Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 6

1. புடலையன் (நம்பி)

2. வாழை நாச்சி (நங்கை)

3. வெண்டையன் (நண்பன்)

4. கத்தரி அரசி (தோழி)

5. பச்சையன் (தம்பி)

6. வெங்கைமணி (தங்கை)

7. உருளையன் (அப்பா)

8. பீர்க்கையாள் (அம்மா)

பொருட்காட்சியை சுற்றிப் பார்த்த எட்டு பேருக்கும் அடுத்து எங்கு செல்லப் போகிறோம் என்ற கேள்வியும், எங்கு சென்று சுற்றி என்ன செய்யப்போகிறோம் என்ற சலிப்பும், சோர்வும் வந்தது. புடலையன் ஒருவன் மட்டுமே இன்னும் பல இடங்களுக்குப் போக வேண்டும், இன்னும் பல மனிதர்களின் இயல்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருக்க மற்ற ஏழு பேரிடத்திலும் அந்த ஆர்வம் பெரிதாக காணப்படவில்லை.

மற்ற நண்பர்களைப் போல தாங்களும் மக்களின் உணவுக்காகவாவது பயன்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தனர்.

அப்படியே வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு வீட்டில் மங்கள இசை, வாழைத் தோரணம் இவற்றையெல்லாம் கண்டு ஒரு நிமிடம் அங்கே நின்றனர்.

"இந்த வீட்ல ஏதோ சுப நிகழ்ச்சி நடக்குது போலிருக்கு..... நாமளும் உள்ள போய் என்ன நடக்குதுன்னு பார்க்கலாமா?" என்று பீர்க்கையாள் கேட்க அனைவரும் விருப்பம் இல்லையென்றாலும் ஏதோ ஒரு இடத்தில் இருக்க வேண்டுமென நினைத்து தலை ஆட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

"டேய் புடலையா.... இது கல்யாண வீடு போலிருக்குடா; நம்ம தக்காளி நம்பி தாத்தா மாதிரி ஒருத்தரும், பூசணியாள் பாட்டி மாதிரி ஒரு பாட்டியும் மணவறையில ஒக்காந்திருக்காங்க! இவங்க ரெண்டு பேருக்கும் நடக்கப்போறது அறுபதாங் கல்யாணமா? இல்ல எண்பதாங் கல்யாணமான்னு தான் எனக்குத் தெரியல!" என்று தன் நண்பனிடம் தன் அபிப்ராயம் கூறினான் வெண்டையன்.

"ம்ம்ம்..... ரொம்ப முக்கியம்! எத்தனாவது கல்யாணம்னு சொன்னா நீ அவங்களுக்கு போயி பெருசா மொய் வைக்கப் போற பாரு! பேசாம நில்றா! நீ வேற!" என்று முணங்கிய படி நின்ற புடலையனிடம் ஒரு முடிவுடன் வந்த உருளையனும், பீர்க்கையாளும் தாங்கள் இருவரும் இந்த கல்யாண வீட்டின் சமையலுக்கென போகப் போகிறோம் என்று தெரிவித்தனர்.

"அப்பா.... நானும் தங்களுடன் இணைந்து வருகிறேன்! எனக்கும் இப்படி
ஏனோதானோவென அங்கும், இங்குமாக நாம் அலைவது பிடிக்கவில்லை! பிறந்த நோக்கம் நிறைவேறி நான் முழுமையடைய வேண்டுமென நினைக்கிறேன்!" என்றாள் வாழை நாச்சி.

"நானும் உங்களோட வர்றேன், நானும் வர்றேன்......!" என்று புடலையனுடன் மடப்பள்ளியிலிருந்து வெளியேற எந்த வேகத்தில் தயாரானார்களோ, இப்போது அதே வேகத்தில் சமையலுக்கென செல்வதற்கும் நம்பிகளும், நங்கைகளும் தயாராகினர்.

புடலையனும், வெண்டையனும் மட்டுமே எந்த முடிவும் எடுக்காமல் நின்றிருக்க மற்ற அனைவரும் ஒரு மனதாக ஒரு முடிவு எடுத்திருப்பதைப் பார்த்து புடலையன் புன்னகைத்துக் கொண்டான்.

"என்னடா இன்னும் யோசிச்சுட்டுருக்க? சேர்ந்து வந்தோம்; சேர்ந்து இருந்தோம்! போகும் போது மட்டும் அவங்களோட போகாம எங்க தனியா நாம ரெண்டு பேருமா நின்னுக்கிட்டு என்ன செய்யப்போறோம்?" என்று கேட்ட தன் நண்பனிடம்,

"போலாம்; இந்த வீட்டு சமையலுக்கே கூட்டுக்கறியா போகலாம்!" என்று சொன்னவன் இப்போதும்
வாழை நாச்சியின்  கைகளைப் பற்றிக் கொண்டு முன்னேறி நடந்தான்.

"உங்களுக்கு என்ன ஆயிற்று? மண்ணோடு மண்ணோய் கலந்து தான் மண்ணுக்குத் தான் உரமாவேன் என்று அடிக்கடி முழங்கினீர்களே? இப்போது என்ன கூட்டுக்கறியாவதற்கும் முந்திக்கொண்டு வீரப்பயணம்?" என்று கேட்ட வாழைநாச்சியை பார்த்து ஒரு புன்முறுவல் செய்தான் புடலையன். இத்தனை நாளாக பிடித்து வைத்திருந்த அவனது பிடிவாதம் பொடிப் பொடியாக உதிர்ந்து போனதற்கு சாட்சியாய் அமைந்தது அந்தப் புன்முறுவல்!

சமையலறை வாயிலைக் கடக்கும் முன் ஒரு கணம் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு பிரிவு உபசாரம் செய்த எட்டு பேரும் அங்கே இருந்த காய்கறிக் குவியலில் அவரவர் இடத்திற்கு சென்று கலந்து விட்டனர். அரங்கனது மடப்பள்ளியில் இருந்து தப்பி பட்டினப்பிரவேசம் மேற்கொண்ட நம்பிகளும், நங்கைகளும் உணவாகப் போயிருந்தது அந்த அரங்கனை தினம் தொழுது அவரது கோவில் பாதுகாப்புப் பணியில் இருபத்தைந்து ஆண்டுகளாய்
பக்தி சிரத்தையாய் தலைமைப் பொறுப்பு வகித்த ஸ்ரீனிவாச சாஸ்திரியின் அறுபதாம் கல்யாணத்தின் விருந்துக்கு தான்.....

எளிய முறையில் நடந்த அந்த தம்பதிகளின் திருமணத்தில் விருந்தும், உபசாரமும் மட்டும் தடபுடலாக நடைபெற்றது.

"ஸ்ரீனிவாசன் கல்யாணத்து விருந்த அவனோட புள்ளைங்க ரெண்டு பேரும் ஜமாய்ச்சுட்டானுங்கங்காணும்!" என்று வந்தவர்கள் ஒவ்வொருவராக திருமண விருந்து பற்றி சிலாகித்து பேசியது உண்மையிலேயே விருந்து சிறப்பாக இருந்ததால் மட்டுமல்ல..... நம்பி, நங்கைகள் எட்டு பேர் நிறைந்த மனத்துடன் அந்த சமையலுக்கென தங்களை தியாகம் செய்து கொண்டதாலும் தான்.......

இந்த மடப்பள்ளி நம்பி, நங்கைகள் போல் தான் உங்கள் வீட்டிற்கு வாங்கி வரும் காய்கறிகள், பழங்கள் எல்லாம்! அவைகளுக்கு உயிரும், உணர்வும் இல்லையென்றாலும் அவைகளை நல்ல முறையில் பயன்படுத்தி அவற்றால் நாம் நல்ல ஆரோக்யத்துடன், வலிமையுடனும் வாழ வாழ்த்தி இந்த கதையை முடிக்கிறேன் என்று எழுதிய கனிமொழி தனது கதைக்கு சுபம் போட்டு கதையை முடித்தாள்.

ஒரு மாதத்திற்கு பின்னர்.....

"ஸ்ட்டூடெண்ஸ் நம்ம ஸ்கூல் கேம்பஸ்க்குள்ள வருஷா வருஷம் நடக்குற "வனமோட்சவ்" பங்ஷனுக்காக
20 மரக்கன்றுகளும், 10 விதமான காய்கறிகளோட விதைகளும் ஸ்ட்டூண்ட் கனிமொழி ஃப்ரம் ஃபிப்த் ஏ க்ளாஸ் ஸ்பான்ஸர் பண்ணியிருக்கா. இந்தப் பணத்தை அவ அவளோட "மடப்பள்ளி நம்பிகளும், மரக்கறி நங்கைகளும்!" ங்குற ஒரு ஷார்ட் ஸ்டோரிய பப்ளிஷ் பண்ணின பணத்துல நமக்கு குடுத்துருக்கா..... இந்த வீக் எண்டுக்குள்ள மத்த ஸ்ட்டூடெண்ட்ஸூம் நம்ம ஸ்கூலுக்கு உங்களால குடுக்க முடிஞ்ச ட்ரீ ஸீட்ஸ குடுக்கலாம்! நௌ லெட்ஸ் க்ளாப் ஃபார் கனிமொழி'ஸ் குட் எஃபர்ட்....!" என்று அலைபேசியில் காலை நடந்த ப்ரேயர் மீட்டிங்கில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கனிமொழியின் பெயரை சொல்ல அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ப்ரேயர் நேரம் முடிந்தவுடன் மிகுந்த உற்சாகத்தில் "தேங்க்யூம்மா! தேங்க்ஸ் டாடி!" என்று தன் அன்னை, தந்தையை கட்டிப் பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு முதல் வகுப்புக்காக சென்றவளை சிரிப்புடன் பார்த்த தேவராஜ் தன்னுடைய மனைவியின் கையைப் பற்றி அதில் ஒரு ஐநூறு ரூபாய் தாளையும், சில சில்லறைகளையும் அவளிடம் திணித்தான்.

"எதுக்கு தேவா இந்தப் பணம்?" என்று கேட்ட திலகாவிடம்,

"கோவில் உண்டியல்ல போடறதுக்கு! ஆக்சுவலி நம்ம பொண்ணு கதைக்காக வந்த காசுல சீட்ஸ் வாங்கினது போக இவ்ளோ தான் மிச்சம்! இந்தக் கதைக்கான இன்ஸ்பிரேஷன நீங்க கோவிலுக்குள்ள இருந்து தான வாங்கிட்டு வந்தீங்க! ஸோ ஷேர்ல ஸ்ரீரங்கனுக்கும் நாம பங்கு குடுக்கணும்ல?" என்று கேட்ட தன்னவனை அன்புடன் அணைத்துக் கொண்டாள் திலகவதி.

மடப்பள்ளி நம்பிகளும்,
மரக்கறி நங்கைகளும் கதை இனிதே நிறைவுற்றது!







Bạn đang đọc truyện trên: Truyen247.Pro