Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Marukkathe Nee Marakkathe Nee - 5

மறக்காதே நீ மறுக்காதே நீ - 5
"ஹாய் சம்யு" என தனது ஃப்ளாட்டின் கதவை திறந்தாள் அமிதா.

"ஹலோ அண்ணி" என உள்ளே வந்த சம்யுக்தா, கையில் இருந்த சூப்பர் மார்கெட் பையைக் கொடுத்தாள்.

"தாங்க்ஸ் சம்யு. அகிலிடம் காலையிலே சாமான் லிஸ்ட்டும், காய்கறி லிஸ்ட்டும் கொடுத்திருந்தேன். மதியம் லஞ்சுக்கு வரும் போதே வாங்கிட்டு வரேன் என்று சொன்னார். கடைசியில் எப்பவும் போல் வேலை இருக்கு என்று சொதப்பிட்டார். உங்க அண்ணனை நம்பவே முடியாது" என அலுத்துக் கொண்டாள்.

"அவங்க வேலை அப்படி அண்ணி, அவங்களை எதுவும் சொல்ல முடியாது" என சொன்னாள் சம்யுக்தா.

"எத்தனை நாள் ஆபிஸிற்கு லீவ் போட்டிருக்கே சம்யு?" என கேட்டாள் அமிதா.

"மூணு வாரம் லீவ் போட்டிருக்கேன். இரண்டு வாரம் லீவ் கல்யாண வேலையில் வேகமா ஒடி போயிடிச்சு" என சொல்லியபடி பையில் இருந்த காய்களையும் சாமான்களையும் வெளியே எடுத்து சமையலறை மேடையில் வைத்தாள்.

"நான் பார்த்துக்கிறேன் சம்யு" என சொன்ன அமிதாவிடம், "ஏன், நான் ஹெல்ப் செய்ய கூடாதா? மித்ரனை எத்தனை மணிக்கு டின்னருக்கு வர சொல்லியிருக்கீங்க?" என கேட்டாள்.

"ஏழு மணிக்கு வர சொல்லியிருக்கேன்" என சொன்ன அமிதா, "எப்படியிருக்காங்க உங்க புது அண்ணி சம்யு?" என கேட்டாள்.

"கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள் தானே ஆகுது. எங்கூட ஃபிரண்டலியா இருக்காங்க. அம்மாவுக்கும் அவங்களுக்கும் நல்லா ஒத்துப் போகுது. மித்ரன் பூனைகுட்டி மாதிரி அவங்களையே சுத்தி வந்துட்டிருக்கான்" என சிரித்தபடி சொன்னாள்.

"என்னிக்கு அவங்க ஹனிமூன் கிளம்பறாங்க சம்யு?" என்ற அமிதாவிடம், "நாளைக்குக் கிளம்பறாங்க, ஏன் அண்ணி, உங்க முகம் வாடினா மாதிரி இருக்கு. பொட்டிக்கில் வேலை அதிகமா இருக்கா?" என கேட்டாள்.

"ஒரு பெரிய ஆர்டர் இந்த வாரத்துக்குள்ளே முடிக்கனும் சம்யு. சுமிதா தான் ஹெல்ப் செய்யறா. நாளையிலிருந்து அவளுக்கு இண்டர்னல் எக்ஸாம் தொடங்குது" என கவலையுடன் சொன்னாள்.

"ஏன் தெரியலை, மித்ரன் கல்யாணத்திலிருந்து ஒரே களைப்பா இருக்கு. எதையும் சாப்பிடவே பிடிக்கலை" என சோர்வாக சொன்னாள்.

"அண்ணி, ஏதாவது ஃபுட் பாய்ஸன் ஆயிடிச்சா? டாக்டர் கிட்ட போனீங்களா?" என கவலையுடன் கேட்டாள்.

"இன்னிக்குக் காலையில் போனேன். ப்ளட் டெஸ்ட் எடுக்க சொன்னாங்க. சாம்பிள் கொடுத்திட்டு வந்திருக்கேன்" என சொல்லியபடி எழுந்தாள்.

"உங்களுக்கு உடம்புக்கு முடியலைனா எதுக்கு இன்னிக்கு மித்ரனை டின்னருக்கு வர சொன்னீங்க? அவங்க ஹனிமூன் முடிச்சிட்டு வந்த பிறகு பார்த்துக்கலாம். நான் மித்ரனுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்" என தன் ஸ்லிங் பேகில் இருந்து போனை எடுத்தாள்.

"சம்யு, மித்ரனை மட்டுமில்ல, அகிலன் அவரோட ஃபிரண்ட்ஸையும் இன்னிக்கு டின்னருக்குக் கூப்பிட்டிருக்கார். கேன்ஸல் செஞ்சா நல்லாயிருக்காது. உடம்பு சோர்வா இருக்குனு அப்படியே உட்கார்ந்திருந்தோம் என்றால் இன்னும் அதிகமா தான் டையர்ட்டாக தெரியும்" என சொல்லிவிட்டு காய்களை வெட்ட தொடங்கினாள்.

"ஒகே அண்ணி, டின்னரை கேன்ஸல் செய்ய வேண்டாம். எனக்கு உங்களை மாதிரி சமைக்க வராது. என்ன செய்யனும் என்று சொன்னீங்க என்றால் நான் பண்ணறேன். மணி இப்போ நாலு தான் ஆகுது. மூணு மணி நேரத்தில் ஈஸியா செஞ்சிடலாம்" என்றாள்.

"மயூரி வெஜிடேரியன் தான் சாப்பிடுவா போலிருக்கு. அதனால் மெனு இன்னிக்கு வெஜ் தான்" என சொன்னாள் அமிதா.

இருவரும் பேசியப்படி, சமைத்து முடிக்கும் போது மணி ஆறரை ஆகியிருந்தது. வாசல் பெல் அடிக்க, அமிதா கதவை திறந்தாள்.

"அமி, ஸாரிடா.. இன்னிக்கு என்று பார்த்து ஸ்டேஷனில் வேலை அதிகமாயிருந்தது. நீ கொடுத்த லிஸ்ட்டை எங்கே வைச்சேன் என்றே தெரியலை. நீ இப்போ சொல்லு, ஒடி போய் வாங்கிட்டு வந்துடறேன்" என மெலிந்த குரலில் சொன்னான்.

"மணி இப்போ என்ன?' என இடுப்பில் கையை வைத்தபடி கேட்டாள் அமிதா.

ஹாலில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தவன், எதையும் சொல்லாமல் மெளனமாக இருந்தான்.

"இனிமே, நீங்க காய்கறி, சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்து, நான் எப்போ சமைக்கிறது?' என கோபமாக கேட்டாள்.

"ஒண்ணும் பிராப்ளமில்லை. நம்ம மித்ரன் தானே. பக்கத்திலிருக்கிற ஹோட்டலில் டேபிள் புக் செஞ்சிடலாம்" என மெதுவான குரலில் சொன்னான்.

"வீட்டுக்கு டின்னருக்கு வாங்க என்று சொல்லிட்டு, வெளியே கூப்பிட்டுப் போனா நல்லாவா இருக்கும். எனக்குச் சமைக்க தெரியாது என்று தானே மயூரி நினைப்பா?' என கண்களை விரித்துக் கேட்டாள்.

"உனக்கு சமைக்க தெரியாது என்று யார் சொன்னா? நம்ம கீழ் வீட்டு ராமநாதன் அங்கிள் இல்ல, நான் மேலே வரும் போது, இன்னிக்கு நைட் என்ன ஸ்பெஷல், சாயங்காலத்திலிருந்து அமிதா வாசனையா சமைச்சிட்டிருக்கானு கேட்டார். நீ என்ன சமைக்கிறேனு மெனு கூட சொன்னார். எனக்கு உன்னை நினைச்சு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?" என அவன் தலையைக் குனிந்தபடி சொல்லும் போதே, சம்யுக்தா அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

கண்களை இறுக்க மூடி தலையை அசைத்த அகிலன், "அமி, பாரு என்னால அஞ்சு நிமிஷம் கூட உன் முன்னாடி நடிக்க முடியலை. நானே வாலண்டியரா வந்து சிக்கிக்கிறேன்" என சொன்னான்.

"அகில், டிராமா போதும். போய் சீக்கிரம் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. மணி ஏற்கனவே ஏழாக போகுது. டின்னருக்கு அவங்க வந்துடுவாங்க" என அலுப்புடன் சொன்னாள்.

"அமி, இப்போ உடம்பு எப்படியிருக்கு. காலையில் டயர்டாக இருக்கு என்று சொன்னியே?" என கரிசனத்துடன் கேட்டவனை, "அகில் ஒடி போயிடு. சம்யு இருக்காளேனு பார்க்கிறேன்" என பல்லைக் கடித்தபடி சொன்னாள்.

"தாங்க்ஸ் சம்யு" என சம்யுவைப் பார்த்து கண்களை சிமிட்டியப்படி சொன்னவன், வேகமாக சென்று அறை கதவை சாத்திக் கொண்டான்.

"அண்ணி, கிச்சனை கிளீன் செஞ்சிட்டேன். ஆறு பேருக்கு டைனிங் டேபிளையும் செட் பண்ணிட்டேன். நான் கிளம்பறேன்" என்றாள் சம்யுகதா.

"சம்யு, நீயும் டின்னர் சாப்பிட்டு போ. இவ்வளவு ஹெல்ப் செஞ்சிட்டு நீ சாப்பிடலைனா எனக்குக் கஷ்டமாயிருக்கும்" என சொன்னாள் அமிதா.

"கவலைப்படாதீங்க அண்ணி, நான் டேஸ்ட் பண்ணிட்டேன். எல்லாம் எப்பவும் போல சூப்பராயிருக்கு" என தன் பேகை எடுத்துக் கொண்டாள்.

"சம்யு, எனக்கு சமைச்சதில் இன்னும் டயர்ட்டாயிடிச்சு. நீ இருந்தா எனக்கு ஹெல்ப்பா இருக்கும்" என கெஞ்சும் குரலில் சொன்னாள் அமிதா.

தனக்கு உடல்நிலை சரியில்லாத போது, அமிதா தன்னை மருத்துவமனையில் கவனித்துக் கொண்டதை நினைத்தவள், "ஒகே அண்ணி, ஒரு அஞ்சு நிமிஷத்தில் நான் முகம் கழுவிட்டு வந்திடறேன்" என சொன்னாள்.

அஞ்சு நிமிஷத்தில் தயாராகி வந்த சம்யுக்தாவிடம், "சம்யு, நான் குளிச்சிட்டு ரெடியாயிட்டு வந்திடறேன். மணி ஏழே கால் ஆயிடிச்சு. நீ மயூரியும், மித்ரனும் வந்தா உட்கார வைச்சிட்டு பேசிட்டிரு. அகில் அதுக்குள்ளே ரெடியாயிட்டு வந்துடுவார்" என உள்ளே சென்றாள்.

மணி ஏழரை ஆன பின்பும் மித்ரன் ஏன் இன்னும் வரவில்லை என யோசித்தபடி டைனிங் டேபிளில் தனக்கு இன்னொரு சேரை எடுத்துப் போட்டு விட்டு, ஹோம் தியேட்டரில் மெல்லிசையை ஒலிக்க விட்டாள். ஹாலில் இறைந்திருந்த பேப்பர்களை அடுக்கி வைத்து விட்டு நிமிரும் போது, வாசலில் அழைப்பு மணி அடித்தது.

அகிலன் ஹாலில் தென்படாததால், மயூரியை வரவேற்க முகத்தில் விரிந்த புன்னகையுடன், "வெல்கம், உங்களுக்காக தான் இத்தனை நேரம் காத்திட்டிருந்தேன்" என சொல்லியபடி கதவை திறந்தவளது எதிரே சிவப்பு நிற ரோஜாக்களான பூங்கொத்துடன் சித்தார்த் நின்றிருந்தான்.

"இஸிட், வாட் எ பிளஸண்ட் சர்ப்ரைஸ். எனக்காக காத்திட்டிருந்தியா? ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தா, பறந்து வந்திருப்பேனே?' என அவன் வாசற்படியில் காலடி எடுத்து வைக்க, சம்யுக்தா தனது காலடிகளை இரண்டடி பின்னே வைத்தாள்.

அவனை அங்கே எதிர்பாரக்காததால் சற்றே திகைப்படைந்தாலும், தன்னை சமன்படுத்தியவள், "நான் மயூரியும் மித்ரனும் வந்திருக்காங்க என்று நினைச்சேன்" என்று அவன் கண்களை நேராக பார்த்து சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.

"யுக்தா" என அவன் மென்மையாக அழைத்தவுடன் அனிச்சையாக திரும்பியவளிடம், பூங்கொத்தை நீட்டினான்.

"எனக்காக வாங்கிட்டு வந்தீங்களா?" என அவள் உணர்ச்சியற்ற குரலில் கேட்டவுடன், சற்றும் தடுமாறாமல், "இல்லை அமிதாவுக்காக வாங்கிட்டு வந்தேன்" என சொன்னவனிடம், அலட்சியமாக, "அப்போ அமிதாவிடமே கொடுங்க" என சொன்னாள்.

"ஹனி, உனக்குக் கொடுக்கிறதுக்கு வாங்கினா உனக்குப் பிடிச்ச பிங்க் கலர் ரோசஸ் பொக்கே வாங்கியிருப்பேன்" என மென்மையாக சொன்னவன், "இப்போ போய் வாங்கிட்டு வரட்டுமா?" என கண்கள் மின்ன கேட்டான்.

அவள் என்ன பதில் சொல்வது என யோசிக்கும் போதே, "ஹ்ம்ம்" என தொண்டை கனைக்கும் ஒசையில் சித்தார்த்தின் பின்னே தன் பார்வையை திருப்பினாள்.

"ஹாய் சம்யுக்தா" என அவளைப் பார்த்த சொன்ன யதுநந்தன், "அண்ணா, நீங்களாவது உள்ளே போங்க, இல்லை எனக்காவது வழி விடுங்க" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.

சித்தார்த் உள்ளே வந்தவுடன், அவன் பின்னே வந்தவன், "சம்யுக்தா, நீங்க இந்த சிம்பிள் காட்டன் ஸல்வாரில் கூட கியூட்டா இருக்கீங்க. அம்மா நேத்துத் தான் எங்க கிட்டே உங்களைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்க. உங்களுக்கு எல்லா கலரும் சூப்பராயிருக்கும், எல்லா டிரஸ்ஸிலேயும் அழகாயிருக்கீங்க என்று சொன்னாங்க. நான் அப்போ நம்பலை. இப்போ பார்த்தா தான் தெரியுது. ஷி வாஸ் ரைட்" என சொல்லியபடி சம்யுக்தாவிடம் தனது கையை நீட்டியவன், "நைஸ் மீட்டிங் யூ அகைன்" என சொன்னான் யதுநந்தன்.

அவனது கைகளை இயல்பாக பற்றியவள், "வெல்கம் நந்தன். நைஸ் டூ மீட் யூ அகைன்" என மெலிதாக புன்னகைத்தபடி சொன்னாள்.

"உட்காருங்க நந்தன்" என சோஃபாவை காட்டியவள், "ஆண்ட்டி, அங்கிள் எப்படி இருக்காங்க?" என கேட்டாள்.

"ஹ்ம்ம், நல்லாயிருக்காங்க. சம்யுக்தா, எனக்குக் தண்ணி வேணும்" என கேட்டான்.

அவள் சமையலறைக்குள் சென்றவுடன், "அண்ணா, அந்த பக்கத்திலிருந்து ரெஸ்பான்ஸே இல்லை. நாம நினைச்சா மாதிரி ஒரு மாசத்தில் உன் கல்யாணத்தை முடிச்சிட்டு திரும்பி போக முடியாது. இங்கேயே வருஷகணக்கில் இருக்க வேண்டியது தான். அப்பவும் ரிசல்ட் பாஸிட்டிவா இருக்குமா என்று தெரியலை" என சொன்னவன். "நீ செஞ்ச தப்புக்கு அவங்க உன்னை உதைக்காம விட்டிருக்கிறதே பெரிய விஷயம். அவங்க எப்போ உன்னை மன்னிச்சு, நீ செஞ்சதை மறந்து, காதலிச்சு கல்யாணம் செய்யறது? எனக்கு எப்போ தான் ரூட் கிளியராக போகுதோ, தெரியலையே" என சலித்தபடி சொன்னான்.

"யது, ஜஸ்ட் டெவண்டி டேஸ். எனக்கு யுக்தாவை சமாதனப்படுத்தி, என்னை காதலிக்க வைக்க இருபது நாள் போதும்" என உறுதியான குரலில் சொன்னான் சித்தார்த்.

"நந்தன். இருபது நாள் இல்லை, இருபது வருஷமானா கூட உங்க அண்ணனை நான் திரும்பி கூட பார்க்க மாட்டேன்" என கண்டிப்பான குரலில் சொல்லியபடி அவனிடம் தண்ணீர் டம்பளரை நீட்டினாள்.

"யுக்தா, எனக்கு உங்கிட்ட விழுந்ததே இந்த தன்னம்பிக்கையால் தான். எங்கிட்டேயிருந்து தப்பிச்சு போகவே முடியாது என்று தெரிஞ்சும், நீ விடாம இரண்டு தடவை முயற்சி செஞ்சே பாரு. ஐ வாஸ் இம்ப்ரெஸ்ட் எ லாட்" என சொன்னவனது குரலில் உணர்ச்சிகள் நிறைந்திருந்தது.

"ஸோ, என்னை பத்தி தெரியுமில்ல. அப்பறம் எதுக்கு உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணறீங்க?" என சீரியசாக கேட்டாள்.

"யுக்தா, யூ ஆர் வொர்த் டெவண்டி இயர்ஸ். ஆனா, எனக்கு இருபதே நாள் போதும், அதுக்குள்ளே நீ என்னை விரும்பலைனா, நான் உன்னை அதற்குப் பிறகு டிஸ்டர்ப் செய்யவே மாட்டேன். ஆல் தி பெஸ்ட் பேபி" என அவளை ஆழ்ந்து பார்த்துச் சொன்னான்.

"அமிதா, நமக்கு அடுத்த இருபது நாள் செம இண்ட்ரெஸ்டிங்க இருக்க போகுது" என சிரித்தபடி அகிலன் சொன்னான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro