Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 18

இன்றைய காலை வேளையில் முகில்ம்மாவிற்கு செய்யும் வேலைகளை செய்யாமல் தவறிப் போனதில் அவளுக்கு கொஞ்சம் மனவருத்தம் ஏற்பட்டிருந்தது உண்மை தான்! முகிலமுதத்தின் கட்டிலில் வந்து அமர்ந்து அவருடைய கையைப் பற்றிக் கொண்டு,

"ரொம்ப ஸாரி முகில்ம்மா! இன்னிக்கு நான் உங்கள கவனிக்குறதுல கொற வச்சுட்டேன்!" என்று சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்டாள் வதனி.

"டேய் வதனிம்மா! சும்மாயிருடா நீ வேற.... ஸாரி ரவுக்கன்னுட்டு..... நீயும் மனுஷி தான? என்ன உணர்ச்சி, கிணர்ச்சி ஒண்ணுமேயில்லாத ரோபோட்டு மெஷினா என்ன? நீ இப்ப எங்களுக்கு செய்யுற வேலைக்கே இந்த கேனப்பயலும் நானும் ஒன்னைய இந்த சென்மம் பூரா மறக்காம இருக்கணும்! இதுல என்னவோ ஒருநாத்து வேல செய்யலின்னு ஸாரி வேற கேக்குற? மொதல்ல ஒக்காந்து சாப்டு! மத்ததயெல்லாம் பெறவு பேசிக்கலாம்!" என்று அவளிடம் சொன்னார்.

கண்களை கரித்துக் கொண்டு நின்றவள், இந்த சாப்பாட்டை நான் தான் கண்டிப்பாக சாப்பிட வேண்டுமா என்ற பாவத்துடன் நிற்க முகிலமுதம் அவள் முகத்தை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் அதற்குமேல் பெரிதாக எதையும் பேச விரும்பாதவள் காலை உணவை சிரமப்பட்டு பல்லால் அரைத்து உள்ளுக்குள் முழுங்கி வைத்தாள்.

"ம்ம்ம்.... ஒங்க வயித்த நெறச்சு நல்லா கண்ணு தெரியுற அளவுக்கு சாப்ட்டு முடிச்சுட்டீங்கன்னா, குளிர்பொட்டிக்குள்ள இருக்குற பால எடுத்து, சட்டியில ஊத்தி, காய்ச்சி நாலு ஆத்து ஆத்தி ஒரு இருநூறு மில்லி பால நான் குடிக்க குடுக்க முடியுமாங்க பர்வத வர்த்தினி அவர்களே?" என்று கேட்டவன் அவள் தன்னைப் பார்த்த பார்வையில் அடுத்த நிமிடம்
பருப்பு டப்பாவை தன் கையில் எடுத்துக் கொண்டு அதை தட்டிக் கொண்டிருந்தான்.

"டேய்..... ராக்கோட்டானே!
பால கடையில இருந்து வாங்கிட்டு வந்தவனுக்கு அத காச்சி வாயில ஊத்த முடியாதாக்கும்.... அந்தப்புள்ள கிட்ட எவ்வளவு தான் வேல சொல்றதுன்னு ஒரு கணக்கில்லயா? எனக்குத்தே கால் ஒடஞ்சு கெடக்கு; ஒனக்கென்ன நல்லா செனக்கெழுத்தி மாதிரி தான இருக்க? அப்புறம் பால காச்சி குடிக்கிறதுக்கு எங்க நோவுது ஒனக்கு? செய்ய முடிஞ்சா இங்க குடி.... இல்ல இன்னிக்கு
ஒருநாளைக்கு கடையில போயி பாலக்குடி! இப்ப அங்க போயி நின்னுக்கிட்டு இப்ப என்னத்த கொட கொடன்னு உருட்டிக்கிட்டு கெடக்க?" என்று கேட்ட தன்னுடைய அன்னையிடம்,

"உனக்கு ஒண்ணுந்தெரியாது அமுதாம்மா! நீ சும்மாயிரு; இங்க சமைக்குற எடத்துக்குள்ள ஒரு குபீர் சாமி வந்துருக்கு! அதுக்கு தான் உடுக்கு அடிச்சுட்டு இருக்கேன்!" என்று சொன்னவன் ட்டூ ட்டூ ட்டூ ட்டூ டூம் டூம் டூம், ட்டூ ட்டூ ட்டூ ட்டூ டூம் டூம் டூம்! என்று வாயால் ஒலி வேறு எழுப்பினான்.

"அது யாரு குபீர் சாமி? என்ன உடுக்க? சரியா ட்ரீட் பண்ணாம உட்ட மெண்டல் கேஸா நீ?" என்று அவனிடம் கேட்டு அவனை புரியாத ஒரு பார்வை பார்த்தாள் வதனி.

"நான் ஒண்ணும் லூசுப்பய இல்ல; நீ தாந்தாயி அந்த சாமி! ஒனக்கு தான் உடுக்க அடிக்கணும்! செத்த நவரு!" என்றவன் அவளை ஒரு சுவர்பக்கம் நடுநாயகமாக நகர்த்தி நிற்க வைத்துவிட்டு,

"மலையனூரு அங்காளியே
மாகாளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா" என்று பாடிக் கொண்டிருக்க தலை சாய்த்து இப்போதும் அவனை புரியாத பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் வதனி.

சம்பந்தமே இல்லாமல் இப்போது எதற்கு இந்த சாமி பாட்டும், பருப்பு டப்பாவில் இவன் போடும் தாளமும் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு,

"ஆத்தா..... கோபமா கண்ண உருட்டிக்கிட்டு வந்தவ எம்பாட்ட கேட்டு நல்லபடியா மலெ எறங்கிட்டியா தாயி?" என்று வர்த்தினியின் இடை வரை குனிந்து ஒரு கும்பிடைப் போட்டிருந்தான் அந்த கிறுக்கன்!

பால் வேண்டும் என்று அவன் கேட்டதற்கு அவள் பதிலாக தந்த முறைப்பிற்கு தான் இந்த பாட்டும், அவளது பருப்பு டப்பா உடுக்கை சத்தமுமா என்று தாமதமாக புரிந்து கொண்டவளுக்கு ஜெயனுடைய நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு
எவ்வளவு கட்டுப்படுத்தியும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

கலகலவென்று சிரித்த அவளுடைய சிரிப்பில், "ஐயோடா இவ என்ன சிரிப்பு மோகினியா? இப்டி மயக்குறாளே?" என்று அவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த ஜெயனும்,

"இந்த புள்ள இப்டி எப்பவுமே சிரிச்ச மொகமா இருக்கணும்டா சாமி!" என்ற வேண்டுதலுடன் முகிலமுதமும் வதனியின் மனம் நிறைந்த சிரிப்பினால்
ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

"மலையனரு அங்காளி மலை எறங்கிட்டேன் பக்தா. இப்ப முகில்ம்மாவுக்கும் எனக்கும் டீ போடப் போறேன். உனக்கும் பால் வேணுமா?" என்று கேட்டவளிடம் இல்லையென தலையசைத்து மயக்கத்தில் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்.

"கடைசியா கேக்குறேன்!
ஒனக்கு பால் வேண்டாமா ? அதுக்குதான தாளம் எல்லாம் போட்ட?"  என்றவளிடம் வேண்டாமென வேகமாய் தலையசைத்து ஒருமுறை தலையை உதறிக் கொண்டவன் சமையலறையை விட்டு தன்னுடைய அன்னையிடம் சென்று அமர்ந்து கொண்டான்.

"அமுதாம்மா நீங்க ரெண்டு பேரும் டீ குடிச்சதும் நாங்க கெளம்புறோம்! நீ பத்துரமா இருந்துக்க! ஏதாச்சு அவசரமுன்னா கால் பண்ணு; நான் நஸார இங்க அனுப்பி வைக்குறேன்!" என்று சொன்னான்.

"அதுக்குலா தேவையிராதுய்யா ஜெயனு..... நீங்க வார வரைக்கும் நானும் லச்சுமியும் என்னத்தயாவது பேசிக்கிட்டும், கொறிச்சுக்கிட்டும் கொஞ்ச நேரம் டீவிய பாத்துக்கிட்டும் பொழுத போக்கிடுவோம்! நீ நம்ம பாப்பாவ பத்திரமா கூட்டிட்டுப் போயிட்டு வா! வதனிம்மா நீயுந்தான்டா ஜெயனு கிட்ட ரொம்ப சண்ட போடாம போயிட்டு வா!" என்று இருவரிடமும் சொல்லி அவர்களை வீட்டில் இருந்து வழியனுப்பி அனுப்பி வைத்தார் முகிலமுதம்.

வீட்டிற்கு வெளியில் வந்து ஒரு இறக்கத்தை கடக்கும் வரை பொறுமையாக இருந்தவள் சாலைக்கு வந்ததும் அவனிடம் ஆரம்பித்து விட்டாள்.

"எங்க போறோம் இப்ப? கோவிலுக்குலாம் நான் வர மாட்டேன்! ஏதாவது பரிகாரம், பூஜ, நிவர்த்தி அது இதுன்ன..... உன்னைய கொன்னுடுவேன்! எங்கம்மாவும், வினுவும் செத்து கிடந்தப்ப எங்க போயிருந்துச்சு இந்த சாமியெல்லாம்?" என்று கேட்டவளிடம்,

"நமக்கு ஒரு தாங்கிக்க முடியாத இழப்பு வந்தவொடனே உனக்கு கண்ணு இல்லையான்னு கடவுள திட்டுறது தப்புமா! இப்டியெல்லாம் பேசாத!" என்று அவளிடம் சொன்னான் ஜெயன்.

"அப்டித்தான் பேசுவேன்! எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல; ஒன்னையும் பிடிக்கல! நீ சொல்றதெல்லாம் கேட்டுட்டு
உங்கூட நடந்து வர்றது சுத்தமா பிடிக்கல..... ஆனா எனக்கு இதெல்லாம் நடக்கணும்னு நீ சொல்ற அந்த கடவுள் தான முடிவு பண்ணியிருக்காரு? அதுனால சாமி செய்யுறதெல்லாம் தப்பு தான்!" என்று சொன்னவளிடம் இதற்கு மேல் விவாதம் செய்ய அவன் விரும்பவில்லை.

அவளுடனுனான இந்தப் பயணம் பெரும்பாலும் விவாதத்திலேயே சென்று கொண்டிருக்காமல் சற்றேனும் சுவாரஸ்யமாக கழிந்தால் நன்றாக இருக்கும் என்பது அவனுடைய எண்ணம்!

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro