Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌚1🌚

அன்பு மற்றும் நம்பிக்கை என்பன வெவ்வேறு சொற்களாக இருந்தாலும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. நாம் ஒருவர் மேல் வைக்கும் அன்பு அவர் மேலான நம்பிக்கையை வளர்த்துவிடக்கூடியதாக இருப்பதோடு நாம் ஒருவர் மேல் வைக்கும் நம்பிக்கை அவர் மேலான அன்பை வளர்த்துவிடக்கூடியதாகவும் இருக்கின்றது...!

அவ்வாறே நாம் ஒருவர் மேல் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பும் சரி நம்பிக்கையும் சரி ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும் போது நிச்சியமாக அதை இழப்பவரால் தாங்கமுடியாத துன்பம் ஏற்பட்டு தங்களையே மறக்கக்கூடிய நிலையே உருவாகிவிடும்.

கிராமத்துக்கே உரிய வனப்பு அங்கு நிலைகொண்டிருக்க கிராமத்தவர்கள் தங்கள் தங்களது வேளைகளில் மூழ்கிக்கிடக்கின்ற இளங்காலை வேளையில் அந்த கிராமத்தின் இயற்கை அழகை கண்டுகளிக்க ஆயிரம் கோடி கண்கள் இருந்தாலும் போதாது.

இன்னொரு வாரத்தில் இக்கிராமத்தில் திருவிழா நடைபெற இருப்பதனால் வழமையான பரபரப்பை விட இன்னும் அதிகமாகவே பரபரப்பு அனைவரையும் தொற்றியிருந்தது.

அந்த கிராமத்தில் சரியாக நடு மையத்தில் பிரசித்திப்பெற்ற சிவன்கோவில் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருந்தது. திருவிழா நெருங்க நெருங்க கோவில் சூழலின் வனப்பு இன்னும் அதிகமாகி இருந்தது.

அந்த கிராமத்தின் அழகை மேலும் மெருகூட்டக்கூடிய வகையில் சுற்றி வயல் நிலங்களும் தென்னந்தோப்புக்களும் அமைந்து காணப்பட்டன.
அங்கு காணப்படும் முக்கால்வாசிக்கும் அதிகமான நிலங்களுக்கு சொந்தமானவர் தான் சேனாதிராஜா.

அனைத்து ஊர் மக்களினதும் அபிமானத்தையும் அதீத பாசத்தையும் பெற்றவர். கிராமத்தவர்கள் தங்கள் உயிரை விட சேனாதிராஜா மீது அதீத பற்றையே வைத்திருந்தனர்.

சேனாதிராஜாவும் அவ்வாறே, மிகவும் நேர்மையானவர் என்பதோடு மாத்திரமல்லாமல் ஏழை, பணக்காரர் என்ற எந்தவித பேதமும் இன்றி அனைவருடனும் சகஜமாக பழகக்கூடியவரும் கூட. அந்த கிராமத்தின் தலைவர் என்பது மட்டும் அல்லாமல் பஞ்சாயத்தையே கூட்ட வேண்டிய அவசியங்கள் எதுவும் ஏற்படாத வகையில் மிகவும் நேர்த்தியான முறையில் பல தசாப்த காலமாக கிராமத்தை நிர்வகித்து வருகின்றவர்.

கிராமத்தவர்கள் சிலரோ அவரை தெய்வமாக மதிக்க இன்னும் பலர் அவரையே தெய்வமாகப் பார்த்து வந்தனர்.

அந்த கிராமத்தில் எந்த வீட்டிலாவது ஏதாவதொரு நல்ல நிகழ்வு நடைபெறுவதாக இருந்தாலும் முதலில்  சேனாதிராஜாவிடம் தான் ஆலோசனை பெறப்படும். அவரது ஆசீர்வாதத்தோடே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும்.

கோவில் இருக்கும் அதே தெருவில் தான் சேனாதிராஜாவின் வீடும் உள்ளது. காலாகாலமாக கூட்டுக்குடும்பாகவே வாழ்ந்து வருபவர்கள். அதற்கு ஏற்ற வகையில் பிரமாண்டமான வகையில் கிராமத்துக்கே உரிய வடிவமைப்புக்களுடன் அமைக்கப்பட்ட அழகான பிரமாண்டமான வீடு. வேலையாட்களின் பரபரப்பு என்றும் அந்த வீட்டில் நிலைகொண்டிருக்கும்.

சேனாதிராஜாவின் மனைவி விஜயகலா. இந்த தம்பதிகளுக்கு ஆண்கள் ஐந்து பெண்கள் நான்கு என்று மொத்தமாக ஒன்பது பிள்ளைகள்.

எட்டு பிள்ளைகளின் பொறுப்புகள் அனைத்தையும் இவர்கள் இருவரும் முடித்திருக்க கடைசி பையன் மட்டும் இவர்கள் பொறுப்பில் இருக்கிறான். இருபது வயதை கொண்ட அவன் சென்னையில் பிரபல கல்லூரி ஒன்றில் தன் கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கிறான்.

மற்றைய ஆண்கள் நால்வரும் ஊரிலே தங்கள் தங்கள் நிலங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் அனைவருமே தங்கள் உயிரைவிட தாய்,தந்தை மீது உயிரையே வைத்திருக்கின்றனர். அதிலும் தந்தை மீது அலாதிப்பிரியமும் பாசமும் மரியாதையும் கொண்டவர்கள்.

சேனாதிராஜாவின் பிள்ளைகளில் இந்த கடைசி பிள்ளையான விஜய் மட்டும் மிகவும் வித்தியாசமானவன். ஏனையவர்கள் திருமணம் முடித்து பிள்ளைகளை கண்ட பின்னரும் கூட தந்தை முன்னே நின்று வாயை திறக்கவே பயப்படும் நிலையில் இளமை துடிப்புடன் கூடிய இளங்காளையான விஜய் அதற்கு நேர்மாறானவன்.

தான் செய்ய நினைப்பது தனக்கு சரியாக படும் இடத்து அதனை அவ்வாறே செய்துமுடித்துவிடுவான். தப்பு என்பதை தப்பென சொல்லிக்காட்டி தட்டிக்கேட்கும் பழக்கமும் கொண்டவன்.

சுட்டெரிக்கும் அந்த வெயிலில் தனது தென்னந்தோப்பின்  மையத்தில் இருக்கும் தென்னம் பலகைகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள மர வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் சேனாதிராஜா.

என்றும் உணர்ந்தில்லாத ஒரு களைப்பு அவரை இன்று ஆட்கொண்டிருந்தது. கண்மூடி சாய்வு நாட்காளியில் சாய்ந்திருந்தவரை அவரது வேலையாளின் குரல் களைத்தது.

எழுந்தவர் என்ன என்பது போல் தன் வேலையாளைப் பார்க்க.
"ஐயா.
ராணி அம்மாவுக்கு பெண் கொழந்த பொறந்திருக்காம். அம்மா சொல்லிவிட சொன்னாங்க"
என்றவன் கைகளை கட்டி அமைதியாக நின்று அவரை பார்த்துக்கொண்டிருந்தான்.

முகம் முழுவதும் பிரகாசம் பரவியிருக்க,
"அப்போ அஜய்க்கு மூணாவதா குட்டி தேவதை ஒன்னு பொறந்திருக்கு...
ரொம்ப சந்தோஷம் குமார்.
நாம வீட்டுக்கு போகலாம்"

என்றவர் முன்னால் செல்ல பின்னால் அவருடனே வந்தவன் சாரதிக்கு செய்கை காட்ட அவன் காரை கிளப்பிக்கொண்டு வந்து சேனாதிராஜாவை ஏற்றிக்கொண்டு வீட்டை அடைந்தான்.

விஜய்க்கும் தகவல் பகிரப்பட அவனும் தன் அண்ணனின் குட்டி மகளை பார்க்க வருவதை தன் தந்தையிடம் உறுதியுடன் கூறிக்கொண்டான்.

சேனாதிராஜாவின் மூன்றாவது மகன் தான் அஜய். அவன் தனது மாமன் மகளான ராணியை கரம் பற்றியிருந்தான். அவர்களின் மூன்றாவது வாரிசாக தான் இந்த தேவதை பிறந்திருக்கிறாள்.

தேவதை பிறந்த சந்தோஷத்தில் அந்த வீடே களிப்பில் இருக்க அனைவரும் அதே களிப்போடு உறங்கச்சென்றனர்.

அழகாக அந்த காலை விடிந்திருந்தாலும் விடிந்த அந்த காலை சேனாதிராஜாவின் பொறுப்பில் இருக்கும் முழு ஊருக்குமே சோகமான செய்தியுடனே விடிந்தது.

அதற்கு காரணம் அந்த காலையில் கட்டிலில் அவரது மனைவியை வரவேற்றது சில்லிட்டிருந்த சேனாதிராஜாவின் உடலே ஆகும்.

நேற்று பிறந்த குழந்தைக்கு கிடைத்த "தேவதை" என்ற பட்டம் இன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் "தரித்திரியம்"  என்ற பட்டமாக எந்த சிரமமுமே இல்லாமல் வந்து சேர்ந்திருந்தது....!!!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro