Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3

பாலகுமார் பார்வையில்.

அடுத்து நான் என்ன செய்ய வேண்டும். முதலில் வனிதாவை பற்றி என் மகள்கள் கொண்டுள்ள கெட்ட எண்ணத்தை மாற்ற வேண்டும். நேற்று நடந்த விடயத்துக்கு வேண்டுமானால் என்னால் வனிதாவின் பக்கம் பேச முடியும். ஆனால் இந்த இருபத்தொரு வருடங்களாக அவள் செய்த காரியங்களுக்கு என்ன சமாதானம் கூறுவது. இருந்தாலும் என் கடமை எதுவென்று எனக்கு தெளிவாக தெரிந்தது.

நிலாவின் பார்வையில்.

நேற்றைய நாள் வெறும் கனவாகிப் போகக்கூடாதா என்ற நப்பாசை இப்பொழுதும் என் மனதில் உண்டு. ஆனால் அது கனவல்ல. உயிரைக் கொல்லும் நிஜம்.

நேற்று நடந்தது.

"கயல் வண்டிய நிறுத்து" என்று நிலா கூற கயல் கோபமானாள்.

"லூசாடி நீ! ஆல்ரெடி நம்ம லேட். இதுல நீ வேற. என்னதான் உன் ப்ராப்ளம்" என்று கேட்டாள்.

நான் பார்த்த விடயத்தை கயலிடம் கூற முடியாது. கூறினால் அவளுக்கு கோபம் வந்து என்ன செய்வாள் என்று அவளுக்கே தெரியாது. ஏதாவது காரணத்தை கூறி அவளை மட்டும் பர்த்டே பார்ட்டிக்கு அனுப்ப வேண்டும்.

"எனக்கு மிக்ரைன் ஸ்டார்ட் ஆச்சுடி. ரொம்ப தலை வலியா இருக்கும். பார்ட்டிக்கு வந்தா என்னால  எஞ்ஜாய் பண்ண முடியாது. அதனால மத்தவங்க மூடும் ஸ்பாய்ல் ஆகும். நீ மட்டும் போ கயல். நான் வீட்டுக்கு போறேன்" என்று கூற கயல் எதுவும் மறுத்துப் பேசவில்லை. அவளுக்குத் தெரியும் எனக்கு வரும் தலைவலி சில நேரங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் நான் படும் கஷ்டம் அவள் அறிவாள். அதனாலேயே அவளிடம் தலைவலி என்று பொய் கூறினேன்.

"சரி நிலா, நானும் கூடவே வரேன். வீட்டுக்கே போயிடலாம். நீ இல்லாம நான் எப்படி பார்ட்டிக்கு தனியா போவேன். அதுவுமில்லாம வீட்டுல வேற நீ தனியா இருக்கனும்" என்றாள்.

"இல்லை கயல் நீ பார்ட்டிக்கு போ. ரெண்டு பேருமே பார்ட்டிக்கு போகலன்னா சரியா இருக்காது. என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும். அப்படியும் இல்லன்னா அப்பாதான் வீட்ல இருப்பாரே. நீ ஏதும் கவலைப் படாத. நீ ஆட்டோல பார்ட்டிக்கு போ. நான் ஸ்கூட்டியில வீட்டுக்கு போயிடுறேன்" என்று கூற கயல் எதுவும் மறுத்துப் பேசவில்லை. ஏனென்றால் அவளுக்கு இன்றைய பார்ட்டியை மிஸ் செய்ய பிடிக்காது என்று எனக்கு தெரியும். அதற்கு காரணம் சித்தார்த்.

கயல் அங்கிருந்து சென்றதும், வரும் வழியில் நான் கண்ட காட்சியை உறுதிப்படுத்த குறித்த ரெஸ்ட்டாரண்டுக்கு சென்றேன். ஆம் அங்கிருந்தது என் அம்மாதான். அருகில் இருப்பவன் தான் யார் என்று தெரியவில்லை.  என் தாயின் அருகில் இருந்த ஆண் அவள் உதட்டோரம் இருந்த உணவு கறையை துடைத்து விடுவதிலேயே தெரிகிறது அவர்கள் நெருக்கம் எவ்வளவு அந்தரங்கமானது என்று. இன்று சனிக்கிழமை அதுவுமாக காலேஜில் ஸ்பெஷல் வகுப்புகள் இருப்பதாக கூறி இவள் வந்தது இதற்குத்தான் போலும். அம்மா பச்சை நிற சேலையில் மிகவும் அழகாக தெரிந்தாள். எல்லோரிடமும் அன்பாக பேசும் அவளின் நாக்குக்கு வீட்டில் மட்டும் எப்படித்தான் கொடுக்கு முளைக்குமோ தெரியவில்லை.

அவர்கள் இருவரும் அந்த ரெஸ்ட்டாரன்ட்டை விட்டு வெளியில் செல்வது தெரிகின்றது. என் தாய் கொஞ்சம் கூட பயப்படவில்லை. அவள் முகத்தை மறைக்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. அந்த ஆணுடன் என் தாய் ஒரு காதலியை போல அவனது மோட்டார் சைக்கிளில் செல்வதை பார்க்க எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. என் மனதினுள் உடனே தோன்றியது என் தந்தையின் முகம்தான். சரி இருவரும் அடுத்து எங்குதான் செல்கின்றார்கள் என்று பார்க்கலாம் என்று அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தேன். அவர்கள் இருவரும் நுழைந்தது ஒரு சினிமே தியேட்டர்.

ச்சே என்ன மாதிரியான பெண் இவள்? திருமணம் ஆகி இத்தனை  வருடங்களின் பின் இவள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? வயது வந்த இரு பெண்கள் வீட்டில் இருக்க இவளுக்கு ஏன் இப்படி புத்தி போக வேண்டும்?. அவர்கள் சென்ற அதே சினிமாவுக்கு நானும் டிக்கட் எடுத்து அவர்களுக்கு சற்று தொலைவில் அமர்ந்தேன். அந்த படத்தை பார்க்க ஆட்கள் மிகவும் குறைவு என்பதால் யார் வேண்டுமானாலும் எந்த சீட்டிலும் அமரக்கூடியதாக இருந்தது. என் தாயும் அந்த ஆடவனும் அமர்ந்தது ஒரு கார்னர் சீட்டில். படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்திலேயே அந்த ஆடவன் என் தாயின் முகம் அருகில் குனிய, அவன் அடுத்து என்ன செய்வான் என்பது அறியாமல் இருக்க நான் ஒன்று குழந்தை அல்ல. இதற்கு மேலும் இதை எல்லாம் பார்க்க மனது வரவில்லை. ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கே வந்துவிட்டேன்.

வீட்டில் அப்பா இருந்தார். நான் தனியாக வந்ததை கண்டதும் அவர் சற்று அதிர்ச்சியானது போல இருந்தது. நான் எதுவும் பேசாமல் ஹாலில் உட்கார்ந்து டீவியை பார்த்துக் கொண்டிருந்த என் தந்தையின் மடியில் தலைவைத்திருந்தேன். இரண்டு மணி நேரத்தின்பின் எங்களை பெற்ற மகராசி வீட்டுக்கு வந்தாள். நான் அப்பாவின் மடியில் தலைவைத்திருப்பதை ஒரு ஏளனப் பார்வை பார்த்தாள்.

"என்ன நீ மட்டும் வந்திருக்க. அவ எங்க. இன்னும் கூத்தடிச்சி முடியலயா?" என்று கேட்க எனக்கு எங்கிருந்து கோபம் வந்ததென்றே தெரியவில்லை. என் தந்தையின் மடியில் இருந்து எழுந்த நான் என் தாயை அறைந்துவிட்டேன். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ஏன் நானே இதை எதிர்பார்க்கவில்லை. அறைந்த நானே சமநிலை அடைய சில நொடிகள் எடுத்தது. அப்படி என்றால் அடிவாங்கிய என் தாய்க்கு எப்படி இருந்திருக்கும். என் தாயின் முகத்தை நேராக பார்த்து அடிக்குரலில் கூறினேன்.

"கூத்தடிக்கிறத பத்தி நீ பேசுறியா? இன்னைக்கெல்லாம் நீ என்ன பண்ணேன்னு சொல்லட்டுமா?"  என்று கூற அவள் முகம் வெளிறியது.

நான் வனிதா. பாலகுமாரின் மனைவி. இரட்டையர்களுக்கு தாய். என் அறிமுகத்தில் என் பெயரை மட்டுமே என்னால் தைரியமாக கூற முடியும். மற்ற இரண்டுமே சமூகத்திற்காக மட்டுமே. மனைவி, தாய் என்ற இரண்டையும் நான் என்றுமே சரியாக செய்ததில்லை.

படித்து படித்து அவனிடம் கூறினேன். இப்படி வெளியில் ஊர் சுற்றினால் மாட்டிக் கொள்வோம் என்று. அவனின் பல வருட ஆசையாம் என்னுடன் இப்படி ஊர் சுற்ற வேண்டும் என்பது. அவன் எப்பொழுது என்னிடம் வந்து கெஞ்சினாலும் சூரியனை கண்ட ஐஸ்கிரீம் போல உருகிவிடுவேன். எனக்கு அவனிடம் பிடித்ததே அந்த கெஞ்சல்தான்.

இந்த இக்கட்டான சூழ்நிலை வரும் என்று தெரியும். இதற்காக நான் என்னை பல மாதங்களாக தயார் படுத்தி வந்துள்ளேன். நான் எடுக்கப் போகும் முடிவால் யாருக்கும் பாதகம் வராமல் இருக்க வேண்டும். குறிப்பாக என் நடத்தையில் கேள்வி வந்துவிட கூடாது. ஆனால் அந்த பொறுக்கி கெஞ்சி கெஞ்சி என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டான். எது எப்படியோ அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro