Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

எங்கே எனது கவிதை - 4

"அச்சோ... இல்லை வேண்டாம் வேண்டாம், இதற்கு மேலும் என்னை எதுவும் திட்டி விடாதீர்கள் என்ன விவரம் என்பதை முழுவதுமாக சொல்லி விடுகிறேன். நான் உங்களை பற்றி விசாரித்தது என் பெரியம்மாவிற்காக தான்!" என்று ஹாசினி தெளிவாக எடுத்துரைத்தாலும், பாவம் ராமச்சந்திரன் தான் முன்னிலும் மோசமாக குழம்பி போனார்.

"ஏய் ஹாசினி... எதற்கு என்னை இப்படி போட்டு படுத்துகிறாய்? என்ன தான் பிரச்சினை உனக்கு?" என்றார் எரிச்சலுடன்.

"இது அவசரமாக பேசுகிற விஷயமும் இல்லை கோபத்தோடு இருக்கும் பொழுது தீர்மானிக்கிற விஷயமும் இல்லை. இதை பொறுமையாக தான் பேச வேண்டும், நான்... சரி ஒன்று செய்கிறேன். இது தொடர்பான விவரங்களை உங்கள் மெயில் ஐடிக்கு அனுப்புகிறேன். நீங்கள் கோபமெல்லாம் குறைந்து மனதில் அமைதி நிலவும் பொழுது படித்து பாருங்கள் ப்ளீஸ்... தயவுசெய்து தவறான கண்ணோட்டத்தில் தொடங்காமல் நல்ல விதமாக யோசித்து பாருங்கள். தாங்க் யூ சார்!" என ஓடி விட்டாள்.

பற்ற வைத்த சரவெடி கணக்காக படபடவென்று வெடித்து விட்டு ஓடியவளை மலைப்புடன் பார்த்த ராம், தந்தியில் வரும் செய்தி கணக்காக பெரியம்மா திருமணம் என கூறி சென்றவளின் எண்ணத்தை மெதுவாக ஊகித்தறிந்தார்.

இத்தனை வயதிற்கு மேல் தனக்கென்று ஒரு திருமணமா என மனதில் சலிப்புடன் எண்ணியவர், இது தொடர்பாக அவள் மீண்டும் பேசினால் ஒரே முடிவாக வேண்டாம் என்று மறுத்து விடலாம் என முடிவு செய்தார்.

மறுநாள் ராம்மை ஆவலுடன் எதிர்கொண்ட ஹாசினி, வழக்கம் போல் பாடத்தில் சந்தேகம் என்ற போர்வையில் அவருடைய அறையில் தனிமையில் சந்தித்து முடிவை வேண்டினாள்.

முதல் நாள் மறுத்து விடலாம் என தன் முடிவில் தெளிவாக இருந்தவர், ஹாசினி தன் பெரியம்மாவை குறித்து அனுப்பிய கட்டுரையில் சற்று குழம்பி போயிருந்தார்.

ஒரு வயதிற்கு மேல் ஆணோ பெண்ணோ தங்கள் மனதிலிருப்பதை பகிர்ந்து கொள்ளவும்,தங்கள் தனிமையை போக்கி கொள்ளவும் எந்த சார்புமின்றி தங்களுக்கு மட்டுமே என ஓர் உறவு இருப்பது அவசியம் என்று சமீப காலமாக தோன்றினாலும் திருமண வயதை தாண்டி விட்டதால் அதை பற்றி மேலே யோசிக்காமல் முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தார் அவர்.

இப்பொழுது ஹாசினியின் வார்த்தைகளில் லேசாக குழம்பினாலும் திருமணம் என்கிற அளவுக்கு உறுதியாக முடிவு எடுக்க முடியவில்லை.

அவர் தயக்கத்தை உணர்ந்து கொண்ட ஹாசினி, "எங்கள் பெரியம்மாவை போல் தான் உங்களுக்கும் மிகவும் தயக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒன்று செய்யுங்களேன், நீங்கள் இரண்டு பேரும் தனிமையில் சந்தித்து பேசினால் ஒரு தெளிவு கிடைக்கும்!" என்று யோசனை கூறினாள்.

திடுக்கிட்டவர், "ஏய் என்ன விளையாடுகிறாயா?" என்று பதறி விட்டார்.

"ஹய்யோ... இதில் விளையாடுவதற்கு என்ன இருக்கிறது?"

"என்னவா? நாங்கள் என்ன உன்னை மாதிரி டீனேஜில் இருக்கிற ஸ்டூடன்டா தனிமையில் சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு, மிடில் ஏஜ்ஜை ரீச்சாகி விட்டோம் அசிங்கமாக இருக்கும்!" என்று பிடிவாதமாக மறுத்தார்.

"சார்... எந்த காலத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்? காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை... திருமணம் முடிந்து பிள்ளைகள் பெற்று ஐம்பதை தாண்டியவர்களுக்கு கூட காதல் இருக்கும். என்ன அதை உணர்ந்து இருக்கின்ற குடும்ப பொறுப்பில் தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி செலவு செய்ய அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது அவ்வளவு தான். மற்றபடி நேசமும், பாசமும் வயதுகளை கடந்து பகிர்ந்து கொள்ள கூடியது அதுவும் உங்கள் இருவரின் விஷயத்தில் இது போல் கூட இல்லை, இருவருமே முதல் முதலாக திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் அப்புறம் என்ன? ஓ... இப்பொழுது புரிகிறது, முதல் முறை என்பதால் தான் இப்படி வெட்கமெல்லாம் வருகிறது!" என்று ராம்மை கேலி செய்து சிரித்தாள்.

"ஓ காட்! உன்னையெல்லாம்... உனக்கு இருக்கின்ற வாய்க்கு பாவம்... எந்த பரிதாபத்திற்குரிய ஜீவன் வந்து உன்னிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட போகிறதோ தெரியவில்லை!" என்று பதிலுக்கு வாரியவர், "ஆமாம்... உன் பெரியம்மாவும் இப்படி தானா?" என மெல்ல நூல் விட்டு பார்த்தார்.

"அடக் கடவுளே... என்னை பார்த்து தான் என் பெரியம்மாவும் இப்படியோ என்று பயப்புடுகிறீர்களா? டோன்ட் வொர்ரி... என் பெரியம்மா ரொம்ப அப்பிராணி, அதற்கு நான் கேரன்டி. இத்தனை வயதாகியும் எந்த ஆணிடமும் சட்டென்று பேச தயங்கும் ஓல்டு ஜெனரேஷன்!" என்று சித்ராவை வர்ணித்து புன்னகைத்தாள் ஹாசினி.

லேசாக புன்னகைத்தவர், "அப்பொழுது எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறாய்?" என்றார் யோசனையோடு.

"அது கொஞ்சம் கஷ்டம் தான், எப்படியாவது லாக் பண்ண வேண்டும். இது வரை உங்களை பற்றி எதுவும் நான் அவர்களிடம் சொல்லவில்லை, சில மாதங்களுக்கு முன் மேலோட்டமாக திருமண விஷயம் குறித்து பேசியதற்கு நம்பிக்கையில்லாமல் அலட்சியப்படுத்தி விட்டார்கள்!" என்றாள் வருத்தத்துடன்.

ம்... என்று ராம் அமைதியாக, "எனக்கென்னவோ நீங்கள் இருவரும் நேரில் சந்தித்தால் ஒருவரையொருவர் நிச்சயம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. உங்களை பார்த்தவுடனே எப்படி நாற்பது வயதுடையவர் என்று யாரும் நம்ப மாட்டார்களோ அதே போல் தான் பெரியம்மாவையும் யாரும் முப்பது வயதை கடந்தவர் என்றால் நம்ப மாட்டார்கள்!" என்றாள் ஆர்வமாக.

"ஆனால் என்னை சந்திக்க உன் பெரியம்மா சம்மதிக்க வேண்டுமே?"

"அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், நான் பார்த்து கொள்கிறேன். உங்களுக்கு சம்மதமா எங்கே மீட் பண்ணலாம் என்று மட்டும் சொல்லுங்கள் அவர்களை நான் அழைத்து வருகிறேன்!" என்றாள் உறுதியாக.

"சரியான கேடியாக இருப்பாய் போலிருக்கிறதே எத்தனை தகிடுதத்தம் செய்கிறாய்? உன் லைஃப்பிலும் இப்படி தான் ஏதாவது ஓடிக் கொண்டிருக்கிறதா?" என்று கூர்மையாக பார்த்தார்.

"அச்சோ... நிச்சயமாக இல்லை, முதலில் நன்றாக படித்து லைஃப்பில் செட்டிலாக வேண்டும். அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் அது எப்படி என்றாலும் சரி!" என்று அசால்டாக கூறினாள்.

"ரொம்ப தெளிவாக தான் இருக்கிறாய் சரி, நாளை மறுநாள் விடுமுறை தானே பொதுவான இடத்தில்... ம்... ஆங்... மைலாப்பூர் கோவிலுக்கு அழைத்து வந்து விடேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நாங்கள் இருவரும் கலந்து பேசிய பின்பு தான் என்னவென்று ஒரு உறுதியான முடிவெடுக்க முடியும். அதற்குள்ளாக நீயாகவே ஏதாவது எதிர்பார்ப்பை வளர்த்து கொள்ளாதே!" என்றார் ராம் முடிவாக, சம்மதமாக தலையசைத்து சென்றாள் ஹாசினி.

மைலாப்பூர் கோவிலில் ஹாசினி, சித்ராவிற்காக காத்திருக்க நேரிடாமல் ராம் வண்டியை வாயிலில் நிறுத்தும் பொழுதே சித்ராவின் வண்டியும் எதிர்புறத்தில் வந்து நின்றது.

எதேச்சையாக திரும்பிய ராமின் விழிகளில் ஹாசினி விழுந்து விட, அவள் சித்ரா அறியாமல் ராமை பார்த்து குதூகலமாக கையசைத்தாள்.

அவளின் குழந்தைதனத்தை எண்ணி ரகசியமாக புன்னகைத்தபடி நடக்க ஆரம்பித்தார். ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகாமல் சுவாமி தரிசனம் செய்து பிரஹாரத்தை வலம் வந்தனர்.

சித்ராவை நேரில் பார்த்ததும் ராமிற்கு மிகவும் பிடித்து விட்டது. ஹாசினி குறிப்பிட்டிருந்ததை போல் நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வையாக அக்கம்பக்கம் பாராமல் ஒவ்வொரு சன்னதியாக சென்று கொண்டிருந்தாள். விழிகளில் எந்த ஒரு அலைப்புறுதலும் இல்லாமல் வதனத்தில் சாந்தமே குடி கொண்டிருந்தது.

"பெரியம்மா இவர் தான் உங்களை பார்க்க வேண்டும் என்று கூறிய என்னுடைய காலேஜ் லெக்ட்சரர்!" என்று சித்ராவிற்கு ராமை அறிமுகப்படுத்தி வைத்தாள் ஹாசினி.

"வணக்கம் சார்!" என்று கைகளை குவித்தவள், "நீங்கள் என்னிடம் பேச அழைத்ததாக கூறினாள், இவளால் எதுவும் பிரச்சினையா படிப்பிலா அல்லது வேறு ஏதாவது தொந்திரவா?" என்று கவலையுடன் வினவினாள் சித்ரா.

"நோ... நோ... யு டோன்ட் வொர்ரி, ஷீ ஈஸ் பக்கா இன் ஹெர் ஸ்டடிஸ் அன்ட் டிசிப்ளின். ஆக்ட்சுவலி பிரச்சினை அவள் தொடர்பானது இல்லை, நீங்கள் சம்பந்தப்பட்டது தான்!" என்றார் ராம் அமைதியாக.

"என் சம்பந்தமானதா... என்ன?" என்றாள் குழப்பத்துடன்.

"ஹாசினி நீ கொஞ்சம் கோவிலை சுற்றி வருகிறாயா? அதுவரை நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்!" என்று அவளை அனுப்பி வைத்தவர், சித்ராவிடம் திரும்பினார்.

ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தபடி நின்றவளை அழைத்து கொண்டு அருகிலிருந்த மண்டபத்தில் அமர்ந்தவர் தன்னை பற்றியும், ஹாசினி தன்னிடம் வைத்த வேண்டுகோளையும் தெரிவித்தார்.

அதை கேட்டு திகைத்தவள், "இல்லை வந்து... அவள் கல்லூரி செல்ல ஆரம்பித்ததிலிருந்து கொஞ்சம் ஒரு மாதிரி பிஹேவ் செய்கிறாள். நான் அவளை கண்டித்து வைக்கிறேன் இனி அவளால் உங்களுக்கு எந்த தொந்திரவும் ஏற்படாது!" என்றாள் அவசரமாக.

"அவளால் எனக்கு தொந்திரவு என்று இதுவரை நான் சொல்லவேயில்லையே?" என்றார் ராம் கேலியாக.

"அப்பொழுது எதற்கு என்னை பார்க்க வேண்டுமென்று சொன்னீர்கள்? ஹாசினி அப்படி தானே கூறினாள்!" என்றாள் தடுமாறியபடி.

"இதென்ன கேள்வி வீட்டில் பெரியவர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தால் மாப்பிள்ளையும், பெண்ணையும் ஒருவரையொருவர் பார்க்க வைப்பார்கள் அல்லவா... அது போல் தான் அவள் உன்னை அழைத்து வந்திருக்கிறாள். அதாவது நம் திருமணம் தொடர்பாக நாம் மனம் விட்டு பேச தான் இந்த ஏற்பாடு!" என்று விளக்கினார்.

முகம் சட்டென்று பதட்டத்தை தத்தெடுக்க, 'அடிப்பாவி மகளே... சும்மா விளையாட்டுக்கு பேசிக் கொண்டிருக்கிறாய் என்று நினைத்தால் நிஜமாகவே மாப்பிள்ளை பார்த்து என்னிடம் விவரம் சொல்லாமல் அவரிடம் அழைத்து வந்து மாட்டி விட்டு விட்டாயே...!' என மனதிற்குள் ஹாசினிக்கு அர்ச்சனை செய்தாள் சித்ரா.

ராம்மை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தலைக்குனிந்திருக்க, "ஹாசினி இது தொடர்பாக பேசும் வரை எனக்கு எந்த எண்ணமுமில்லை. ஆனால் உங்களை பற்றிய விவரம் அறிந்து பார்த்ததிலிருந்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு பரிபூரண சம்மதம். இதுவரையான நம் வாழ்க்கை எப்படி இருந்ததோ இதற்கு மேலும் இப்படியே தொடர்ந்தோம் என்றால் ஒரு கட்டத்தில் நமக்கென்று யாருமில்லாமல் தனிமையே மனதை விரக்தியாக்கும். நம் உடன்பிறப்புகளுக்கு அவரவர்கென்று குடும்பம் உண்டான பிறகு அவர்களை குறை கூறியும் பயனில்லை. ஓகே இரண்டு நாள் டைம் எடுத்து கொள்ளுங்கள், நன்றாக யோசித்து உங்கள் பதிலை சொல்லுங்கள் கிளம்பலாமா?" என்றார்.

அதுவரை குனிந்திருந்தவள் வேகமாக நிமிர்ந்து சம்மதமாக தலையை ஆட்ட, அவருக்கு புன்னகை அரும்பியது. அதன் பிரதிபலிப்பாக லேசான கன்னச் சிவப்போடு அவருடன் இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.

எதிரே வந்த ஹாசினி, "என்ன பேசி விட்டீர்களா?" என்றாள் ஆவலாக.

"ம்... இரண்டு நாளில் யோசித்து சொல்ல சொல்லியிருக்கிறேன்!"

"என்ன இரண்டு நாட்களா?" என்று அலுப்போடு கூறியவள் திரும்பி சித்ராவை பார்க்க, முகமெல்லாம் சிவந்திருக்க தவிப்புடன் நின்றிருந்தாள் அவள்.

"ப்ச்... இரண்டு நாளெல்லாம் வேஸ்ட் சார் சாரி... சாரி பெரியப்பா,என் பெரியம்மாவின் மனம் இப்பொழுதே எனக்கு தெரிந்து விட்டது!" என்று பரிகாசித்தாள் ஹாசினி.

வேகமாக ஹாசினியின் கரம் பற்றி இழுத்தபடி, "நாங்கள் வருகிறோம் சார்!" என பதற்றத்தோடு விலகி விரைந்து நடக்க ஆரம்பித்தாள் சித்ரா.

ராம் யோசனையோடு நின்றிருக்க, "பாவம் பெரியம்மா அவர், இதற்கு மேலும் எதற்கு டைம் வேஸ்ட் செய்து கொண்டு உங்கள் சார்பாக நானே ஓகே சொல்லிடவா?" என்றாள்.

"இல்லை... இந்த வயதில்... எனக்கென்னவோ பயமாக இருக்கிறது!"

"உப்ஃபோ... சரி அவரை பிடித்திருக்கிறதா இல்லையா?"

ஒரு சின்ன தயக்கத்திற்கு பிறகு ம்... என்று முனகினாள் சித்ரா, "அப்புறம் என்ன மற்றதை விட்டு தள்ளுங்கள், நான் பார்த்து விசாரித்த வரை மிகவும் நல்ல மனிதர் அவர். உங்களுக்கு நல்ல துணையாகவும், தோழனாகவும் அமைவார்!" என்றாள் ஹாசினி தீர்க்கமாக.

பின் சட்டென்று திரும்பி, "பெரியப்பா! எல்லாம் ஓகே உங்கள் தங்கைக்கு போன் செய்து விரைவில் நல்ல முகூர்த்த தேதி குறியுங்கள்!" என்றாள் அவரிடம் உரக்க.

ராமின் விழிகள் வியப்புடன் சித்ராவை நோக்க, அவள் கூச்சத்துடன் நிமிர்ந்து மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தினாள்.

*END*

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro