயே தான் கிடந்தான்.

"ம்ப்ச்! என்ன முகில்ம்மா இவன் இப்டி பேசுறான்? நீங்க இவன என்னன்னு கேளுங்க! அவங்க பங்ஷனுக்கு போயிட்டு வரச் சொல்லுங்க!" என்று கிளம்ப வேண்டியவனை விட்டு விட்டு அவனை கிளப்பி விடுபவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள் வதனி.

"நாஞ்சொன்னால்லா இந்தப்பெடாரம் ஒன்னத்தையும் கேக்காது வதனிம்மா; ஒண்ணு நீ இவங்கிட்ட பேசு; இல்லையின்னா ரெண்டு பேரும் கெளம்பி பொறந்தநாளுக்குப் போயிட்டு வாங்க! எனக்கு இருக்கவேயிருக்கு எங்கோதுமை மாவு தோசை....!" என்றவர் தன்னுடைய மகனை ஒரு முறைப்பு முறைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் சென்றார்.

"என்ன மல மேல இருக்கற வர்த்தினி மேடம்..... மேல கெளம்பல?" என்று கண்களைச் சுருக்கி அவளைப் பார்த்து
கேட்டவனிடம் உச்சுக்கொட்டியவள்,

"இந்த கலர் காம்பினேஷன் ஒனக்கு நல்லாயில்ல..... இப்ப ரீசண்டா எடுத்த க்ரீம் கலர் டீஷர்ட்டும், ப்ளூ ஜீனும் போட்டுட்டு ரெடியாகி இரு; நான் பத்து நிமிஷத்துல கீழ வர்றேன்!" என்று சொல்லி விட்டு கதவருகில் சென்றாள்.

"இந்தாங்க ஏஎம் அம்மா..... கூடப் பத்து நிமிஷம் சென்டு வந்தாலும் பரவாயில்ல; பாக்குற மாதிரி ஒரு சேலைய கட்டிக்கிட்டு வாங்க! எப்ப பாரு அரிசிய கொட்டுற பையில போயி புகுந்த மாதிரி ஒரு உறைக்குள்ள புகுந்துட்டு வந்துர்றது..... சேலையில நீ எப்டி கும்முன்னு இருப்ப தெரியுமா?" என்று சொன்னவனுடைய தலையில் இடி விழ வேண்டுமென்று சபித்தாளோ என்னவோ.... போகும் போது
அவனை அப்படி ஒரு ரௌத்திரப் பார்வை மட்டும் பார்த்து விட்டுப் போனாள்.

பதினைந்து நிமிடங்கள் சென்று அவளது அறையின் கதவைத் தட்டியவனிடம்,

"இரு ஜெயன்.... ரெண்டு நிமிஷம்!" என்று உள்ளிருந்து சொன்னவள் ஒன்றரை நிமிடத்தில் கதவைத் திறந்தாள்.

பச்சை நிறத்தில் உடம்பெங்கும் சின்ன சின்ன அன்னங்கள் போட்ட புடவையில் இருந்தவள் தலையை போனிடெயில் இடுவதற்காக சீவிக் கொண்டு இருந்தாள்.

பெண்கள் என்றால் புடவையைத் தான் அணிந்திருக்க வேண்டும் என்ற பிற்போக்குத்தனமெல்லாம் ஜெயனுக்கு கிடையாது.... ஆனால் இன்று முதல்முறையாக இவளை மெல்லிய பட்டுப்புடவையில் பார்த்தபிறகு வதனியை இப்படி தொந்தரவு செய்தாவது புடவையை அணிய வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஒல்லியிலும் சேராத, பருமனுக்கும் போகாத அவளது அறுபது கிலோ எடை புடவைக்கு மிகக்கச்சிதமான எடையாக இருந்தது. தலை முதல் கால் வரை ஒவ்வொரு இனுக்காக அவளைக் கவனிக்க வைத்த கண்களிடம்,

"ஏய்.... சும்மாயிரு! நீ அவள இப்டி பாக்குறது அவளுக்கு மட்டும் தெரிஞ்சுச்சுன்னா, ஒன்னைய நோண்டி கையில எடுத்துப்புடுவா ஜாக்கிரதை!" என்று ஆயிரம் பத்திரம் சொன்னான்.

"திருஷ்டிப் பொட்டு வைக்கிற அளவுக்கு அழகாயிருக்க வர்த்தினி! இம்புட்டு அழகா கெளம்புறதுக்கு தான் முதல்ல அப்டி சடைச்சுக்கிட்டியாக்கும்.... ஒரு நிமிஷம் ஒம்முடியில இருந்து கைய எடு!" என்றவனிடம்,

"ஏன்....?" என்றாள் கேள்வியாக கன்களைச் சுருக்கி.

"கேள்வியா கேட்டு கொலையா கொல்லாத தங்கம்! எடுன்னா எடேன்!" என்றவன் அவளுடைய க்ளிப்ஸ்ஸை வைக்கும் பெட்டியின் அருகில் சென்று எதையோ உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

"கெடச்சுடுச்சு.....!" என்றவன் அவளுடைய கையில் அவள் புடவைக்கு மேட்ச் ஆன நிறத்தில் ஒரு க்ளிப்பை கொடுத்து விட்டு,

"ரெண்டு பக்கமும் முடியெடுத்து, நடுவுல க்ளிப்பு போடுவல்ல.... அந்த மாதிரி போட்டுக்க! அப்பதான் கொஞ்சமாவது பூவைக்க முடியும்!" என்றான்.

"நீ எதுக்கு இதெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டு இரு....!" என்றவளை கைகாட்டி நிறுத்தியவன், தன்னுடைய க்ரீம் டீஷர்ட்டையும், ப்ளூ ஜீன்ஸையும் அவளிடம் காட்டினான்.

"ச்சை....ய்! நான் சொன்னத இவன் கேட்டுட்டானாம்; இப்ப இவன் சொல்றத நான் கேக்கணுமாம்!
இம்ச பண்ணி தொலையுறான் பொறுக்கி!" என்று முணுமுணுத்த படியே கண்ணாடியின் முன்பாக நின்றவள், அவன் சொன்னபடியே தயாராகி வீட்டிற்கு வெளியே வந்தாள்.

"கதவ நான் பூட்டிட்டு வர்றேன். கீழ சமையக்கட்டுல தண்ணிப்பானை மேல நீ வைக்கிற அளவுக்கு பூ இருக்கு! ஓடிப் போயி அத மட்டும் வச்சுட்டு வந்துரு; கெளம்புவோம்!" என்று சொன்னவனின் பேச்சில் வதனி கொதித்து விட்டாள்.

"நீ ரொம்ப ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க! இது ஒண்ணுமே சரியில்ல பாத்துக்க!" என்று மூக்கு வாய் இரண்டிலுமாக மூச்சு விட்டவளிடம்,

"அப்டியா.... சரியில்லாதத எல்லாம் சீக்கிரத்துல சரி பண்ணிடுவோம்; இப்ப கீழ போயிட்டு நான் சொன்ன வேலைய முடிச்சுட்டு வாடா ஹெட்லைட்டு!" என்றான் வசீகரமாக புன்னகைத்தபடி.

"அங்க போயிட்டு வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் ஒனக்கு எங்கையால தான்டா சாவு!" என்று பற்களை கடித்தவள் மாடிப்படி ஒவ்வொன்றையும் உடைப்பவள் போல் மிதித்து கீழிறங்கி சென்றாள்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro