8
கனாக்காலம்
கல்லூரி வாழ்க்கை கல்கண்டாக இனித்தது மஹிமாவுக்கு.
காலை ஒன்பது மணிக்கு க்ளாஸ். பள்ளியில் இருந்தது போல் பொதுவழிபாட்டு அஸெம்ப்ளி எல்லாம் கிடையாது. இருபது பேர்தான் ஒரு வகுப்பில். ஆண்கள் பத்து; பெண்கள் பத்து. சீருடை கிடையாது. இஷ்டப்பட்ட உடைகளை அணியலாம், சீராக.
ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் குறைந்தது பத்து நிமிட இடைவேளை. எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் அதில்.
கல்லூரியில் சேர்ந்ததற்காக, மஹிமாவுக்கு அவளது அப்பா ஒரு புது நவீன கைபேசி வேறு வாங்கித் தந்திருந்தார். அதைக்கொண்டு வானம், தெருவிளக்கு, நாய்க்குட்டி, குப்பைத்தொட்டி எனப் பார்ப்பதையெல்லாம் நிழற்படமாய் எடுத்தாள் அவள். 5ஜி இணையத் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலும் இணைந்து வளைய வந்தாள். கல்லூரி தந்த உற்சாகத்தில் அவளது கதையையும் கொஞ்ச கொஞ்சமாக வளர்க்கத் தொடங்கினாள்.
நாயகன் நாயகியின் உயிராக இருந்தான். அவள் கண்களைப் பார்த்தே அவள் கூற வருவதை அறிந்துகொண்டான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முதல்முறை சந்தித்தபோதே அவர்களுக்குள் ஒரு பந்தம் உருவானது. அவனைப் பார்த்தவுடன் நாயகி மயங்கினாள். தன் வாழ்க்கை இவன்தான் எனப் புரிந்துகொண்டாள்...
அவளது கதை முழுதும் இனிமைகள் மட்டுமே இருந்தன. சிரிப்பும், சந்தோஷமும், உற்சாகமுமாக, அவளது வாழ்க்கையை போலவே கதையும் நகர்ந்தது. ஆனாலும் ஏதோ குறையாக இருப்பது போலவே தோன்றியது அவளுக்கு.
விஷ்வா, மஹிமா, ரஞ்சனா, பிரகாஷ் ,ஆதீஷ், ப்ரதிபா அனைவரும் கூட்டுக்காரர்களாக மாறினர். எப்போதும் மகிழ்வுடன் ஒருவருக்கொருவர் பழகினர். மஹிமா விஷ்வாவுடனே பேருந்தில் சென்று வந்தாள் கல்லூரிக்கு.
அவ்வப்போது அலைபேசியில் ஜோஷி அழைப்பான். வேணி வெளிநாட்டில் CA படிப்பதால் எப்போதாவது வாட்ஸ்ஸாப்பில் பேசுவாள். நண்பர்கள் உடனில்லையே என அவ்வப்போது ஏங்குவாள். மற்றபடி அவர்கள் வாழ்க்கை தெள்ளாறு போலச் சென்றது. ஒரு வருடம் சென்றதே தெரியாத அளவிற்கு வேகமாக நகர்ந்தது வாழ்க்கை.
முதலாம் வருடத் தேர்வு வந்தது. Study holidays என்று பத்து நாள் தந்தனர். நண்பர்கள் கல்லூரிக்கு வந்து குழுவாகப் படிக்க முடிவெடுத்த போது, மஹிமா வீட்டிலிருந்து படிக்க எண்ணினாள். கடைசி இரண்டு நாட்கள் மட்டும் group studyக்கு வருவதாகச் சொன்னாள். அவர்கள் லேசாக ஆட்சேபித்தாலும், அவள் உறுதியாக மறுத்ததால் விட்டுவிட்டனர். மற்றவர்கள் எண்ணம்போல கல்லூரியிலேயே வந்து படித்தனர். விஷ்வா அடிக்கடி வாட்ஸ்ஸாப்பில் வந்து டவுட் கேட்டான்.
வீட்டில் மஹிமாவுக்கு ஏதோபோல் இருந்தது. பத்து நாட்கள் யாரையும் பார்க்காமல் என்னவோ போல் இருந்தது.
யாரையும் பார்க்காமல்... ??
இவர்களை ஒரு வருடமாகத்தானே தெரியும்.. அதற்குள் என்ன இத்தனை கரிசனம்? கொஞ்சம் சிந்தித்தாள்... அவளுக்கு மீண்டும் மீண்டும் ஒரு பதில்தான் கிடைத்தது.
விஷ்வா.
ஆம்... அவனைத்தான் பார்க்கத் துடித்தாள்.
சேச்சே... என்ன நினைப்பு இது? அவனுக்கு இதெல்லாம் தெரிந்தால்? நல்ல நண்பனாகப் பழகும் அவனை ஏன் ஏதேதோ நினைக்கிறேன்? இது சரியில்லை மஹி... ஒதுக்கு...தப்பான எண்ணங்களை ஒதுக்கு.
தேர்வுகள் வந்தன. எண்ணங்கள் யாவும் அதில் மட்டுமே சென்றது. ஆறு பேப்பர். இரண்டு ப்ராக்டிகல். எட்டு வைவா(viva).
மூன்று வாரங்கள் தேர்வில் சென்றன. இயல்பாகவே பேசிச் சிரித்துப் படித்து பழகினாலும் விஷ்வாவிடம் பேசும்போது இப்போதெல்லாம் வார்த்தைகளில் தடுமாற்றம் வருவதையும் மனது குறுகுறுப்பதையும் மஹிமா கவனிக்காமல் இல்லை.
தப்பு. தப்பு. செய்யாதே மஹி.
கடைசி நாள் பரீட்சை. முடிந்ததும் ஒரு மாதம் விடுமுறை. அவரவர் பேசி விடைபெற்றுக் கொண்டனர். விஷ்வாவிடம் கேட்டபோது அவன் வீட்டில்தான் இருப்பதாகச் சொன்னான். மஹிமாவுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை.
"நோ நோ மஹிம்மா! போன தடவையே எங்கயும் வரலன்னு சொல்லிட்ட.. இப்பவாச்சும் போய்ட்டு வரலாம். பங்கஜமும் வர்றாங்க... நம்ம பெரிய தாத்தா வீட்ல இருந்து சங்கர் மாமா ஃபேமிலியும் வர்றாங்க. வாம்மா.."
அப்பா அவ்வளவு கேட்டதும் மறுக்கத் தோன்றவில்லை. சரியென்று கிளம்பிவிட்டாள்.
வந்தவர்கள் எல்லாம் சீனியர் சிட்டிசன்கள் என்பதால் ஹரித்துவார், த்வாரகா, பத்ரிநாத், கேதர்நாத் என்று பத்து நாட்கள் கழிந்தது. மற்றவர்கள் மனவருத்தப் படக்கூடாது என்று சிரித்த முகமாக இருந்தாள் மஹிமா. இருப்பினும் மனது கல்லூரியை நினைத்து ஏங்கியது.
பங்கஜம் அம்மாள் தான் அவளைப் புரிந்து கொண்டவராய் அடிக்கடி ஏதாவது சிரிப்புக் கதைகள் பேசினார்.. கொஞ்சம் விளையாட்டாகவும் இருந்தார். பேச்சு எப்படியோ பள்ளி, கல்லூரி, எதிர்காலம் என்று திரும்பியது ஒரு நாள்.
"ஏன் மஹி... காலேஜ் போனதும் பயங்கர ஸ்டைலா மாறிட்ட இல்ல?"
படுக்கை மீதிருந்த போர்வையை ஒழுங்கு படுத்தியவாறே கேட்டார் அவர்.
"ஏன் அப்டி சொல்றீங்க?"
"ஸ்கூல்னா யூனிஃபார்ம், ஷூ, சாக்ஸ் போட்டு தலைபின்னிட்டுப் போகணும்...இப்ப கலர் ட்ரஸ், போனி டெய்ல், ஸ்லிப்பர்ஸ்... ஆளே மாறிப்போய் பெரிய பொண்ணா ஆயிட்ட!"
"ம்ம்... ஆமாம்மா... நீங்க சொன்னதுக்கப்றம் தான் நானே கவனிக்கறேன். பெரிய பொண்ணா பேஷனாயிட்டேன் இல்ல?"
"ஹ்ம்.. இன்னும் ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்ளோதான். காலேஜ் வாழ்க்கை முடிஞ்சா எல்லாம் முடிஞ்சது. அதுக்கப்றம் உங்கப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவார். அதனால, இப்பவே எவ்ளோ ஸ்டைலா இருக்கணுமோ இருந்துக்க."
மஹிமா அதிர்ந்தாள்.
"இது என்ன டெட்லைன் மாதிரி சொல்லறீங்க? இன்னும் இரண்டு வருஷம்தான் எனக்கு டைமா?"
"ஒத்துக்கக் கஷ்டமாத் தான் இருக்கும். ஆனா அதுதான மஹி உண்மை?"
பத்து நாள் நிம்மதி கரைந்ததுபோல் இருந்தது அவளுக்கு.
இன்னும் ரெண்டு வருஷம்... அதோடு என் வாழ்க்கை, சுதந்திரம், எல்லாம் முடிந்ததா???...
———————————————
வீட்டுக்கு வந்தபோது மஹியின் மனது நிலையற்றிருந்தது. சென்ற அத்தனை கோவில்களில் கிடைத்த நிம்மதியையும் தெளிவையும் பங்கஜம் அம்மாளின் வார்த்தைகள் அழித்திருந்தன.
உறவினர்கள் விடைபெற்றதும் நேராகத் தன் தந்தையின் அறைக்குச் சென்றாள் மஹி.
"அப்பா...?"
"என்ன மஹிம்மா? ட்ரிப் எப்டி இருந்தது? இந்தத் தலைமுறைக்கு கோயில்குளம் எல்லாம் எங்க பிடிக்குது... எங்கள மாதிரி வயசானவங்க வர்றதுனால ட்ரிப் போர் அடிச்சுதா?"
அவரது கேலியை கவனிக்காமல் மஹி தரையைப் பார்த்துக் கொண்டே நிற்கவும், ராஜகோபால் சிரிப்பை நிறுத்தினார்.
"என்னம்மா?"
"எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்களாப்பா?"
அவள் பட்டெனக் கேட்கவும் திகைத்தவர், பலமாகச் சிரித்தார்.
"நானே அதப்பத்தி எல்லாம் இன்னும் யோசிக்கலையே மஹி... இப்போதான ஃபர்ஸ்ட் இயர் படிக்கற...அதுக்குள்ள என்ன கல்யாணப் பேச்சு?"
மஹிமா முகம் மலர்ந்தது.
"அப்பாடா... நான் பயந்துட்டே இருந்தேன்.. எங்கே நீங்க ஏதோ ரெண்டு வருஷத்தில என்னை எவன் தலைலயோ கட்டி வச்சிடுவீங்கணு.."
"ஹா ஹா ஹா... அதுக்கெல்லாம் இன்னும் எவ்ளோ வருஷம் இருக்கு! நீ ஏன் பின்னாடி நடக்கறத யோசிக்கறமா? இப்ப என்ன நடக்கும்னு யோசி. நீ டயர்டா இருப்ப, போய் ரெஸ்ட் எடு."
மனதில் இருந்த பாரம் கரைந்தது அவளுக்கு. சந்தோஷமாகத் தன்னறைக்கு வந்தவளுக்கு அப்பாவின் வார்த்தைகள் வேறு நினைவுகள் தந்தன.
'அதெல்லாம் எதுக்கு இப்ப? இன்னிக்கு என்ன நடக்கும்னு யோசி!'
விஷ்வா...
மனதின் ஏக்கம் அவளுக்கே புரியாத புதிராக இருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro