Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3

என்றும் நாள் முழுதும் தன்னோடு பிரயாணம் செய்து, மனதளவில் இருக்கும் அலுப்பை உடலளவிற்கு பாய்ச்சி வீட்டை அடைந்ததும் அலை அலையாய் ஓடி அவளை சத்தாய்க்கும் அந்த விதமான சோர்வை அன்று அவள் காணவில்லை. அதனை சோர்வு என்று கூட சொல்லிவிட முடியாது. அது ஒரு விதமான அலுப்பு. மாலையில் வீடு திரும்பிய பொழுதுகளில் எல்லாம் தன் மனதோடு அது அளவலாடிவிட்டிருந்ததில் அது இப்போது உண்மையில் தான் இல்லையா, இல்லை அது இருந்தும் தனக்கு பழகிப் போய், தன் மனம் தான் மரத்துவிட்டதா என்றும் தோன்றியது.

அன்று மாலை வீடு திரும்பிய உடனேயே முந்திய நாள் ரமியோடு தியேட்டர், மால், புஸ்தக கடைகள் என்று சுற்றியதிலும், தன் மனம் தன் பேச்சை கேட்டு ஒழுங்காய் தான் சொன்னதில் ஒண்டியாய் நிலைபெற்று நின்றதிலும், ரொம்ப முந்திய வருடங்களில், என்றோ பள்ளிப் பருவத்தில் பார்த்து, பழகிய, மனதிற்கு மிகவும் பிடித்தமான மனதிற்கு நெருங்கிய, உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்தத் தோழியை உறக்கத்தில் இருந்து எழுப்பியது போல் இருந்தது த்யுதிக்கு.

தன்னுடையை நிஜமான அந்த மாதிரியை தொலைத்துவிட்டதாய் நினைத்து கொண்டிருந்திருக்கிறாள்.எது நிஜம், எதற்கு அவள் இத்தனை நாள் தனக்கு பிடித்தனயெல்லாம் துறந்து இருந்தாள், இப்போது எதற்காக இப்படியாய் அவள் தானிழந்ததாய் எண்ணிய சுயத்தை திரும்ப பெற்றாள். எதுவும் அகப்படவில்லை.

அவளால் சிரிக்க முடிந்தது. மனதை நிலை நிறுத்தி முந்திய நாள் வாங்கிய புஸ்தகத்தை படிக்க முடிந்தது, அகத்திலிருந்து இடையூறெதுவும் இன்றி. ஆருத்ரா அவசர அவசரமாய் பேசியதைக் கேட்டு சிரத்தையாய் இவள் இப்படித்தான் என்று தனக்குள் பேசி கொண்டு வியக்க முடிந்தது. நேற்றிரவு சமையலறையில் ரமியுடன் பேசி கொண்டிருக்கையில் ரேடியோவினிருந்து வந்த 'பச்சை நிறமே'வோடே மெல்லிசாய் பாட கூட முடிந்தது. ரமியிற்கே ஆச்சரியம் தான்.

கைகளிரண்டும் பாத்திரம் தேய்ப்பதில் மும்முரமாய் மூழ்கியிருந்தாலும் சிரத்தையில் பெரிதும் கவனமின்றி, அங்கே அலைந்து திரிந்த இசையில், அதன் அழகியலில் மனம் தோய்ந்து உதட்டினோடே முணுமுணுத்து பாடியவளை ரமி கண்டு அவளுள் எழுந்த சின்ன புன்னகையை விரட்டமுடியவில்லை. அவள் முயலவுமில்லை.

தினசறியாய் ஒரு மாதிரியான patterned வாழ்க்கைக்குள்ளிருந்து வெளிபட்டதாகவே உணர்ந்தாள் த்யுதி. Patterned என்றால் காலையில் எழுந்து, குளித்து தன் இதர போக்குவரத்துக்களை முடித்துக்கொண்டு, கணவனை கிளப்பி, சமைத்து கொட்டி, தானும் கிளம்பி வேலைக்குச் சென்று, மாலையில் திரும்பி மீண்டும் சமைத்து இப்படியான முக்கால் பங்கு பெண்டிரைப் போல் mundaneஆக இல்லாது இவையனைத்திற்குள்ளும் மனதை துளையிட்டு, தன்னிலையை சிறையிட்டிருக்கும் கவலைகளுடனும் –அந்த second track யோசனைகளே தினப்படி வேலைகளை செய்யவிடாமல் தடுமாறச்செய்வதாய் இருப்பதிலுமான, மற்றவரிடமிருந்து சற்றே மாறுபட்ட pattern.

இப்படியே த்யுதியின் அலுப்புகளையும், அவள் படும் அல்லல்களையும், இம்மெனும் முன் அவள் கண்களில் மின்னும் கண்ணீரும், தனிமையில் அது அவளை படுத்தும் பாட்டையும், அது தரும் வெறுமையான உணர்வுகளிலேயே கிரகித்து வந்தவளுக்கு அன்றைக்கு வெகு நாட்கள் கழித்து கோயிலுக்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.

வேலை ரீதியாக அவள் தன்மேல் கொண்டுள்ள நம்பிக்கையும், பொறுமையும் வாழ்க்கையில் கடவுள் மேல் இருந்தது. அம்மா அத்தனை தொலைவில் அண்ணாவிடம் இருக்கும்போதும் ஒவ்வொரு அழைப்பிலும் தெம்பூட்டும் விதமாய் பேசுவதிலும், அண்ணன் பிரசாத்தும் அவனது மனைவி வேதாவும் இவளை தள்ளிவைத்து விடாமல் தன் பிள்ளை போலவே பார்த்து நடந்து, அவ்வப்போது இத்தனையாயிரம் மைல் கடந்து வந்து (அவர்களோடு சிங்கப்பூர் செல்லமாட்டேன் என்று த்யுதி தீர்மானமாய் மறுத்துவிட்டதால் மட்டும்) இவளோடு இருந்துவிட்டு செல்வதிலும், யாருக்கும் கிடைக்காத வரமாய் ரத்தினமய் ரமி இவளுக்கு தோழியாய் அமைந்த்திலும், ரமி-சுந்தர் அவர்களுக்குள் இருக்கும் அன்பும், இல்லறமும், அவர்கள் இவள் மேல் காட்டும் நல்லுணர்வும், கரிசனமும்; வேலையில் தனக்கென, தன்னை புரிந்து கொள்ளும் மற்றொரு தோழியாக ஆருத்ரா கிடைத்ததும் இன்னுமும் கடவுள் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியாய் தெரிந்தது த்யுதிக்கு.

பக்தி பதிவிரதையெல்லாம் இல்லையென்றாலும் த்யுதிக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஏங்கேயாவது பல்லக்கில் முருகர், பிள்ளையார் போவதை கண்டால் கண்மூடி, கைக்கூப்பி வேண்டிக்கொள்ளுமளவிற்கு, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கபாலீஸ்வரரை விசிட் அடித்துவிடுமளவிற்கு, தினமும் காலையில் வேலைக்கு செல்லுமுன் விளக்கேற்றி இரண்டு ஸ்லோகம் சொல்லிவிட்டு கிளம்பும் அளவிற்கு.

அன்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய போது ரமி வீட்டில் இல்லை. குளித்து, வேறு உடைக்கு மாறி, கலைந்திருந்த பின்னலை பிரித்து வாரிக்கொண்டு, சிறிய பொட்டிட்டுக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு நடந்தாள் த்யுதி. கோவில் இருக்கும் ஒரு மூன்று கிலோமீட்டர் தொலைவில். நடக்கவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. நடந்தாள்.

அப்படியே ஒரு அழைப்பு அடித்து ரமியிடம் கோவிலுக்கு சென்று வருவதாய் சொல்லி வைத்திருந்த மாத்திரத்தில் கபாலி கோயிலை அடைந்திருந்தாள்.

இன்றைக்கு இந்த சன்னிதியில் கைகூப்பி நிற்கும் த்யுதி இதற்கு முன்னும் இங்கு எத்தனையோ தடவை வந்து மனமுருக மன்றாடியதுண்டு –அவள் வாழ்க்கைக்கு விடிவு தருமாறு. தன் வாழ்க்கையின் விடிவை தன் கையிலேயே வைத்துக்கொண்டு கடவுளிடம் கேட்டிருக்கிறாள் –இன்று தான் புரிந்தது. அதை தனக்கு உணர்த்தியமைக்கு அந்த நன்றி கலந்த புன்னகையை உதிர்க்காமல் இருக்க முடியவில்லை அவளால். இவள் முகத்தில் கண்ட புன்னகையே பிரசாதம் கொடுக்க வந்த சாஸ்திரிகளில் முகத்தில் தொற்றிக்கொண்டது.

இப்படி எல்லாம் மறந்து, நன்றியுணர்வில் சிரித்து எத்தனை காலங்கள் ஆகிவிட்டது த்யுதி?

போகிற போக்கில் சாலை ஓரத்தில் சின்னதாய் சாய்ந்தாட்டம் ஆடிய தும்பைகளை நின்று பார்த்து எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்? விதவிதமாய் புதிர் போடும் மேகங்களின் வடிவத்தை கண்டுகொள்ள எத்தனை பிடித்தம். பஸ்ஸில், ரயிலில், ஆட்டோவில் எதிலானாலும் சாலையின் பரபரப்பை வேடிக்கை பார்ப்பதும், கால்கள் போகிற போக்கில் ஓரமாய் நடந்து போவதும், திடீரென்று நினைத்து கொண்டால் கடற்கரையிடம் ஒதுங்கி அதன் ஆழியையும் அது ஒலிக்கும் நுரைகளையும் பார்த்து கொண்டு இருப்பாயே!

மீண்டும் அப்படியெல்லாம் இருக்கவும் நன்றாகத்தான் இருந்தது த்யுதிக்கு.

கல்லூரி நாட்களில் தொலைத்த உன்னையே நீ மீட்டெடுத்து கொண்டு விட்டாய் த்யுதி.

எதுவுமே நடக்காதது போல் வெளியே எதையும் காட்டாமல் இருந்தாயல்லவா இப்போது உண்மையில் மனதார அவ்வாறு இருக்கிறாய். பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. தெரியவேண்டாம். உன்னை பொறுத்தளவில் அது எத்தனை பெரிய மாறுதல் –ஒரு நல்லுணர்வை ஏற்படுத்தும் பாசாங்கில்லாத மாறுதல். யாருக்காகவுமல்ல, உனக்காக... உனக்காக.

மீண்டும் மீண்டும் நினைவுருத்தி கொண்டாள் –இரண்டு வருடங்களில் விட்டுவிட்டு பறிதவித்த அனைத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். மெள்ளமாய் ஆனால் நிதானமாய், சிரத்தையாய்.

கோயில் பிரகாரத்தை சுற்றி முடித்து அமர்ந்திருந்த த்யுதியின் எண்ண சுழற்சி இப்படியாய் கண்டதையும் அசை போடாமல் சற்று சொல்பேச்சை கேட்டு சமர்த்தாய் நடந்து கொண்டது. மாறுபட்ட தவிப்பை விதைக்காத, இத்தனை காலமாய் தன்னை தொலைத்திருந்த யோசனைகள் மாதிரியாய் இல்லாது முரணாய் -நல்ல விதமான முரணாய் தன்னுள் திரிந்த யோசனையில் இருந்து அவள் மடியில் கிடந்த கைப்பையினுள் இருந்த அலைபேசியின் அதிர்வினில் விடுபட்டாள் த்யுதி.

கையினில் கிடந்த அலைபேசி திரையில் ஆருத்ரா ஒளிர, த்யுதியின் உதட்டில் இத்தனை நேரம் கிடந்த புன்னகையை விடவும் பெரிதான ஒன்று. அழைப்பை ஏற்று காதிற்கு பொறுத்தினாள்.

"ஹலோ, எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? என்ன பண்றீங்க?" அழைப்பை ஏற்றது தான் தாமதம் என்பது போல, இடைவெளி இல்லாது கேள்வி்க்குறிகள், பூவினுள் புயல் போல.

அந்த அழைப்பு அள்ளித்தந்த புன்னகையை கைவிடாமல் நிலைநிறுத்தி கொண்டது ஆருத்ராவின் உற்சாகத்தை கேட்ட த்யுதியின் மனம்.

"கபாலி கோயில்ல இருக்கேன், நல்லா இருக்கேன், கோயில்ல என்ன பண்ணுவாங்க? அதான் பண்றேன்... போதுமா? இதை ஒண்ணொண்ணா கேட்டா ஆகாதா, ம்ம்?"

"நிஜமாவா, கபாலி கோயில்லையா இருக்கீங்க? அங்கேயே வெய்ட் பண்ணுங்க எங்கேயும் போயிட கூடாது, ப்ளீஸ் இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன். இன்னிக்கு கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டுத்தான் போகணும், ஆமாம். நானும் ஒரு மாசமா கூப்படறேன் இப்ப வரேன், இன்னிக்கு வரேன், இப்ப மனசு சரியில்லை, நாளைக்கு நேரம் சரியில்லைன்னு டபாய்க்கறீங்க என்னை. இதோ கிளம்பிட்டேன், நீங்க இப்போவே போன் பண்ணி உங்க ரமிகிட்ட சொல்லிடுங்க ஆருத்ரா வீட்டுக்கு போய்ட்டு வரேன், அப்படின்னு; நான் வந்துட்டேன், டாட்டா!" துடிப்பிற்கும், உற்சாகத்திற்கும் சினானிம் தேடினால் அகராதியே ஆருத்ரா என்று காட்டுமளவிலான உணர்ச்சிக்கனிவு. அவள் குரலினை அடுத்து விரைந்த சலசலப்பிலேயே அவள் அவசரமாய் அழைப்பில் பேசியதை செயல்படுத்த எத்தனித்து த்யுதியை சந்திக்க கிளம்பிவிட்டாள் என்று தெரிந்தது.

கைபேசியை மடியின்மேல் கிடத்தி பாரமாய் கிடந்த மனதின் ஓலங்களை எல்லாம் ஒரே நீள் மூச்சினில் வெளியேற்றினாள் த்யுதி. ஏனோ, இத்தனை நாள் இருந்தது போல் இன்று இந்த அழைப்பிலிருந்து விடுபடவோ, இல்லாத சாக்கு சொல்லி அகன்று கொள்ள வேண்டுமென்றோ அவளுக்கு தோன்றவில்லை.

சற்று மாறாய் இத்தனை நாட்களாய் எதோ வெற்று உடல் உலாவுவதைப் போல் தன் கடமைகளைச் செய்து வந்த த்யுதிக்கு இன்று மீண்டும் ஒரு நட்பு கொண்டு பழகும் மனதிடம் நேரம் செலவழிக்கப்போவதை எண்ணி மனம் தித்தித்தது. மனதின் களிப்பு, உவகை என்றெல்லாத்தையும் தாண்டிய இதமாய், புண்பட்ட இடத்தில் மருந்திடும் மயிலிறகாய், மரமரத்த மனம்தனை மீட்டுக்கொண்டு, மீண்டும் உணர்ச்சிகளை ஏற்க பழகிக்கொண்டிருக்கும் இதம்.

அவையாவும் தாண்டிய சுயத்தை இழந்து திண்டாடி எது தான் என்று மீண்டும் கைகொண்டு உணர்ந்து ஆற்றிக்கொண்டிருந்த நிலையில், காலம் போன போக்கில் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை மாற்றி வாழ்க்கையை எதிர்கொள்ள நினைக்கும் மனதின் சிறு முயற்சி.

அமைதியாய் ஒன்றும் யோசிக்காது த்யுதி அமர்ந்திருந்த அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் கைபேசி ஆர்ப்பரித்து அழைத்தது. "ஹலோ, நாந்தான். கோயில் வாசல்ல தான் இருக்கேன். வெளியில வாங்களேன்.." ஆருத்ரா தான்.

"இதோ வந்துட்டேன்," சொல்லி விட்டு எழுந்தவள் கவனமாய் கைபேசியை பையினுள் வைத்துவிட்டு கோயில் வாசலை அடைந்தாள். எதிர் திசையில் வரிசையில் வீற்றிருக்கும் பூக்கடைகளில் ஒன்றின் வாயிலில் ஆருத்ரா சின்ன சின்ன யானை பதித்த காதி ஸ்கர்ட்டும், இணையான பனியனும் அணிந்து காத்திருந்தது கண்களில் பட்டது.

த்யுதியின் வரவை அறிந்த ஆருத்ராவும் அனிச்சையை கையை அசைத்து செய்கை காட்ட, த்யுதி தன் காலணிகளை அணிந்து சாலையை கடந்து அவளை அடைந்தாள்.

"இன்னிக்கு மட்டும் நீங்க வரலைன்னு சொல்லியிருந்தா எனக்கு பொல்லாத கோவம் வந்திருக்கும், ஆமாம்,"ஆருத்ராவின் வீடு இருக்கும் திசையை நோக்கி இருவரின் கால்தடங்களும் முன்னேறத் தொடங்க ஆருத்ரா பேசலானாள்.

அமைதியாய் கேட்ட த்யுதி, மறுப்பாய் தலை சாய்த்து, "ச்சே ச்சே, இன்னிக்கு உனக்கு கோவம் வந்திருக்காது." என்று குறும்புன்னகை தவழ கூற ஆருத்ராவின் நெற்றிச் சுருங்கியது.

"ஏன்?"

"நாந்தான் இன்னிக்கு வரமாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டேனே... இத்தனை நாள் நான் எங்கே போகணும்னாலும் அதுக்கு ஆயிரத்தியெட்டு தடவை ஸ்ரீகாந்த கெஞ்சணும், எங்கே போறேன், என்ன பண்ணுவேன், யாரை பாக்க போறேன், எப்போ வருவேன்னு ஜனாதிபதி ஸ்கெடியூல் மாதிரி எழுதி ஒப்படச்சிட்டு தான் போகணும், சொன்ன நேரத்துக்கு முன்னாலேயே வீட்டுக்குள்ள இருக்கணும். ஆன்னா திட்டு, ஒரு பழிப்பேச்சு, எதுக்கெடுத்தாலும் என்னை வைய்யறது; சரி, என்னோட தான் போச்சுன்னா எங்க அப்பா அம்மாவுக்கும் வசவுன்னு," த்யுதி சொல்லத்தொடங்க பளீரென்று இருந்த ஆருத்ராவின் முகம் கொண்டல் கொண்ட வானமாய் இருட்டியது.

ஸ்ரீகாந்துடனான த்யுதியுடைய வாழ்க்கையை ஆதி முதல் அந்தம் வரை ஆருத்ரா அறியவில்லையென்றாலும், கதை சுருக்கமும், த்யுதி சந்தித்திருந்த அனைத்து மனத்தயுரங்களையும், அல்லல்களையும் அறிந்திருந்தாள்.

"அதுக்கப்பறம் நான் எடுத்த முடிவுக்கு பயந்து இருந்தேன்.. தெரிஞ்சவங்க பாத்தா என்ன கேப்பாங்க.. ஸ்ரீகாந்த் வீட்டிலேர்ந்து யாராவது பாத்தா என்ன கேப்பாங்கன்னு பயம். என்னமோ நானே தப்பு பண்ணிட்ட மாதிரி வெளியில தலை காட்டவே சங்கோஜப்பட்டு... இப்போதான் கொஞ்சம் பரவால்லை. இப்போ இப்படி உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்றதும் எனக்கு வேணும்போல தான் இருக்கு..." த்யுதி இத்தனை சொன்னபோதும் அவளிடம் எந்த மாற்றமும் காணவில்லை –நடந்தனையெல்லாம் அதன் அதிர்வலையின்றி அழகாய் கோர்வையாய் அசைபோட்டு சொல்லிமுடிக்க அவள் மனம் பழகியிருந்தது.

சொல்வதை கேட்டு மிருதுவான ஆறுதலாய் சொன்னவளின் கரத்தை ஒரு கண்ணிமைப்போடு பற்றிக்கொண்டாள் ஆருத்ரா. "அதுக்கு போகாதீங்க. இனிமே என்ன ஆனாலும் அந்த பார்ட்க்கு போகாதீங்க. அது நமக்கு வேண்டாம்," மென்மையாக ஆருத்ரா சொல்லிவிட த்யுதியின் உதட்டினை ஒரு விரக்தி விறைத்து வெகுவாய் விரித்தது.

"அதுக்குத்தான் ஆருத்ரா முயற்சி பண்றேன்..." மூச்சினோடு இழைந்து மென்மையான குரலில் சொற்கள் வந்த மாத்திரத்திலும் அதனில் அத்தனை நிதானமும் தெளிவும்.

அதனை அடுத்த நான்கு நிமிட செருப்பின் சிராய்ப்புகளும், சாலையின் போக்குவரத்தினாலான ஓசையையும் தாண்டிய நிசப்தம் இருவரினுள் இருந்த இடைவெளியை அடைத்திருந்தது.

த்யுதி அவளது காலடிகளின் நிறுத்தத்தில் இருந்த அந்த பெரிய வீட்டின் முகப்பை அளவெடுத்தாள். அது வீடு என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியாத படியான வீடு... வில்லா என்றானாலும் மிகையாகாது. இத்தனை நேரம் தங்களுள் அப்பியிருந்த கனமான நிசப்தத்தை கலைத்தாள் ஆருத்ரா. "இதுதான் நம்ம வீடு.. நான் சொன்னேனில்லையா கோயில்லேந்து ரொம்ப பக்கத்திலன்னு... பார்த்தீங்களா..."ஆமென்று ஆமோதித்து குட்டியாய் புன்னகை சிந்திய த்யுதி, ஆருத்ராவின் பின்னாலேயே திறக்கப்பட்ட கதவினுள் நுழைந்தாள்.

கூடத்தில் நுழைவாயிலை தாண்டி உள்ளே திடலென விரிந்திருந்த வீட்டினை கண்டுகொண்டிருந்த த்யுதிக்கு அங்கு கௌச்சில் அமர்ந்திருந்த ஆருத்ராவின் அம்மாவை கண்டதும் முகத்தில் புத்தம்புதிய களிப்பு பிறந்தது.

த்யுதியை கண்ட மாத்திரத்தில் ஆருத்ராவின் அம்மாவும் இருக்கையிலிருந்து எழுந்து அவளை நெருங்கினார், "த்யுதி, வாம்மா... நல்லா இருக்கியா?"

ஆருத்ராவின் தாயாரை சந்திப்பது த்யுதிக்கு இதுவே முதல்முறை ஆனாலும் அப்படியான ஃபார்மாலிட்டீஸ் எதுவும் இன்றி ஆருத்ராவின் அம்மா பழகியது த்யுதியை ஆசுவாசப்படுத்தியது. அதனை அவ்வாறே ரெசிப்ரொக்கேட் செய்யவும் வித்திட்டது. "நான் நல்லா இருக்கேன்மா, நீங்க எப்படி இருக்கீங்க?"

"எனக்கென்ன குறைச்சல், இப்பசத்திக்கு ஆருத்ராவ கல்யாணம் பண்ணிவெக்கணும் அது ஒண்ணுதான்... மத்தபடி எந்த கவலையும் எனக்கில்லை..." என்று அவர் பேசத் துவங்க ஆருத்ரா தன் அம்மாவை ஓரப் பார்வையில் முறைத்தாள். "ஏன்மா எப்ப பார்த்தாலும் உனக்கு இதே நினைப்பு தானா? வேற யோசனையே உன் மண்டைல ஒடாதா?"

"எனக்கு இருக்கறது நீ ஒருத்தி தானே ருத்ராம்மா, உன்னப்பத்தி கவலையில்லாத வேற எதைப்பத்தி யோசிக்க?" என்று அழகாய் தாய்மையின் மணம் கமழ பதிலளித்தவர், தன் அருகில் அமர்ந்திருந்த த்யுதியின் கரம்பற்றினார். "நீயே சொல்லுமா த்யுதி, பொண்ண பெத்தவளுக்கு இந்த வயசில வேற என்ன யோசனை இருக்க போறது? அருத்ரா அப்பா இருந்திருந்தாரானா வேற மாதிரி, இப்போ அப்படி இல்லையேம்மா.."

ஒரு பீன் பேக்கை இழுத்து போட்டு அதன் இதத்தினுள் பொதிந்து கொண்ட ஆருத்ராவை அவள் அம்மாவின் பேச்சை ஆதரிக்கும் பார்வை பார்த்தாள் த்யுதி. "அம்மா சொல்றது சரிதானே... கல்யாணம் பண்ணிக்கத்தான் சரின்னு சொல்றது..." என்று கெஞ்சலாய் த்யுதி கேட்க, ஆருத்ராவின் முகத்தில் விரட்ட முடியாது ஒரு அலுப்பு திண்டாடியது.

இதையே ஒரு வருடத்திற்கு முன்னால் ஆருத்ராவிடம் சென்று திருமணம் செய்து கொள் பெண்ணே என்று சொல்லியிருந்தால் சிறிது யோசித்து, தயங்கி, பல ஆழ்ந்த யோசனை எண்ணங்களை மனதில் ஓட்டி தயங்கியாவது அரை மனதுடனாவது ஒப்பு கொண்டிருப்பாள். ஆனால், இப்போது முதன்முதலில் பார்த்து பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைப்பட்ட நிலையில் அவளுக்கு தேவையாய் பட்டது கைவிட்ட திருமணத்திலிருந்து மீள்வதற்கான நேரமும், தனிமையும், அதைச் செய்துகொள்ள தனக்கு தானே தேவைப்படும் சமாதானங்களும், பின் வாழ்க்கையில் அவளது துறைசார்ந்த தகைமையும் அதனில் தான் காணப்போகும் முன்னேற்றங்களும் தானேயொழிய இப்படியான உடனடியான கல்யாணப்பேச்சு அல்ல.

"நீங்க ஒருத்தர் தான் பாக்கி... என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி பேசாம இருந்ததில.." தனியாய் சொல்ல அவசியமில்லாது அவள் வார்த்தைகளிலும், அந்த ஒலித்த தொனியிலுமே சலிப்பு தென்பட்டது.

"எதோ ஒரு தடவை ஒத்துப்போகாம நின்னுப்போய்ட்டா எப்போதுமே அப்படியே ஆகுமா கண்ணு? ஒருத்தர் அப்படி இருந்துட்டா எல்லாருமே அப்படியே இருந்துடுவாங்களா? நடந்ததையே நினைச்சுட்டு வேண்டாம் வேண்டாம்னு சொல்றதில அர்த்தம் இல்லம்மா," கண்களில் நீர் முட்டவில்லை என்றபோதும் குரல் தழுதழுத்திருந்தது அந்தத் தாய்க்கு.

ஒரு இடத்தில் தடைப்பட்டதின் காரணமாய் திருமணமே வேண்டாமென்பது என்ன பேச்சு, அதுவும் ஆருத்ரா போன்ற திடமான மனம் கொண்ட பெண். த்யுதிக்கு தன் மனதில் பட்டதை சொல்லவேண்டும் போல் இருந்தது.

ஆனால் த்யுதி எதுவும் தொடங்கும் முன் ஆருத்ரா த்யுதியிடம் நிமிர்ந்தாள், "நீங்க காபி சாப்பிடறீங்களா? வந்ததில் இருந்து எதுவுமே தராம போர் அடிக்கறோம் நானும் அம்மாவும். இருங்க காபி கொண்டு வரேன்," என்று புன்னகைத்து ஆருத்ரா கிச்சனிற்குள் அகன்றாள்.

"இப்படித்தான் கல்யாணம்னு சொன்னாலே தலைல நெருப்பள்ளி கொட்டினக் கணக்கா ஆகிடறாம்மா.. எனக்கு வேற நினைப்பே இல்ல இப்போயெல்லாம் இதை விட்டா.." பணம், வசதி என்று சகலமும் இருந்தாலும் தாயிற்கு தன் பெண்குழந்தையை மணமுடித்து வைப்பதில் தானே அவையனைத்துமே சித்தி பெரும். ஆனால், அவள் அம்மாவின் கவலைகளின் ஆழத்தை அறிய முடிந்தாலும், ஆருத்ராவின் இந்நிலையை த்யுதியினால் ஓரளவிற்கு அனுமானிக்க முடிந்தது.

இப்போது அவளின் தேவை ஒரு வாழ்க்கை துணையோ அல்ல புது வாழ்க்கையோ இல்லை. துறை சார்ந்த முன்னேற்றங்களும் அதனில் ஈடுபட்டு உழைக்க பொறுமையும், கடின உழைப்பும்தான் –கிட்டதட்ட த்யுதி தானிருக்கும் கட்டத்திலேயே தான் ஆருத்ராவும் இருப்பதாக உணர்ந்தாள்.

"நீங்க சொல்றது சரிதான்மா, ஆனா அவ தான் சொல்றாளே இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு. அவளுக்கும் இதுலேர்ந்து வெளியில வர கொஞ்சூண்டு அவகாசம் தேவை தானே. கொஞ்ச நாள் கழிச்சு நீங்க பேசி பாருங்க கண்டிப்ப அவ கல்யாணத்திற்கு ஒத்துப்பா. நானும் அவகிட்ட இதபத்தி பேசறேன்," கேட்க சமாதானமாய் இருந்தது ஆருத்ராவின் தாயான சித்ராவிற்கு.

ஆருத்ரா அளித்த காபியையும், சாப்பிட்டே ஆகவேண்டுமென்று வற்புறுத்தி சித்ரா செய்து தந்த ப்ரெட் உப்மாவையும் உண்டுவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் த்யுதி வீடு திரும்ப ஆயத்தமானாள்.

"உன்கிட்ட பேசினது மனசுக்கு தெம்பா இருக்குமா. கண்டிப்பா அடிக்கடி வந்துட்டு போகணும், என்ன?" என்று சொல்லி சித்ரா வழியனுப்பி வைக்க அதனை கேட்ட த்யுதிக்கு மன ஆறுதலை தந்தது.

தெருமுனை வரை உடன் நடந்து விட்டு வருவதாய் த்யுதியுடன் வெளியே வந்திருந்த ஆருத்ரா தன் வீட்டின் வாசற்கதவை தாண்டியதும், "கல்யாணம் பண்ணிக்க கேக்கறவன் எல்லாம் ஒண்ணு இந்த சொத்துக்காக வரான்... மொதல்ல கால் ஆஃப் ஆனது ஏன்னு தெரியுமா?" ஆருத்ராவின் பார்வையில் என்றைக்கும் த்யுதி கண்டிராத அளவிலான ஆழம் இருந்தது –அதன் திட்பத்தை ஏற்று சீராய் சுவாசிக்க இரண்டு நிமிடங்கள் பிடிக்கும். த்யுதிக்கும் அப்படியே.

மீண்டு கொண்டு மறுப்பாய் தலை அசைத்தாள் த்யுதி.

இப்போது அதற்கான விடையை அளிக்க ஆருத்ராவிற்கு தன் சுவாசப்பையை நனைக்கும் நீண்ட மூச்சும், ஒரு நொடி அமைதியும் தேவையாய் இருந்தது. எடுத்துக்கொண்டாள்.

"கல்யாணத்துக்கு அப்பறமா நான் மெடிசின் ப்ராக்டிஸ் பண்ண கூடாதாம். எம். டியும் பண்ண கூடாதாம்... விட்டிலேயே இருந்துடணுமாம். நிச்சயம் எல்லாம் ஆன அப்பறமா இப்படி வந்து சொன்னா கண்டிப்பா வேண்டாம்னு சொல்ல மாட்டோம்னுட்டு வேணும்னே இப்படி சொல்லியிருக்காங்க. ஆனா அம்மாவே தெளிவா சொல்லிட்டாங்க என் பொண்ணுக்கு அவ கெரியர் ரொம்ப முக்கியம் எதுக்காகவும் அவ அதை விட்டுத்தர மாட்டா, இது சரி வராதுன்னு."

"அதுக்காக கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடறதா? தப்பில்லை?" பொறுமையாய் கேட்டுக்கொண்ட த்யுதி இப்படி சொன்னதும் ஆருத்ராவிற்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தன் அம்மா கேட்கும் கேள்வியையே தான் த்யுதியும் கேட்டுள்ளாள்.

"இப்படி கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு சொல்றியே, அப்படி இல்லாத கல்யாணத்தை பண்ணி நீ என்னத்தடீ கண்டுட்டன்னு என்ன கேட்டுடாதே, என்கிட்ட அதுக்கு பதில் இல்ல..." தான் சொன்னது தன்னையே உருத்தி துளைத்தாலும் மன பாரத்தில் முகமூடியாய் ஒரு அசாத்திய குறுநகை இழையாடியது அவள் முகத்தில்.

"என்ன நீங்க... எங்க ஆரம்பிச்சாலும் அங்கேயே போறீங்களே.. அது மட்டும் வேண்டாமே..." ஆருத்ரா கம்மிய குரலில் மன்றாடி எடுத்துவைக்க, த்யுதியின் சுவாசம் அழுத்தமாய் ஒருதரம் ஏறி, இறங்கிக்கொண்டு, பின் ஒப்புதலாய் தலை அசைப்பு வந்த்து.

தெரு முனையை அடைந்ததும் த்யுதி ஆருத்ராவின் கையினை தொட்டாள். "சரி, போதும். இதுக்கு மேல நான் நடந்து போய்டுவேன். நீ வீட்டுக்கு திரும்பு."

"சரி, பத்தரமா போங்க, பை. நாளைக்கு கார்த்தால பாக்கலாம்." என்று சொல்லி ஆருத்ரா திரும்பி நடக்க, த்யுதி தன் பாதைக்கு திரும்பி வீட்டினை நோக்கி நடக்கலானாள்.

ஏனோ இன்று இறுதியாய் ஆருத்ராவிடம் பேசியது மனதோடு கல்லுரலை கட்டியது போல் தாளமுடியாத பாரமாய் கனத்தது.

ஏன் அப்படி பேசினாய் த்யுதி? ஆருத்ரா கேட்பது போல ஏன் எங்கு ஆரம்பித்தாலும் அங்கேயே போய் நிற்கிறாய்? அதைத் தாண்டி வந்தப்பின்னும் ஏன் அங்கேயே சென்று அதனுள் வேண்டுமென்று தாளிட்டுக்கொள்கிறாய்?

நடந்து முடிந்ததிலேயே வாழ்ந்து கொண்டிருப்பது நியாயம் ஆகுமா?

ஆருத்ராவிற்கு சொல்வதை பெயரளவிலாவது நீ கடைபிடிக்கிறாயா?

இல்லைதான், ஆனால் முயற்சிக்கிறேனே!

தனிமையில் இருந்து என்னை நானே வாட்டிக்கொள்ளாமல், இழந்த சுயத்தை மறந்தே போய் விடாமல் இப்போதெல்லாம் மீட்டுக்கொள்ள எத்தனிக்கிறேனே.

எடுத்த எடுப்பில் உதறிவிட முடியுமானால் இந்த டைவோர்ஸிற்கே இத்தனை யோசனை இருந்திருக்காதே. ஓய்வின்றி மன்றாடியது அவள் மனம்.

இதிலிருந்து விடுபடுவது முடியாத ஒன்றல்ல, ஆனால் அதற்கு அவகாசம் பிடிக்கும்.

சிறிது காலத்திற்கு எந்த கேள்விக்கும் பதில் தேடாமல் இரு. கேள்விகள் முனைந்து கொண்டே போனாலும், கேள்விக்குறியோடு இருந்து கொண்டு உன் வேலையைப் பார்.

இங்கு பல பேர் அப்படித்தான்.

கேள்விக்குறியினால் நீ தோல்வியாகிவிட மாட்டாய்.

நடந்து கொண்டு தனக்கு தானே சமாதானம் பேசிக்கொண்டு ரமியின் இல்லத்தை அடைந்திருந்தாள் த்யுதி. இன்றைய பொழுது இப்படியாகக்கழிந்தது என்ற பெருமூச்சோடு செருப்பை அகற்றி கூடத்தினுள் நுழைந்த த்யுதிக்கு, காலடி ஓசைக்கேட்டு நிமிர்ந்த ரமியின் முகம் கண்டதும் நெல் புடைக்கும் முறமாய் தூக்கிவாறி போட்டது.

வட்டமுகமெங்கும் மாலை நேர வானத்தில் செந்தூரத்தை அள்ளி பூசிக்கொண்டதைப்போல கனிந்து தளர்ந்திருந்தது அவள் முகம்.

ரமி அழுதிருந்தாள். 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro