Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 1

ஒரு சிறுமியின் கற்பனையில் அவள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மடப்பள்ளியில் கடவுளுக்கும், பக்தர்களுக்காகவும் நாங்கள் இப்போது உணவாக விரும்பவில்லை என்று சொல்லி பத்து விதமான காய்கள் மட்டும் வேறு இடத்துக்கு இடம் பெயரப் பார்த்தால் என்னவாகும் என்பது தான் இந்தக் கதையின் கரு! வாருங்கள் இனி நம் நம்பிகளும், நங்கைகளும் பேசிக் கொள்வதை கேட்டு சிரித்து, மகிழ்ந்து பயணம் செய்வோம்!
_______________________________________

"......ம்மா! நம்ம ரெண்டு பேரையும் இன்னிக்கு ஈவ்னிங் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு இந்த அப்பாவை பாருங்கம்மா; இன்னும் வீட்டுக்கு வரவேயில்ல! எப்போ பார்த்தாலும் லேட்; ச்சை; இப்டி ஒரு லேட் கம்மர் டேடிக்கு பொறக்காம நான் வேற ஏதாவது ஒரு நல்ல டாடிக்கு பாப்பாவா பொறந்துருக்கலாம்!" என்று தன் அன்னையிடம் சலிப்படைந்த குரலில் புகார் படித்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் திலகவதி.

திலகாவிற்கும், அவளது கணவன் தேவராஜிற்கும் தங்கள் மகளுக்கு இரண்டு வயது ஆகி அவளுக்கு பேச்சு வந்ததிலிருந்து இந்த பத்தாவது வயது வரை அவளது கோபமொழிகள் கூட கனிமொழிகளாய் தான் இனிக்கும்!

"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!"

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தன் மகளது பேச்சு கனிமொழி தான் என்று கணித்து பெயர் வைத்தானோ, இல்லை தகப்பன் பெயர் வைத்ததால் அந்த சிறுமியின் பேச்சுக்கள் அனைத்தும் கனிமொழிகளாய் இருந்ததோ தெரியவில்லை. மொத்தத்தில் கனிமொழியின் பேச்சு கேட்பவர் மனதை மயக்குவதாய் இருந்தது.....

"மொழி..... அப்பா ஒரு கல்யாண வீட்டுக்கு ஆர்டர் சப்ளை பண்றதா ஒத்துக்கிட்டாங்கடா; கல்யாண வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் நல்லா வயிறார சாப்பிடணும்ல; அதுக்கு நம்ம காய்கறி, பழம் எல்லாம் குடுக்கணும்ல? அதுனால அப்பாவுக்கு வேலையில கொஞ்சம் லேட் ஆகியிருக்கும்! சினிமா தானேடா? இன்னிக்கு பாக்கலையின்னா ரெண்டு நாள் கழிச்சு போனாப் போகுது; இதுக்காக கோவிச்சுக்கிட்டு வேற நல்ல டாடிக்கு பொறந்துருக்கலாம்னு சொல்ற! இத உன் டாடி கேட்டா எவ்வளவு ஃபீல் பண்ணுவாங்க?" என்று திலகா கனிமொழியிடம் அவள் சற்றே உறையும்படியான குரலில் கேட்க கனிமொழிக்கு தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது.

"ஸாரிம்மா...... கோபத்துல தெரியாம டாடிய திட்டிட்டேன்; இனிமே அவர திட்டவே மாட்டேன்; டாடி வந்ததும் நான் அவர திட்டுனத நீங்க அவர்ட்ட சொல்லாதீங்கம்மா!" என்று தன் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சலாக ஒரு கெஞ்சலை செய்து கொண்டிருந்தாள் கனிமொழி.

"ம்ம்.... நீ பேசுனது எதையுமே டாடிட்ட சொல்லக்கூடாதா? அச்சச்சோ; அது ரொம்ப கஷ்டமாச்சே?" என்று கன்னத்தில் கை வைத்து யோசனை செய்து கொண்டிருந்த திலகவதியிடம்,

"ம்ம்ம்மா; ப்ப்ப்ளீஸ்ம்ம்ம்மா!" என்று கனிமொழி ஓர் அழுத்தம் கொடுக்க திலகவதி சிரிப்புடன் தன் மகளிடம்,

"ஓகே செல்லம்; நீங்க பேசுனது எதையும் நான் டாடிட்ட சொல்லல போதுமா? நாமதான் வெளிய போகணும்னு ரெடியாகிட்டோமே மொழி? அப்டியே கெளம்பி கோயிலுக்குப் போயிட்டு வருவோம். அம்மா கூட வர்றியா?" என்று தன் மகளிடம் கேட்டாள் திலகவதி.

"அப்பா கூடயாயிருந்தா பைக்ல போகலாம்னு நெனச்சேன்.....!" என்று முணங்கிய கனிமொழியிடம் புன்னகை முகத்துடன்,

"ஓஓ! இப்ப நீங்க எங்கூட கிளம்பி வந்தீங்கன்னா உங்களுக்கு பிடிச்ச ஆல்மண்ட் ஃப்ளேவர் குல்பி வாங்கித் தரலாம்னு நான் நெனச்சேன்!" என்று திலகா தன் மகளை ஓரக்கண்ணால் பார்த்த படி சொல்ல கனிமொழி
"ஹைய்யா..... வாங்க மம்மி கோவிலுக்கே போகலாம்!" என்று தன் அன்னையிடம் சொல்லி குதிநடையுடன்
கோவிலுக்கு கிளம்பினாள்.

"ஸாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ஸுரேஷம்......" என்று மெல்லிய குரலில் துதிபாடி திருவரங்கனை பக்தியாக ஸேவித்துக் கொண்டிருந்த தன் அன்னையை பார்த்த கனிமொழி தானும் அவள் பங்குக்கென தன் கணீர்க் குரலில்,

"வண்டின முரலும் சோலை:
மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீதணவும் சோலை:
குயிலினம் கூவும் சோலை,
அண்டர் கோனமரும் சோலை,
அணி திருவரங்க மென்னா:
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை:
விலக்கி நாய்க்கிடுமினீரே.......!"

என்ற பாசுரத்தை பாடி முடித்த போது திலகா தன் மகளை ஆச்சரியமாக ஏறிட்டாள். தீபராதனை முடிந்து அரங்கன் சந்நிதியை விட்டு வெளியே வந்து கோவில் மடப்பள்ளி புளியோதரையையும், லட்டையும் வாங்கிக் கொண்டு ஒரு நல்ல இடம் தேடி இருவரும் அமர்ந்தனர்.

"பாப்பு.... இப்போ பாடுனியே ஒரு பாசுரம் அத உனக்கு யார்டா சொல்லிக் குடுத்தா?" என்று திலகா தன் மகளிடம் கேட்க அவள் தன் அன்னையிடம், "பாட்டி.....!" என்றாள் புளியோதரையை தன் அன்னையின் கைகளில் இருந்து வாங்கிக் கொண்டபடி!

"பாட்டி எப்போ உனக்கு பாசுரம் சொல்லிக் குடுத்தாங்க?" என்று ஆச்சரியமாக கேட்ட திலகாவிடம்,

"பாட்டி சொல்லி எல்லாம் குடுக்கலம்மா; போன தடவ இங்க வந்துருந்தப்போ இந்தப் பாட்ட பாடுனாங்க; நான் அதக் கேட்டேனா? அது அப்டியே என் மெமரிக்குள்ள போயிடுச்சு!" என்றாள் சிறுமி புளிஅன்னத்தை ரசித்து உண்ட படி!

"குட்டிம்மா நீ பாடுன பாசுரத்துக்கு உனக்கு அர்த்தம் தெரியுமாடா செல்லம்?" என்று திலகா கனிமொழியிடம் ஆர்வத்துடன் கேட்க சிறுமி உதடு பிதுக்கினாள்.

"அர்த்தம் புரியாம எதையும் படிக்கக்கூடாதுன்னு நீங்க எனக்கு சொல்லிக் குடுத்துருக்கீங்க; ஆனா ராதாப் பாட்டியோட அம்மா அவங்களுக்கு அப்டி சொல்லித் தரலை போல; ராதாப் பாட்டிக்கு அந்தப் பாட்டுக்கு அர்த்தம் தெரியாதாம். நான் ஏற்கனவே இத அவங்க கிட்ட கேட்டுப் பார்த்துட்டேன்!" என்று தன் அன்னையிடம் தகவல் தெரிவித்தாள் மொழி.

இதுவும் கனிமொழியின் இயல்புகளில் ஒன்று. ஒருதடவை ஒரு விஷயத்தை ஊன்றிக் கேட்டுக் கொண்டால் என்றால் போதும்..... பிறகு அந்த விஷயத்தை எப்போது கேட்டாலும் அட்சரம் பிசகாமல் அப்படியே சொல்லுவாள். இதனாலேயே வீட்டில் சண்டை ஏதாவது நேர்ந்தால் மொழியின் முன் எதையும் பேசுவதற்குக் கூட திலகாவும், தேவாவும் மிகவும் யோசிப்பார்கள்!

"பாப்பு.... இந்த பாட்டு நம்ம ஸ்ரீரங்கத்தையும், அரங்கரையும் புகழுற மாதிரி பாட்டுடா குட்டி! நம்ம ஊருல அரங்கர் இருக்காரில்லையா? அதுனால வண்டெல்லாம் ரீங்காரம் போடுமாம்; மயில் அழகா டான்ஸ் ஆடுமாம்; மேகக்கூட்டம் எல்லாம் தலகவுந்து நிக்குற மாதிரி நிக்குமாம்; குயில் கூவுமாம்; இந்த உலகத்துக்கே ராஜாவா இருக்குற பெருமாள் உட்கார்ந்துருக்குற நகை மாதிரி ஸ்ரீரங்கம்னு சொல்லாத நன்றி மறந்தவங்களுக்கு சோறு போடுறத விட்டுட்டு, நீங்க அந்த சாப்பாட்டை நாய்க்கு போடுங்கன்னு சொல்றாங்க.....! ஆழ்வார்கள் சாமி கிட்ட வச்சுருக்குற பக்தியும், இருக்குற ஊரு மேல வச்சிருக்குற அபிமானத்தையும் பாட்டுல எவ்ளோ அழகா சொல்லியிருக்காங்க பாத்தியா?"

"நீ இப்ப சாப்டுற மடப்பள்ளி பிரசாதம் கூட ரொம்ப பக்தியோட செஞ்சதுடா செல்லம்! பேச்சுவழக்குல தான் அது மடப்பள்ளி; ஆனா அதோட சரியான பதம் மடைப்பள்ளி. மடு, மடம்னா அறச்சோறு குடுக்குற இடம்னு அர்த்தம்! பெருமாளுக்கும், அவரப் பார்க்க வர்ற நமக்கும் சாப்பாடு குடுக்குற இடம் எவ்ளோ உயர்வான இடம்; இல்ல பாப்பு?" என்று தன் மகளிடம் கேட்ட திலகாவிடம் எந்த பதிலும் சொல்லாமல் யோசனையில் இருந்தாள் கனிமொழி.

"என்னடா குட்டிமா..... அம்மா சொன்ன அர்த்தம் புரியலையா? இல்ல கத போரடிக்குதா? ஒண்ணுமே பேச மாட்டேங்குறீங்க?" என்று திலகா மறுபடி கனிமொழியிடம் ஒரு கேள்வி கேட்க கனிமொழி தன் தாயை நிமிர்ந்து பார்த்து,

"ம்ம்மா..... எனக்கு கத எல்லாம் போரடிக்கலம்மா; ஆனா எனக்கு இப்ப ஒரு டவுட் வந்துடுச்சு! நாம டெய்லி டெய்லி ப்ரேக்பாஸ்ட், லன்ஞ்ச், டின்னர்னு எத்தன காய்கறி வச்சு சாப்பாடு சாப்டுறோம்..... நீங்க இப்ப சொன்ன மடப்பள்ளிலயும் எத்தன வெரைட்டியா சாப்பாடு, ஸ்நாக்ஸ் எல்லாம் தர்றாங்க? இந்த சாப்பாடுக்கு யூஸ் பண்ற காய் அப்புறம் டாடியோட வேர்ஹவுஸ்ல இருக்குற காய் இதெல்லாம் எங்களோட பெர்மிஷன் இல்லாம எங்கள யாரும் வெட்டி சமைக்கக்கூடாதுன்னு நம்மட்ட சொல்லிட்டு அதுங்க பாட்டுக்கு ஜாலியா பிக்னிக், டூர் எல்லாம் போச்சுங்கன்னா எப்டிம்மா இருக்கும்?" என்று தன் தாயிடம் கேட்ட கனிமொழியிடம் சிரித்த முகமாக,

"நான் இப்போ சிரிக்குறேனே..... அந்த மாதிரி தான் சிரிப்பு சிரிப்பா இருக்கும்! காய்கறிக்கு, பழத்துக்கு எல்லாம் ஏதுடா தனியா ஒப்பீனியன்? அதுக்கு என்ன உயிர் இருக்கா? அறிவு இருக்கா? நீ கேட்ட மாதிரி தனியா யோசனை தான் இருக்கா?" என்று தன் மகளிடம் பதில் கேள்வி கேட்டாள் திலகவதி.

"இருந்தா நல்லாயிருக்கும்ல மம்மி?" என்று பிடிவாதமான குரலில் கனிமொழி கேட்க திலகவதிக்கு தன் மகள் இந்த விஷயத்தை இத்துடன் நிறுத்தப் போவதில்லை என்று புரிந்தது.

"காய்கறி, பழமெல்லாம் அவங்களுக்குள்ள பேசிக்குற மாதிரி, எல்லா உணர்ச்சிகளோடயும் இருக்குற மாதிரி யோசிச்சு உன் டைரியில வேணும்னா அத எழுதேன் குட்டிமா! பட் நீ எழுதுற விஷயம் இன்ஃபர்மேட்டிவா இருக்கணும்!" என்று திலகா சொன்னவுடன் கனிமொழி வேகமாக மண்டையை உருட்டினாள்.

"வீட்டுக்கு கெளம்பலாமா?" என்று கேட்ட தன் அன்னையிடம், "குல்ஃபி சாப்ட்ட அப்புறமா......." என்றவள்,

"ம்ம்மா...... டைரியில எழுதப்போற ஸ்டோரிக்கு என்ன டைட்டில் வைக்குறது?" என்று கண்களில் கேள்வியுடன் தன் அன்னையிடம் கேள்வி கேட்டாள்.

ஒரு விஷயத்தை தான் விளையாட்டாக தொடங்கினால் அதை இவ்வளவு பெரிதாய் இவள் எடுத்துக் கொண்டாளே என்று யோசித்த படி அமர்ந்திருந்த திலகா கோவிலின் திருவமுதக்கூடத்தை ஒரு முறை உற்று நோக்கி விட்டு தன் மகளிடம்,

"மடப்பள்ளி நம்பிகளும், மரக்கறி நங்கைகளும்....... இதுதான் உன் டைரி பிட்ஸ்ஸோட டைட்டில்! பிடிச்சிருக்கா?" என்று கேட்க

கனிமொழி தன் அன்னையை முத்தமிட்டு "சூப்பர்மா! தேங்க்ஸ்..... பட் என்னோடது டைரி பிட்ஸ் கிடையாது; ஸ்டோரி தான்!" என்று உறுதியான குரலில் உரைத்தாள்.

இரவில் வீட்டிற்கு வந்து அப்போது தான் வேலையை முடித்து விட்டு வந்திருந்த தன் தந்தையிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு, மூவருமாய் அமர்ந்து
இரவு உணவை முடித்து, திலகாவிற்கு சிறு சிறு வேலைகளில் உதவியாய் இருந்து விட்டு, பல்துலக்கி விட்டு படுக்கையில் படுத்திருந்த தேவாவின் அருகினில் தொப்பென விழுந்த கனிமொழி,

"டாடி.... உங்க கோல்டு ஸ்டோரேஜ்ல இருக்குற ப்ரூட்ஸ் அண்ட் ம்ஹூம்..... வெஜ்ஜுஸ் பேரு மட்டும் சொல்லுங்க!" என்றாள்.

அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்ட தேவா தன் மகளிடம், "நீ அப்பா மேல கோபமா இல்லையாடா மொழி.....? நீ செம கோபத்துல இருப்பேன்னு நெனச்சு அப்பா பயந்துகிட்டே வந்து பெட்ல படுத்தேன்..... ஸாரிடா செல்லம்; இன்னொரு நாள் உன்னை The Boss Baby மூவிக்கு கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன்! இல்லன்னா நம்ம TV சேனல்ஸ்லயே அந்த படத்த ஒருநாள் பாக்கலாம். சரியா?" என்று தன் மகளிடம் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்த முனைந்து கொண்டிருந்த தேவாவிடம் ஒரு அவசரப் பெருமூச்சுடன்,

"அப்பா........ காய் பேரு சொல்லுங்க!" என்றாள் மொழி.

"என்னடாமா காய்கறி பேரு உனக்குத் தெரியாதா? காரட், நூல்கோல், பட்டாணி, பாவக்காய், கோவைக்காய், தக்காளி, வெங்காயம்.....!" என்று வரிசையாக அடுக்கிய தன் தந்தையிடம் கையை காட்டி நிறுத்தியவள்,

"ஸ்டாப்.... ஸ்டாப்; இப்டியில்ல டாடி! நான் ஒரு கதை எழுதப் போறேன். கோவில் மடப்பள்ளியில இருந்து காய்கறிங்க தப்பிச்சு ஓடிப் போயி அதுங்களுக்கு பிடிச்ச மாதிரி அப்டியே ஜாலியா வெளியில ஒரு ட்ரிப் கிளம்பப் போறாங்க! அதான் ஸ்டோரிக்கு ஹீரோ, ஹீரோயின் பேரெல்லாம் வைக்கணும்ல? நம்ம பேரு மாதிரி காய் பேரெல்லாம் சொல்லுங்க டாடி?" என்று கேட்ட தன் மகளை ஏற இறங்கப் பார்த்து விட்டு அப்போது தான் படுக்கையறைக்குள் நுழைந்த மனைவியிடம்,

"இதெல்லாம் உன் ஐடியா தானா? நம்ம எல்லாரும் டெரரிஸ்ட்; காய்கறிங்க எல்லாம் பணயக்கைதிங்க..... நம்ம கிட்ட இருந்து தப்பிச்சுப் போய் அதுங்க எல்லாம் சேர்ந்து ட்ரிப் கெளம்பப் போதுங்களாக்கும்..... ஏன்டீ அம்மாவுக்கும், பொண்ணுக்கும் வேற வேலையே இல்லயா?" என்று இருவரையும் முறைத்தபடி அவர்களிடம் கேட்டான் தேவராஜ்!

"ஹலோ மிஸ்டர் தேவா; ஒரு விஷயத்த க்ரியேட்டிவா இமாஜின் பண்றது எவ்ளோ இன்ட்ரெஸ்டிங்கான வொர்க் தெரியுமா.....? நம்ம பாப்புவ உங்களால முடிஞ்சா நீங்க மோட்டிவேட் பண்ணுங்க; இல்லாட்டி சும்மாயிருங்க! அத விட்டுட்டு எங்க ரெண்டு பேரையும் டிஸ்கரேஜ் பண்றீங்க?" என்று திலகா அவனை திட்ட தேவராஜ் கோபாவேசமாக எழுந்து மகளை தன் எதிரில் அமர்த்திக் கொண்டு அவளிடம் சில பல விவாதங்கள் செய்து ஒருவழியாக கதாபாத்திரங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக தனது மகளின் டைரியில் குறிப்பிட்டான் தேவராஜ்.

1. புடலையன் (நம்பி)

2. வாழை நாச்சி (நங்கை)

3. வெண்டையன் (நண்பன்)

4. கத்தரி அரசி (தோழி)

5. பச்சையன் (தம்பி)

6. வெங்கைமணி (தங்கை)

7. உருளையன் (அப்பா)

8. பீர்க்கையாள் (அம்மா)

9. தக்காளி நம்பி (தாத்தா)

10. பூசணியாள் (பாட்டி)

"மொழி..... இந்தப் பத்துப் பேரு தான் இனிமே உன் கதையோட கேரெக்டர்ஸ்; இவங்க பேரெல்லாம் பிடிச்சிருக்கா? இப்போ நாம செட் பண்ணின ஒவ்வொரு கேரக்டருக்கும் நீ கேரக்டரோட இயல்புகளை முடிவு பண்ணனும்! இப்போ நம்ம வீட்ல மொழி பாப்புவுக்கு ஃபோட்டோக்ராபிக் மெமரி, அம்மா ஏதாவது தப்பு செஞ்சான்னா நம்ம அவள திட்டுறதுக்கு முன்னாடியே அவளுக்கு கண்ணுல தண்ணி வந்துடும்; அப்பா மொழிட்ட குடுக்குற கமிட்மெண்ட்ட அடிக்கடி மறந்து போயி அவகிட்ட ஸாரி கேட்டு அவ பின்னாலயே சுத்திட்டு இருப்பாருன்னு நம்மள பத்தி உடனே ஒவ்வொரு விஷயம் சொல்ல முடியுதுல்ல; அது தான் நம்ம இயல்பு! ஒரு கதையில இருக்குற கதாபாத்திரங்களோட இயல்பை நாம அழகா சொல்றதுல தான் அந்த கேரக்டர் ரீடர்ஸ் மனசுல போய் அழகா உட்கார்ந்துக்கும்........!" என்று சொல்லி புன்னகைத்த தேவாவை கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் பதித்த கனிமொழி,

"உனக்கு எப்டிப்பா இவ்ளோ விஷயம் தெரியுது? இன்னிக்கு ஈவ்னிங் நான் உன்னை திட்டிட்டேன்; வேற நல்ல டாடிக்கு பாப்பாவா பொறந்துருக்கலாம்னு வேற சொல்லிட்டேன்; ஸாரி டாடி! இனிமே அப்டி சொல்லவே மாட்டேன். யூ ஆர் த பெஸ்ட் டாடி இன் த வேர்ல்டு!" என்று சொன்ன படி அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டவளின் பாப் கூந்தலை வருடியவன், அவர்களை கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியை நோக்கி புருவம் உயர்த்த அவள் ஒரு நிறைவான புன்னகையை அவனுக்கான பதிலாய் தந்து விட்டு படுக்கையில் படுத்துக் கொண்டாள். மகளை தன்னருகே கிடத்திய தேவாவும் அன்றைய பொழுது நல்ல படியாக கழிந்ததற்கு ஆண்டவனிடம் நன்றி செலுத்தி விட்டு படுக்கையில் விழுந்தான்.

நம்பிகளும்....நங்கைகளும் வருவார்கள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro