Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

எண்ணங்கள் பயணம்

விக்ரம் தனது காலை அட்டென்ட் செய்யாமல் போனது மதுவை வருந்த செய்தது.மீண்டும் ஒரு முறை தொடர்பு கொள்ள அவள் முயற்சிக்க இம்முறை அது அணைத்துவைக்கப்பட்டிருந்தது என்பது புரிய மனபாரத்துடன் தூக்கம் வராமல் பால்கனிக்கு சென்றாள்.

முழு மதி அழகாக தன் குளுமையை இரவிற்கு பொழிந்து கொண்டிருக்க மிதமான பனி உடலை ஊடுருவி சென்றது.இரு கைகளை கட்டிக்கொண்டு குளிரை விரட்ட முயற்சித்த மது மனம் மெல்ல மெல்ல அமைதியை தனதாக்கி கொண்டது.பால்கனியில் போட்டிருந்த மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டவள் கரிய வானின் வெள்ளி நிலவை ரசிக்க துவங்கினாள்.அந்த நிலவு மிக அழகாக இருந்தது ஆங்காங்கே நட்சத்திர சிதறல்கள் அந்த வானுக்கு மேலும் அழகு சேர்க்க பாரதியின் வரிகள் அவள் மனதில் தோன்றியது.

"பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ....."

பாரதியின் பாடல் வரிகள் நெஞ்சில் தோன்ற இதழில் மெல்லிய புன்முறுவல் ஒன்று தவழ்ந்தது.அந்த அமைதியான நிலை நித்திராதேவியை அவளிடம் அழைக்க மெல்ல நித்திரையில் ஆழ்ந்தாள் மதுமிதா.

**********

மதுமிதா பாரதியின் வரிகளை நினைத்த அதே நேரம் சென்னையை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆதி தன் நினைவுகளை சில வருடங்கள் பின்னோக்கி செலுத்தினான்.

ஏழு வருடங்களுக்கு முன்

அந்த கல்லூரி ஆடிட்டோரியம் முதலாம் ஆண்டு மாணவர்களால் நிறம்பியிருக்க அனைவரும் தங்கள் முதல் நாளில் முதன் முதலில் அறிமுகமான தோழர்களுடன் உற்சாகமாக உரையாடிக்கொண்டிருந்தனர்.திடீரென ஒரு ஆண்மை நிறைந்த குரல்

"சுட்டும் விழிச் சுடர் தான்

கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி கண்ணம்மா

வானக்கருமை கொலோ

பட்டுக் கருநீலப் புடவை பதித்த

நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்

நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது

சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது

நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது

குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா

மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா

சாத்திரம் ஏதுக்கடீ

ஆத்திரம் கொண்டவர்க்கே

கண்ணம்மா சாத்திரமுண்டோடீ

மூத்தவர் சம்மதியில் வதுவை

முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார்

கன்னத்து முத்தமொன்று....."

என்று பாட அந்த அரங்கம் முழுவதும் கரகோஷம் எழுந்தது," எல்லோருக்கும் வணக்கம் நான் உங்களோட சூப்பர் சூப்பர் சீனியர்ஆதித்யன். இந்த பாட்டு பாரதியாரோட பாட்டுனு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் எனக்கு பெர்சனலா பிடிச்ச பாட்டு. என்னோட தம்பி தங்கைகள் விரும்பி கேட்டதால பாடுனேன்.இன்னைக்கு உங்களுக்கு இந்த கல்லூரியில முதல் நாள் அதே சமயம் எங்களுக்கு இந்த கல்லூரியில இதான் கடைசி நாள். இந்த துறை மத்த துறை மாதிரி இல்ல இங்க நம்ம படிப்பை முடிச்சதுக்கு அப்பறமாவும் தொழில் ரீதியா நம்ம கண்டிப்பா சந்திக்க வேண்டி வரும். சீனியர் ஜுனியர் னு பேதம் இல்லாட்டியும் ஒரே.துறையை சேர்ந்தவங்க அப்படீங்கிற நினைப்பை உங்க மனசில வச்சிக்கோங்க இதான் இங்க முக்கிய பண்பு. வருங்கால ஆர்கிடெக்டான உங்கிட்ட எங்க நாற்பது பேர் சார்பா வாழ்த்துக்களை தெரிவிச்சுகிட்டு உங்ககிட்ட இருந்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்."

ஆதித்யன் பேசி முடிக்கவும் அரங்கம் எங்கும் கைதட்டல் ஒலி வெகு நேரம் வரை கேட்டுக்கொண்டே இருந்தது.அடுத்த சில மணி நேரங்களில் முதலாம் வருட மாணவர்கள் தங்கள் சீனியர்களுடன் இணைய தொடங்க கடைசி வருட மாணவர்கள் கண்ணீர் மல்கிய விழிகளுடன் தங்களின் ஐந்தரை வருட நட்புகளிடமிருந்து விடைபெற்றுகுகொண்டு தத்தமது இல்லம் நோக்கி விரைய தொடங்கினர்.

மிதமான வேகத்தில் போய்கொண்டிருந்த ஆதி தன் செல்பேசி ஒலிக்க வண்டியை ஓரமாக பார்க் செய்து அட்டென்ட் செய்தான்.

" ஹேய்....வாலு என்ன இது ஃபோனெல்லாம் பண்ற ??"

"............" அந்த புறம் கூறிய விஷயத்தை நெற்றி சுருங்க கேட்டவன்.

" சரி நான் வீட்டுக்கு தான் வரேன் எதுவா இருந்தாலும் நேர்ல பேசலாம்."

".........." அந்த குரல் என்ன கூறியதோ அதற்கு ஆதியோ ," சரி அப்ப ஒரு கால் மணி நேரத்தில வந்திடறேன்." என்று கூறி குழப்பத்துடன் அந்த குரல் கூறிய இடத்திற்கு விரைந்தான்.

நேரம் ஐந்தை நெருங்கி கொண்டிருக்க தனது வண்டியை அந்த பூங்காவின் வாசலில் பார்க் செய்தவன் உள்ளே நுழைந்து அந்த நபரை தேடத்துவங்கினான்.

அவன் முதுகுபுறபிருந்து ஒரு கை தோளை தட்ட பின்புறம் திரும்பியவன்," ஹேய்....என்னாச்சு என்னை ஏன் இங்க வர.சொன்ன? என்ன பிரச்சனை நேரா வீட்டில வந்தே பேசிக்கிறலாமே ? என்னாச்சு??"

" அப்பப்பப்பா.......எவ்வளவு கேள்வி ஆதி? கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ , ஒவ்வொரு கேள்வியா நான் பதில் சொல்றேன்," என்றாள் அவன் எதிரே நின்றிருந்த அந்த அழகு மங்கை.

"ம்.....,"என்ற பெருமூச்சுடன் அவள் கை பிடித்து அருகே இருந்த மர பெஞ்சில் அமர்ந்தவன்," ம் இப்ப சொல்லு," என்று ஊக்கப்படுத்தினான்.

உள்ளங்கையை தாடையில் வைத்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனை கண்டு சினுங்கியள்," இப்படி என்னையே பார்த்தா எனக்கு எப்படி பேச வரும்,"

" சரி உன்னை பார்கலை ஆனால் சொல்ல வந்த விஷயத்தை தயவு செஞ்சு சீக்கிரமா சொல்றியா என் அழகு தேவதையே," என அவள் கண்ணம் கிள்ளி கொஞ்சினான்.

அவனது கொஞ்சலை கண்டு கொள்ளாதவள் திக்கி திணறி," வீட்டில எனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க னு உனக்கு தெரியும்ல ஆதி?" என்றவாறு பேச்சை துவங்கினாள்.

அவள் இதைதான் பேசப்போகிறாள் என்பது தெரிந்திருந்தாலும் அவன் பார்வை கூர்மையானது , அவன் பார்வை மாற்றத்தை கண்டுகொண்டவளின் மனம் மேலும் பயம் கொள்ள அவளை மேலே தொடருமாறு சைகை செய்தான்.

ஒரு வாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள் ," இன்னைக்கு காலையில ஒரு தரகர் வந்து ஜாதகத்தை காட்டிட்டு போனாரு அது ரொம்ப திருப்தியா இருக்கு னு அம்மாவும் அப்பாவும் பேசிக்கிட்டாங்க , நான் எவ்வளவோ சொல்லியும் கேட்க அவங்க தயாரா இல்லை. நாளைக்கு அவங்களை பொண்ணு பார்க்க வர சொல்ற முடிவோட இருக்காங்க , ப்ளீஸ்....நீயாவது என்னை புரிஞ்சுக்கோ," என நிறுத்தியவளை ஆழமாக பார்த்த ஆதித்யன்.

" உனக்கு கல்யாணத்தில இஷ்டமில்லைனு சொல்லாம எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கலைனு நேரடியா சொல்ல வேண்டியது தானே."

" என்னால அப்படி எப்படி பட்டுனு சொல்ல முடி......" வாக்கியத்தை நிறுத்தாமல் அப்பொழுதுதான் தான் உளறியதை உணர்ந்தவள் தன் கீழ் உதடை கடித்து தலையை கவிழ்த்து கொண்டாள்.

" நிமிர்ந்து என்னை பாரு,"அவன் அதட்டவும் வெளிறிய முகத்துடன் நிமிர்ந்தவள் ஆதியின் புன்சிரிப்பை பார்ததும் தைரியம் கொண்டவளாக முகம் தெளிந்தாள்.

" எதுக்கு இவ்ளோ பயம் நான் என்ன சிங்கமா புலியா உன்னை கடிச்சா திங்க போறேன்.தைரியமா சொல்ல வந்தத சொல்லு."

" அப்போ இவ்வளவு நேரம் கோபப்பட்டதெல்லாம்."

" ஹா....ஹா...ஹா......நீ பயந்து போய் இருந்தியா அதான் சும்மா உன்னை இன்னும் பயமுடுத்தலாம்னு," என்றவனை சரமாரியாக அடிக்கத்துவங்கினாள்," எருமை எருமை நான் பயந்தே போய்டேன்...ஏன்டா என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லை,"

" ஹே....என்ன நீ அண்ணேனு கொஞ்சமும் மரியாதை இல்லாம டா சொல்ற எருமைனு சொல்ற உனக்கு என்னால காரியம் ஆகனும் ஒழுங்கா மரியாதை மரியாதை,"

" ஹி...ஹி...ஹி....அது சும்மா ணா விளையாட்டுக்கு சொன்னேன் ணா, நீ நெசம்னு நம்பிட்டியாணா ஐயோ ஐயோ..."என்றவளின் காதை திருகியவன்," போதும் நடிப்பெல்லாம் வளவளனு பேசாம யாரு அந்த பாவப்பட்ட ஜீவனு சொல்லு ," என்றவனை இடைமறித்து வேறொரு குரல்," அப்பாடி இப்பவாவது கேட்டியே நீயும் உன் தங்கச்சியும் போட்ட டிராமால எங்க என்னை மறந்திடுவீங்களோனு பயந்திட்டேன் ," என்றவாறு அங்கே தோன்றினான் ஆதித்யனின் அத்தை மகன் புகழேந்தி.

இருவரையும் முறைத்த ஆதித்யன் எதுவும் கூறாமல் எழுந்து தன் பைக் நோக்கி செல்லத் துவங்க ," டேய் ஆதி...."என்றவாறு பின்தொடர முயன்ற புகழேந்தியை சுட்டெரிக்கும் பார்வையால் தள்ளி நிறுத்தியவன் பார்கை விட்டே வெளியேறினான்.

" அவசர கொடுக்கை நான்தான் நான் சொல்ற வரை வெளிய வராதீங்கனு சொன்னேன்ல இப்ப பாருங்க அண்ணன் கோச்சிகிட்டு போயிடுச்சு."

" எனக்கு என்ன தெரியும் இப்படி ஆகும்னு என்னை பார்த்தா அவன் சந்தோஷப்படுவானுதான் நான் நினைச்சேன்.இப்ப என்ன செய்யலாம் அபூ...."

" பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப என்னை கேட்டு என்ன ப்ரயோஜனம்," என்றவள் முகம் வாடி இருந்தது அதை பொருக்காத புகழ் ," உங்க அண்ணணுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சுல அவன் பார்த்துப்பான் நீ கவலைபடாத வா உன்னை வீட்டில விட்டுடறேன்," என அழைத்தான்.

அமைதியாக அவன் பின்னே அமர்ந்த அபூர்வா மனதினுள் ஒரு பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

" அபூ...அபூ....."

" கூப்டீங்களா அத்தான்,"

" வீடு வந்திடுச்சு மா கீழ இறங்கு," பதமாகவே பேசினான் புகழ்.பதில் பேசாமல் அமைதியாக இல்லம் நோக்கி சென்றவளை கவலை தோய்ந்த முகத்துடன் பார்தவன் மனதில் குற்ற உணர்வு முதல் முறையாக எழுந்தது.

வீட்டினுள்ளே நுழைந்த அபூர்வா தன் தமையனை தேடினாள்.

" யாரை தேடுற அபூ?" என்றவாறு அங்கே வந்த அவளின் அன்னை துளசி வினவனார்.

அபூர்வாவின் அன்னை துளசி சாந்தமானவர் அதே நேரம் தன் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்த்தார்.தன் கணவன் சொல் தட்டாது நடக்கும் இவர்மீது அவரின் கணவர் ராஜரத்தினம் அளவு கடந்த காதலை தன்னகத்தே தேக்கி வைத்தகருக்கிறார். ஒரு சிறிய அளவில் நூற்கண்டு தொழிற்சாலை நடத்தி வரும் ராஜரத்தினம் கடும் உழைப்பாளி அதிக வசதி இல்லாவிடினும் ஓரளவு வசதியுடனே தன் குடும்பத்தை வைத்திருந்தார்.கோயம்புத்தூர் தொழில்களில் இவரது தொழிற்சாலை மிக முக்கிய பங்காற்றுகிறது.

" ,இல்லைமா அண்ணன் இன்னும் வரலையா??"

" உங்க அண்ணன் தானே வந்து திரும்ப ஏதோ அவசர வேலைனு வெளிய போய்டான்,சரி நீ வா எனக்கு கொஞ்சம் கூட மாட உதவி செய் . நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு பொறுப்பா இருக்க வேணாம்." என்று கூறியபடி அவளை வேலை வாங்க மனம் முழுக்க குழப்பங்கள் சூழ தப்புதப்பாய் வேலை செய்து திட்டு வாங்கி கொண்டே இருந்தாள்.

வெளியே சென்றிருந்த ஆதியும் அவன் தந்தை ராஜரத்தினமும் சேர்ந்தே உள் நுழைய அதை கண்ட அபூர்வா திடுக்கிட்டாள்.

" அம்மா....கொஞ்சம் தண்ணி..." என்றவாறு ஹால் சோஃபாவில் அமர்ந்தவன் முன் அடுத்த நொடி சிரித்த முகத்துடன் தண்ணீரோடு நின்றாள் அபூ.

" தாங்கஸ்...." முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கூறிய தன் அண்ணனை எவ்வாறு ஹாலில் சமாதானம் செய்வது என்று புரியாமல் விழி விரித்தாள் அபூர்வா.

அபூர்வா மனதை படித்தது போல அவளின் தந்தை ராஜரத்தினம் ," ஆதி...நீ போய் ஃபிரெஷ் ஆகிட்டு வா கொஞ்சம் பேசனும் ," என தொடங்கினார்.

" சொல்லுங்கப்பா......"

" இதை பாரு ," அவன் கைகளில் எதையோ கொடுக்க அந்த கவரை வாங்கியவன் உள்ளிருந்து புகைப்படம் ஒன்றை வெளி எடுத்தான்.

" ம்...நீங்க என்ன நினைக்கறீங்கபா??"

" எனக்கு இது சரியா வரும்னு தோனுது நீ பார்த்துட்டு சொல்ல மேல பேசலாம்," என்றவாறு எழு நினைக்க யாரோ காலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது.அதுவரை இவர்கள் சம்பாஷனையை மறைந்து நின்று கேட்ட அபூர்வா வேகமாக வாசல் நோக்கி விரைந்தாள்.

அங்கே ராஜரத்தினத்தின் அன்பு தங்கை மரகதம் தன் மகன் புகழேந்தியுடன் சிரித்த முகமாக நின்றிருந்தார்.ஒரு நிமிடம் தடு மாறியவள் ," வாங்க....அத்தை....வாங்க அத்தான்...." என்றழைத்தவாறு அவர்களை ஹாலில் அமர செய்து அத்தையின் வரவை அன்னையிடம் அறிவிக்க உள்ளே சென்று விட்டாள்.

ஆதித்யன் அபூர்வாவின் தந்தை ராஜரத்தினத்திற்கு மரகதம் ஒரே செல்ல தங்கை.இருவரும் தொடகத்திலிருந்தே அதிக பாசம் கொண்டதால் திருமணத்திற்கு பிறகு பிரிவினை ஏற்படாவண்ணம் தங்கை மரகத்திற்கு ஜெயராமனை திருமணம் செய்து வைத்த கையுடன் ஜெயராமின் தங்கை துளசியை ராஜரத்தினம் மணந்துகொண்டார்.

இதனால் இந்த இரு குடும்பமும் கோயமுத்தூரின் வெவ்வேறு இடங்களில் வாசம் செய்தாலும் வார விடுமுறை உள்பட அனைத்து விடுமுறையையும் சேர்ந்தே கழித்தனர்.

ஆதித்யன் புகழேந்தி இருவரும் ஆண் என்பதனால் கூடுதல் பினைப்பு ஏற்பட இணைபிரியா நண்பர்களாக மாறினர்.புகழேந்திக்கு அபூர்வாவின் மீது காதல் தோன்றிய நொடியே அவளிடம் அவன் மனதை தெரியபடுத்த அவளும் வெட்கத்துடன் ஏற்றுக்கொண்டாள்.இன்றோ அதை ஆதியிடம் தெரிவிக்க அவன் கோபம் கொண்டான்.

" வா....மரகதம் என்ன திடீர் விஜயம்?"

" ஏன் ணா நான் உங்க வீட்டுக்கு வர கூடாதா என்ன?"

"சே...சே...நான் ஏன் மா அப்படி சொல்ல போறேன்.உன்னை நிரந்திரமா இங்க வந்து எங்க கூட தங்குனு தான் சொல்றேன் நீதான் கேட்கலை," என்ற தமையனை பாசமொழுக பார்த்த மரகதம்," அண்ணா என் கணவர் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தவரி போகும்போது நீ கூப்ட அப்பதான் புகழ் முதல் முதலா வேலைல சேர்ந்திருந்தான்.அவனோட சுயமரியாதையை விட்டு கொடுக்க கூடாதுனு நான் வரலை ரு சொல்லிட்டேன் இது தப்பா ணா," என்று கண் கலங்கிய தன் நாத்தனார் மற்றும் அண்ணியை ," அட என்ன அண்ணி நீங்க உங்க அண்ணன் தான் ஏதோ பாசத்தில சொல்றாருனா நீங்க இவ்ளோ விளக்கம் கொடுக்கனுமா என்ன ? உங்களை பத்தி எங்களுக்கு தெரியாதா," என்ற துளசி கையோடு கொண்டுவந்த டீயை அனைவருக்கும் பரிமாறி நிலையை சரியாக்கினார்.

" அண்ணா நான் இப்ப உன்னை ஒன்னு கேட்க வந்திருக்கேன்," என்று மரகதம் பீடிகை போட அவர் எதை கூறுவார் என்பதை உணர்ந்த புகழ் அபூர்வா. இருவரும் பதட்டமானார்கள்.

" அட அது இருக்கட்டுமா முதல்ல இந்த கவரை பிரிச்சு பாரு, நம்ம அபூக்கு வரன் பார்த்திருக்கேன் எங்க எல்லாருக்கும் சம்மதம்," என்று கூறியவாறு ஆதியின் கையிலிருந்த கவரை வாங்கி தங்கையின் கையில் கொடுத்தார்.

" இல்லை ணே நான் என்ன சொல்றேனா,"

" அட நீ சொல்றதை நான் கேட்கறேன்மா முதல்ல இந்த நல்ல விஷயத்தைபற்றி பேசிக்குவோம் தடங்கள் ஏற்படுத்தாம திறந்து பாரு,"

அண்ணண் பேச்சை தட்ட முடியாத மரகதம் உள்ளே திறந்து பார்க்க அதில் அவர் மகன் புகழேந்தி சிரித்துக்கொண்டிருந்தான்.கண்ணீர் மல்க தன் தமையனை பார்த்த மரகதம் வார்த்தை வராமல் தினறினார்.

" ஏம்மா உன் பையனும் என் பொண்ணும் விரும்புறாங்கனு பளிச்சுனு சொல்லாம ஏன் தயங்குன நான் உனக்கு முதல்ல அண்ணன் அப்பறமா தான் துளசியோட கணவன் புரிஞ்சதா?"

" ஆதிக்கு இன்னைக்கு தான் இந்த விஷயம் தெரியுமாம்.உடனே என்கிட்ட சொல்லிட்டான் நானே நாளைக்கு காலையில் உங்க வீட்டுக்கு வரலாம்னு தான் இருந்தேன்."

மேலும் அங்கே சந்தோஷம் மட்டுமே நிறைந்திருக்க பெரியவர்கள் மூவரும் அடுத்தடுத்து நடக்க வேண்டியவை குறித்து பேசினர். தனியே விடப்பட்ட ஆதி வெளியே போக எத்தனிக்க ," டேய் மச்சான்....." என்று அவனை கட்டிக்கொண்டான் புகழ்.

" கையை எடுடா ..."

" ஏன்டா என் மேல கோபப்படுற உனக்கு இதுல இஷ்டம் இல்லைனா சொல்லு இப்பவே ..."அவன் முடிக்கும் முன் ஆதியின் கை புகழின் கண்ணத்தை பதம் பார்த்திருந்தது.

" கொண்ருவேன் ராஸ்கல்... அபசகுனமா எதாவது பேசுனா. ஏன்டா இவ்ளோ பெரிய விஷயத்தை எங்கிட்ட இருந்து மறைச்சுட்ட?"

" ஹேய் மறைக்கனும்னு நினைக்கலை உன் தங்கையை காதலிக்கறேனு உன்கிட்ட எப்படி சொல்ல முடியும் அந்த தயக்கம் தான்,"

" சரி சரி மன்னிச்சு விடறேன் இனி இப்படி செய்யாத ," என்றவாறு அவனை கட்டிக்கொண்டான்.

நான்கு மாதச்களில் நல்ல நாள் ஒன்றை தேர்ந்தெடுத்த பெரியவர்கள் அன்றே புகழ்- அபூர்வா திருமணத்தை முடிவு செய்தனர்.

நாட்கள் ரெக்கைகட்டிக்கொண்டு பறக்க திருமண நாளுக்கு இன்னும் ஒரு வாரம் இருந்த நிலையில் முந்திய நாள் ஆதித்யன் பெயருக்கு ஒரு.ரிஜிஸ்டர் தபால் வர அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுது.

" மா...இப்ப எதுக்கு கப்பலே கவுந்தமாதிரி இருக்கீங்க இது எதிர்பார்தது தானே,"

" இல்லை ஆதி நாங்க இப்படி ஆகும்னு எதிர்பார்கலை,"

" மா ...நான் மாஸ்டர்ஸ் டிகிரி பண்ண கலீஃபோனியா போக எல்லா ஏற்பாடும் நான் தான் பண்ணேன். டிக்கட் விசா மாட்டும் கன்ஃபார்ம் ஆகாம இருந்துச்சு இப்ப அது கன்ஃபார்ம் ஆகியிருக்கு அதுக்கு ஏன் கவலை படறீங்க??"

" கன்ஃபார்ம் ஆனதுக்கா நாங்க கவலை படறோம் உனக்கு டிக்கட் கரெக்டா கல்யாணத்தன்னைக்கு இருக்கே?" புகழ்.

" டேய் புகழ் என்னடா நீயும் அவங்க மாதிரியே நினைக்கிற. கல்யாணம் காலையில எனக்கு ஃபளைட் நைட் எட்டு மணிக்குதானே ,"

" இருந்தாலும் நீ யில்லாம..."

" டேய் கமான் சியர்அப் காலையில கல்யாணம் முடிஞ்சதும் உங்ககூட ஸ்பென்ட் பண்ணிட்டு இவனிங் நாலு மணிக்கு தான் நான் கிளம்ப போறேன்.அதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு கொஞ்சம் கொஞ்சமா ஃபீல் பண்ணிக்கலாம்.அழுது வடியாம போய் வேலையை பாருங்க."

அனைவரையும் கிளப்பினாலும் ஆதியின் மனம் அமைதியின்றியே காணப்பட்டது.ஏதோ சரியாக படாமல்.தோன்ற அதை புறம் தள்ளி தன் பயனத்திற்கு தயாரானான்.

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிய திருமண தினமும் வந்தது.புகழேந்தி அபூர்வாவின் திருமணம் இரு மனங்களின் சங்கமமாக அழகாக அரங்கேறியது.அன்று மாலையே அனைவரிடமும் விடைபெற்று கோயம்புத்தூரை விட்டு கலீஃபோனியா பறந்தான் ஆதித்யன்.அந்த பயனத்தின் முடிவு அவன் வாழ்வையே புரட்டி போடும் என்பதை அறியாதவனாய்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro