Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part13

. பாகம் 13

காதல் ஒரு ரகசியமான,  வித்தியாசமான உணர்வு. அதன் சுவையை தன்னந்தனியாக கூட ருசிக்க முடியும், அது ஒருதலை காதலாக இருந்தாலும் கூட. பல தருணங்களில் அது தன் முகத்தை மறைத்துக்கொண்டு,  அதன் முகவரியை கண்டுபிடிக்க விடாமல் செய்துவிடுகிறது. அது சாதகமான முடிவை எட்டாத பொழுது,  மிகப்பெரிய பேரழிவை மனதில் ஏற்படுத்தி விடுகிறது. ஆனால்,  அது சரியான ஒரு நபரின் கையில் கிடைக்கும் பொழுது பூஜிக்கப்படுகிறது.

பாரியின் நிலைமை சொல்லில் வர்ணிக்கப்பட கூடியதாக இல்லை. மிகப் பெரிய கூட்டத்தின் நடுவில் கூட,  தான் தன்னந்தனியாக நிற்பதாக உணர்ந்தான்.  அவனுக்கும் இனியாவிற்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட பிறகு,  அவளிடம் பேச வேண்டும் என்ற ஆவல், அவனை மென்று தின்று கொண்டிருந்தது. தனது கட்டிலில் படுத்த வண்ணம்,  கண்களை மூடிக்கொண்டு,  தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான்.

" ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க இனியா? ப்ளீஸ் ஒருதடவையாவது என்கிட்ட பேசுங்களேன்?"

அவன் கையில் தட்டுப்பட்ட தலையணையை எடுத்து அணைத்துக் கொண்டான்.

" இப்படி என்கிட்ட பேசாம என்னை தவிக்க விடுறதுக்கு பதிலா,  என்ன இருக்கி அணைச்சு,  என்னுடைய மூச்சை நிறுத்தி விடுங்களேன்... உங்க தோளில் என்னை சாக விட்டுங்களேன்..."

தான் பேசிய வார்த்தைகளினால்,  தானே அதிர்ச்சியடைந்தான் பாரி. இனியாவது... அவனை  அணைப்பதாவது... இப்படிப்பட்ட எண்ணங்கள் அவன் மனதில் எப்போது தோன்றியது? எப்போதிலிருந்து அவன் இனியாவிடமிருந்து இவற்றையெல்லாம் எதிர்பார்க்கக் தொடங்கினான்? இவனுடைய இந்த எண்ணங்கள் எல்லாம் இனியாவிற்கு தெரியவந்தால்,  அவள் அவனைப் பற்றி என்ன நினைப்பாள்? அவனை நினைத்து,  அவனுக்கே பயமாக இருந்தது. கட்டிலில் எழுந்து அமர்ந்தவன்,  பாலாவிற்கு போன் செய்தான்.

" ஏய் பாரு,   எப்படி இருக்கே?" என்றான் பாலா.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்,

" நீ எப்போ *நூல்* ஷாப்ல  ஜாயின் பண்ண போறே?"

" என்னது...?  நீ நெஜமாத்தான் கேக்குறியா?  என்ன திடீர்னு?"

" நீ தானே, என்கிட்ட எல்லா வேலையையும் கத்துக்கணும்னு சொன்னே?"

" கண்டிப்பா.. "

" அப்போ எனக்கு பதில் சொல்லு"

" நான் எப்பவுமே ரெடியா தான் இருக்கேன்."

" சரி,  நாளையில் இருந்து வந்ததுடு. "

" ஓகே"

" நாளைக்கு பார்க்கலாம்."

போனை துண்டிக்கப் போன பாரியை தடுத்து நிறுத்தினான் பாலா.

" பாரு,   ஒரு நிமிஷம்."

" என்ன?"

" அவங்க பேரு என்ன?"

" யாருடைய பெயரை கேட்கிற?"

" அண்ணியோட பெயரை தான்"

ஒருநிமிடம் அமைதியானான் பாரி.

" எதுக்காக இப்படி கேக்குற?"

" எல்லாம் ஒரு யூகம் தான்".

" சீக்கிரமே என்னோட கல்யாண தேதியை  சொல்வேன். "

" எனது கல்யாண தேதியா? " அதிர்ச்சியில்  காட்டு கத்து கத்தினான் பாலா.

" ஏண்டா இப்படி கத்துற? "

" எல்லாம் அதிர்ச்சியில தான். "

" இதுல அதிர்ச்சி ஆகுறதுக்கு என்ன இருக்கு?"

" ஒன்னா, இரண்டா?  நீ கல்யாணம் பண்ணிக்க போறே.. அதுவும் சீக்கிரமாவே... அதுவும் தேதி வேற நிச்சயம் பண்ண போறேன்னு சொல்ற... அதுவும்.. "

" போதும் நிறுத்துடா. ஆமாம். நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் சித்தி சித்தப்பா கிட்ட கூட இதைப்பற்றி பேசிட்டேன். அவங்க துவாரகைல  இருந்து இன்னும் இரண்டு நாளில் திரும்பி வராங்க. "

" உன்னோட கல்லு மனசை மாத்தினஅந்த  புண்ணியவதியை பார்க்கணும்னு எனக்கு,  உண்மையிலேயே ரொம்ப ஆசையா இருக்கு."

இனியாவை நினைத்து,  சத்தமில்லாமல் சிரித்தான் பாரி.

" கவலப்படாத பாரு,  நான் நூலுக்கு வந்து ஜாயின் பண்ணிடு,  உனக்கு அண்ணியோட நிறைய டைம் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்றேன். "

" நான் போனை வைக்கிறேன்" என்று போனை துண்டித்தான் பாரி.

பாலாவின் பேச்சில் அயர்ந்து போனான் பாரி. அவன் நினைத்தது போல்,  பாலா ஒன்றும் அவ்வளவு வெள்ளந்தி கிடையாது. உண்மையில் சொல்லப்போனால்,  பாரிக்கு அவன் கடையை பார்த்துக் கொள்ள,  ஒருவர் தேவை. திருமண வேலை தொடங்கிவிட்டால்,  அவனால் கடையைக் கவனித்துக் கொள்ள முடியாது என்பதால்தான் அவன் பாலாவை உள்ளே கொண்டுவர நினைத்தான். யாருக்கு தெரியும்,  ஒருவேளை அவனுக்கு இனியாவை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கலாம். இனியவை சந்திப்பதை நினைத்த பொழுது,  அவனை அறியாமலேயே அவன் முகத்தில் புன்னகை பூத்தது.

*சேதுராமன் இல்லம்*

யாரோ பின்னாலிருந்து இனியாவின் கண்களைப் பொத்த,  அது யார் என்று தெரிந்து கொண்டு சிரித்தாள் இனியா.

"ப்ரீத்தி..."

இனியாவின் கண்களைப் பொத்தியிருந்த தனது கைகளை எடுத்து விட்டு,  அவளை இறுக்கமாக  அணைத்துக் கொண்டாள் பிரீத்தி.

" கடவுளே... போற போக்க பாத்தா,  நீ என் மூச்சை நிறுத்திடுவ போல இருக்கே?" என்றாள் இனியா.

" அட இந்த சாதாரண பிடிக்கே இப்படி அலுத்துகிட்டா,  உன்னோட பாரியோட பிடியை  எப்படி சமாளிக்க போற?" என்று அவளை சீண்டினாள்  பிரீத்தி.

இனியாவின் மல்லிகை பூ நிற கண்ணம்,  ரோஜா நிறத்திற்கு மாறியது. அவள் ப்ரித்தியை அணைத்துக்கொண்டாள். ப்ரீத்தி அவளை கேலி செய்ததை பார்த்த பொழுது, இனியாவிற்கு  ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால்,  அவளுடைய திருமணம்,  சுபாஷ் உடன் நிச்சயமாகியிருந்த பொழுது,  அவள் இப்படி எல்லாம் அவளை கேலி செய்ததே இல்லை.

" ஆஹா... நீ வெட்கப்படறியா...?  இதெல்லாம் உன் பாரி செஞ்ச மாயமா? "

" வாயை மூடுடி"  வெட்கம் தாங்காமல் கூறினாள் இனியா.

" நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?  உனக்கு கல்யாணம் நடக்கப் போகுது... அதுவும் உனக்கு ஏத்த ஒருத்தரோட..."

சற்று நிறுத்தினாள் ப்ரீத்தி.

" நீ அவர் கிட்ட பேசினியா?"

இல்லை என்று தலையசைத்தாள் உதட்டை கடித்தபடி இனியா.

" ஆனா ஏன்?  எங்க உன்னோட போன்?  குடு நான் அவருடைய நம்பருக்கு  நான் கால் பண்றேன்"

" வேண்டாம் ப்ளீஸ் பண்ணாதே" கெஞ்சினாள் இனியா.

" ஆனா ஏன்?  என்ன பிரச்சினை உனக்கு?"

" நாங்க ரெண்டுபேரும் நல்ல ஃபிரண்ட்சுனு உனக்கு தெரியுமில்ல?"

" நீங்க ரெண்டு பேரும் ஃபிரண்டா இருந்தீங்க... இப்ப இல்ல. எல்லாம் மாறிப்போச்சு. அவரு உன்னோட திருவாளர் ஆக போறாரு."

" அவரு என்ன பத்தி என்ன நினைக்கிறாருன்னு  எனக்கு தெரியலடி. உனக்கு அவர பற்றி தெரியும் இல்லையா?  அவர்,  என்னை தவிர வேற எந்த பெண்ணுகிட்டேயும் பேச மாட்டாரு. என்னை ஏன் அவரு கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டார்ன்னு எனக்கு தெரியல. அவரு என் மேல பரிதாபப்பட்டு தான்,  இந்த கல்யாணத்துக்கு சம்மதித்து இருக்கிறார்ன்னு நான் நினைக்கிறேன். ஒருவேளை அப்படி இருந்திருந்தால், என்னால எப்படி அவர்கிட்ட சகஜமாக இருக்க முடியும்?"

" நீ அவர் கிட்ட பேசாம இருக்கிற வரைக்கும்,  அவர் என்ன நினைக்கிறார்ன்னு உன்னால் எப்படி தெரிஞ்சுக்க முடியும்?"

" நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்டா இருந்த வரைக்கும் நான் அவர் கிட்ட பேச தயங்குனது இல்லை. ஆனா இப்போ,  எப்படி ஆரம்பிக்கறதுன்னே எனக்கு புரியல. அவர் ஏதாவது தப்பா நினைச்சிட்டா என்ன பண்றதுன்னு பயமா இருக்குடி.?"

" நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்க. எப்படி இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை நீ எதிர் கொண்டு தானே ஆகணும்?"

" கல்யாணத்துக்கு பிறகு,  அதை நான் ஒட்டுமொத்தமா எதிர்கொண்டுகிறேன்."

" ஆனா கல்யாணத்துக்கு பிறகும்,  இதே மாதிரி தயங்கிக் கொண்டே இருக்காதே."

" அது பாரியை  பொருத்த விஷயம். அவர் எப்படி நடந்துகிறார்கறதை பொறுத்து தான் நான் நடந்துக்க முடியும்."

" ஒருவேளை,  நீ நினைக்கிற மாதிரியே,  அவரும் நெனச்சா என்ன செய்யறது?"

" எனக்கு தெரியல. ஆனா,  அவரு எப்பயுமே அவருடைய லிமிட்டை  கிராஸ் பண்ணது இல்ல"

" அவரு  லிமிடை கிராஸ் பண்ணது இல்ல... ஏன்னா, நீங்க நட்பு என்கிற வட்டத்துக்குள் நின்னுட்டு இருந்திங்க. ஆனா கல்யாணத்துக்கு எந்த லிமிட்டும் இல்ல. அந்த ஒரு உறவு தான்,  எல்லா லிமிட்டையும் கிராஸ் பண்ண அனுமதிக்குது. நான் தெரியாம தான் கேக்குறேன், உன் ஆளு பார்க்க செம ஹன்ட்ஸமா  இருக்காறே,  நீ உண்மையிலேயே அவரை விட்டு விலகி இருந்துடுவியா?" வேண்டுமென்றே அவளை சீண்டினாள் பிரீத்தி.

" நிச்சயமா சொல்றதுக்கு இல்ல" உதட்டைக் கடித்துக் கொண்டு வெட்கப் புன்னகையுடன் கூறினாள்  இனியா.

" நீ வேணா பாரு,  நீ எப்பவுமே அவரை விட்டுப் பிரியாமல்,  அவர்கிட்ட ஓட்டிக்கொண்டே இருக்க போறே."

" அவரு அவ்வளவு ஒர்த்தா இருந்தா,  நிச்சயம் அதை நான் செய்வேன்"

" ஆனா,  கல்யாணத்துக்கு அப்புறமும் உனக்கு ஃபிரண்டாவே இருந்தா என்ன செய்வே? "

" அதுதான் எனக்கும் புரியல" தனது நகத்தை கடித்தாள் இனியா.

" நீ அவரை ரேப் பண்ணிட மாட்டேன்னு நம்புறேன். "

என பிரீத்தி சொல்ல வாயை பிளந்தாள் இனியா. அடுத்த நொடி தன்னை சுதாகரித்துக் கொண்டு,

" அப்படி எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்றதுக்கு இல்லை. "

என்று கூறிவிட்டு,  சிரித்தபடி ஓடிச் சென்று,  தனது அறையின் கதவை சாத்தி தாளிட்டு கொண்டாள், வெளியிலிருந்து கதவைத் தட்டிய ப்ரீத்திக்கு செவிசாய்க்காமல்.

கதவின் மீது சாய்ந்து கொண்டு தனக்கும் ப்ரீத்திக்கும்  இடையில் நடைபெற்ற உரையாடலை நினைத்துப் பார்த்தாள். திருமணத்திற்கு பிறகு பாரியின் நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகிறது?  அவன்  அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டு விடுவானா?

ஒருவரைப் பற்றி மற்றொருவர் தெரிந்து கொள்ளாமல்,  இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்போம்,  அவர்கள் இருவரில்,  கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரப் போவது யார் என்று.

.....

திருமண தேதியை தள்ளி போட சேதுராமன் விரும்பவில்லை அதனால் அவர் அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை நிச்சயித்தார்.

பாரியின் சித்தப்பா ராஜுவும் அவர் மனைவி சுதாவும் துவாரகைக்கு யாத்திரை சென்று இருந்தார்கள். பாரிக்கு திருமணம் நிச்சயம் ஆனதில், அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அதனால் அவர்கள் தங்களுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும், சீக்கிரமே வந்து அவர்களுடன் இணைந்து கொள்வதாகவும் கூறிவிட்டார்கள். பாரியும்,  எந்த சாக்கையும் சொல்லி,  திருமணத்தை தள்ளிப் போட விரும்பவில்லை.

பாரிக்கு, இனியா  நடந்து கொண்ட விதம்,  மிகவும் வருத்தத்தை அளித்தது. அவள் ஆன்-லைனில் வருவதையே தவிர்த்து கொண்டிருந்தாள். என்னதான் ஆனது இந்த பெண்ணுக்கு?  அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா இல்லையா?  ஆனால்,  அவள் தான் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று வாதாடினாளே... அவள் மனதில் என்னதான் இருக்கிறது? ஒருவேளை அவள் இன்னும் அவர்களுடைய நட்பு வட்டத்தில் இருந்து வெளிவரவில்லையா? இந்த உறவு முறையை எப்படி கையாளப் போகிறோம் என்று பாரிக்கு பயம் ஏற்பட்டது. ஒருவேளை,  இவன் காட்டும் ஆவல்,  இவன் மீது தவறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்திவிடுமோ? அப்படி நடக்க அவனால் அனுமதிக்க முடியாது. அவன் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிந்திக்காமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் பிரச்சினைக்குரியதாகிவிடும்.

இறுதியில்,  சேதுராமன் இல்லத்திற்கு செல்வதற்கு,  ஏதோ ஒரு சாக்கை பற்றிக் கொண்டு புறப்பட்டான் பாரி. முன்னறிவிப்பு ஏதுமின்றி சேதுராமன் இல்லத்தை அடைந்தான். சேதுராமன் இல்லம் பரபரப்பாக காணப்பட்டது. உள்ளிருந்து வந்த பேச்சு குரலில்,  தனது பெயர் அடிபடவே அவன் அப்படியே வெளியில் நின்றான்.

" நம்ம பாரியையும் கூட அழைச்சிட்டு போகணும்னு நினைக்கிறேன்" என்றார் சேதுராமன்.

" எனக்கும் அதுதான் சரின்னு படுது" என்றாள் சீதா.

" அம்மா,  பாரி ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. இதுக்காக எல்லாம் அவரை நம்மளோட வரசொல்லி கூப்பிடுறது சரின்னு நான் நினைக்கல." என்றாள்  இனியா.

பாரிக்கு ஒன்றுமே புரியவில்லை,  அவர்கள் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அவன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, வீட்டினுள் நுழைந்தான்.

" டிரஸ் எடுக்குற விஷயத்தை,  அவர் விருப்பத்திற்கு விட்டுவிடுவது நல்லதுன்னு  எனக்கு தோணுது"

அவர்கள் திருமணத்திற்காக துணி எடுப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

பேசிக்கொண்டே வெளியே வந்த இனியா,  பாரி,  எதிரில் வருவதை கவனிக்காமல்,  அவன் மீது மோதிக் கொண்டாள். நிலைதடுமாறி விழப்போனவளை,  வளைத்து பிடித்து, இழுத்துக்கொண்டான் பாரி. அவனுடைய சட்டை காலரை கெட்டியாகப் பற்றிக் கொண்டு,  தன்னை நிலை நிறுத்தினாள்  இனியா. ஒரு சில நொடிகள்,  ஒருவர் விழியில் மற்றொருவர்,  தங்களை மறந்தார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏற்கனவே ஏகப்பட்ட குழப்பத்தில் இருந்த இனியா தான் முதலில் தெளிந்தாள். ஓரடி பின் நோக்கி நகர்ந்தாள்.

" எப்படி இருக்கீங்க இனியா?"

" நான் நல்லா இருக்கேன். நீங்க?" என்றாள்  வேறெங்கோ பார்த்துக்கொண்டு.

" ஆனா,  நீங்க நல்லா இருக்கிறதா எனக்கு தெரியலையே."

என்றவனை குழப்பமாய் பார்த்தாள் இனியா.

" நீங்க *ஆன்லைன்ல* வர்றதே இல்லையே... உங்க போனையும் இன்னும் நீங்க *ஆன்* செய்யல."

" என்னோட முறிஞ்சு போன கல்யாணத்தைப் பத்தி,  கேள்வி மேல கேள்வி கேட்டு,  எல்லாரும் என்ன ரொம்ப தொந்தரவு செய்கிறாங்க. ரொம்ப எரிச்சலா இருக்கு. அதனால தான் நான் இன்னும் போனை ஆண் செய்யல. "

*அப்பாடா* என்று இருந்தது பாரிக்கு. இந்தக் கோணத்தில் இருந்து அவன் யோசிக்கவே இல்லை. அவன் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தான். எவ்வளவு அறிவீனம்... அவன் எப்படி இதை பற்றி யோசிக்காமல் போனான்?

" உள்ள வாங்க பாரி"

" யாருமா அது" என்றார் சேதுராமன் உள்ளே இருந்தபடி.

" பாரி வந்திருக்கார் பா."

சேதுராமனும்,  சீதாவும், அவர்களுக்கு வரப்போகும் மாப்பிள்ளையை வரவேற்றார்கள்.

" நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுவதற்காக தான் இங்க வந்தேன்."

" சொல்லுங்க பாரி" என்றார் சேதுராமன்.

" என்னுடைய சித்தப்பாவும் சித்தியும் துவாரகைக்கு யாத்திரை போயிருக்காங்க. நான் கல்யாண விஷயத்தை பத்தி அவங்க கிட்ட சொல்லிட்டேன். அவங்க இன்னும் இரண்டொரு நாளில் துவாரகையிலிருந்து கிளம்பிடுவாங்க. எனக்குனு இருக்கற ஒரே சொந்தம் அவங்க மட்டும் தான். அவங்க இனியாவை பாக்கணும்னு விரும்புறாங்க."

" தாராளமா பார்க்கட்டும். உங்களுக்கு வரப் போகிற மனைவியை பாக்க,  அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு" என்றார் சேதுராமன்.

அறையின் மூலையில் அமர்ந்து கொண்டு மெஹந்தி டிசைன் புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்த இனியா, * உங்களுக்கு வரப்போகிற மனைவி* என்ற வாசகத்தைக் கேட்டு மென்மையான சிரித்தாள். அதை பாரியும் பார்க்க தவறவில்லை. அவளுடைய அந்த சிறிய புன்னகை அவன் மனதில் மிகப் பெரிய மகிழ்ச்சியை  ஏற்படுத்தியது.

எதேச்சையாக தனது தலையை நிமிர்த்திய இனியா,  அவள் புன்னகைப்பதை பார்த்து, பாரியும்பார்த்து புன்னகைத்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து, கன்னம் சிவந்தாள்.

இவை அனைத்தும்,  பாரியின் மனதை மயிலிறகால் வருடுவது போல் இதமாய் இருந்தது. இன்னும் சில நாட்களில் இனியா,  அவனுடைய இல்லத்திற்கு,  அவனுக்காக வந்துவிடுவாள். அதை நினைக்கும் போதே அவனுக்கு புல்லரித்தது.

ஒவ்வொரு இதயமும் தனக்கு அன்பையும் அமைதியையும் தரக்கூடிய யாரோஒருவரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவரை தனக்கு நெருக்கமாகி கொள்கிறது. பாரியைப் பொருத்தவரை அவன் இதயத்திற்கு மிக நெருக்கமானவர் என்றால் அது இனியா  ஒருத்திதான். வரப்போகும் நாட்களை எண்ணி தாளாத எதிர்பார்ப்புடன் காத்திருந்தான் பாரி. அதே நேரம் அவன் இதயத்தின் ஓரத்தில் சிறிதளவு பயமும் கலந்து இருந்தது. ஒருவேளை அவன் எதிர்பார்ப்புகள் நிஜம் ஆகாமல் போய்விட்டால் என்ன செய்வது. நடக்கப்போவது என்ன என்பதை நாமும் தான் பார்த்து விடுவோமே.

தொடரும்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro