Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிலா -33

"நிலா.. இன்னும் எவ்வளவு நேரம்? நேரமாயி டுச்சு.. வர்றியா இல்லையா?" எனக் கத்திக்கொண்டு நின்றிருந்த மாயனிடம், உச்சிக்கொட்டியப் படி வந்து நின்றாள் நிலா.
அவளின் அழுது வடிந்த‌ முகத்தைக் கண்டு,

"உங்க பிரியாவிடை எல்லாம் முடிஞ்சிடுச்சா?" என நக்கலாய்க் கூறிய மாயனைப் பார்த்து துருவா தன் கூற் பற்கள் தெரியும் விதத்தில் உறும, நிலாவோ, "அடுத்தவங்களோட உணர்வுகள் உனக்கு எங்கயிருந்து புரியப் போகுது? உனக்கு எல்லாமே விளையாட்டாத் தான் தெரியும்" என அவள் கூறியவுடன், அவன் முகம் இருண்டு விட்டது. முன்புப் போல் இல்லாமல் இப்பொழுதெல்லாம் நிலா அவனிடம் சகஜமாய் பேசினாலும் அவ்வப்போது அவளது வார்த்தைகளை ஊசியாய் அவனது நெஞ்சில் ஏற்றினாள்.
தன்மேல் இருந்த அவளது கோபம் குறைந்துவிட்டது என மாயன் நினைக்கும் ஒவ்வொருமுறையும் அவனைப் பார்வையாலே தள்ளி வைத்தாள் அவள்.
அவனுக்கு அவளது செயல்கள் பழகிப் போய் விட்டது என்பதை விட அவனது மனம் மறத்துப் போய் விட்டது என்பதே உண்மை.

நொடிப்பொழுதில் தன்னை சகஜப்படுத்திக் கொண்டவன், "உண்மை தான். அவரவர் உணர்வுகள் அவரவருக்கு மட்டுமே புரியும். என்‌ உணர்வு உனக்கு புரியாமல் இருக்கும் போது.. உன் உணர்வு மட்டும் எனக்குப் புரிய வேண்டுமென நீ எதிர்பார்ப்பது நியாயமில்லை தானே?" எனக் கூறிவிட்டு தன் முன் நடந்தவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
அவனது வார்த்தைகள் ஏதோ.. ஏதோ ஒன்றை ஆழமாய் உணர்த்துவதாய் அவளிற்கு தோன்றியது. ஆனால் அது என்னவென்று அவளால் கண்டறிய முடியவில்லை.

தன் பின்னால் அவளது காலடிச் சத்தம் வராமல் இருப்பதைக் கண்டு, திரும்பிப் பார்த்தவன், அவள் அவ்விடத்துலேயே நின்று தன்னை வெறித்துக் கொண்டிருப்பதைக் கண்டு என்னவென புருவங்களை உயர்த்த, தன் நினைவுகளில் இருந்து மீண்டவளாய், ஒன்றுமில்லை என வேகமாய் தலையை மறுப்பாய் அசைத்து விட்டு, அவனோடு இணைந்துக் கொண்ட நிலா அவனுக்கு வித்தியாசமாய்ப் பட்டாள்.

இருவரும் குட்டையை நெருங்கிவிட, எதுவும் பேசாமல், தயங்கியப் படி நின்ற நிலாவின் கரத்தைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவன்,
"என்னாச்சி?" என்க, எதுவும் பேசாமல் தலையை மட்டும் இடமும் வலமுமாய் அசைத்தாள்.

"போறேன்" என அவனிடமிருந்து தன் கையை விடுவித்தப்படி மெல்லியக் குரலில் கூறியவளின் தலையில் தட்டியவன், "போயிட்டு வரேன்னு சொல்லு.." என்றவனைக் கண்டு லேசாய் சிரித்தவள், "போயிட்டு வரேன்" என்க, புன்முறுவலுடன் சம்மதமாய் தலையசைத்தான்.

"நான் சொன்னதை எதுவும் மறந்துடாத, பார்த்து பத்திரம். ஏதாவது அவசரம்னா எனக்கு செய்தி அனுப்பு." என அவள் குட்டையில் இறங்கும் வரை அறிவுரைக் கூறியவனைக் கண்டு தலையை அசைத்தாள்.

கடைசியாய் அவள் உள்ளே மூழ்கும் முன்பாக, "சமாளிச்சிக்குவல?" எனக் கேட்டவனை ஓர் பார்வைப் பார்த்தவள், வெறும் அவளின் முத்துப் பல் தெரியும் சிரிப்பை மட்டும் பதிலாக அளித்துவிட்டு, தண்ணீரோடு தண்ணிராய் மறைந்துப் போனாள்.

உள்ளே சென்ற நிலாக் குட்டையின் அடிப்பாகத்தில் இருந்த ஓர் சுழலில் நுழைய ஓர்‌ நொடியில் அனைத்தும் இருட்டாய் மாறியது. பிறகு சிறிய ஒளி. அந்த ஒளியைப் பின் தொடர்ந்தவளுக்கு தான் வந்து சேர வேண்டிய இடம் வந்துவிட்டதற்கான அறிகுறியாய்  அந்த சிறிய‌ ஒளியைத் தொடர்ந்து அந்த இடமே இருட்டிற்கு இடமில்லாம் வெளிச்சமாய் மாறியிருந்தது. தண்ணீரிலிருந்து தலையை மட்டும் வெளியே எட்டிப்பார்த்தாள். அது ஒரு சிறியத் தண்ணீர்த்தொட்டி. மலரின் இதழ்களால் அலங்கரிக்கப்பட்டு அதன் நறுமணம் அவளின் நாசியைத் துளைத்தது.

அத்தொட்டியிலிருந்து வெளிப்பட்டு அந்த இடத்தை உள்வாங்க ஆரம்பித்தாள். அவள் எதிர்ப்பார்ததுப் போலவே அது ஒரு குளியலறை. அவள் அறையின் முழு அளவே அந்த குளியலறையின் அளவு தான் இருக்கும். 

வெளியே வந்தவளது பார்வைக்கு யாரும் அகப்படவில்லை. நொடிப்பொழுதில் தன் ஈர உடையை உளர்ந்த உடையாய் மாற்றியவள் தன் உருவத்தையும் மாற்றிக்கொண்டாள். ஆனால் அவள் கழுத்திலிருந்த ராஜ வாரிசுக்கான தழும்பை அவளால் மாற்ற முடியவில்லை. பணிப்பெண்ணைப் போலவே தன் தலையிலிருந்து முக்காடிட்டவள் தன் முகத்தை மறைத்து கழுத்தைச் சுற்றி மறைத்துக் கொண்டாள்.
அந்த அறையை சுற்றி முற்றிப் பார்த்தாள். அது ஒருப் பெண்ணின் அறை என்று விளங்கியது. மெல்ல பூனை நடையிட்டு அவ்வறையிலிருந்து வெளிவந்தவளை ஓர் குரல் தடுத்தது.

"ஏய்! யார் நீ?" என அதிகாரமாய் மிரட்டும் தொனியில் வந்த ஒருப் பெண்ணின் குரல் வர, அவளுக்கு புறமுதுகைக் காட்டி நின்ற நிலாவின் இதயத் துடிப்பு அதிகரித்தது.

"உன்னைத் தானே கேட்கிறேன். யார் நீ? அரசியின் அறையில் உனக்கென்ன வேலை? ஏன் அங்கிருந்து வருகிறாய்?" என அடுத்தடுத்து அந்தப் பெண்‌ அடுக்கியக் கேள்விக்கு, பதில் தேட முயற்சித்து தோற்றுப் போன நிலா தன் அன்னையின் செயினை ஓர் முறைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு தைரியத்தை ஒன்றுக் கூட்டியபடி திரும்பினாள்.

"எவ்வளவு நேரமாய் கேட்கிறேன்? உன் காதென்ன செவுடா? பதில் சொல்லாமல் நிற்கிறாய். உனக்கென்ன அவ்வளவுத் திமிரா?" எனக் கூறி நிலாவை அடிக்க அப்பெண் தன் கையை ஓங்க, பயத்தில் கண்களை இறுக்க மூடிய நிலா சில நொடிகள் கடந்தும் தன் மேல் அடி விழாமல் இருப்பதைக் கண்டு மெல்ல விழிகளைத் திறந்தாள்.

ஓங்கிய அப்பெண்ணின் கை ஓங்கிய நிலையிலேயே இருக்க, ராஜத் தோரணையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவளதுக் கையை தன் கரத்தால் பிடித்து நிறுத்தியிருந்தார்.

"திமிரைப் பற்றி நீ பேசுகிறாயா? அவள் மேல் கை உயர்த்த உனக்கென்ன உரிமை உண்டு?" என அவரது வார்த்தைகள் கோபமாய் வந்து விழ, மிரள மிரள முழித்துக்கொண்டிருந்தாள் நிலா.

"இ.. இல்லை அரசியே.. அ.. அவள் தங்களின் அறையில் இருந்து வெளிவந்தாள். இதற்கு முன்பு அவளை இங்கு நான் பார்த்ததே இல்லை. அதனால் தான் கேட்டேன்." என சற்று முன்பு நிலாவை மிரட்டிக்கொண்டிருந்தப் பெண்ணின் குரல் அதற்கு எதிர்மறையாய் பம்மி
வந்தது.

"நீ பார்த்ததில்லை என்பதற்காக அவள் இங்கு வேலை செய்யும் பணிப்பெண் இல்லையென்று ஆகி விடுமா? இங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களையும் உனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே."

"மன்னியுங்கள் அரசியே."

"உன் மன்னிப்பை என்னிடம் சொல்லாதே. இவளிடம் சொல்." என நிலாவைக் காட்டினார் அவர்.

அவளின் முகம் இறுகி நிலாவைக் கண்டு வார்த்தைகள் வர மறுத்தன.

"ஏன் இப்படிப் பார்க்கிறாய்? சீக்கிரம் ஆகட்டும்."

"ம..மன்னித்து விடு" என்றவளின் குரலில் ஒரு வித எகத்தாளம் இருந்தது.

"இதற்கு பேர் மன்னிப்பா? ஒரு மன்னிப்பைக் கூட எப்படிக்கேட்க வேண்டும் என்று உன் பெற்றோர்கள் உன்னிடம் சொல்லித் தரவில்லையா? 'அரசியின் ஒப்பனையாளர்' என்னும் உன் பட்டம் போய் வெகு நேரமாகிவிட்டது. கோட்டையில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் வாய்ப்பையும் நழுவ விட்டுவிடாதே." என எச்சரிக்கும் தோணியில் அவர் சொன்ன செய்தியைக் கேட்டு மிரண்டு நின்றாள் அப்பெண்.

"இன்னும் என்ன யோசிக்கின்றாய்?.. மன்னிப்புக் கூற தகுதிப் பார்க்கின்றாயா?
அது சரி.. கேட்டுக்கொள் இந்நொடியிலிருந்து இவள் தான் என் ஒப்பனையாளர். நீ வெறும் சாதாரண பணிப்பெண். இந்தத் தகுதிப் போதுமா? இன்னும் நீ தாமதித்தால் உந்தன் பட்டம் பரிப்போனது மட்டுமல்ல உன் வேலையும் பறிப்போய்விடும்." என அவர் கூறியவுடன், நிலாவை நோக்கி கைக்கும்பிட்டவள், "என்னை மன்னித்து விடு" என்றாள் வெளியே மிக பவ்வியமாய். ஆனால் உள்ளே தன் பட்டம் நிலாவால் ஒரே நொடியில் பறிபோனதை எண்ணி நெருப்பாய் எரிந்துக் கொண்டிருந்தாள்.
நிலா எதுவும் பேசவில்லை என்று சொல்வதை விட குனிந்தத் தலை நிமிர வில்லை.

"சரி.. நீ போகலாம்." என கையசைப்பில் அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தவர்,
"அவள் சென்றுவிட்டாள் நிலா." எனக் கூறியவுடனே தன் தலையை நிமிர்த்தியவளுக்கு சற்று முன் அப்பெண்மணி தன் பெயரைக் கூறி அழைத்ததை உணர்ந்து அவரைப் புரியாமல் பார்க்க, "மாயன் என்னைப் பற்றி சொல்லவில்லையா உன்னிடம்? என் பெயர் மசூரா. உன் சித்தி." என்றவர் அவளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

உள்ளே சென்றவுடன், "நீ இங்கு நீயாகவே இருக்கலாம். இது உன் அறைப் போல். இந்த முகமுடி எல்லாம் தேவையில்லை." என்றவுடன் ஒருப்பெருமூச்சை வெளியிட்டு அதை கழற்றியவள், நிலாவாகவே மாறினாள். ஏனோ அவரது அறையில் தான் பாதுகாப்பாய் இருப்பதுப் போல் உணர்ந்தாள்.

அவளின் உண்மையான உருவம் கண்டு அவளருகில் வந்தவர், அவளின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி, "அச்சு அசலாய் உன் அன்னையின் ஜாடையை உரித்து வைத்திருக்கிறாய்." எனக் கூறியவர் அவளின் உச்சி முகர, ஒரு உண்மையான அன்னையின் பரிசத்தை அவரிடம் உணர்ந்தாள் நிலா. கூடவே தன்‌ அன்னையை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் மேலோங்க, "என் அம்மாவைப் பார்த்து இருக்கிங்களா நீங்க?"

"ஓஓஓ.. பார்த்திருக்கிறேனே. நீயும் பார்க்க வேண்டுமா?" என ஆசையாய் கேட்டவரிடம் வேகமாய் தலையசைத்தாள்.

"நீ இப்படி கேட்பாய் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். ஆதலால் தான் உன் தந்தையின் அறையிலிருந்து அவருக்கு தெரியாமல் உன் அன்னையின் படத்தை எடுத்து வந்தேன்." எனக்கூறியவர், அந்த பெரிய மெத்தையின் அடியிலிருந்து ஒரு மரப் பட்டையை எடுத்தார். அதில் மிளிராவின் உருவம் செதுக்கப் பட்டிருந்தது. அதை ஆசையாய் வாங்கிய நிலாவிற்கு தன்னையேப் பார்ப்பதுப் போல் தான் இருந்தது.

"இதை நானே வச்சிக்கட்டுமா?" என குழந்தைப் போல் கேட்டவளைப் பார்தது சிநேகமாய் புன்னகைத்தவர், "தாராளமா." என்றார்.

"நன்றி.." என்றவள் அவரை என்னச்சொல்லி அழைப்பதென்று தெரியாமல் தடுமாற, அதை உணர்ந்தவர், "நீ என்னை சித்தி என்று அழைக்கலாம். இல்லை மசூரா என்று பெயர் சொல்லி அழைத்தாலும் எனக்கு விருப்பமே."
எனக்கூறி சிரித்தார்.

சித்தி என்று அழைப்பதில் அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் பெயர் சொல்லி அழைக்கும் அளவு நெருக்கம் ஏற்படாதக் காரணத்தினால் சித்தி என்று அழைக்க தற்காலிகமாய் ஒப்புக்கொண்டாள்.

"அந்தப் பெண்ணோட பட்டத்தை ஏன் எனக்கு குடுத்திங்க சித்தி? அவ பாவமில்லையா?" என எதாவது பேச வேண்டும் என்பதற்காக கேட்டவளிடம்,

"ஓஓ இழியா பற்றி கேட்கிறாயா?" என்றவுடன் அவள் பெயர் இழியா எனக் குறித்து வைத்துக்கொண்டவள் ஆமாம் என தலையசைத்தாள்.

"அது ஒன்றுமில்லை நிலா. உன்னை என் அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமானால் நீ என் ஒப்பனையாளராய் இருந்தால் தான் முடியும். இது ஒரு காரணமென்றாலும் அவள் நடந்துக்கொண்ட விதமும் மிக தவறல்லவா? வெகு நாட்களாகவே அவள் மேல் சில புகார்களை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். ஆதாலால் தான் அவ்வாறு செய்தேன்." என்றவரின் விளக்கத்திற்கு பிறகு அந்த இடத்தில் பெரிய அமைதியொன்று குடிக்கொள்ள அந்த கியாப்பில் அந்த அறையை நோட்டமிட ஆரம்பித்தாள் நிலா.
அதன் சுவர்களில் பொதிந்திருந்தப் பெரிய பெரிய செங்கற்கள் மிகப் பழமையானதாய் தோற்றமளித்தன. அவள் படங்களில் பார்த்ததுப் போல் இல்லாமல் அந்த இடமே வித்தியாசமாகத் தான் இருந்தது அவளிற்கு. எங்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள். படுக்கையின் இருப்புறமும் பெரிய பெரிய விசிறிகள் ஆளே இல்லாமல் தானாய்  வீசிக்கொண்டிருந்தன.

அவள் நினைவுகளில் மூழ்கியிருக்க, திடிரென்று புயலென உள்ளே நுழைந்த ஒருவனைக் கண்டு அரண்டுப் போய் விழித்தாள் அவள்.

"டேய் மஹீ. அவளே இப்பொழுது தான் வந்திருக்கிறாள். அவளை ஏன் மிரள வைக்கிறாய்? அதற்குள் உன் வாள்த்தனத்தை ஆரம்பித்து விடாதே. இவ்வளவு அவசரத்திற்கான அவசியமென்ன?"

"தீடீரென புதிதாய் ஒருவனைக் கண்டாள் யாராக இருந்தாலும் அரளத் தான் செய்வார்கள். அரளாமல் இருக்க வேண்டுமானால் அறிமுகமாக வேண்டியது அவசியம். அந்த அறிமுகத்தை தாங்கள் கொடுக்க தாமதமானதாலே இந்த அவசரம். இப்பொழுதாவது தாங்கள் அறிமுகம் செய்துவைக்கிறீர்களா.. இல்லை அதையும் நானே செய்துக்கொள்ளவா அன்னையே?" என மூச்சு விடாமல் படப்படவென பேசியவனை அறிமுகமில்லாமலேயே பிடித்துப் போனது‌.

"பேசி முடித்து விட்டாயா? இவ்வளவு பேசும் உனக்கு அறிமுகத்தை மட்டும் நான் கொடுக்கவா? அதையும் நீயே செய்துவிடேன்." என மசூரா கூறியவுடன், நிலாவின் புறம் விரைப்பாய் திரும்பியவன்,

"கும்பிடுகிறேன் தமக்கையே. ஒரு மாதக் காலமாய் தங்களின் வருகைக்காக காத்திருந்த உங்களின் ஆருயிர் தமையன் நான். என் பெயர் மஹீந்தன். என்னைப் பற்றி என் அன்னை எப்படியும் தங்களிடம் கூறியிருக்க மாட்டார்கள். ஆதலால் உமக்கு ஒரு தமையன் இருக்கிறான் என்று எந்த  கணிப்பும் தங்களுக்கு இருந்திருக்காது அல்லவா.. ஆனால் சிறு வயது முதலே தங்களைப் பற்றி அதிகம் கேட்டு வளர்ந்தவன் நான். என்னைக் கண்டவுடன் பிடிக்காது. ஆனால் காண காணப் பிடிக்கும்." என விரைப்பாய் ஆரம்பித்து படிக்காதவன் தனுஷ் போல் விளையாட்டாய் முடித்தவனை முழுவதுமாய் பிடித்துப் போனது நிலாவிற்கு. அவன் அவளை ஒத்த வயதுடையவன் போல் இருந்தாலும் தன்னை விட சிறியவன் என்பதால் எப்படியும் ஒரு வருடாமவது இருவருக்கும் வயது வித்தியாசம் என சரியாய் யூகித்துக்கொண்டாள்.

பிறகு அந்த அறையே சந்தோஷமும் சிரிப்பும் நிறைந்ததாய் மாறி இருக்க, நிலாவிற்கு தான் தன் எதிரியின் இடத்தில் இருக்கிறோம் என்பதே மறந்துப் போனது.

பகல் முழுவதும் அரசியான மசூராவோடு இருந்தவள் இரவு பணிப்பெண்கள் உறங்கும் அறையில் தான் உறங்க வேண்டிய கட்டாயம் வந்தது. அந்த இரவோடு தனிமையும் அவளை சூழ்ந்துக்கொள்ள, அவளே எதிர்ப்பார்க்காதவாறு அப்பொழுது தான் அவள் மனம் அவளை அறியாமல் மாயனைத் தேட ஆரம்பித்தது. தன்னை சுற்றியுள்ளவர்களோடு‌ பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவளிற்கு எழவே இல்லை. இத்தனை நாள் அவனின்‌ அருகாமையை அவள் விரும்பவில்லை என்றாலும் அவன் அவளைச் சுற்றியே இருந்தான். இன்று அவன் இல்லாதது அவளை வெறுமையாய் உணர வைத்தது.

போதாது என்று காலையில் அவன் கூறிய வார்த்தைகள் வேறு அவளை உறங்க விடாமல் இம்சை செய்தது.

"உண்மை தான். அவரவர் உணர்வுகள் அவரவருக்கு மட்டுமே புரியும். என்‌ உணர்வு உனக்கு புரியாமல் இருக்கும் போது.. உன் உணர்வு மட்டும் எனக்கு புரிய வேண்டுமென நீ எதிர்பார்ப்பது நியாயமில்லை தானே?"
அவனது இந்த வார்த்தையில் ஆழமான அர்த்தம் இருப்பதாக அவளிற்கு பட்டுக்கொண்டே இருந்தது?

'அவனுடைய உணர்வு? அவனுடைய உணர்வு என்ன எனக்கு புரியலை?' என அவளது மனம் எழுப்பிய கேள்விக்கு 'உணர்வுகளை வார்த்தையால் சொன்னால் மட்டும் புரிவதில்லை. உணர்வுகளை மனதால் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தால் மட்டுமே அதை வார்த்தைகளாய் கோர்க்க முடியும்.
என்னால் அவன் உணர்வை உணர முடியவில்லை என்றால் அவன் அதை வார்த்தைகளால் என்றும் எனக்கு உணர்த்த முயற்ச்சித்ததில்லை. என்னைப் போல் அவன் தன்‌ வாழ்வில் இழந்ததை சொல்லிக் காட்டியதில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்று அழுதுப் புலம்பியதில்லை.' என நினைத்தவளுக்கு அப்பொழுது தான் ஒன்று உறைத்தது.

'அவன் கூறியது உண்மை தான். நான் அவனைப் புரிந்துக்கொள்ளவில்லை. அவனையும் சரி அவன் உணர்வுகளையும் சரி. என்னை விட அவன் வாழ்வில் அவன் இழந்தது அதிகம். அவன் அம்மா.. பாட்டி.. அப்பா.. இவர்களை எல்லாம் ஒரே இரவில் இழந்தவன் அவன். ஒருவிதத்தில் தனக்கும் அதில் பங்குண்டு. இழந்த அப்பாவை மீண்டும் பெற்றும் அவரால் ஒதுக்கி வைக்கப் பட்டான். அதற்கும் தான் தான் காரணம். எல்லாவற்றுக்கும் மேல், என்னைக் காதலிப்பதாகக் கூறியவனின் காதலை ஏதேதோச் சொல்லி கொச்சைப் படுத்தியதும் இல்லாமல் அவன் பக்கம் இருக்கும் நியாத்தை எடுத்துரைக்க வாய்ப்புக் கூட குடுக்கவில்லையே. எவ்வளவு வலியை உள்ளுக்குள் பூட்டி வைத்திருப்பான்? எதையும் உணராமல் என்னைப் பற்றியே யோசித்துக்கொண்டு சுயநலமான முட்டாளாய் இருந்திருக்கேன்.'

நம்மைப் பிடித்தவர் அருகில் இருக்கும் போது அவரின் அருமை‌ நமக்கு புரிவதில்லை. புரியும் போது அவர் நம்மருகில் இருப்பதில்லை. அதை இப்பொழுதாவது புரிந்துக்கொள்வாளா அந்த பேதை?

அவள் தொடர்வாள்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro