Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி - 1

கணவன் சேவையில் சேவையில்
இன்பம் இல்லை
மனிதர் சேவையில் சேர்கையில் துன்பம் இல்லை
நான் யாருக்கும் பூமியில் பாரம் இல்லை
என் பாதையில் இருளும் இல்லை
நேற்று காதல் கண்டு இன்று கணவன் கொண்டு
நாளை அடுப்பிலே வெந்திட ஆசை இல்லை
முதலில் மாலை சூட்டும்
பிறகு விலங்கு பூட்டும்
உங்கள் கசமுசா கல்யாணம் தேவையில்லை

என்று பாடியவாறே  வலப்புறம் இடப்புறம் என இருபக்கமும் இடையை அசைத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவள் தம்பியின் ஒரு உதையில் மெத்தையில் சென்று விழுந்தாள்.

தலையில் சுற்றியிருந்த துண்டு ஒரு ஓரமாய் சென்று விழுந்திருக்க குப்புறப் படுத்து முகத்தை மெத்தையில் பதித்திருந்தவளோ இப்போது திரும்பி ருத்ர காளியாய் அவனை முறைக்க,

வெவ்வெவ்வே என பழிப்புக் காட்டியவாறே வெளியே ஓடிய தன் தம்பியை "டேய் " என்று கத்தியவாறே அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.

"நில்லுடா! நின்னா ஒரு அடி இல்லைனா மவனே செத்த டா " என்று கத்திய அடுத்த நொடி மரத்தால் ஆன தோசைக் கரண்டி அவள் முதுகை பதம் பார்க்க பாருரு... என்று கத்தியவாறே சிறு சிணுங்கலுடன் சோபாவில் அமர்ந்தாள்.

சமையலறையில் இருந்து வெளியே வந்தவர் இடுப்பில் கை வைத்து முறைத்தவாறே "அறிவிருக்கா டி?
கழுதை வயசாயிடுச்சு, இன்னுமா அவன் கூட ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்க ?" என்று திட்டியவரை நோக்கி தன் நெற்றிக் கண்ணைத் திறந்தவள்

"என்னை பாத்தா ஓடி பிடிச்சு விளையாடுற மாதிரி இருக்கா? அவன் எட்டி உதைச்சுட்டான் பாரு!
நீ வேற அடிச்சுட்ட " என்று கண்கள் கலங்கிய நிலையில் கூறியவளைப் பார்த்து "நடிக்க ஆரம்பிச்சுட்டா" என்றவாறே நாக்கை துருத்தி அழகு காட்டினான் அவனின் அருமைத் தம்பி.

" அம்மு மா " என்றவாறே வந்த தந்தையைக் கண்டதும் சிறிதாக எட்டிப் பார்த்த கண்ணீர் அருவியாய் ஓட ஆரம்பிக்க அவரை அணைத்தவாறே தேம்ப ஆரம்பித்தாள்.

"சிவாஜி கணேசனுக்கே கடுமையான போட்டி தருவா போல " என்று வியந்தவன் "ஆனாலும் யக்கோவ் இது உலக மகா நடிப்பு " என்று கூறி கைத்தட்டியவாறே அவர்கள் அருகில் வந்து
"ஓவரா நடிக்கிறா பா! நம்பாதீங்க" என்றவனின் குரல் அருகில் கேட்டதும் ஒரே பாய்ச்சலில் அவன் முடியைக் கொத்தாக பற்றியவள் அதை ஆட்ட ஆரம்பித்தாள்.

"எட்டியா உதைக்கிற! எருமை, பன்னி, கழுதை " எனத் தனக்குத் தெரிந்த பல நன்மொழிகளால் திட்டியவாறே சிறிது நேரத்தில் அவன் தலையை கிரைண்டரில் சிக்கியிருந்த அரிசியாய் மாற்றியிருந்தாள்.

"இப்படியே அடிச்சிக்கிட்டு இருந்தா காலைல டிபன் கட் நியாபகம் வெச்சுக்கோங்க " என்று மிரட்டி "நீங்க வாங்க சுதாப்பா சாப்பிடலாம்" என்றவாறே பார்வதி சமையலறைக்குள் நுழைய
திருத்திருவென்று முழித்தவளோ  "டேய் சோறு முக்கியம்ல ?"
என்று கேட்க
"ஆமாக்கா எனக்கும் முக்கியம்! நாம ஏன் சாப்பிட்டு முடிச்சதும் சண்டையை கண்டின்யூ பண்ணக் கூடாது ? " என்று கூறிய தன் தம்பியிடம்

" நீ என் எருமைத் தம்பி! ச்ச ச்ச அருமைத் தம்பி" என்று புகழ்ந்தவாறே அவனைத் தள்ளிக் கொண்டு டைனிங் டேபிளுக்குச் சென்றாள்.

குருமிளகு ஆங்காங்கே கண்களுக்குத் தெரிய, சீரகம் மற்றும் நெய் கலந்த வாசனையில் கண்முன் இருந்த வெண் பொங்கலைக் கண்டதும் எச்சில் ஊறியது தீபக்கிற்கு.

வெண்பொங்கலைக் கண்டதும் முகம் சுழித்தவள் " பாரு என்னது இது!!! " என்று கத்த "உனக்கு தான் தோசை வார்க்குறேன் இரு டி வந்துடுறேன்" என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார்  பார்வதி.

தீபக் அந்த வெண்பொங்கலை சட்னி சாம்பார் வைத்து  உச்சுக் கொட்டிய படியே சாப்பிட ஆரம்பிக்க "வேக் மனிசன் சாப்பிடுவானா இதை " என்றவளோ அங்கிருந்த உளுந்து வடையை எடுத்து மெதுவாக கொறிக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கான தோசை வந்ததும் சாப்பிட ஆரம்பித்தவளோ தோசைக்கு வலிக்குமோ என்றளவில் உண்டாள்.

"அரை மணி நேரமா அந்த இரண்டு தோசையை திண்ணுற!" என்று முறைக்க ஆரம்பித்த பாருவை நோக்கி கண்ணடித்தவாறே

"மெதுவா  மென்னு  முழுங்கணும் பாரு , அப்போதான் ஜூரணமாகும்.
அதுமட்டுமில்லாம நீ செய்ற சட்னி இருக்கே ! அதை ரசிச்சு சாப்பிட்டா தான் சூப்பரா இருக்கும் "என்று அவர் தலையில் ஒரு கூடை ஐஸ் வைத்தவாறே சாப்பிட்டு முடிக்க இன்னும் பத்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.

சாப்பிட்ட தட்டுகளை பாரு ஒதுங்க வைத்துக் கொண்டிருக்க,தீபக்கோ இன்னும் அந்த வெண்பொங்கலை விட்டு நகராமல் வயிற்றுக்குள் இறக்கிக் கொண்டிருந்தான்.
சிவராமன் அன்றைக்கு வந்த செய்தித்தாளுடன் சோபாவில் அமர்ந்து விட நம் நாயகியோ மறுபடியும் ஒரு ஆட்டத்தைப் போட்டவாறே கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

"டேய் தீபு! நீ மட்டும் இப்ப அந்த பொங்கலை விட்டு எழுந்து வரலனா ஏற்கனவே பூசணிக்காய் மாதிரி இருக்க நீ பலாப்பழம் மாதிரி பெருத்துருவ பாத்துக்கோ " என்று கலாய்த்தவளை முறைத்தவாறே தன் அன்னையிடம் சென்று அவரை அணைத்துக் கொண்டவன் "அம்மா பொங்கல் சூப்பர் எனக்கு லன்ச்க்கும் அதே தரீங்களா ? " என்று கேட்ட தீபக்கை பார்த்து புன்னகைத்தார்.

பார்வதி ஏதோ கூற வருவதற்குள்
" அதுக்கு நீங்க பொங்கலை விட்டு வெச்சுருக்கணும் கண்ணா,சட்டி தான் காலி ஆயிடுச்சாமே! பாத்திரத்தை கூட கழுவ வேணாமாம் சுத்தமா துடைச்சு வெச்சுட்டியாம் " என்று கூறி நகைத்தவள் வெவ்வெவ்வே என்று பழிப்பு காட்ட அவள் தலையில் கொட்டினார் பார்வதி.

"வளருர பையனை கண்ணு வைக்காதே டி " என்ற பாருவை இடை மறித்தவள் "வளருர பையனு சொல்லாத பாரு பெருத்துட்டு இருக்க பையனைனு சொல்லு " என்று கூறிக் கண்ணடிக்க அவனோ முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்.

அதைக் கண்டு மனம் வாடியவள்
" அச்சோ தீபு தங்கம் சும்மா சொன்னேன் டா, நீ அப்படியே புட்டு புட்டுனு அழகா இருக்க தெரியுமா!
உனக்கு நானே என் கையால பொங்கல் செஞ்சு ஊட்டி விடுவேனாம், என் செல்லக்குட்டி சாப்பிடுவானாம் " என்றவள் கூறியதைக் கண்டு மிரண்டவன்
கைகளை தலைக்கு மேல் தூக்கி "அம்மா தாயே ஆளை விடு " என்று கூறி வெளியே ஓடிவிட்டான்.

உனக்கு என்ன சமைக்க தெரியும் என்று கேட்டால் ,வெந்நீர் என்று கூறி காலரைத் தூக்கிக் கொள்ளும் ரகம் இவள்.

சிரித்துக் கொண்டே வெளியே வந்தவள் தன் மஞ்சள் நிற டியோவை எடுக்க "டியோவை எந்த பொண்ணாச்சும் ஓட்டுமா? கேட்டா புள்ளிங்கோனு சொல்லுவா" என்று மனதில் நினைத்துக் கொண்டே  பின்னால் அமர,  தன் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டவள் கூலர்ஸ் ஒன்றையும் மாட்டிக் கொண்டு வண்டியை உயிர்ப்பித்தாள்.

அவளது புள்ளிங்கோ(டியோ வண்டி தான்) கல்லூரி செல்வதற்குள் அவளைப் பற்றிப் பார்த்துவிடலாம்.

கோயம்புத்தூர், காந்திபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள தொண்டாமுத்தூர் தான் நம் நாயகி வசிக்கும் ஊர்.
நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய ஊர்.

அவளுக்குப் பிடித்த ஊதா நிறத்திலே வீடு, வீட்டின்  பின்புறம் வாழை,கொய்யா,மாதுளை  என பல மரங்களும்,தென்றல் தன் இருப்பைக் காட்டும் சமயங்களிலெல்லாம் நறுமணத்தை அள்ளி வீசும் பலவித மலர்கள் கலந்த ஒரு குட்டித் தோட்டம், துளசி மாடம் என அனைத்தும் அவளுக்குப் பிடித்த வகையில் தான் அமைந்திருக்கும்.

ஆணுக்கு பெண்  இளைப்பில்லை என சொல்லும் ரகம் அல்ல இவள்.
என்றுமே அவர்கள் தங்களைக் காட்டிலும் ஒருபடி மேலே என எண்ணுபவள்.
வாழ்க்கை எண்ணும் பயணத்தை சிறு பறவை போல் உல்லாசமாக சுற்றி வர ஆசைப்படும் இருபத்தி இரண்டு வயது பருவ மங்கை.

எம்.எஸ்.சி பாட்டனி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
அப்பா சிவராமன் பேங்க் ஊழியர்  அன்பையும், அரவணைப்பையும் அள்ளித் தருபவர்.
அம்மா பார்வதி இல்லத்தரசி
கண்டிப்பு மிக்கவர், தோழமையுடன் பழகக் கூடியவரும் கூட...
தம்பி தீபக், இப்போது தான் பயோ டெக்னாலஜி முதல் வருடத்தில் காலடியெடுத்து வைத்திருக்கிறான்.
அமுல் பேபி என கூறும் அளவு கொழுக்கு மொழுக்கென்று இருப்பவன்.
உயரம் அதிகம் என்பதால் அது அவ்வளவாக தெரியாது.

காருண்யா  பல்கலைக்கழகம் அவர்களை அன்புடன் வரவேற்க
கல்லூரியை ரசித்தவாறே அவளது டியோ கேம்பஸிற்குள் நுழைந்தது.

சுற்றி மலைகளுடன் இயற்கை வனப்பு மிகுந்து பார்ப்போரை வியக்க வைக்கும் பல்கலைக்கழகம் அது.
பல கல்லூரிகள் இருப்பினும் அவள் இந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்க காரணமும் இதுதான்.

" யக்கோவ் டாடா " என்றபடி இறங்கியவனின் தலையில் கொட்டியவள் "பாத்து போடா பப்ளிமாஸ் " என்று கூறிய படியே ஹெல்மட்டை கழட்ட "போடி வளர்ந்து கெட்டவளே" என்று கூறி அவளிடம் திட்டு வாங்குவதற்கு முன் சிட்டாய் பறந்திருந்தான் தீபு.

"பப்ளிமாஸ் " என்று கூறி பற்களைக் நறநறவென்று கடித்தவள்
கூலர்ஸை கழட்டி தன் முகத்தை வண்டி மிர்ரரில் பார்த்தாள்.
நீண்ட கூந்தல், மீன் விழியாள் என்று வர்ணிக்கும் அளவு அழகு அல்ல அவள்.
பார்ப்போரை ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் சாதாரண பக்கத்து வீட்டு பெண்ணைப் போன்றவள்.
துப்பட்டாவால் மூடியிருந்ததால் கலைந்திருந்த முடியை சரி செய்து கொண்டிருக்க " சுதந்திரா " என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தாள்.

அந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் சுற்றிலும் கம்ப்யூட்டர் சகிதம் இருந்தவர்கள் அதனுள்ளே புகுந்து விடும் நிலையில் இருக்க அஸ்வின் மட்டும் தன் அருகில் இருப்பவனை பாவமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"டேய் யுவி ப்ளீஸ் டா! " என்று தலையில் கை வைத்த நண்பனைக் கண்டு நக்கலாக புன்னகைத்தவன்,

"வொய் சுட் ஐ டூ அஸ்" என்று கூறி  தோளைக் குலுக்கி , தலையைக் கோதியவாறே  "உன் வேலையை நீ தான் பாக்கணும் மேன், உன் பர்டனை என் மேல திணிக்காதே!" என்று கூறிய யுவி  சிஸ்டமை ஆப் செய்து விட்டு வெளியே சென்றான்.

சோகமாக கீ போர்டின் மேல் படுத்த அஸ்வின் நிமிர்ந்து எதிரில் இருந்த வேறு ஒரு டீம் மேட் கபிலனிடம்
" இவன் ஏன் டா இப்படி இருக்கான் ? இந்த வீக் மட்டும் வீக்கெண்ட் பாத்துக்கோ டா, உனக்கு பதிலாக உன் வீக்கெண்ட்  வரப்போ நான் பாத்துக்கிறேனு சொன்னேன் ! மாத்திக்கவே மாட்டிங்கிறான் " என்று புலம்பியவன் "பூர்ணிக்கு வேற ஹை பீவர் டா! நான் தான் பாத்துக்கணும் " என்றவாறே தலையை மறுபடியும் மேசையின் மீது கவிழ்த்தான்.

" ஷேல் ஐ...நான் பேசி பார்க்கவா ?" என்று கேட்ட கபியிடம் " வேணா கோபப்படுவான், ஏதாவது நமக்கு வேணும்னா நம்ம தான் அவன்கிட்ட கேட்கணும் வேற யாராவது கேட்டா கோபம் வரும் " என்றவாறே மறுபடியும் அவனிடம் கெஞ்ச அவனைத் தேடிச் சென்றான்.

"வாவ் மூர்த்தி அண்ணா , வெண் பொங்கல் அட்டகாசம் " எனப் புகழ்ந்தவாறே யுவி அதை உள்ளே இறக்கிக் கொண்டிருக்க அவரோ பாசமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இவர்களது ஒரு பன்னாட்டு மென்பொருள் அலுவலகம்.
அலுவலகத்திற்கு வெளியே ஒரு 
புட் டிரக் எப்பொழுதும் நின்றிருக்கும்.
அதை வாங்க மூர்த்திக்கு உதவி செய்ததெல்லாம் யுவி தான்.
அவனின் அம்மா சமையலைக் காட்டிலும் மூர்த்தி அண்ணாவின் சமையலுக்கு அடிமை.
அதுவும் வெண் பொங்கல் என்றால் உள்ளே சென்று கொண்டே இருக்கும்.

"நானும் உங்களை மாதிரி நல்ல சமையல் செய்யுற பொண்ணைத் தான் கட்டிப்பேன்" என்றவனைக் கண்டு புன்னகைத்தவர் இன்னுமொரு வடையை அவன் தட்டில் வைத்தார்.


ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro