Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா - 6

அனைவருக்கும் இனிய தீப ஒளி🪔🪔 திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவர் வாழ்விலும் அன்பு, செழிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்து ஒளிரட்டும்.🎉❤

(Spelling mistakes iruntha manikavum)

காலை எழுந்து குளித்து முடித்த இலக்கியாவின் புடவை பாதிக்கு மேல் நனைந்திருந்தது. காரணம் குளியல் அறையில் நின்றே ஆடை மாற்ற வேண்டிய நிலை. வரவேற்பறையில் மாற்றலாம் என நினைத்தால் எப்பொழுது அவன் எழுந்து கீழே வருவான் என தெரியவில்லை. 

சரியாக அவள் எழுந்த நேரம் மேலே அர்ஜுன் எறியதிலிருந்து ஏதோ சத்தம் கேட்க எட்டிப்பார்த்த தலையை மீண்டும் உள் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். வித விதமாக வெவ்வேறு வகையாக இருந்த குழாயில் எதை தொட்டு திறக்க வேண்டுமென தெரியவில்லை. 

பக்கெட்டில் தண்ணீரை திறக்க எண்ணி பக்கெட்டை தேட, அவ்வீட்டில் அது எங்கும் இல்லை. இறுதியாக சமையலறை சென்று பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து பயன்படுத்திக்கொண்டாள். 

சரி பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பலாம் என குழாயை திறந்தால் தலையில் ஒரு வாளி தண்ணீரை கொட்டியது போல் ஷவரிலிருந்து தண்ணீர் இரண்டே நொடியில் அவள் தலையை நனைத்திருந்தது. 

பெருமூச்சோடு காற்றை விட்டு குளித்து, அதனோடே எதை திருகினால் எங்கு தண்ணீர் வருமென பார்த்துக்கொண்டு குளியலை முடித்து வெளியே வர அவன் வீடு மொத்தமும் கண்ணாடியால் ஆனது போல் சுவர் இல்லாமல் இருந்தது. சுவர் இருக்கும் பக்கம் செல்லலாமென பார்த்தால், மேல் அவன் அறை வாசலில் இருந்து பார்த்தால் கீழே நடப்பவை அனைத்தும் தெரியும். 

அவன் கண்களுக்கு சிக்காமல் போவது அந்த கண்ணாடி சுவர்கள் பக்கமும், அதனை ஒட்டி இருந்த ஒரு அறையும் தான். அந்த அறையை நெருங்கவே இலக்கியாவிற்கு பயம். 

வேறு வழியே இல்லாமல் ஈரத்திலே புடவையை உடுத்திக்கொண்டு மெல்ல சமயலறையிலிருந்த ஒவ்வொரு பொருட்களாக ஆராய்ந்தாள். பிரிட்ஜ் உள்ளே என்ன என்ன உள்ளதென அனைத்தையும் ஆராய்ந்தவள் அங்கு இருப்பதை வைத்து எளிமையான சப்பாத்தி, பண்ணீர் கிரேவி செய்து வைத்திருக்க, அர்ஜுன் சரியாக கீழே வந்தான் எட்டு மணிக்கு.

படிகளில் இறங்கும் பொழுதே அவன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு கேட்டது. தலையை உயர்த்தி பார்த்தாள், எளிமையான வெள்ளை சட்டை, கருப்பு பாண்ட் தான் அணிந்திருந்தான். 

கைகள் மட்டும் சிகையினுள் சென்று அதனை சரி செய்துகொண்டே இருந்தது. அவன் மேல் எந்த விதமான உரிமையும் இல்லை என்ற பொழுதே அவனை ரசிக்கும் அவள் விழிகள் இன்று உரிமையோடு அவனை ரசிக்க, அர்ஜுன் பார்க்கும் முன்பு கண்களை தாழ்த்திக்கொள்ள வேண்டும் என அவனிடமிருந்து பார்வையை விலகினாள். 

அதே சமயம் தன்னுடைய பேச்சை முடித்தவன் படிகளில் இறங்காமல் மெல்லிய ஊதா நிற மிக எளிதான பூனம் புடவையில் துடைத்த பாத்திரத்தையே மீண்டும் மீண்டும் துடைத்துக்கொண்டிருந்த மனைவியை பார்த்தான். 

மருத்துவமனையில் எப்பொழுதும் பார்க்கும் அந்த வெண்மை புடவையை மட்டுமே அணிபவளை பார்த்து பார்த்து இப்பொழுது மங்கி போன நிறத்தில் காட்சியளிக்கும் அவளது இந்த புடவை கூட அழகாய் தான் இருந்தது. நேற்று பூசியிருந்த ஒப்பனை கூட அவளது இந்த மெல்லிய தோற்றத்தின் முன்பு காணாமல் போனது. 

ஆனால் இந்த சாந்தமான, அப்பாவி முகத்தின் உள்ளே எத்தனை கபடம், நாடகம், வேஷம் உள்ளதென யோசித்த பொழுது பல நாள் தன்னுடைய கண்களுக்கு தெரியாத அழகெல்லாம் இன்று தெரிந்தும் காந்தியது அர்ஜுனுக்கு. 

ஒவ்வாமையோடு சமையலறை பக்கம் வந்தவன் வரவை உணர்த்த இலக்கியாவிற்கு பதட்டம் கூடியது. உணவு மேஜை கூட இல்லை அங்கு. சமயலறையோடு ஓட்டி இடையளவு இருந்த திண்டில் அருகில் தான் இரண்டு நாற்காலி இருந்தது. 

அது தான் சமையல் மேஜை போல இலக்கியா எண்ணியிருக்க அர்ஜுனும் சரியாக அங்கு தான் வந்து அமர்ந்தான். வந்தவன் எதுவும் பேசாமல் இருக்க, இலக்கியா ஒரு தட்டில் இரண்டு சப்பாத்தி ஊற்றி ஒரு சிறு பௌலில் பண்ணீர் கிரேவி வைத்து அவன் முன் வைத்தாள். 

அவளை பார்த்து அந்த உணவை பார்த்தவன், அந்த பௌளை கட்டி, "இது என்ன தெரியுமா?" என்றான் மென்மையாக. 

"பௌல்" என்றவள் அவன் தீர்க்கமான பார்வையில் எச்சிலை விழுங்கி. 

"குழம்பு ஊத்துறதுக்கு யூஸ் பண்ற பௌல்" என்றாள் மெதுவாக. இகழ்ச்சியாக சிரித்தவன் இரண்டையும் அவளிடம் தள்ளி வைத்து நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான். 

"இது குழம்பு ஊத்த இல்லை. சூப் குடுக்குற பௌல்... உனக்கெல்லாம் அது எங்க தெரிய போகுது" அவன் இதழின் சிரிப்பை வைத்தே எத்தனை இகழ்வாய் தன்னை பார்க்கிறான் என உணர்த்துக்கொண்டாள். 

"நான் காலைல இந்த சாப்பாடு எல்லாம் சாப்பிட மாட்டேன். புரூட்ஸ், பாயில்ட் எக் தான்" 

அவன் பேசுவதை கேட்டு திரும்பியவள் வேகமாக குளிர்சாதன பெட்டியை திறந்து முட்டை இரண்டை எடுக்க, கலங்கி பார்வை மங்கலாய் தோன்றிய அவள் விழிகளின் தவறில் கையிலிருந்த ஒரு முட்டை கீழே விழுந்துவிட பயத்தில் திடுக்கிட்டு அவனை பார்த்தாள். 

கீழே விழுந்து சிதறியிருந்த முட்டையின் மேல் பதிந்திருந்த அர்ஜுன் கண்கள் பீதியடைந்திருந்த அவள் முகத்தை கைகள் கட்டி பார்க்க, 'இடியட்' என முணுமுணுத்தது அவன் இதழ்கள். 

அவன் பார்வையின் வீச்சிலிருந்து வெளியேறி இலக்கியா அடுப்பை பற்ற வைத்து முட்டையை வேக போட்டு அதன் பிறகே கீழே இருந்த முட்டையை சுத்தம் செய்தாள். 

"இன்னும் பைவ் மினிட்ஸ்ல எனக்கு சாப்பாடு வரணும், ஐ அம் கெட்டிங் லேட்" கைக்கடிகாரத்தை பார்த்து அழுத்தமாக கூறினான். 

அவன் அவசரத்தில் முட்டை சாப்பிடாவிடினும் பரவாயில்லை என முதலில் ஆப்பிள், ஆரஞ், க்ரேப்ஸ் என கலவையாக சிறிது சிறிதாக வெட்டி இரண்டு ஸ்பூன் தேன் மேலோட்டமாக ஊற்றி அவன் முன் வைத்தாள். 

மெதுவாக அதை உண்டவன் சில நிமிடங்களில், "ஹாஸ்பிடல்க்கு எப்போ வர்ற ஐடியா?" என்றான் அவளிடம். 

முட்டையை உரிப்பதில் மும்முரம் காட்டி அவனை பார்க்காமல் தயங்கினாள், "இன்னும்... இன்னும் ரெண்டு நாள் அப்றம் அத்தை போக சொன்னாங்க" என்றவளுக்கு வேர்க்க துவங்கியது. 

புருவம் தூக்கி ஒரு பக்கமாக தலையை உயர்த்தி இறங்கியவன், "ஹ்ம்ம்... சரி தான். முன்னாடி அங்க வேலை பாத்தவ, இப்போ தான் அந்த ஹாஸ்பிடல்க்கு ஓனர்ல... எப்போ வேணாலும் லீவ் போடலாம். ஏன் வேலைக்கே போகாம சம்பளம் கூட வாங்கலாம்" 

கைகளில் இருந்த முட்டையை விட வார்த்தைகளின் சூடு அதிகமாய் இருந்தது இலக்கியாவிற்கு. கண்ணீர் கன்னத்தில் வழிய அதை துடைக்காமல் வேலையை மும்முரமாய் பார்த்தவளிடம், 

"முட்டை உரிச்சு கண்ணீர் வந்தத இன்னைக்கு தான் நான் பாக்குறேன், ஆச்சிரியம்ல?" போலியாய் வியந்தவனை கண்ணீர் துடைத்து திரும்பி பார்த்தவள், 

"நான் இந்நேரம் டாக்டர் படிச்சிருந்தா ஆச்சிரியமா இருந்திருக்காதுல சார்?" கேள்வி எழுப்பினாள் வேதனையோடு. 

அவள் கேள்வியில் கோவம் துளிர்த்தாலும் எள்ளலான புன்னகை மட்டுமே அர்ஜுனுக்கு, "ம்ம் வாய்ப்பு அதிகம் தான்" என்றான் சிரிப்போடு. 

தனக்கு மனைவி கொடுத்த மூன்று முட்டைகளில் இரண்டை எடுத்து மீதம் ஒன்றை தொடவில்லை. 

"முட்டை வேஸ்ட் பண்ணாத. இனிமேலாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்ல?" வார்த்தைக்கு வார்த்தை அக்கனியை கொட்டி இலக்கியாவை வேதனைப்படுத்துவதையே முதல் கடமை போல் பேசினான். 

"ஏழைங்க தான் சார், ஆனா பிச்சைகாரங்க இல்லை" வெடுக்கென பதில் கூறி குளியலறையில் புகுந்து இலக்கியா மறைந்துகொண்டாள்.

மனைவி பேசியது தன்னை எதுவும் பாதிக்காதது போல் உணவை உண்டவன் அவள் வருகைக்கு மேலும் காத்திருக்க, அவளுக்கு பதில் வெளியிலிருந்து வந்தார் அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண். 

நாற்பது வயதை தொட்டவர் போல் இருக்காது அவர் உடை எல்லாம். கணங்களை உறுத்தாத வகையில் பாண்ட் ஷர்ட் அணிந்து தான் வேலைக்கே வருவார். 

காலை உணவு எப்பொழுதும் அர்ஜுனுக்கு எட்டு முப்பதுக்கு தான். இன்று இலக்கியாவை சீண்டவே அவளிடம் வம்பிற்கு வந்தது. 

"என்னங்க அர்ஜுன் தம்பி இன்னைக்கு இவ்ளோ வேகமா சாப்டாச்சு?" 

அதிசயமாய் தான் வரும் நேரம் உண்பவனை பார்த்து வியந்து போனார் அவர். 

பெயர் ஜோனா. கணவன் இல்லை. ஒரே ஒரு மகன் அவருக்கு. அவனுக்கும் உடலில் பிரச்சனை இருக்க அவனுக்காக முடிந்த மட்டும் அத்தனை வேலைகளையும் பார்ப்பார். 

அவர் மகனின் மருத்துவ செலவுகளை அர்ஜுன் செய்தாலும் இதர செலவுகளில் அவர் பங்கு தான் இருக்கும். 

"வீட்டம்மா வந்ததும் பசின்னு வயிர கத்த விட மாட்டிக்கிறாங்க ஜோனா" சிரித்தான் அவரிடம். 

"தம்பி பாப்பா இங்கையா இருக்கு?" ஆசையாக அவர் கண்கள் வீட்டை அலசியது. 

ஆமாம் என தலை அசைத்தவன் எழுந்து சென்று அவள் செய்து வைத்திருந்த சப்பாத்தி ஒன்றை எடுத்து, "பண்ணீர் க்ரேவி செஞ்சிருக்கா. நீங்களும் சாப்பிடுங்களேன்" என்றான் மீண்டும் இடத்தில் அமர்ந்து உணவில் கவனத்தை செலுத்தி. 

வந்ததும் தன் முன்பே அவள் வைத்த உணவின் மனம் இழுத்தது மருத்துவனை. வீறாப்பாக வேண்டாம் என்றவனால் இப்பொழுது விட முடியவில்லை. எடுத்து அமர்ந்துவிட்டான். 

"பாப்பா மேல இருக்கா தம்பி? ஆனா நிச்சயத்துல பாத்த நேரம் பாப்பா வேலை செய்யும்னு நான் நினைச்சு கூட பாக்கல" அவள் செய்திருந்த உணவின் மனத்தை ரசித்தவாறு வியந்தார் பெண்மணி. 

"ஜோனா பொண்ணே மாறிடுச்சு" இதழ் பிரியா சிரிப்போடு அவன் எளிமையாக கூறியிருக்க ஜோனா அதிர்வாய் அவனை பார்த்தார். 

"ரெண்டு நாள் இங்க தான் க்கா இருப்பா. நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க" அர்ஜுன் மருத்துவமனை கிளம்பும் மும்முரத்தில் இருக்க அவனை கேள்வி மேல் கேள்வி கேட்கவும் விரும்பவில்லை அவர். 

இதுவே அவன் பேசும் அதிகப்படியான வார்த்தைகள் தான். அர்ஜுன் எழுந்து வந்து கையை கழுவும் சமயம் குளியலறையிலிருந்து வெளியேறிய இலக்கியா தன் முதுகில் குத்தும் பார்வையை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கு இவள் பார்ப்பதற்காக காத்திருந்த ஜோனா முகம் உடனே மலர்ந்தது. 

எவர் என்று தெரியாத பெண்மணி, அவர் உடுத்தியிருக்கும் உடை என ஒரே நொடியில் அளந்த இலக்கியா அவர் வீட்டிற்கு வேலை செய்ய வந்திருப்பவர் என யோசிக்கவில்லை. 

அவர் புன்னகைக்கு எளிமையான ஸ்நேக புன்னகை ஒன்று சிந்தினாள். அவளது பால் நிறத்திற்கு அழுது வீங்கிய கண்களும் சிவப்பேறிய மூக்கும் பார்த்த அர்ஜுனுக்கே நெருடியது. 

அதை விட ஜோன்னாவிற்கு அதிர்ச்சி. அவள் எளிமையான உடை, தோற்றம், சிரிப்பு என அர்ஜுன் விரும்பி இவளை ஏற்றிருக்க வாய்ப்பில்லை என உறுதியாக சரியாக கணித்தார். 

இலக்கியா அவரிடம் பேசும் நிலையில் கூட இல்லை. வரவேற்பறையில் வைத்திருந்த தன்னுடைய ஹாண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு கணவனிடம் கூட சொல்லாமல் கதவை திறந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். 

இவன் தான் ஏதோ செய்துள்ளான் என ஜோனா அர்ஜுனை பார்க்க, "கோவக்காரி" என்றான் உணர்ச்சிகளற்று. 

"காலைல இனிமேல் பொறுமையா வாங்க ஜோனா, அவ பாத்துக்குவா" அவரும் சரி என்க வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினான். 

பார்க்கிங் வந்து வாகனத்தை எடுத்து வெளியேறிய நேரம் இலக்கியா சாலையோரம் நடந்து சென்றாள். பஸ் ஸ்டாப் அடைவதற்கே நடந்து சென்றால் இருவது நிமிடம் ஆகும். 

அவள் எங்கு செல்கிறாள் எதற்கு செல்கிறாள் என்பதை தெரியாமல் அவளிடம் பேசவும் வீம்பு அர்ஜுனுக்கு. ஆனால் கண்ணை துடைத்து துடைத்து நடக்கும் மனைவியை பார்த்ததும் கர்வம் எல்லாம் அழிந்தது போல் அவளை நோக்கி வாகனத்தை செலுத்தியவன் அவள் வழியை மறித்து ஓரமாக வாகனத்தை நிறுத்தினான். 

இவன் வாகனம் என அறிந்த இலக்கியா அவனை பார்க்க, "ஆட்டோ புடிச்சு போ" என்றான் அதிகாரமாக. 

"இல்ல சார் நடந்துப்பேன்" என்றாள் செல்லும் முனைப்போடு. 

"பஸ் ஸ்டாப் ரொம்ப தூரம்" அவனை அவள் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் போனது அர்ஜுனுக்கு. 

"ஆட்டோல போற அளவு என்கிட்ட காசு இருக்கு சார்" அந்த அர்த்தத்தில் பேசியிராத அர்ஜுனுக்கு எரிச்சல் வந்தது, "வண்டில ஏறு" என்றான் அழுத்தமாக. 

"இல்லை சார் நான் வேற பக்கம் போகணும்" அவனோடு செல்ல விருப்பமில்லை அவளுக்கு, அளவுக்கு மீறிய காதல் இருந்தாலும் அவனிடம் அடிமேல் அடிமேல் அடி வாங்கிக்கொண்டே இருக்க அவளது வீம்பு இடம் கொடுக்கவில்லை. 

அவள் நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் காரின் கதவை திறந்துவிட்டு, "உள்ள வா" என்றான் மீண்டும். 

சுற்றம் பார்த்தவள் வேறு வழியில்லாமல் உள்ளே அமர, வேகமெடுத்தது அவன் வாகனம். ஐந்து நிமிடம் பயணம் தான் என்றாலும் இருவரும் ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை. 

இருவருக்கும் இருவர் மீதும் கோவம். மெயின் ரோட்டின் பஸ் ஸ்டாப்பில் வாகனத்தை அர்ஜுன் நிறுத்த, இறங்க போனவளை தடுத்து ஆட்டோ லாக் செய்தான். 

அவனை பார்க்காமல் கையிலிருந்த ஹாண்ட்பேக்கை மட்டுமே இலக்கியா பார்த்திருக்க, டாஷ்போர்டில் இருந்த டிஸ்யூ இரண்டு எடுத்து அவளிடம் நீட்டினான், "முகத்தை துடை" முன்னால் இருந்த கண்ணாடியை திருப்பி வைத்தான் அவள் வசத்திற்காக. 

அழுத தடயம் கன்னத்தில் தெரிய அவன் கொடுத்த டிஸ்யூ வைத்து துடைத்து மீண்டும் கதவை திறக்க போக இப்பொழுதும் திறக்க முடியவில்லை. இலக்கியாவும் அவனிடம் பேசவில்லை, அவன் பக்கம் திரும்பவும் இல்லை. 

கை கடிகாரத்தில் மணியை மணியை பார்த்தவள் அவன் மௌனம் கேட்ட கேள்விக்கு பதில் இருந்தும் பதில் சொல்லவில்லை. அர்ஜுனுக்கு அழைப்பு வந்துகொண்டே இருந்தது, எதையும் ஏற்கக்கூட இல்லை. அடமாய் இருந்தான். 

"எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்" என்றாள் மெல்லிய குரலில். 

இதற்காகவே காத்திருந்தது போல் கதவு அன்லாக் சத்தம் வந்து நீ செல்லலாம் என கூற, திரும்பி அவனை ஒரு நொடி முறைத்தவள் வேகமாக இறங்கி சென்றிட, அடுத்த நொடி அர்ஜுனின் வாகனம் தார் சாலையில் பறந்தது.

"இவருகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லணுமாக்கோம்? அப்டி என்ன திமிரு? காலைல அந்த பேச்சு பேசிட்டு இப்ப என்ன அக்கறையாம்" கணவனை தாறு மாறாக திட்டிக்கொண்டே இருந்த வேளையில் பேருந்து வர தந்தையை காண பயணித்தாள். 

அங்கிருந்து இருவது நிமிட பயணத்தில் தான் இருந்தது அவர்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட். இலக்கியா சென்ற நேரம் அவள் தந்தைக்கு ஓய்வு நேரமாக இருக்க காலை உணவை சமைத்துக்கொண்டிருந்தார். 

"சமையல் எல்லாம் செம்மையா செய்விங்க போல வாசம் கீழ் வர வருது" என்றாள் வாசலில் சாய்ந்து நின்றவாறே. மகளின் வரவை எதிர்பாராமல் அவள் சத்தம் கேட்டதும் இன்பமாய் அதிர்ந்தவர், 

"டேய் நீ வர்ரன்னு சொல்லவே இல்ல அப்பாக்கு" ஒரு நாள் மகள் உடன் இல்லை என்றதும் அவருக்கு வேலையே ஓடவில்லை. 

விருப்பமில்லாமலே நகர்ந்தது பொழுது. இரவில் மகள் கொடுத்தனுப்பும் அந்த சுவையான தேநீருக்கு முன்பு தான் போட்டது ஏதோ வெந்நீரில் சிறிது டீ தூளை கொட்டியது போல் கசந்தது. 

"சர்ப்ரைஸ் ப்பா" உள்ளே வந்தவள் ஆசையாக தந்தை என்ன சமைக்கிறார் என பார்க்க, உப்மா செய்துகொண்டிருந்தார், அதுவும் வருத்தல், தாளிப்பு வேலை எதுவும் நடக்கவில்லை. நேரடியாக தண்ணீரை ஊற்றி ரவையை உள்ளே தள்ளியிருந்தார். 

"என்ன ப்பா இது?" சிரிப்போடு மகள் கேட்கவும், 

"எனக்கு ரிஸ்க் எடுக்க தோணல ம்மா. அப்பா உனக்கு வேற வாங்கி வரவா கடைல?" என்றார். 

"வேணவே வேணாம். நான் சாப்பிட்டேன்" செய்தது வீணாக வேண்டாமென நினைத்தவர் உப்புமாவையே உண்ண, இலக்கியா தந்தைக்கு மதியத்திற்கும் இரவுக்கும் சமைக்கும் வேலையில் இறங்கினாள். 

"சௌரியமா இருக்கா ம்மா மாப்பிள்ளை வீடு?" வார்த்தையை மிகவும் யோசித்து பேச வேண்டி இருந்தது மகளிடம். 

அன்னை இருந்தால் எதுவும் தெரியாது, ஆனால் தனியொரு தந்தையாய் அவளை திருமணம் ஆன பிறகு கேள்வி கேட்கவே பயமாக இருந்தது, வேறு அர்த்தங்கள் மாறிவிடுமோ என. 

"சௌரியத்துக்கு அங்க என்ன ப்பா குறை. கண்ணாடி மாதிரி இருக்கு அவரோட வீடு. எப்படி தான் இவ்ளோ சுத்தமா வச்சிருக்காங்களோ தெரியல" பிரமிப்பாக கூறிய மகளின் முகத்தை கூட அந்த தந்தைக்கு படிக்க தெரியவில்லை. 

"ஓ சரிமா சரிமா" என பதில் கொடுத்து அடிக்கடி மகளின் முகத்தில் மகிழ்ச்சி உள்ளதா என ஆராய்ந்தார். அவளோ காயை நறுக்குவதிலே குறியாய் இருந்தாள். 

"நான் போய்ட்டேன்னு மாத்திரை சாப்புடுறது எல்லாம் மறந்துட கூடாது ப்பா. முக்கியமா டெய்லி ஒரு காய் வச்சு தான் சாப்பிடணும். ருசிய பத்தி கவலைப்படாம எண்ணெய குறைச்சு சாப்புடனும் சொல்லிட்டேன்" 

"பண்ணிக்கிறேன் ம்மா" மகளின் அக்கரையில் நெகிழ்தவர் முகத்தில் சிரிப்பு தான். 

"ம்ம் சாப்பாடு மிச்சம் இருந்தா பழைய சோறு போட்டு சாப்புடுங்க. ரொம்ப நல்லது. அதுக்குன்னு எப்பையுமே அதையே சாப்பிட கூடாது. மோர் மிளகாய், வத்தல், வடகம் எல்லாம் ரொம்ப சாப்பிட வேணாம். நைட் ஷிபிட் ரொம்ப பாக்காதீங்க. உடம்புக்கு நல்லது இல்லை. தண்ணி நிறையா குடிங்க" அவருக்கு மருத்துவர் அவள் தான். 

இந்த படிப்பே படிக்காவிடினும் மகள் தன்னை இதை போலவே பார்த்திருப்பாள் என்பது அவரும் அறிந்த ஒன்றே. ஆனால் செவிலிய படிப்பு சாதாரனதும் அல்லவே? மருத்துவனை விட இவள் கொடுமை தான் அதிகம் இருக்கும். 

அந்த கடுமை கூட தந்தைக்கு இனித்தது. மதியம் தந்தையோடு அமர்ந்து தானும் உண்டு அவரையும் உண்ண வைத்து. பல கதைகள் பேசினாள், பல வருடங்கள் பேசாதது போல். 

அவளோடு நேரம் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் இது தான் நடக்கும். ஆனால் அது அரிதாகியிருக்க தந்தை மகளுக்கு பேச ஆயிரம் இருக்கும். மதியம் இரண்டை தாண்டவும் தந்தை உறங்க வேண்டுமென இலக்கியா கிளம்பிவிட்டாள். 

கணவனிடம் கூறியது போல் அவளுக்கு வாங்க வேண்டிய பொருட்கள் அதிகமிருந்தது. முதலில் வாளி. அதோடு தனக்கு தேவையான இன்னும் சில பொருட்களை வாங்கியவள் ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தாள். 

அர்ஜுனின் வீட்டு கதவை பார்த்ததும் தான் லாக் பற்றி நினைவிற்கு வந்தது. தலையில் அடித்துக்கொண்டாள். அந்த தளத்தில் இருந்த இரண்டே வீடுகளில் ஒருவரின் வீட்டிற்கும் மற்றவரின் வீட்டிற்கும் எந்த விதமான தொடர்பும் இருக்காது. 

என்ன செய்வதென தெரியாமல் அவன் வீட்டினர் எவருக்கேனும் அழைத்து கடவுச்சொல்லை கேட்டுவிடலாமா என யோசித்தால் எவருடைய கைபேசி எண்ணும் இலக்கியாவிடம் இல்லை. 

ஏன் கணவனுடைய எண் கூட இல்லை. உன்னுடைய சோதனைக்காலம் இதுவென பூட்டியிருந்த கதவே கத்தியது ஓங்கி.

*****

காலையிலிருந்து அஞ்சு ஸ்ரீ அர்ஜுனை தனியாய் பிடித்துவிட வேண்டுமென துடித்துக்கொண்டிருக்க, அவளிடம் சிக்காமல் போராடிய அர்ஜுனுக்கு ஆத்திரமாக இருந்தது. 

அதே ஆத்திரத்தோடு இரவு பத்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தவன், இலக்கியா கால்களை கட்டி வாசலுக்கு வெளியில் தரையில் அமர்ந்து உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்ததும் கண் மண் தெரியாத கோவம். கதவை பெரிய சத்தம் வரும் படி திறந்து காத்திருந்தான். 

பதட்டத்தோடு எழுந்தவள் தன்னை கோவமாய் பார்க்கும் கணவனை கண்டுகொள்ளாது வீட்டினுள் நடந்து செல்ல, அவள் பின்னே வந்தவன் திறந்த பொழுது வந்த சத்தத்தை விட அதிகமாய் கதவை அடைத்தான். 

குளியலறை சென்று வாளியை வைக்கப் போன இலக்கியாவிடம், "எவ்ளோ நேரம் இப்டி உக்காந்திருக்க?" அவன் கேள்வியின் குரலே கோவத்தை தாங்கி இருந்தது. 

கை கடிகாரத்தை பார்த்து அவனை தலை திருப்பி பார்த்தவள், "ஏழு மணி நேரம்" என்றாள். 

"ஒரு வார்த்தை போன் பண்ணி கேக்க கூடாது?" அர்ஜுன் கேள்விக்கு பதில் கூற அவள் அங்கில்லை, அவன் பேச பேச குளியறைக்குள்ள சென்று கதவை அடைத்துக்கொண்டாள். அவளுக்கு அவள் அவசரம்.

'திமிரு திமிரு மொத்தமும் திமிரு' அர்ஜுன் அவளை திட்டிக்கொண்டிருந்த சமயம் வெளியே வந்தவள் சமையலறை பக்கம் நடந்துக்கொண்டே, 

"போன் பண்ண என்கிட்ட நம்பர் குடுத்தீங்களா சார்?" சாதாரணமாக கேட்டவள் மொத்த கவனமும் இரவு உணவை வேகமாக தயாரிக்கும் நோக்கத்தில் தான். அர்ஜூனால் பேச முடியவில்லை. 

"ஏன் அடுத்தவன் போதை கடத்துறான்-னு தெரிஞ்சு வச்சிருக்கவ ஒரு போன் நம்பர் கேட்டு வைக்க தெரியாதா?" கோவமாக அர்ஜுன் கேட்க, 

"அவசியம் இருந்ததில்லை சார். நைட் என்ன சமைக்க உங்களுக்கு?" என்றாள். 

"அவசியம் இல்லாத அப்றம் ஏன்டி சமைக்கிற? போடி" வேகமாக சொல்லியவன் மாடியேறி சென்றுவிட்டான். 

அவன் இருக்கும் வரை தலை தாழ்த்தி வேலை செய்வது போல் பாசாங்கு காட்டிய இலக்கியாவின் கழுத்து வலிக்க தலையை பின்னே சாய்த்து கண்களை மூடி திறக்க அங்கு அவள் கணவன், குழப்பத்தோடு இடையில் ஒரு கையும் தலையை ஒரு கையும் கோதிய வாக்கிலே கதவை திறக்கும் எண்ணத்தில் இல்லாமல் கால்கள் நிலையில்லாமல் ஆட நின்றான். பார்த்த இலக்கியாவிற்கு குறுஞ்சிரிப்பு, 

"எனக்கு இடியாப்பம் செய்ய போறேன்" அவள் தகவலில் திரும்பி கீழே பார்த்தவன் முறைத்த முறைப்பில் மனைவிக்கு இன்னும் சிரிப்பு தான் வந்தது. 

அவனிடம் காட்டினால் அடி தான் விழுமென உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் அவனை பார்க்க அவனோ இவளை முறைத்து அறைக்குள் சென்றுவிட்டான். 

இதமான மனநிலையோடு இரவு உணவை முடிக்க முகத்தை தூக்கி வைத்தே அவள் கொடுத்த உணவை வயிறார புசித்த பிறகே உறங்க சென்றான் கணவன். 

இலக்கியாவிற்கு மனமே நிறைந்து படுத்த உடனே உறக்கம் தழுவியது. அவளுக்கு எங்கு தெரியும் அவள் தன்னுடைய கணவனின் தூக்கத்தை களவாடி தான் தன் வசமாக்கியிருப்பது? 

விசாலமான அந்த படுக்கையறை கடந்த இரண்டு நாட்களாக அவனை அன்போடு அரவணைக்கவில்லை. எழுந்து அமர்ந்தவனுக்கு தண்ணீர் தேவைப்பட கீழே இறங்கி வந்தான். 

அவன் வீட்டின் சோபாவின் நீளத்திற்கு அவள் உடலை குறுகி படுக்கும் அவசியம் எல்லாம் இல்லை. ஆனாலும் உடல் குறுகி சுகமான உறக்கத்தில் தான் இருந்தாள். 

வந்த வேலையை மறந்து மனைவியை பார்வையிட்டே மேலேறி சென்றான். இவளை திருமணம் முடித்த பிறகு ஏதேனும் கூறி மனதை நோகடிக்க வேண்டுமென நினைத்தவன் எண்ணங்களுக்கு மாறாக தான் இருந்தது அனைத்தும். 

அவளை ஒரு வார்த்தை பேசினால் தனக்கு தான் அது வேதனை தந்தது. காதல், அவள் மேல் ஆசை என்றெல்லாம் இல்லை. அர்ஜுன் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை. 

தீர்க்கமான முடிவோடு உறங்கியவன் அடுத்த ஒரு வாரம் அவள் கண்ணிலே சிக்காமல் ஒரு காகிதத்தில் வீட்டினுள் நுழைவதற்கான கடவுச்சொல்லும் அவன் கைபேசி எண்ணையும் எழுதி வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து மாயமாய் மறைந்துவிட்டான். 

மூன்று வருட காலமாக அவனோடு வேலை பார்ப்பவளுக்கு ஏதேனும் மீட்டிங் அல்லது ஆபரேஷன் இருக்குமென யூகித்து எதுவும் பெரிதாக நினைக்கவில்லை. 

இலக்கியா அந்த ஒரு வாரமும் வீட்டிலே இல்லை. கணவன் சென்ற அந்த நாளே தானும் மருத்துவமனை நோக்கி புறப்பட்டுவிட்டாள். 

தங்கள் திருமண செய்தியை பாதி உண்மையாக பாதி பொய்யாக உலகிற்கு தெரிவிக்க விருப்பமில்லை. ஆம் திருமணம் முடிந்தது, இவன் தான் என் கணவன் என நிமிர்வோடு கூறுவதே அவளுக்கு விருப்பம். 

நீ தானே இதை ரகசிய திருமணமாகி வைக்க கூறினாய் நீயாக சொல்லும் வரை நம் திருமணம் பற்றிய செய்தி என் மூலம் வெளியே வராது என உறுதியோடு தாலி சங்கிலியை மருத்துவமனை செல்லும் நேரம் கைப்பையினுள் வைத்து சென்றிடுவாள்.

எல்லாம் நன்றாக தான் சென்றது அவள் வீட்டினர் அனைவரும் வேலை செய்யும் நேரம் அவளை கவனிக்காவிடினும், மதிய உணவு நேரம் அவளையும் தங்கள் கூட்டத்தோடு இணைத்துக்கொண்டனர். 

ஏற்கனவே அவள் தேநீரில் சொக்கி போன ராமகிருஷ்ணன் ஒரு நாள் அவள் உணவை உண்டு அதற்கும் ரசிகரானார். கையேடு அவளை தங்கள் வீட்டிற்கே அழைத்து சென்று பேரன் இல்லாத ஒரு வாரமும் தங்களோடு அவன் அறையிலே அவளை வைத்துக்கொண்டார் ராதா. 

அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி அவளோடு பழக பழக, அவள் நற்குணங்கள் அமுதசுரபி போல் ஒவ்வொன்றாக வருவதை கண்டார். 

ஆக மொத்தம் அவருக்கு அவர் ஆசைப்படியே அவர் பேரனுக்கு மனைவி அமைத்துவிட்டதில் அத்தனை பெருமை. வீட்டின் முதல் மருமகள், இத்தனை பொறுமையாய், பொறுப்பாய் இருப்பது அவருக்கு தன்னை விட இந்த பெண் மேல் நம்பிக்கை. 

சரியாக ஒரு வாரம் பிறகு இன்று அர்ஜுன் சென்னை வந்துவிடுவான் என்ற செய்தியில் அன்று இல்லம் சென்று வருவதாக கூறி தான் இலக்கியா மருத்துவமனை வந்ததே. 

வந்தவளை வசமாக அர்ஜுனின் அறையிலே வைத்து பிடித்துக்கொண்டாள் அஞ்சு ஸ்ரீ. 

அர்ஜுனின் அறையில் அர்ஜுனை எதிர்பார்த்த இலக்கியாவுக்கு கணவனுக்கு பதில் அவனது இருக்கையில் அவளை பார்த்ததும் திணறிப்போனாள். 

"வாங்க வாங்க மிஸ்ஸஸ் இலக்கியா அர்ஜுன் சக்ரவர்த்தி" எள்ளல் நிரம்பிய அவள் குரலில் மகிழ்ச்சி அதிகம் தெரிந்தது. 

இலக்கியா எதுவும் பேசாமல் இருக்கவும், "என்னடா இது அர்ஜுன் இன்னைக்கு வர்றேன்னு சொன்னான் அவனை காணம்னு பாக்குறியா?" சொகுசாக நாற்காலியை ஆட்டி ஆட்டி இன்பமுற்றாள் அஞ்சு ஸ்ரீ. 

"அவன் இன்னைக்கு வர்றேன்னு சொன்னது உண்மை தான். ஆனா உன்ன பாக்க இல்ல இலக்கியா. என்ன பாக்க" 

கணவனின் இந்த செயலை ஒருவகையில் இலக்கியா எதிர்பார்த்திருந்தது தான், "சரி மேம். அதுக்கு நான் இப்போ என்ன பண்ண?" சாதாரணமாக கேட்ட இலக்கியாவை பார்த்து, 

"சரி கோவத்தை கண்ட்ரோல் பண்றது தெரியுது. சொல்ல வந்த விசயத்த சொல்லுறேன். பெங்களூருல இருந்து வந்த..." 

தலையை தினுசான வகையில் ஆட்டி, "வெயிட், அர்ஜுன் பெங்களூரு போனது உனக்கு தெரியுமா?" கேள்வி கேட்டவள் உடனே சிரித்தும்கொண்டாள். 

"புருஷன் பொண்டாட்டினா சொல்லிருக்கலாம். நீ தான் அவனை பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிட்டியே" அதற்கும் அஞ்சுவிடமிருந்து கேலி தான். 

"மேம் டாபிக் மாறிப் போறீங்க" அவசரமாக நினைவுப்படுத்தினாள் இலக்கியா. 

அவளை முறைத்துக்கொண்டு, "ம்ம் பெங்களூரு போனவன் நேரா என்ன தான் பாக்க வந்தான். அப்டி என்னடி பண்ண அவனை? இதுவரை எதுக்கும் அசராம இருந்தவன் உன் கூட ஒரே வீட்டுல இருக்க அப்டி பயப்புடுறான்?" வியந்தாள். 

இலக்கியாவிற்கு மனம் உள்ளுக்குள் வேதனை பிறந்தாலும் வெளியில் சிரிப்பை காட்டியாக வேண்டிய கட்டாயம். 

"ஒரே நாள்ல நொந்து போனவன், இனிமேல் உன்கூட வாழ முடியாதுனு வந்து நிக்கிறான். பாரேன் எத்தனை சொந்தம் இருந்தாலும் என்கிட்ட தன்னோட கஷ்டத்தை சொல்ல வந்துருக்கான்" அவளது வியப்பில் போலித்தன்மை தான் தெரிந்தது. 

"அப்டினா அவன் இன்னும் என்கிட்டே தானே வரணும்னு துடிக்கிறான்?" 

இலக்கியாவிடம் அஞ்சு கேட்ட கேள்விக்கு, "நீங்க பேசுறதெல்லாம் அப்டியே நம்புற ஆள் நான் இல்லை மேம்" 

நாற்காலியிலுருந்து துள்ளலோடு எழுந்து வந்த அஞ்சு ஸ்ரீ, "தெரியும் நீ நம்ப மாட்டன்னு அதான் இந்த செல்ஃபி எடுத்தேன்" அவள் கூறுவது சரியாக அவள் காட்டிய புகைப்படத்தில் அஞ்சு இப்பொழுது இருக்கும் அதே உடையில் தான் இருந்தாள், அருகிலே அவள் கணவன். 

வெங்காய சருகு நிறத்தில் சட்டையில் நின்றான். அஞ்சுவோடு எப்பொழுதும் தங்கள் திருமணத்திற்கு முன்பு இருக்கும் அதே சிரிப்பு இல்லாமல், மங்கி போன சிரிப்போடு கடமைக்காக அவளோடு நிற்பது போல் தெரிந்தது. 

"என் ஆள ரொம்ப சைட் அடிக்காத" கைபேசியை பின்புறமாய் மறைத்துக்கொண்டு, 

"எப்டியும் நீ அவனை விட்டு போனதும் நான் கல்யாணம் பண்ணிப்பேன். சோ எப்படி பாத்தாலும் அவன் என் ஹாஸ்பன்ட் தானே" இலகுவாய் கூறி அஞ்சு வெளியில் சென்றிட இலக்கியாவிற்கு மனம் எங்கும் வேதனை வியாபித்தது. 

ஆதியும் அந்தமும் அவனே என வாழ்ந்தவளை இனி காக்க போவது அவனது வார்த்தைகள் தான். தான் அவனிடம் அஞ்சு பேசியதை பற்றி கேட்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் தாண்டி அவன் பதில் தான் அவளை அதிகம் உறுத்தியது. 

கண்கள் கலங்க பல நிமிடம் அவ்வறையிலே இருந்தவள் அவன் வரவிற்கு அந்நாள் முழுதும் மருத்துவமனையில் காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது. இன்று இலக்கியா வீட்டில் இருந்த சமயம் வீட்டிற்கு அவன் வரவே இல்லை.

மறுநாள் வந்தான் கையில் விவாகரத்து பத்திரத்தோடு...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro