Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

5

5-வனிதா பார்வையில் (தொடர்ச்சி).

ஒரு நாள், காலேஜ் காண்டீனில் இருக்கும் போது ராஜா என் அருகில் வந்தான். நான் இதே காலேஜில் படிக்கும் காலத்தில் இருந்தே அவன் என்னை கவனிப்பது தெரியும்.

"வனிதா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"

"சொல்லுங்க" என்றேன். ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டேன். ஆனால், என் மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து கொண்டே இருந்தது. என்ன பேசப் போகின்றான் என்ற ஆர்வம். அதே நேரம் பயமும் இருந்தது. ஏனென்றால் ராஜாவை கண்டால் எல்லோருக்குமே மரியாதை கலந்த ஒரு பயம். தேவையில்லாத விடயங்களில் அவன் மூக்கை நுழைப்பதில்லை. ஆனால் அதுவே மாணவர்களுக்கு ஏதும் பிரச்சினைகள் வந்தால், முதல் ஆளாக வந்து நிற்பான். இதனாலேயே மாணவர்கள் மத்தியில் அவனுக்கென்று ஒரு மரியாதை இருந்தது.

"வனிதா. வனிதா தானே உங்க பேரு. ஏங்க எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்ங்க. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நீங்க ஸ்டூடன்டா இருந்த காலத்துல இருந்தே பார்த்துக்கிட்டு வரேன். பொண்ணுங்க பசங்க எல்லாம் ஒன்னா சுத்தினாலும் நீங்க மட்டும் தனியாவே புக்க வெச்சி படிச்சிக்கிட்டு இருப்பீங்க. இவ்வளவு அழகான பொண்ணு தனியா இருந்து படிச்சத நான் பார்த்ததே இல்லைங்க. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு" என்றான்.

ராஜா பேசியதை கேட்ட போது என் மனதுக்குள் சிரிப்பு வந்தது.
கம்பீரமான ஆண். என் முன்னே
மிகவும் அமைதியாக பேசிக்கொண்டிருக்கின்றான். அதுவும் அவன் கேட்க வந்த விடயத்தை முழுமையாக கேட்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டான்.

நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நீங்க ஏதோ கேட்கனும்னு வந்தீங்க. ஆனா பாதியிலேயே நிறுத்திட்டீங்க. உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கு. அப்புறம்..." என்று நான் கேட்க அவன் வாயடைத்துப் போனான். எப்போதும் அமைதியாக இருக்கும் நான் இப்படி பேசுவேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டான்.

"எனக்கு எப்படி கேட்குறதுன்னு தெரியல. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்றான். ராஜாவின் வெகுளித்தனத்தை எண்ணி எனக்கு சிரிப்புதான் வந்தது. ஒரு காதல் வசனம் இல்லை. தேவதைகள் பாட்டு பாடவில்லை. தலைக்கு மேல் ஒளிவட்டம் வீசவில்லை. ஆனால் அவன் காதலை அவனுக்கு தெரிந்த வகையில் கூறிவிட்டான். எனக்கு அப்போது தோன்றியது ஒன்றே ஒன்றுதான். என் தந்தையிடம் இருந்து எனக்கு சுதந்திரம் வாங்கித் தரப்போகும் மகாத்மா இவன் தான்.

"இதுக்கு நான் உடனே பதில் சொல்லனுமா ராஜா?" என்று கேட்க அவன் உடனே இல்லை என்று தலை அசைத்தான்.

"நீங்க எவ்வளவு நாள் வேணும்னாலும் எடுத்துக்கோங்க. உங்களுக்கு பிடிக்கலன்னு சொன்னா கூட நான் அதுக்கு அப்புறம் உங்களை தொல்லை பண்ண மாட்டேன்" என்றான். எவ்வளவு அழகாக, நிதானமாக கூறிவிட்டான். பெண்ணை மதிக்கத் தெரிந்தவன். அவன் காதலை நான் ஏற்க இது ஒன்றே போதுமே!

முதல் காதல். எல்லோருக்கும் புனிதமான ஒன்று. உடலை விட்டு உயிர் போனாலும் அந்த உயிரில் அந்த காதலின் வாசம் இருக்கும். யாராலும் என்றுமே அழிக்க முடியாத ஒன்றுதான் முதல் காதல்.

ராஜா என்னிடம் வந்து காதலை கூறிய மறு கணமே அவனை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். எதனால் இந்த அவசரம் என்று தெரியவில்லை. ஆனால் இதுவே என் தந்தையின் உடல் நலம் நன்றாக இருந்திருந்தால், ராஜா அவன் காதலை சொன்னதுமே  என் தந்தையின் தண்டனைகளுக்கு பயந்து இந்த வேலையை விட்டு நான் ஓடியிருப்பேன். ஆனால் இப்போது என் தந்தைய பற்றிய பயம் முன் போன்று அதிகமாக இல்லை. தந்தை ஏதும் கூறினால், எனது ஆசைகளையும் கூறும் அளவுக்கு முன்னேறி இருந்தேன். ஆனால், தந்தையை எதிர்க்கும் துணிச்சல் எனக்கில்லை. அந்த துணிவு வர வேண்டுமானால் எனக்கு கடலளவு தைரியம் தேவை. அதை கொடுக்க கூடிய ஆற்றல் ராஜாவுக்கு உண்டு.

ஒரு நாள் நான் வேலைக்கு செல்லும் கம்பனியில் சிறிய பிரச்சினை ஒன்றானது. அக்கவுண்டன்ட் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக ஆடிட்டர் கண்டுபிடித்துவிட்டார். ஆனால் அக்கவுண்டன்ட் அந்த பழியை மிக சுலபமாக என்மீது திருப்பிவிட்டார். நான் திருடவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்னால் நிரூபிக்க முடியவில்லை. கடைசியாக பணம் இருக்கும் லாக்கரை மூடியது நான் தான் என்பதற்கு அங்கு இருந்த கிளார்க் சாட்சி. என்ன செய்வதென்று புரியவில்லை. மொத்தமாக இரண்டு லட்சம். வீட்டில் கேட்டால் என் தந்தை கொன்றே விடுவார். பணம் திருட்டுப் போனதற்காக அல்ல. நான் கம்பனிக்கு வேலைக்கு சென்றதற்காக!

கம்பனி மேனேஜரிடம் சென்று பேசுவது உசிதம் என்று கருதினேன். அவர் தன் பக்க நியாயத்தில் உறுதியாக இருந்தார். நான் திருடவில்லை என்பது எல்லோருக்கும் தெரியுமாம். ஆனால் ஆதாரங்கள் எனக்கெதிராக இருப்பதால் எதுவுமே செய்ய முடியாதாம். ஆனால் கம்பனி கெஸ்ட் ஹவுஸுக்கு ஒரு நாள் வந்தால் எல்லாவற்றையும் மாற்றிவிடலாமாம். எனக்கு உடல் கூசியது. நேரடியாக என்னை விபச்சாரம் செய்ய அழைக்கின்றனர்.  ஆனால் எனக்கு முன் இருக்கும் வேறு வழிகள் என்ன? புரியவே இல்லை. மேனேஜரின் ஆசைக்கு இணங்குவதை தவிர வேறு வழியே எனக்கு தெரியவில்லை.

சனிக்கிழமை, காலேஜில் எக்ஸாமிற்காக ஸ்பெஷல் க்ளாஸ் இருப்பதாக பொய் கூறி கம்பனி கெஸ்ட் ஹவுஸுக்கு செல்ல பஸ் ஸ்டாப்பில் நின்றேன். என் முன் மிக வேகமாக ஒரு பைக் வந்து நின்றது. அதில் இருந்தவன் ராஜாதான். இந்த குழப்பமான நாட்களில் இவனை எப்படி மறந்தேன். ச்சே! என்னை நானே நொந்து கொண்டேன். கம்பனியில் பணம் திருட்டுப் போனதில் இருந்து என் சிந்தை சரியாக இயங்கவில்லை என்பதை இது உணர்த்தியது. ராஜாவின் முகத்தை பார்த்தேன். அவன் மிகவும் கோபமாக இருப்பதை அவன் முகமே காட்டியது. பைக்கின் பின் இருக்கையை காட்டி "ஏறு" என்றான்.

அக்கம் பக்கம் பார்த்துவிட்டு நான் தயக்கமாக நின்றேன். எனக்கு மட்டும் கேட்கும் விதமாக குரலை தாழ்த்தி,

"பிரச்சினைனு வந்தப்போ கண்டவன் கூப்பிட்டான்னு போக தோனுதில்ல. உனக்கு நல்லது செய்யலாம்னு வந்த என்கூட பைக்ல வர்றதுக்கு யோசிக்கிற. இப்போ நீ பைக்ல ஏறல்ல. அப்பறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது" என்றான். நான் குறுகிப் போனேன். அவனுக்கு எல்லாமே தெரிந்திருக்கின்றது. இதற்கு மேல் பேசினால் ராஜா ஏதும் விபரீதமாக செய்துவிடுவான். அவன் சொல்வதை கேட்பதே உசிதம் என நினைத்தேன்.

அவனின் பைக் கம்பனி கெஸ்ட் ஹவுஸுற்கு விரைந்தது. உள்ளே மேனேஜர் இருக்க ராஜா நேரடியாக அவரிடம் சென்றான். நான் தயங்கி தயங்கி அவன் பின்னால் சென்றேன்.

"சார் இவ நான் கட்டிக்க போற பொண்ணு. இவ மேல ஏதோ பொய்யா திருட்டுப் பட்டம் கட்டிருக்கிங்கன்னு தெரியும். இதோ இவ திருடினதா சொன்ன பணம் இங்க இருக்கு. இதுக்கு அப்புறம் இவ பக்கம் நீங்க திரும்பி கூட பார்க்க கூடாது" என்றான். மேனேஜருக்கு ஒரே குழப்பம். வெண்ணெய் வடிந்து வரும் நேரம்
தாழி உடைந்த கதையாக
யாருடா இவன் என்று நினைத்தார்.

"தம்பி நீ இவள கல்யாணம் பண்ணிக்க, இல்ல குடும்பம் நடத்திக்க. இன்னைக்கு இங்க எங்க கம்பனி மீட்டிங்க் இருக்கு. நீ கிளம்பு. ஆடிட்டரும் அக்கவுண்டன்டும் வர்ற நேரம் இது" என்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது, இது இவர்கள் மூவரும் சேர்ந்து எனக்கு விரித்த வலை என்று. ராஜா ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. மேனேஜரின் முகத்தில் ஒரு குத்துவிட்டான். மேனேஜர் தடுமாறி கீழே விழுந்தார்.

"டேய் உனக்கு இந்த பணம் கூட இனிமே கிடையாது. நான் கூட நினைச்சேன், நிஜமாவே பணம் காணாம போய் இருக்கும். நீ மட்டும் சபல புத்தியில் இவள இங்க வரச் சொல்லிருக்கேன்னு. ஆனா இப்போதான் தெரியுது நீங்க எல்லோரும் கூட்டுக்களவாணிங்கன்னு. இதுக்கு மேல ஏதும் பேசின உங்க எல்லோரையும் இருக்குற தடம் இல்லாம அழிச்சிடுவேன்" என்றவன் என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro