Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 23

அருள்மொழி மங்கையின் கேள்விக்கு பதில் சொல்லாமல் டீ கப்பை கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருக்க, அலர்மேல் மங்கை அவரருகில் வந்து,

"சாரு உன்னைப் பத்தி என் மனசுக்குள்ள ஒரு அபிப்பிராயம் வச்சிருக்கேன். சொல்லட்டுமா?" என்று தயங்கியபடி கேட்க அருள்மொழி யோசனையில் இருந்து கலைந்து, "சொல்லும்மா!" என்றார் வாஞ்சையுடன்.

"நீ எனக்கு கடவுள் மாதிரி சாரு" என்று சொன்ன அலர்மேல் மங்கையிடம் சிறு புன்னகையுடன்,

"இருக்கிற கடவுள் போதாதாம்மா..... இதுல நீ என்னைய வேற தேவையில்லாம கடவுளாக்க பார்க்குறியே?" என்று கேட்டார்.

அலர்மேல் மங்கை அவர் முகத்தை நோக்காமல், "எனக்கு பதினஞ்சு வயசு இருக்கும் போது எங்கப்பன் குடிச்சே குடல் வெந்து செத்துப் போயிட்டான். ஒரு பன்னாடையை கண்ணாலம் முடிச்சு வக்கிறேன்னு கூட்டி வந்து
என் ஆத்தா என்னைய என் மாமன்... என் ஆத்தாளோட பொறந்தவன் தேன்...... அந்த எடுபட்ட பய கையில பிடிச்சு குடுத்தா. அந்தப் பயபுள்ள கண்ணாலத்துக்கு தேதி பாக்காம நாலஞ்சு பேரை கூட்டு வந்து என்னைய அவனுகளுக்கு....." என்று விம்மிக் கொண்டு நிறுத்தினார். அருள்மொழி அவர் கண்களை பார்க்கவும் மறுபடியும் தலை கவிழ்ந்து கொண்டு,

"எங்காத்தா கல் உலக்கையை எடுத்து அவன் காலுல போட்டுட்டு மத்த பயலுகளை விளக்கமாத்தை எடுத்து சாத்திட்டு, என்னைய கையில புடிச்சிகிட்டு கிடைச்ச ரயிலில ஏறி கிளம்பிட்டா. எங்க புவனேஸ்வரய்யா ஒரு மகராசன் அவரு வீட்ல எங்களுக்கு எந்த குறையும் அண்டாம பெத்த அப்பன் மாதிரி பார்த்துக்கிட்டாரு. நல்லா போயிட்டு இருந்த வாழ்க்கையில மறுபடியும் ஒரு சோதனை. ஊரு சுத்தி பார்க்க போன இடத்தில ஐயாவோட தம்பி சண்டாளப்பய அவரை கொலை பண்ண ஆளுங்களை ஏவி விட்டு, புள்ளையும் தொலைச்சுக் கட்ட முடிவு பண்ணி அதை செஞ்சும் முடிச்சுட்டானுவ; அதுல இருந்து எங்க சந்திராமாவும், சின்னத்தம்பியும் அந்த வீட்ல பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல சாமி, அய்யா செத்ததுக்கப்புறம் புள்ளைங்க காணாத போயிட்டாலோ; இல்ல வீட்டை விட்டு வெளியே போயிட்டாலோ சொத்துக்கு அனுபவ பாத்யதைய மட்டும் அந்த எடுபட்ட பயலுக்கு எங்க அய்யா
எழுதி குடுத்திருக்காரு! அதுக்கப்புறம் சின்னத்தம்பியை விரட்டி விடுறதுலதேன் குடும்பம் மொத்தமும் குறியா இருந்தாக, தம்பியையும், சந்திரமாவையும் அவுக சின்னாத்தா ஒரு கவளம் சோறு கூட நிம்மதியா சாப்பிட விடவே மாட்டா. எங்க சின்னத்தம்பியெல்லாம் வைராக்யத்தாலயே வளர்ந்தவரு. அம்மாவையும் காப்பாத்திட்டு, அது படிப்பையும் பார்த்துக்கிட்டு....
சந்திராம்மா உடம்பையும் கவனிச்சுட்டு.... ரொம்ப போராடி வாழ்ந்ததுய்யா; வேலை கிடைச்சவுடனே அவுக சித்தப்பன்ட்ட போய், "இந்த சொத்து எல்லாத்தையும் நீயே கட்டி அழுவு! எங்கண்ணணோட சேர்த்து நானும், எங்கம்மாவும் தொலைஞ்சு போய்ட்டதா நினைச்சுக்கன்னு சொல்லிட்டு எங்க ரெண்டு பேரையும் வெளிய கூட்டிட்டு வந்துடுச்சு. நீயி எங்க பெரிய தம்பிய ராசா கணக்கா வளர்த்ததும் இல்லாம, எங்க சின்னத்தம்பிக்கு வேலை போட்டு குடுத்து, உம் மருமகளை எங்க தம்பிக்கு
கண்ணாலம் முடிச்சு வக்கிறேன்னு சொல்லி அந்த பொண்ணை உன் பொண்ணு மாதிரி கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குறீயே..... நீ எம்மாம் பெரிய ஆளு!" என்று அவரைப் பார்த்தவரிடம் சிரிப்புடன்,

"அஞ்சடி ஒன்பது அங்குலம் பெரிய ஆளு மங்கை!" என்றார் அருள்மொழி.

"இந்தாய்யா....இப்படி நக்கல் பேச்செல்லாம் எங்கிட்ட பேசக் கூடாது. உன்னை முதல்ல பார்த்தப்ப கொஞ்சம் தப்பா பேசுனேன். அதுக்கப்புறம் உன்னை பத்தி தெரிஞ்ச பொறவு உங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்ன்னு தோணுச்சு. கேட்டுட்டேன். அம்புட்டுதான்....... இதுவரைக்கும் எவன் கிட்டயும் மன்னிப்பெல்லாம் கேக்க தோணுனதில்ல. ஆனா உன் கிட்ட அப்படி இருக்க முடியல. ராத்திரிக்கு என்ன வேணும்ன்னு சொல்லு. சப்பாத்தியா....... ராகி உப்புமாவா?" என்று கேட்ட மங்கையிடம்,

"ம்ம்ம்! ரெண்டுமே வேண்டாமே...ம்மா; மித்ரா இருந்தா அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்கன்னு உயிரை வாங்குறான். ஸோ இன்னிக்கி ஒரு நாளைக்கு நல்லா காரசாரமான சாப்பாடு ஏதாவது செஞ்சு தர்றியாம்மா? உன்னால முடிஞ்சா பண்ணு. இல்லன்னாலும் ஒண்ணும் பிரச்சனை இல்ல மங்கை!" என்று கேட்டவரிடம்,

"சாரு உனக்கு ஏதாவது வேணும்னா அதை உரிமையா என்னாண்ட கேளு. நான் இந்த வீட்டில வேலைக்காரி தான்..... உனக்கு நியாபகம் இருக்குல்ல....." என்று மங்கை கேட்க அருள்மொழி எரிச்சலுடன்,

"என்ன மங்கை இது? வார்த்தைக்கு வார்த்தை மித்ரனும், ஐசும் உன்னைய அம்மா, ஆன்ட்டின்னு சொல்லுதுங்க. நீ இப்படி எல்லாம் பேசுறத கேட்டா வருத்தப்படுவாங்கம்மா! நாங்க எங்க பேமிலி மட்டுமா வெளியே போகப் போறோம்ன்னு மித்ரா உன்னையும், என்னையும் விட்டுட்டு போனது நாம ரெண்டு பேரும் மனசு விட்டு பேசிக்கணுங்கிறதுக்காக தான்! முதல்ல எல்லாம் வாய் வார்த்தையா சொல்லிட்டு இருந்தான். இப்போ செயல்லயே இறங்கிட்டான்......!" என்று சொல்லி விட்டு அருள்மொழி சிரிக்கவும் அலர்மேல் மங்கை எரிச்சலுடன் அவரிடம்,

"பெரிய தம்பி அப்படி வேற நினைப்பு வச்சுட்டு இருக்கா? என்ன சாரு நீயும் சிரிச்சுக்கிட்டு நிக்குற?" என்று கேட்டார்.

"வேற என்னம்மா பண்ண சொல்ற? அவன் எதை என்கிட்ட நம்ப வைக்கணும்ன்னு நினைச்சானோ, அதை நானும் நம்பின மாதிரி நடிக்க வேண்டியதா போச்சு! போற பையனா இருந்தா அவன் இவ்வளவு நாள் காத்திருந்து இருக்க தேவையில்லையே.....
அவங்க அம்மாவை பார்க்க வந்த அன்னிக்கே அவங்க கூட இருந்துருக்கலாமே? லூசுப் பையன்..... எனக்கு நல்லது பண்றதா நினைச்சு ஒரு கொள்.......!" என்று பேசிக் கொண்டிருந்த பேச்சின் இடையே திடீரென செருமியவர்,

"தண்ணி குடிச்சுட்டு வந்துடுறேன் மங்கை!" என்று சொல்லி விட்டு கிச்சனுக்குள் புகுந்து கொண்டார்.

"பாதியில பாதியில பேச்சை நிப்பாட்டிட்டு ஓடறதே இந்த ஆளுக்கு பொழப்பா போச்சு. ச்சை என் வாழ்க்கையில இந்த ஆளுக்கு தேன் இவ்வளவு மரியாதை குடுத்து பேசத் தோணுது....கருமம்!" என்று தலையில் அடித்து கொண்டு சமையல் அறைக்குள் சென்றார் அலர்மேல் மங்கை.

"ஏம்மா நான் உனக்கு திரும்ப திரும்ப சொல்றேன்! இந்த ஆளு, யோவ், வா போன்னு பேசறதெல்லாம் தான்
உன் பாஷையில மரியாதைன்னு நினைச்சுட்டு இருக்க. அப்போ நீ மரியாதை இல்லாம பேசுறது எப்படிம்மா இருக்கும்?" என்று கேட்டவரிடம் ஓர் கேவலமான முறைப்பை செலுத்தியவர்,

"கெட்ட வார்த்தையில காதுல கேக்க முடியாத மாதிரி நெறைய வசவு வரும். அத கேக்கணும்ன்னு நினைக்கிறியா சாரு?" என்றவரிடம்,

"வேண்டாம்மா. இது வரைக்கும் கிடைச்ச மரியாதையே போதும். உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா மங்கை?" என்று கேட்டவரிடம் புன்னகையுடன்,

"எப்படி சாரு பெரிய தம்பிக்கு அப்பப்போ உதவி பண்ணுவீரே..... அந்த மாதிரியோ!" என்று கிண்டல் சிரிப்புடன் கேட்டு வேலை பார்த்து கொண்டு இருந்தார் மங்கை.

அருள்மொழி ஞாயிறுகளில் ஹாயாக ரெஸ்ட் எடுக்க நினைக்கையில் சிவமித்ரன் அவரின் தலையில் சில பல வேலைகளை தலையில் சுமத்தும் போது அவர் எரிச்சலில் அந்த வேலைகளை ஒற்றைக்கு இரட்டை வேலைகளாக தான் பார்த்து வைப்பார். வெங்காயத்தை நறுக்கச் சொன்னால் தோளுடன் சேர்த்து நறுக்கிக் கொடுப்பார். வீட்டைத் தண்ணீர் கொண்டு துடைக்க சொன்னால் அளவில்லாத சோப்பவுடரை தண்ணீரில் கொட்டி நுரைக்க விட்டு தண்ணீரை கவிழ்த்து விடுவார். அதற்கு பின் அதையும் மித்ரன் தான் சரி செய்ய வேண்டும். ஆனாலும் அவனும் சளைக்காமல் அவரிடம் வேலைகளை அடுக்கிக் கொண்டே இருப்பான்.

அசட்டுப் புன்னகையுடன், "மித்ரா கிட்ட தான் வேலைய ஓபி அடிப்பேன்ம்மா! உனக்கு நிஜமாவே ஹெல்ப் பண்ண தோணுது! அதான் கேட்டேன்.....!" என்று சொன்னவரிடம் சிரிப்புடன்,

"உன் கையில கரண்டியை குடுத்துட்டு என் உயிருக்கு உலை வச்சுக்குறதுக்கு நா ஆளில்ல சாரு. காலெல்லாம் மரத்து போன மாதிரி இருக்கு. சுருக்கா வேலையை முடிச்சுட்டு போய் அக்கடான்னு காலை நீட்டணும்!" என்று சொன்னவரை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சமையலறையில் இருந்து வெளியே சென்றார் அருள்மொழி.

"அடக் கடவுளே;  கோவிச்சுக்கிட்டாரான்னு தெரியலயே........" என்று மனதிற்குள் நினைத்தபடி மங்கை மிளகு ரசமும், மட்டன் சுக்காவும் தயார் செய்து விட்டு ஹாலுக்கு வந்தார்.

ஸோஃபாவில் வந்து அமர்ந்தவர், "சாரு நீ கேட்ட மாதிரி காரசாரமா சாப்பாடு தயார் பண்ணியாச்சு. நல்ல வேளை சின்னத்தம்பி இன்னிக்கு கவுச்சி கேட்டதுனால வாங்கி வச்சத உனக்கு செஞ்சுட்டன். கொஞ்சம் சீக்கிரமா சாப்பிட்டு முடிச்சிட்டன்னா நல்லா இருக்கும். ஏன்னா அசைவம் சமைச்சு இருக்கேன்!" என்று சொன்னவரிடம் புன்னகையுடன்,

"நீ சொல்லாமலே தெரியுது மங்கை, அப்பவே வாசனை பிடிச்சுட்டேன். கொஞ்சம் உன் காலை தூக்கி டேபிள்ல வை பார்ப்பம்!" என்று சொல்லி விட்டு கீழே தரையில் அமர்ந்து மூட்டு வலி தைலத்தை கைகளில் எடுத்து வைத்துக் கொண்டு  மங்கையின் காலருகில் வந்தார் அருள்மொழி.

துள்ளி எழுந்து விலகி நின்ற மங்கை, "யோவ் கஸ்மாலம், உன்னோட என்னய்யா இது பேஜாராக்கீது........ எனக்கு தைலம் தடவி விடுன்னு
உன்னைய கேட்டேனாய்யா..... என் காலை நீ தொட்டு..... ச்சை கண்றாவி; உசுரை குடிக்காதய்யா. சோத்தை துன்னுட்டு கொஞ்சம் ஓமமும், சீரகமும் போட்டு தண்ணி கலந்து வச்சுருக்கேன். குடிச்சிட்டு கொஞ்ச நேரம் உலாத்திட்டு போய் படு.....போ!" என்று கட்டளைக் குரலில் சொன்ன அலர்மேல் மங்கையிடம்,

"ஓம வாட்டர் வேணும்ன்னு நான் உன் கிட்ட கேட்டேனாம்மா.... எந்த அக்கறையில நீ எனக்காக அதை ரெடி பண்ணி வச்ச...... அதை மாதிரி தான் நான் உனக்காக தைலம் எடுத்துட்டு வந்தேன். நான்  தனியா சாப்பிடுறதுக்கு உன்னை சமைக்க சொல்லல மங்கை, நீயும் என் கூட வர்றதுனா சாப்பிடறேன். இல்லன்னா எனக்கு சாப்பாடு வேண்டாம்.....!" என்று சொன்னவர் கைகளில் இருந்து தைலத்தை பிடுங்கிய மங்கை தன் கால்களில் அதைப் போட்டுக் கொண்டார்.

"எங்கப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க மங்கை, அம்மாவை, தங்கச்சியை நல்லா பார்த்துட்டு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி குடுத்து அவளை செட்டில் பண்ணிட்டு, அம்மாவை பார்த்துக்கிட்டு அப்படியே எனக்குன்னு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்காமலேயே ரொம்ப காலம் வாழ்ந்தாச்சு. அம்மாவும் போனதுக்கப்பறம் என்னோட வேலையும், நிறைய பயணங்களும் தான் என்னோட சந்தோஷமா இருந்தது. வருஷம் பூரா பணத்தை சேர்த்து வச்சு கடைசியில மாசத்துக்கு ஒரு லாங் ட்ரிப் அடிச்சுட்டு வருவேன். ஆனா எனக்காகவே நான்  வாழுற அந்த வாழ்க்கை எனக்கு ரொம்ப போர் அடிச்சது. அந்த மாதிரி மனசு வெறுத்துப் போன ஒரு நிலைமையில தான் மித்ரா என் லைஃப்க்குள்ள வந்தான். அவன் வந்த பிறகு பிரம்மச்சாரியா இருந்தாலும் நான் மனசளவில அவனுக்கு அப்பாவா ஆகிட்டேன். அவனோட தேவைகள், ஆசைகள் அதை நோக்கி என்னோட வாழ்க்கையும் நகர்ந்துட்டு இருந்துச்சு. மின்னாம முழங்காம ஒரு இடி விழுமே..... அந்த மாதிரி என் தங்கச்சியையும், மாப்பிள்ளையையும் பறி கொடுத்து ஐச இங்க கூட்டிட்டு வந்து இப்போ மறுபடியும் எல்லாம் சூமூகமாகிடுச்சு. இப்போ ஐசுக்குட்டி, மித்ரா ரெண்டு பேருக்கும் என்னோட உதவி தேவைப்படாது. ஸோ மறுபடியும் என் வாழ்க்கையில ஒரு வெற்றிடம் வரப் போகுது. யாருக்காக வாழப் போறோம்ன்னு ஒரு கேள்வி....... உன்னை என் வாழ்க்கை துணையா ஏத்துக்க எனக்கு ஓகே மங்கை...... ஆனா நீ என்னை கடவுள்ங்கிற, ஏதோ பெரிய சூப்பர் ஹீரோ மாதிரி பில்டப் குடுக்குற. கணவன், மனைவிக்குள்ள எப்பவும் நீ பெரிசா, நான் பெரிசாங்கிற ஈகோவே வரக்கூடாது. ரெண்டு பேரும் ஈக்வல் தான்...... ஆனா நீ முதல்லயே என்னை தூக்கி ஒரு உச்சியில உட்கார வச்சுட்ட...... உனக்கு ஓகேன்னா, என்னை உன் ஹஸ்பெண்டா உன்னால பார்க்க முடியும்ன்னா,  அதுல உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லன்னா சொல்லு. அது வரைக்கும் நம்ம இப்படி வாய்யா, போய்யா ரிலேஷன்ஷிப்பே மெயின்டெய்ன் பண்ணிக்கலாம். சரியாய்யா?" என்று கேட்டவரிடம் தன் கண்ணீரை மறைத்து புன்னகைத்த அலர்மேல் மங்கை,

"சாப்பிட போய்யா! நொய் நொய்ன்னு பேசி உசிர வாங்கிட்டு...... ஐ இஸ் த அலர்மேல் மங்கை காலிங்..... கம் ஆர் நாட் டூ மட்டன் சுக்கா சாப்பிட......!" என்று சிறு சிரிப்புடன் வினவவும்,

"மங்கை....ப்ளீஸ்! விட்டுடும்மா...... இங்கிலீஷ் லாங்குவேஜ் பாவம்....... உன் வாயில புகுந்துட்டு எப்படா அதை விடுவன்னு நினைச்சு படாத பாடு படுது!" என்று சொன்ன அருள் மொழியிடம் சிறு சிரிப்பை உதிர்த்து விட்டு உள்ளே சென்றார் அலர்மேல் மங்கை.

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro