Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 6

அன்று அதிகாலை பயிற்சி வகுப்பிற்கு மித்ரன் தயாராகி வந்தான். குழந்தைகள் அனைவரும் அதற்குள் அவரவர் நிற்கும் பொஸிஷனில் சரியாக வந்து நின்று வார்ம் அப் செய்து முடித்திருந்தனர்.

யானையின் பக்கத்திலயே நிற்கும் பாகன் போல் எல்லாம் மித்ரன் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது நடந்து கொள்வதில்லை. தனி மனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு இவை இரண்டும் பிள்ளைகள் அவர்களாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பான். எங்கேனும் ஏதாவது மாணவன் தவறு செய்தால் மட்டுமே அவர்கள் அருகில் சென்று திருந்துவான். மற்றபடி யோக பயிற்சி மேற்கொள்ளும் முன் உடம்பை தயார் படுத்தும் நிலைக்காக எல்லாம் மித்ரன் கண்காணிப்பு வேலையை மட்டும் தான் செய்து கொண்டிருப்பான்.

சிறுவர்கள் வார்ம் அப் முடித்து விட்டு ஆர்வமாக மித்ரனை பார்க்க அவன் அவர்களிடம் புன்னகையுடன், "இன்னிக்கு ஆஷாவும், ரோகேஷூம் ப்ராப்பரா வொர்க் அவுட்ஸ் எல்லாம் செஞ்சாங்க. ஸோ அவங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஃபைவ் பாயிண்ட்ஸ். ஓகேவா?" என்றதும் சிறுவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் மினி டைரியில் மித்ரன் சொன்ன நபர்களின் பெயருக்கு நேராக மதிப்பெண்களை எழுதிக் கொண்டனர். இதுவும் மித்ரன் சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் கண்டுபிடித்த ஒரு வழி தான். ஒவ்வொரு நாளும் நன்றாக செய்யும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி மாத இறுதியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஒரு பரிசுப் பொருளை வாங்கித் தருவான். அந்த ஆர்வத்தில் தான் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு நன்றாக செயல்பட்டனர்.

"இன்னிக்கு தனுராசம் செய்யப் போறோம் பிரண்ட்ஸ். பாடியை
ஃப்ளக்சிபிளா வச்சுட்டு ஸ்டார்ட் பண்ணுங்க. ரெடியா?" என்று கேட்டவனிடம் ஆர்வத்துடன் பிள்ளைகள் தலையாட்டினார்கள். பொஸிஷன் ல படுத்துக்குங்க!" என்றவன் ஒவ்வொரு ஸ்டெப்பாக மாணவர்களுக்கு தனுராசம் செய்யப் பழக்கிக் கொடுத்தான். முடியாதவர்களை முயற்சி செய்ய சொன்னான். நன்றாக செய்த மாணவர்களை தட்டிக் கொடுத்தான். கொஞ்சம் வயதில் பெரிய மாணவர்கள் அதற்கு மேலும் ஐந்தாறு ஆசனங்களை அவனிடம் கற்றுத் தெளிந்ததும் வகுப்பு முடிந்தது. மாணவர்களுக்கு விடைகொடுத்து விட்டு நேராக அருள்மொழியிடம் வந்தான். அவர் சொன்ன காலை வாழ்த்தை ஏற்று பதில் உரைத்தவன், "என்ன ஸார் உட்கார்ந்து பேப்பர் படிச்சுட்டு இருக்கீங்க? ஐஷு எங்க? நீங்க இன்னும் வாக்கிங் கிளம்பலையா?" என்று கேட்டவனிடம் இல்லையென தலையை அசைத்து விட்டு,

"7.30 மணிக்கு ஒரு ரிவ்யூ மீட்டிங் அட்டெண்ட் பண்ணனும்டா மித்ரா, சீக்கிரம் கிளம்பணும்ன்னு தான் இன்னிக்கு வாக்கிங் போகல!" என்றார்.

மித்ரன் எரிச்சலுடன், "மீட்டிங் இருக்குன்னு தெரியுதுல்ல, அப்போ ஒரு ஹாஃப் அன் அவர் முன்னாடி எழுந்துரிக்க வேண்டியது தானே ஸார்! மாமாவும் மருமகளும் சரியான சோம்பேறிங்க! எங்க அவ? இன்னும் அவளுக்கு எழுந்துரிக்க மனசு வரலையாமா?" என்றான் அவரை முறைப்புடன் பார்த்து விட்டு.

"இல்லடா மித்ரா நேத்து ராத்திரி அவளும் நானும் பேசிட்டு இருந்தோம்; தூங்க ரொம்ப நேரம் ஆகிடுச்சு! அதுதான் காலையில எழுந்துரிக்க முடியல!" என்றார் அருள்மொழி.

"என்னாச்சு ஸார்? மாமாவும், மருமகளும் எனக்கு தெரியாம என்ன ரகசியம் பேசுனீங்க? ஐஷு ஏதாவது அப்செட் ஆகிட்டாளா?" என்று கேட்டவனிடம்

"ஆமாப்பா, இன்னும் பத்து நாள் கழிச்சு அமிர் பரத நாட்டிய அரங்கேற்றம் அங்கே நடக்கப் போகுதாம்! அவ நம்ம ஐசுவை இன்வைட் பண்ணியிருக்கா. அதனால தான் நம்ம ஐசு கொஞ்சம் அப்செட் ஆகி அழுது நான் அவளை சமாதானப் படுத்தி, ரொம்ப நேரம் தூங்காம முழிச்சுட்டு இருந்துட்டு, விடியும் போது தான் தூங்கினா. மித்ரா இன்னிக்கு ஒரு நாள் நீ லீவ் போட முடியுமாடா? எனக்கு அவளை தனியா வீட்ல விட்டுட்டு போக மனசே இல்ல. ஆனாலும் கண்டிப்பா போய் ஆகணும்!" என்றவரிடம்

"நீங்க கிளம்புங்க ஸார், தேவையில்லாம மனசை கஷ்டப்படுத்திக்காதீங்க. நான் பார்த்துக்கிறேன்!" என்று அருள்மொழிக்கு தைரியம் சொல்லி விட்டு தன் வீட்டுக்கு சென்று விட்டு பதினைந்து நிமிடங்களில் மறுபடியும் அருள் மொழியின் வீட்டுக்கு வந்து விட்டான் மித்ரன்.

அருள்மொழி அவனிடம் விடை பெற்று அலுவலகத்திற்கு கிளம்பினார். அவரை அனுப்பி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தவன், அடுத்த ஒன்றரை மணி நேரங்களில் பல வேலைகளை செய்து முடித்து விட்டு ஏப்ரனை கழற்றிவிட்டு வெளியே வந்தான்.

ஐஸ்வர்யாவின் அறை வாயிலில் நின்று கதவை இரண்டு மூன்று முறைகள் தட்டியவன் பதிலில்லாததால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். இரவு உடையில் கட்டிலில் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ. அவளை அந்நிலையில் பார்க்க சங்கடப்பட்டு போர்வையை அவளின் மீது போர்த்தி விட்டு அவள் விரல்களை தன் கையில் ஏந்திக் கொண்டு மெதுவாக சொடுக்கிட்டான். பின்னர் அவள் கால்களின் பக்கம் சென்று பாதங்களில் விரல்களால் குறுகுறுப்பூட்டினான்.

"ம்ப்ச்! தூக்கம் வருது. எழுப்பாதீங்க மாமா!" என்று கூறியவளிடம், "வரு கொஞ்சம் சாப்பிட்டுட்டு தூக்கத்தை கன்டினியூ பண்ணிக்கலாம். கெட் அப்!" என்று அவள் போர்வையின் மேல் கை வைத்து அவளை மெதுவாக அசைத்தான் மித்ரன். அவள் மெதுவாக எழ முயற்சிக்கவும், "ஃப்ரெஷ் ஆகிட்டு வா வரு. வெளியே வெயிட் பண்றேன்!" என்று சொல்லி விட்டு வெளியேறினான்.

ஐஸ்வர்யா அவள் மேல் போர்த்தியிருந்த போர்வையை பார்த்து புன்னகைத்து கொண்டாள். அவனது கண்ணியம் அவளை மிகவும் கவர்ந்தது. சிரிப்புடன் சென்று காலை வேலைகளை செய்து முடித்து விட்டு வெளியே வந்தாள்.

"குளிச்சிட்டு வந்துட்டியா? ஏன் வரு! சாப்பிட்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்லமா? குளிச்சுட்டா தூக்கம் வராதே?" என்று கேட்டவனை கண்களால் சுட்டெரித்து கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"ஐயோ முறைக்காத; பயமாயிருக்கு வரு!" என்று புன்சிரிப்புடன் சொன்னவனிடம்

"நல்லா தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி விட்டுட்டு நீ ஏன்டா பேச மாட்ட?" என்று அவனை செல்லமாக தலையில் குட்டினாள் ஐஸ்வர்யா.

"ஓய், ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வேண்டாமா? நீ பாட்டுக்கு தூங்கினா உன் வயிறுக்குள்ள ஸிப்பை திறந்தா சாப்பாட்டை உள்ள வைக்க முடியும்? நீ சாப்பிடணும்ல; சாப்பாட்டை நேரத்துக்கு சாப்பிடணும் வரு, ஸ்கிப் பண்ணக் கூடாது!" என்றான் மித்ரன் அவள் கண்களை பார்த்தபடி.

"சரிங்க டயட்டீசியன் ஸார்! நீங்க சொல்ற எல்லாம் சரியா தான் இருக்கும். சாப்பிட போகலாமா? இன்னிக்கு என்ன ப்ரேக்பாஸ்ட் செஞ்சு வச்சிருக்கீங்க?" என்று கேட்டவளிடம்

"சைட் டிஷ் ரெடி பண்ணியாச்சு. மெயின் டிஷ் இனிமேல் தான் ரெடி பண்ணணும்!" என்று அவளிடம் சொல்லி விட்டு ஆப்பம் தயாரிக்க ஆரம்பித்தான் மித்ரன்.

"வாவ் மித்து! செமையா ஆப்பம் ப்ரிப்பேர் பண்றியே? பட் இப்படி அந்த பாத்திரத்தை ட்விஸ்ட் பண்ணினா தான் ஆப்பம் ஷேப்பா வருமா?" என்று கேட்டவளிடம் சிரிப்புடன்

"நல்ல வேளை வரு; நான் சமையல் கத்துக்கிட்டேன். இல்லைன்னா கஷ்டமாயிருக்கும்!" என்றான் ஆப்பங்களை தட்டில் எடுத்து அவளிடம் நீட்டியபடி.

"ஏன் மித்து அப்படி சொல்ற?" என்று கேட்டவளை அமர வைத்தவன், "நிதானமா சாப்பிட்டு முடி! பேசலாம்!" என்று சமையல் மேடைக்கு சென்று கொண்டு இருந்தவன் கையைப் பற்றி, "நீ சாப்பிட்டியாடா?" என்று கேட்டாள் ஐஸ்வர்யா.

"இல்லடா முதல்ல நீ சாப்பிடு! அதுக்கப்புறம் நான் சாப்பிட்டுக்கறேன்!" என்று சொன்னவனிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு, அவனருகில் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"ஏய் கண்மணி சூடு பட்டுடப் போகுது! பார்த்துடா!" என்று சொல்லி விட்டு மித்ரன் நாக்கை கடித்துக் கொண்டு தலையை குனியவும்,

"எப்படி மித்ரன் ஸார்? கண்மணியா? நானா? இது எப்போலேர்ந்து?" என்று கேட்டவளிடம்,

"அ.....அது வந்து வரு! க்ளாஸுக்கு வர்ற குட்டி பாப்பாவை எல்லாம் அப்படி கூப்பிட்டு அதே மாதிரி உன்னையும் கூப்பிட வந்துடுச்சு! ஸாரி!" என்று சொன்னவன் அருகில் கையில் இருந்த தட்டை வைத்து விட்டு சென்றவள், "எதை பேசுறதா இருந்தாலும் எதிர்ல இருக்கிறவங்க கண்ணை பார்த்து பேசணும்! அப்படி பேசலைன்னா நீ பொய் சொல்றன்னு அர்த்தம்; இல்லைன்னா எதையோ மறைக்கிறன்னு அர்த்தம். இப்போ நீ பொய் சொல்றியா? இல்ல என் கிட்ட இருந்து எதையும் மறைக்கிறியா மித்து?" என்று கேட்டவளிடம்

"முதல்ல போய் சாப்பிடு! நீ எழுந்துரிக்க நேரம் ஆனதால எல்லா வேலையையும் முடிச்சாச்சு. நிறைய பேசணும். நிதானமா பேசலாம்!" என்று சொன்னவனை அருகமர்த்தி அவனுக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு, "தனியா சாப்பிட எப்படியோ இருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டுடலாம்!" என்று சொல்லி விட்டு அவனுக்கு அவள் பரிமாறவும் இருவரும் இணைந்து சாப்பிட்டு முடித்தனர்.

ஹாலில் ஒருவர் எதிரில் ஒருவர் அமர்ந்து கொள்ள மித்ரன் அவளிடம், "ஏன் நேத்து நைட் அழுத?" என்று கேட்டான் ஒரு மாதிரி குரலில். கோபத்தை முயன்று கட்டுப்படுத்தி கொண்டு இருக்கிறான் என்பது அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

"எல்லாத்தையும் தான் மாமா கிட்ட கேட்டு இருப்பல்ல! அதுக்காக தானே லீவ் போட்டு என் கூட இருக்கிற? அப்புறம் எதுக்கு தேவையில்லாம கேள்வி கேக்குற?" என்று அவளும் பதிலுக்கு எகிற

"ஷ்!.....வரு; உன் ப்ரெண்ட் அரங்கேற்றத்துக்கு நீ கண்டிப்பா போகணும்! ப்ரோக்ராம்ல கலந்துக்கணும். அவங்களை விஷ் பண்ணிட்டு திரும்பி வரணும்!" என்று குரலில் உறுதியுடன் சொன்னவனை இடை மறித்து,

"என்னால முடியாது மித்து!" என்று கண்டிப்பான குரலில் சொன்னாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"ஏன் முடியாது? நீ இழந்ததை உன் ப்ரெண்ட் அடையப் போறாங்கிற பொறாமையா?" என்று மித்ரன் ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி உச்சரிக்க ஐஸ்வர்யா தலையை பிடித்துக் கொண்டாள்.

"என்னை பத்தி உனக்கு எல்லாம் தெரியுமா மித்து?" என்று கேட்டவளிடம் புன்முறுவலுடன் தன் பாக்கெட்டில் இருந்து தன் பர்ஸை எடுத்து காட்டினான் மித்ரன்.

தன் மகளின் நடன அரங்கேற்றத்துக்காக தன் தொழில் முறை நண்பர்களுக்கு பத்திரிக்கை தருவதற்காக சிதம்பர நாதன் அவளை நடன ஆடை, அலங்காரத்தில் எடுத்த ஃபோட்டோ! அருள்மொழிக்கும் சில காப்பி அனுப்பியதாக சொன்னது ஐஸ்வர்யாவின் நினைவில் இருந்தது.

ஆனால் இந்த புகைப்படம் இவனிடம் எப்படி? என்று யோசனையுடன் நின்றவளுக்கு, "என்ன வரு? கொஞ்சம் குழப்பமா இருக்கா? இது ஸார் எனக்கு தந்த ஃபோட்டோ தான்மா, சின்ன வயசுல இருந்து நான் ஒரு பொண்ணை பத்தி அடிக்கடி கேட்டு பார்க்க மாட்டோமோன்னு ஏங்கி அதுக்கப்புறம் பார்த்த ஒரு தேவதை முகம்!" என்றான் அவள் கண்களை நேராக சந்தித்து.

புரியாமல் அவனை ஏறிட்டவளிடம், "நம்ம ஸார் உங்கப்பா கிட்ட என்னை பத்தி சொல்லி எனக்கு உன்னை கல்யாணம் செய்து வைக்க உங்க அப்பாவும், அம்மாவும் சம்மதம் சொல்லி உன் நாட்டிய அரங்கேற்றம் அப்போ நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணி பேசிட்டு உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இருந்தா மேற்கொண்டு பேசுவோம்ன்னு ஏற்கனவே முடிவு பண்ணி வச்சுருந்தாங்க வரு; ஆனா எனக்கு அப்போ இருந்த மனநிலையில உன் போட்டோவை சரியா கூட பார்க்க முடியல. ஆனா இப்போ கொஞ்ச நாளா தினமும் ஒரு தடவை எடுத்து பார்த்துப்பேன்!" என்றான் மித்ரன் சிரிப்புடன்.

ஐஸ்வர்யா அமைதியாக அமர்ந்திருக்க, "அரங்கேற்றத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி உங்கப்பா, அம்மா நியூஸ் பத்தி கேள்விப்பட்டதும் நான் துடிச்சுட்டேன் வரு. நீ இங்க வந்து முழுசா தேறி வர்ற வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் நிம்மதியே இல்லாம தான் தவிச்சுட்டு இருந்தோம்; ஆனா நீ எந்நேரமும் கைதி மாதிரி ஒரு ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடந்ததை பார்த்துட்டு சும்மா இருக்க முடியல. ஸார் கிட்ட என்னை பத்தி எதுவும் உனக்கு தெரிய வேண்டாம்னு சொல்லிட்டேன். உன் மனநிம்மதியை விட எனக்கு அந்த நேரத்தில எதுவுமே பெரிசா தெரியல. எல்லா விதத்திலும் நீ என்னை விட ஒரு படி மேலே தான் வரு; நம்ம ரெண்டு பேரோட கையை பாரு! கருப்பும் வெள்ளையுமா பார்க்க பொருத்தமாவே இல்ல. எல்லா விதத்திலும் உனக்கு தகுதியான ஒரு அழகான, வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, நல்ல பையனை உனக்கு வரப்போற பையனா தேடலாம் வரு!" என்றவனிடம், "சரி மித்து அப்படியே செய்யலாம், அதுக்கு முன்னால என்னோட ஃபோட்டோவை என் கிட்ட திருப்பி குடுத்துர்றியா.........!" என்று ஐஸ்வர்யா ஸ்ரீ கேட்க சிவ மித்ரன் தன் பர்ஸை தன்னுடன் முடிந்த அளவு இறுக்கிப் பற்றிக் பிடித்து கொண்டான்.

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro