Part 24
பாகம் 24
குமணனிடம் இருந்து கையெழுத்தைப் பெற்று விட்டதால், கல்பனா சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்தார். அவர் மீனாவுக்கு ஃபோன் செய்ய, அவள் உடனடியாக எடுத்து பேசினாள்.
"சொல்லுங்க மேடம்"
"நான் சொல்றத கவனமா கேளு. நான் அவர்கிட்ட வெத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிட்டேன்" என்றார் பெருமிதத்துடன்.
"செம்ம சூப்பர், மேடம்" என்று குதூகலித்தாள் மீனா.
"எனக்கு டாக்குமெண்ட் எழுத ஒரு நல்ல லாயர் வேணும். அவரை எங்க வீட்டுக்காரருக்கு தெரியக்கூடாது."
"நான் ஏற்பாடு பண்றேன், மேடம்"
"சீக்கிரம் செய்"
"நான் லாயர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்"
அழைப்பைத் துண்டித்து விட்டு, தன் கையிலிருந்த முத்திரைத் தாள்களை, ஏதோ பொக்கிஷத்தை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் கல்பனா. அவரைப் பொருத்தவரை அது பொக்கிஷம் தானே...? அதை பூஜை அறையில் ஒளித்து வைக்கலாம் என்று அவர் கீழ் தளத்திற்கு வந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாய், கைப்பேசியில் பேசியபடி குமணன் வீட்டினுள் நுழைந்தார். அவரை பார்த்தவுடன் கல்பனாவின் முகம் இருண்டு போனது. தன் கையிலிருந்த முத்திரைத் தாள்களை ஒளித்து வைக்க ஒரு நல்ல இடத்தை இங்குமங்கும் தேடினார். நேரே புத்தக அலமாரியை நோக்கி ஓடி சென்றவர், அங்கிருந்த ஒரு புத்தகத்தில் அந்த தாள்களை திணித்து வைத்தார்... ஆம், அது வர்ஷினிக்கு பிறந்தநாள் பரிசாய் சுதா கொடுத்த சமையல் கலை புத்தகம் தான்.
கல்பனா குமணன் பேசுவதைக் கவனித்தார்.
"ஆமாம். நான் அதை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வாங்கினேன். அப்போ அந்த இடம் பாக்குறதுக்கு காடு மாதிரி இருந்தது. ஆனா இப்போ அது சில கோடி பெருமானமுள்ளதா இருக்கு. அதனால தான், எங்க கம்பெனியோட புது குடோனை அந்த இடத்துல கட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். சிட்டிக்கு வெளியில் இருக்கிறதால டிரான்ஸ்போர்ட் பிரச்சனை இருக்காது. இன்னும் ஓரிரு வாரத்துல வேலையை ஆரம்பிச்சிடுவேன்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
"நம்ம பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, வண்டலூர்ல ஒரு லேண்ட் வாங்கினோமே, அதோட டாக்குமென்ட்டை எடுத்துக்கிட்டு வா." என்று அவர் கல்பனாவிடம் கூற, மென்று முழுங்கினார் கல்பனா.
"எந்த டாக்குமெண்ட் பத்தி பேசுறீங்க?" என்றார் தன் பாதட்டத்தை மறைத்து கொண்டு.
"நான் குருபரன்கிட்ட வேலை செஞ்சுகிட்டு இருந்தப்போ வாங்கினோமே..."
"ஓ... அதுவா...? நீங்க இன்னும் அதை ஞாபகம் வச்சிருக்கீங்களா? நான் சுத்தமா மறந்தே போயிட்டேன்?" என்று பல்லைக் காட்டினார், பதட்டத்தை மறைக்க.
"எப்படி என்னால அதை மறக்க முடியும்? என்னோட உழைப்பில் வாங்கின முதல் சொத்தாச்சே...?"
"இப்போ அதை எதுக்கு கேக்குறீங்க?"
"அங்க நம்ம கம்பெனிக்கு ஒரு புது குடோன் கட்டலாம்னு இருக்கேன். இப்ப இருக்கிற குடோன் சிட்டிக்கு நடுவுல இருக்கிறதால ரொம்ப டிரன்ஸ்போட் பிரச்சனை வருது. அதை சிட்டிக்கு வெளியில் கொண்டு போயிட்டா நமக்கு ரொம்ப சுலபமா இருக்கும்"
"ஓ..."
கல்பனாவிற்கு வியர்த்துக் கொட்டியது. அவருடைய திட்டம் மண்ணைக் கவ்வி விட்டது. நல்ல வேளை அவர் ஏதும் செய்யும் முன், குமணனின் திட்டம் அவருக்கு தெரிய வந்தது. ஓரிரு நாள் தாமதம் ஆகி இருந்தால் கூட அவருடைய சாயம் வெளுத்திருக்கும். அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
.......
ஃபோனில் தொடர்ச்சியாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் வர்ஷினி. அந்தப் பக்கமிருந்த நிமல் விழுந்து விழுந்து சிரித்தான்.
"போதும் நிறுத்து" என்றான்.
"தேங்க்யூ சோஒ... மச்" மறுபடியும் முத்தமிட்டாள்.
"எதுக்கு தேங்க்ஸ்?"
"இந்த மாதிரி ஒரு சூப்பர்-கூலான மாமியார், மாமனாரை கொடுத்ததுக்கு"
"மாமனார் மாமியார்காக மட்டும் தானா? புருஷனுக்கு இல்லயா?"
"புருஷன்னா எனக்கு நல்லவனா தான் இருக்கணும்..."
"அப்போ பொண்டாட்டி...?"
"அவ, புருஷனுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டே இருப்பா" என்று சிரித்தாள்.
"எதுக்கு?"
"எல்லாத்துக்கும்"
"எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேணாம்... வேற ஏதாவது கொடு" என்றான் வேண்டுமென்றே.
"என்ன?" என்றாள் ஒன்றும் தெரியாதது போல.
"உனக்கு தெரியாதா?" என்றான்
"நான் ஏதாவது கொடுக்கணும்னு நினைச்சா, நீங்க ஓடிப் போயிடுவீங்க தானே...?" என்றாள் கிண்டலாக.
"எதுவாயிருந்தாலும், நான் என் *வைஃப்*கிட்ட இருந்து வாங்கணும்னு நினைக்கிறேன். அப்போ ஓடிப் போகமாட்டேன்"
"நான் உங்க வைஃப் இல்லயா?"
"ஊரறிய இன்னும் ஆகல"
"நான் அப்படியெல்லாம் நினைக்கல"
"என் மனைவிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை உனக்கு கிடைக்கணும்னு நான் நினைக்கிறேன். அதைத் தான் நான் சொல்ல முயற்சி பண்றேன். உனக்கு புரியுதா?"
"ம்ம்ம்"
"என்ன ஆச்சு...? உன்னுடைய குரல் உள்ள போகுது....?"
"நாளைக்கு நம்மளுடைய எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது. இன்னும் கொஞ்ச நாள்ல முடிஞ்சிடும். அதுக்கப்புறம் நான் எப்படி உங்களை பார்க்காம இருக்க போறேன்னு தெரியல"
அதைப் பற்றித் தான் நிமலும் கூட யோசித்துக் கொண்டிருந்தான். ஏனென்றால், வர்ஷினியின் வீட்டின் நிலைமை அப்படிப்பட்டது.
"நான் கோவிலுக்கு வந்தா நீங்களும் வருவீங்களா?"
"இந்த கேள்வியை நீ கேட்கணுமா?"
"ஆனா, நீங்க தான் ஆஃபீஸ்ல பிஸி ஆயிடுவீங்களே...?"
"நான் எவ்வளவு பிஸியா இருந்தாலும் உன்னை பாக்கணும்னா நான் எப்ப வேணாலும், எங்க வேணாலும் இருப்பேன். புரிஞ்சுதா? ஜஸ்ட் ஒரு கால்... நிமல் உன் முன்னாடி இருப்பான்."
"தேங்க்யூ"
"என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"
"உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன்"
"போர்ஷன்ஸ் எல்லாத்தையும் ரிவைஸ் பண்ணிட்டியா?"
"எப்பவோ பண்ணிட்டேன்"
"சரி, போய் தூங்கு. இல்லனா எக்ஸாம் ஹால்ல தூங்கி வழிய போற"
அதைக் கேட்டு சிரித்தாள் வர்ஷினி.
"நான் பல தடவை, ராத்திரி முழுக்க தூங்காம இருந்து எக்ஸாம் எழுதி இருக்கேன்"
"அப்போ நான் உன் கூட இல்ல... ஆனா இப்போ இருக்கேன். இந்த இடைப்பட்ட காலத்துல நிறைய மாறி இருக்கு. அதனால, நல்ல பொண்ணா படுத்து தூங்கு"
"நீங்களும் நல்ல பையனா தூங்குங்க"
"குட்நைட்" என்றான் சிரித்தபடி.
"குட் நைட்"
அவர்கள் இணைப்பை துண்டித்து கொண்டார்கள். அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு வர்ஷினி கதவை திறந்தாள். அங்கு ரிஷி நின்று கொண்டிருந்தான்.
"நீ இன்னும் தூங்கலயா, ரிஷி?"
இல்லை என்று தலையசைத்தான்.
"சரி, உள்ள வா"
உள்ளே வந்து வர்ஷினியின் பக்கத்தில், கட்டிலில் அமர்ந்து கொண்டான். அவன் அமைதியாய் அமர்ந்து இருந்ததை பார்த்து குழம்பினாள் வர்ஷினி.
"என்னாச்சு, ரிஷி? ஏதாவது பிரச்சனையா?"
ஆமாம் என்று தலையசைத்தான்.
"என்ன பிரச்சனை?"
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு, கா"
"எதுக்கு?"
"அப்பாவுக்கு மாமாவை பத்தி தெரிஞ்சா என்ன கா ஆகும்?"
"மாமாவா? நீ யாரை பத்தி சொல்ற?"
"நீ இன்னைக்கு காலையில கோவில்ல பார்த்தியே, அவரை தான் சொல்றேன்"
வர்ஷினிக்கு மூச்சு முட்டியது. எப்படி இந்த விஷயம் ரிஷிக்கு தெரிந்தது?
"அவங்க ஃபேமிலியோட நான் உன்னை பார்த்தேன்"
வர்ஷினிக்கு கை கால்கள் வெடவெடத்து. அவள் கையை மெல்ல பற்றினான் ரிஷி.
"என்கிட்டயே நீ இப்படி பயந்தா அம்மா அப்பாகிட்டயும், காமேஸ்வரன் அங்கிள்கிட்டயும் என்ன கா செய்வ?"
வர்ஷினியின் கண்கள் சட்டென்று கலங்கியது.
"உனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு தானே?"
ஆமாம் என்று மெல்ல தலையசைத்தாள்.
"அவருக்கு கார்த்திக்கை பத்தி தெரியுமா?"
தெரியும் என்று தலையசைத்தாள்.
"தெரிஞ்சும் கூட அவர் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாரா?"
மறுபடியும் ஆமாம் என்று தலையசைத்தாள்.
"ஆமாம்... அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்காரு. அதனால தான், அவங்க குடும்பத்துக்கு என்னை அறிமுகப்படுத்தி வச்சார்"
"எனக்கும் அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க உன்னை மதிக்கிறாங்க. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ அவங்க கூட ரொம்ப சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு தோணுது"
ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"நீ இத பத்தி, அம்மா அப்பாகிட்ட எதுவும் சொல்ல மாட்டல்ல...?" என்றாள் கெஞ்சலாக.
"சொல்லமாட்டேன் கா. இப்பவாவது நீ சந்தோஷமா இருக்கியே... எனக்கு அதுவே போதும்." சற்று நிறுத்தியவன்,
"எனக்கு கார்த்திகை சுத்தமா பிடிக்கல தெரியுமா...?" என்றான்.
தெரியும் என்று புன்னகையுடன் தலையசைத்தாள்.
"ஆனா, அப்பா இதுக்கு ஒத்துக்குவார்னு எனக்கு தோணல "
வர்ஷினி கவலையானாள்.
"ஜாக்கிரதையா இருக்கா. அப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னே போட்டுடுவார். ஆனா அவங்க உன்னை காப்பாத்துவாங்கன்னு எனக்கு தோணுது" என்றான்.
ஆமாம் என்று சந்தோஷமாய் தலையசைத்தாள் வர்ஷினி.
இக்காலத்தில் இருக்கும் சின்ன பிள்ளைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். பெரியவர்களே முடிவெடுக்க திணறும் பல விஷயங்களில் அவர்கள் சாதாரணமாய் முடிவெடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு இருப்பது தொலைநோக்கு பார்வை என்று கூறுவதற்கு இல்லை என்றாலும், பல நேரங்களில் அவர்களுடைய முடிவுகள் பாராட்ட தக்கதாய் இருக்கிறது, ரிஷியை போல.
இனியவர்களின் இருப்பிடம்
விஸ்வநாதனின் முகத்தில் நிம்மதியும், சந்தோஷமும் மிளிர்ந்ததை கவனித்தார் பார்வதி. விட்டத்தைப் பார்த்து சிரித்தபடி கட்டிலில் படுத்திருந்தார் அவர்.
"யாரோ ஒருத்தர் வானத்துல பறக்குற மாதிரி தெரியுது..." என்றார் கிண்டலாக பார்வதி.
"ஏன் நான் பறக்க மாட்டேன்? இன்னைக்கு நான் என் மருமகளை பாத்துட்டேன்..."
"அவ ரொம்ப அழகா இருக்கா இல்ல?"
"வெறும் அழகா...? என் மருமக தேவதை..."
"ஓ..."
"என் மகனுடைய வாழ்க்கையை மாத்த வந்த தேவதை..."
"அவங்க ரெண்டு பேரையும் பக்கத்துல நிக்க வச்சி பார்த்தப்போத என் கண்ணே பட்டுடும் போல இருந்தது"
"உண்மை தான். அவங்க ரெண்டு பேரும், பார்க்க அவ்வளவு லட்சணமா, பொருத்தமா இருந்தாங்க. எல்லாத்துக்கும் மேல, அந்தப் பெண்ணைப் பார்த்த உடனே நம்ம நிம்மு முகம் மாறுனதை நீ கவனிச்சிருக்கணுமே... அவன் அப்படியே இலகி போனான்...! உண்மையிலேயே அவன் அவளை ரொம்ப காதலிக்கிறான். கல்யாணத்துக்கு அப்புறம் அவனுடைய பழி உணர்ச்சி எல்லாத்தையும் அவன் மறந்துடுவான்னு நான் மனப்பூர்வமா நம்புறேன்"
"ஆமாம். நீங்க சொல்றது சரி. அந்த பொண்ணுகிட்ட ஏதோ ஒன்னு இருக்கு. அவளை நிச்சயமா அவன் காயப்படுத்தவே மாட்டான்"
"அவளுடைய குடும்பத்தை பத்தி கேட்டு தெரிஞ்சுக்கோ. நம்ம நேரத்தை வீணாக்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவளோட அப்பா அம்மாகிட்ட பேசி அவங்க கல்யாணத்தை முடிச்சு வச்சிடணும்."
"நிச்சயமா செய்யலாம். அவங்க முதல்ல பரிட்சையை முடிக்கட்டும். அதுக்கப்புறம் நம்ம பேசலாம்"
"இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்" என்றார் விஸ்வநாதன்.
"நடக்கட்டும்" என்றார் சிரித்தபடி பார்வதி.
வர்ஷினியால் குமணனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து நிமல் மாறி விட்டான் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள், வர்ஷினிகாகத் தான் அவன் மேலும் முர்க்கமாகி விட்டான் என்ற உண்மை அறியாமல்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro