
❤ சிறுநகை 98
ஜெபசேகரன் சம்யுக்தாவின் திருமண நிச்சயதார்த்தம் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் நாளை "ப்ளூமிங் லைஃப்" ஹோமில் வைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காதலர்கள் இருவருக்கும் இந்த ஐந்து மாதங்களை ஐந்து வினாடிகளில் கடந்த உணர்வு ஏற்பட்டது. ஜெபா சம்யுக்தாவை தன் ஸ்கூட்டியின் பின்னால் அமர வைத்துக் கொண்டு நாகர்கோவில் சுற்று வட்டாரங்கள் முழுவதையும் இன்ஞ்ச் இன்ஞ்சாக அளந்து பார்த்து வந்தான்.
தன் தம்பியின் மகிழ்வைக் கண்டு சந்தனா மிகவும் மகிழ்ந்தாலும் அவளுடைய ஆதி குணம் தலை தூக்க அவனை வம்பிழுக்கும் நோக்கத்தில், "டேய்..... நீ ரவுண்ட் அடிக்கிறது என்னோட ஸ்கூட்டிடா! உனக்கு அது மறந்துடுச்சா?" என்று கேட்டு அவனிடம் சண்டையிட்டாள்.
"ஆமா.... முதல்ல இருந்து நான்
உன்னோட வண்டியத் தான் எடுத்துக்கிட்டு ரவுண்ட்ஸ் அடிச்சிக்கிட்டு இருக்கேன். இனிமேலும் இப்டித்தான் போவேன்! என்ன செய்வ நீ....? உனக்கு தான் இப்போ தனியா கார் இருக்குல்ல? அப்புறம் எதுக்கு உனக்கு இந்த ஸ்கூட்டி? எங்கூட சண்டைக்கு வராம உனக்கு டூவீலர் வேணும்னா அத்தான்ட்ட கேளு! ஒண்ணு கேட்டா ரெண்டா கொண்டு வந்து தருவாரு!" என்று தன் அக்காவிடம் சொன்னவன் சம்யுக்தாவிற்கு தினசரி தன்னுடைய வீட்டில் மாடியில் தங்களுக்கென எடுக்கும் மாடி போர்ஷனுக்கு சரியாக கலவை போடுகிறார்களா, கான்க்ரீட் போட்டு விட்டார்களா, அதற்கு தண்ணீர் ஊற்றுகிறார்களா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டே அந்த நேரத்தில் தன் காதலையும் வளர்த்துக் கொண்டிருந்தான்.
திருமணம் என்றால் பயமாக இருக்கிறது, நான் எதற்கும் பயன்படாத ஒரு பிலோ ஆவரேஜ் மனிதன் என்ற ஜெபாவின் எண்ணத்தை தன்னுடைய அருகாமையினால் மெல்ல மெல்ல கரைத்து அவனிடமிருந்து காணாமல் போகச் செய்தாள் சம்யுக்தா.
இத்தனைக்கும் அவள் அவனிடம் செய்ததில் பாதி அவனது சில்லு மூக்கை உடைத்தது மாதிரியான பயங்கரவாத வேலைகள் தான்! தன்னுடைய காதலியின் சேட்டைத்தனங்களை மிகவும் ரசிக்கத் தொடங்கியிருந்தான் ஜெபசேகரன். இயல்பிலேயே சற்று கலகலப்பானவன், சம்யுக்தாவின் வரவால் மிகவும் மகிழ்ச்சிகரமான ஆளாக மாறியிருந்தான்.
தன்னுடைய மகிழ்ச்சி தன் இணையவளின் முகத்திலும் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு முறை
சம்யுக்தாவின் அப்பாவிற்கு கூப்பிட்டு பேசியவன் அவரிடம் பேசி முடித்த பின்னர் முகத்தில் நக்கலான புன்னகையுடன்,
"எனக்கு கோவிலெல்லாம் கட்டத் தெரியாது; இருந்தாலும் யார்ட்டயாவது காசு குடுத்து கத்துக்கிட்டு எங்கொப்பனுக்கு ஒரு கோவில் தான்டீ கட்டி கும்புடணும்.... அழகு பெத்த புள்ளய வச்சுக்கடான்னு எங்கையில தூக்கி குடுத்துட்டு, இப்ப அந்த அரை மண்டையனுக்கு நம்ம என்கேஜ்மெண்ட்டுக்கு வர்றதுக்கு எல்லாம் டைம் இல்லையாம்..... பங்ஷன் எப்பன்னு சொன்னா லைவ்ல வர்றாராம்! இந்த ஆளு எல்லாம் எப்டிறீ குடும்பம் நடத்தி ஒன்னைய பெத்து எடுத்தான்? அதுவும் ஏதாவது டெக்னாலஜி மூலமா தானா? இத்தூணூன்டு அன்பு ஒரு ஓரத்துல எங்கையாவது கெடக்காதாடீ? சரி, இவனாவது பரவாயில்ல. காலை அட்டெண்ட் பண்ணவாவது செஞ்சான். உங்கம்மா நான் கூப்டப்ப போனையே எடுக்கல!" என்று திட்டியவனிடம்,
"ம்ம்ம்! இப்ப தெரியுதா நம்மளோட ஒளிமயமான எதிர்காலம்? ஒருதடவ உங்க மாமனார பாக்க KL போயிட்டு வரணும்னு சொல்லிட்டு இருந்தீங்க? தைரியம் இருந்தா இப்ப கிளம்புங்களேன் பாப்போம்!" என்று சிரித்த படி பேசிய சம்யூவை அணைத்துக் கொண்டவன்,
"ம்க்கும்! அவன் உன்னையே யாரு நீன்னு கேப்பான் போலிருக்கு. இதுல நான் என்னத்த? நாம KL போற ப்ளான ஓரங்கட்டிட்டு வேற எங்கயாவது ஹனிமூன் போயிட்டு வருவோம். என்னடா தம்பி?" என்று கேட்டவனின் தலையில் நொட்டென்று ஒரு போடு போட்டவள்,
"இன்னும் இந்த தம்பிய விட மாட்டியாடா? நமக்கு கல்யாணமே ஆகப் போகுது.... ராஜா ராணி படத்துல ஆர்யா கூப்டுற மாதிரி என்னைய நீ சிஸ்டர்னாவது கூப்ட்டுத் தொலையேன்!" என்று சலித்துக் கொண்டவனிடம் பெரிதாக தலையசைத்து மறுத்தவன்,
"ம்ஹூம்! தம்பி தான்டா தம்பி நல்லாருக்கு!" என்று சொல்ல சம்யுக்தா தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
பிரகாஷூம் ஒரு தாத்தாவாக அவர் பங்குக்கு தன்னுடைய மகன் மற்றும் மருமகளிடம் ஜெபசேகரன் பற்றிய விபரங்கள், அவனது குடும்ப பின்னணி, ஜெபா மற்றும் சம்யுக்தாவின் நிச்சயதார்த்த தேதி, திருமண தேதி ஆகியவற்றை எல்லாம் ஒரு பெரிய கதையாக எழுதி தன்னுடைய மகனுக்கு இமெயில் செய்திருந்தார்.
"அப்பா...... உங்க மெயில் பாத்தேன்ப்பா! மாப்ள ஸ்மார்ட்டா இருக்காரா? நல்ல பையனான்னு அவனோட ப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் சர்க்கிள்ள விசாரிச்சுட்டீங்களா? சம்யூவுக்கு அந்த பையனோட நல்லா செட் ஆகுதுல்ல?" என்று மகன் தன்னிடம் கேட்பான் என்ற நப்பாசை அந்த பெரியவருக்கு மனதிற்குள் ஒரு ஓரமாக இருந்தது.
பாவம்... அவருடைய ஆசை நப்பாசையாகவே போய் பிரகாஷிற்கு அவரது மகன் மாத செலவிற்கு என தாராளமாக தரும் ஒரு தொகையை இந்த மாதம் இன்னும் மிக தாராளமாக்கி தந்திருந்தார். அதை மட்டுந்தான் ஒரு அப்பனாக என்னால் செய்ய முடியும் என்று சொல்லாமல் சொல்லிய அவரது மகனின் எண்ணம் பிரகாஷிற்கு சலிப்பை ஏற்படுத்தியது. இன்று பேசுவான், நாளை பேசுவான் என்று அந்த முதியவர் மகனது அழைப்புக்காக காத்திருந்து நாளை அவரது பேத்திக்கு நிச்சயதார்த்த வைபவமே நடக்கப்போகிறது!
நாலு மணியளவில் ஸ்கூட்டியில் ஹோமிற்குள் நுழைந்தவனிடம் கேட்டில் நின்று கைகாட்டி அவனது வண்டியில் ஏறிக் கொண்டவள் நமச்சிவாயத்தின் முறைப்பை சற்றும் பொருட்படுத்தவில்லை.
"பாப்பா.... நீங்க இங்க வந்தா பிரகாஷ் ஐயா அவருக்கு போன் பண்ணி சொல்ல சொன்னாரு!" என்று சொன்ன நமச்சிவாயத்திடம்
"ஐயயோ.... வேண்டாம் நமச்சு அண்ணா ப்ளீஸ் அப்டியெல்லாம் பண்ணாதீங்க! ப்ரைட்டு என்னைய இன்னிக்கு இங்க வர வேண்டாம்னு சொன்னாரு; ஆனா நான் அவர் பேச்சைக் கேக்காம இங்க வந்துட்டேன்!" என்று நமச்சிவாயத்திடம் சொல்லி சற்று பதட்டப்பட்டாள் சம்யூ.
"நீ இரு! நான் அவர்ட்ட பேசுறேன்! இறங்கி இந்த வண்டியக் கொஞ்சம் பிடி!" என்றவன் பத்து எட்டுகள் நடந்துபோய் நமச்சிவாயத்தின் அருகில் சென்று அவரின் காதருகில் ஏதோ சொல்லி விட்டு சிரிப்புடன் வந்தான்.
"அண்ணா கிட்ட என்ன சொன்னீங்க ஜெபா?" என்று குறுகுறுவென பார்த்த படி கேட்டவளிடம்,
"உன் தாத்தாட்ட உண்மைய விளம்பாம இருந்தா அவரோட ஒருமாச சிகரெட் செலவு என்னோடதுன்னு சொன்னேன். மனுஷன் டீலுக்கு உடனே ஓகே சொல்லிட்டாரு! நமச்சு அண்ணாவுக்கு ஸ்மோக்கிங்க் ஒரு வீக்னெஸ்!" என்றான் ஜெபா.
"இது தப்பில்லையா ஜெபா? நாம மீட் பண்ணனும்ங்குறதுக்காக ஒரு மிடில் ஏஜ்டு ஆளுக்குப் போயி சிகரெட் வாங்கி தர்றேன்னு சொல்றீங்க? நோ வே. தாத்தாட்ட சொல்றதுன்னா அவர் சொல்லிக்கட்டும்!" என்றாள் சம்யூ.
"அட நீ என்னம்மா காந்திக்கு பேத்தியா இருப்ப போலருக்கு? தாத்தா மனசும் நோவக்கூடாது; பொய்யும் சொல்லி ரெண்டு மூணு உருட்டும் உருட்டக்கூடாதுன்னு சொன்னா என்ன செய்றது? நானெல்லாம் இப்பக்கூட வீட்ல பொய் சொல்லிட்டு தான்
தப்பிச்சு வந்துருக்கேன்! நீ இப்டி சொல்ற!" என்று சலித்துக் கொண்டான்.
"ஓ.... பொய் வேற சொன்னீங்களா?
வீட்ல என்ன பொய் சொல்லிட்டு வந்தீங்க ஸார்?" என்று கேட்டாள்.
"ஹேர்கட் அண்ட் பேஷியல்னு சொன்னேன். ஆனா ஆளாளுக்கு பாத்த பார்வையிலேயே ஒருத்தனும் நான் சொன்னத நம்பலன்னு தோணுச்சு. எவன் எப்டி பாத்தா எனக்கென்னன்னு நினைச்சுட்டு வந்துட்டேன்! நீ என்ன சொல்லிட்டு வந்த?" என்று கேட்டவனிடம்,
"ப்ளவுஸ் வாங்கப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன்! அத இப்பதான் வாங்கிட்டு அப்டியே இங்க வந்துட்டேன்!" என்றாள் சிரித்த படி.
"விடுடீ! நம்ம சொன்னதெல்லாம் பொய்ங்குற கணக்குலயே சேராது. நாம ஒரு இடத்துல செட்டில் ஆகிடுவோம் வா!" என்று அவளிடம் சொன்னவன் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி விட்டு அவளை அழைத்துக் கொண்டு இல்லத்தின் பின்புற தோட்டத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.
அவனது பக்கவாட்டில் நடந்து வந்தவள் காற்றின் வேகத்தால் மூக்குக்குள் ஏதோ தூசி போனதால்
"அச்.. ப்பா....ம்மா!" என்று சொல்லி தும்மினாள்.
"டேய் தம்பி.... இப்ப எதுக்காக நீ அவிய்ங்கள கூப்டுற மக்களே? ரெண்டு பேரையும் நீ கூப்டாப்ல ஒடனே வந்துடுவாங்களாக்கும்?" என்று கேட்டவனை விநோதமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
"எப்டி கூப்டாலும் வரமாட்டாங்க!" என்று அவனிடம் சொன்னாள் சம்யூ.
"ம்ம்ம்! வராதவங்கள தும்மி தும்மி அம்மா அப்பான்னு சொல்றதுக்கு பதிலா இனிமே தும்மல் வந்தா என் பேர சொல்லு..... நீ தும்முன உடனே நெக்ஸ்ட் செகண்ட் நான் உன் முன்னாடி வந்து நிப்பேன்! ஜெபா, சேகர், என் கருப்பட்டி அழகா இப்டி நீ எப்டி கூப்டாலும் எனக்கு ஓகே தான்!" என்று சொன்னவனுடைய பேச்சைக் கேட்டு சம்யூவிற்கு சிரிப்பு வந்தது.
தும்மல் வந்தால் அம்மா என்றோ அப்பா என்றோ சொல்வது இயல்பு தானே? அதைக் கூட சொல்ல வேண்டாம் என்று இந்தப்பையன் ஏன் சொல்கிறான் என்ற அலுப்பும் சேர்ந்து கொண்டது.
"ஏய்! நான் குழந்தையா இருக்கும் போதுலர்ந்து இப்டித்தான்டா தும்மிட்டு இருக்கேன். தும்மி முடிச்சா எப்டி கருப்பட்டி அழகான்னு எல்லாம் சொல்ல முடியும்? நீ என்னை சில விஷயத்துல ரொம்ப படுத்துற ஜெபா!" என்று சொன்னவளிடம் கோபம் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு அவளை இல்லத்தின் உள்ளே சென்றான்.
இல்லத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டின் பிள்ளைக்கு சுபநிகழ்வு நிகழ்வதைப் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை மும்முரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய சுறுசுறுப்பை பார்த்ததும் ஜெபாவிற்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
"ஹே சம்யூ.... இங்க வாயேன்! ப்ரேயர் ஹாலை ப்ரப்போஸ் பண்ற ஹால் மாதிரி ஜம்முன்னு ரெடி பண்ணி வச்சுருக்காங்க பாரு! என்னோட நிச்சயதார்த்ததுக்கு இவ்ளோ பெரிய ஏற்பாடா?" என்று கேட்டு வாய்பிளந்த படி ஒவ்வொரு இடத்திலும் செய்து வைத்திருந்த அலங்காரங்களைப் பார்த்து
பெரிதாக வியந்தான்.
"ஜெபா தம்பி! இது எல்லாத்தையும் நாங்களே தான் உங்களுக்காக செஞ்சோம். பிரகாஷ் ஸார் கூட டெகரேட்டர்ஸ் யாரையாவது சொல்லிக்கலாம்னு சொன்னாரு.... ஆனா நீங்க தான் அடிக்கடி எங்கிட்ட பிஸியா இருங்கன்னு சொல்வீங்களே? அதான் இத கொஞ்சம் கொஞ்சமா நாங்களே செஞ்சோம்!" என்றனர் ஒருமித்த குரலில்.
அனைவருக்கும் சிரித்த முகத்துடன் நன்றி சொன்னவனையும் சம்யுக்தாவையும் அங்கே தனியாக விட்டு விட்டு அனைவரும் சென்றனர்.
அறை முழுவதும் பொடி பொடி விளக்குகளை சரம் சரமாக வைத்து ஒரு தோரண ஏற்பாடுகளை செய்திருந்தனர். காற்று நிரப்பும் பலூன் மாதிரியான பொன்னிற எழுத்துகளில் என்கேஜ்மெண்ட் என்று எழுதி அதன் கீழே ஜெபசேகரன் சம்யுக்தா இருவரின் புகைப்படங்களும் ஒட்டியிருந்தனர்.
அறை முழுவதும் சிவப்பு ஆர்ட்டின் பலூன்களும், அதைச் சுற்றி வெள்ளை பலூன்களும் வைத்து அழகாக டெகரேஷன் செய்து வைத்திருந்தனர்.
"ஏ....யப்பா..... இதென்ன மொரட்டு ஏற்பாடா இருக்கு? நம்ம போட்டோ எல்லாம் எப்ப எடுத்தாங்க? எப்டி இதுல ஒட்டுனாங்க? பெரியவங்க எல்லாருக்கும் காலையில இருந்து செம வேலை போலிருக்கே..... பட் இது க்ரிஸ்மஸ் டெகரேஷன் மாதிரியே ரெட் அண்ட் வொயிட் கலர்ல இருக்குல்ல சம்யூ....?" என்று கேட்டவனை முறைத்தவள்,
"உனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு இதையே பண்ணியிருக்காங்க போல? ஆமா..... என்னடா என்னோட நிச்சயதார்த்ததுக்குன்னு சாதாரணமா சொல்லிட்ட! நீ எங்களோட சூப்பர் ஹீரோ இல்லையா?" என்று கேட்டு அவனைப் பார்த்த சம்யூவிடம்,
"ஆரம்பிச்சுட்டியா நீ மறுபடியும்? நான் ஏதோ பெரிய இவன்ங்குற மாதிரி என்னைய பில்டப் பண்றத எப்படீ நீ விடப் போற? நீ ஒண்ணும் ரிஜக்டட் பீஸூம் கிடையாது! நான் ஒண்ணும் உனக்கு பாவப்பட்டும் வாழ்க்கை தரல. என் தாழ்வு மனப்பான்மைய சரி பண்றதுக்கு தான் நீ இப்டியெல்லாம் பேசுறன்னா..... இத விட்டுடு! நான் முழுசா சரியாகிட்டேன். சம்யூவோட கம்பெனியால ஜெபா ஹேப்பி அண்ணாச்சி!" என்று சொன்னவனுடைய குடங்கையில் தன்னுடைய கையைக் கோர்த்துக் கொண்டு அவன் முகம் பார்த்து சிரித்தாள் சம்யுக்தா.
கதிரின் குடும்பம், சஞ்சீவுடைய குடும்பம், இன்னும் பத்து இருபது நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டாலும் இல்லத்து உறுப்பினர்கள் ஒவ்வொரு தனித்தனி ஆசிர்வாதம், மற்றும் அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளால் சம்யூவின் விரலில் மோதிரத்தை அணிவித்த போது ஜெபசேகரன் எவரெஸ்ட்டின் உச்சியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிறைவை அடைந்திருந்தான்.
"கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு!" பாடலுக்கு நடனம் ஆடிய சுமலதா, தன்னுடைய மகனையும் நடனமாடும் படி கூப்பிட்ட போது,
"எனக்கு டான்ஸ் எல்லாம் ஆடத்தெரியாது மாம்..... பாட்டு வேணும்னா பாடவா?" என்று கேட்டான் ஜெபா.
"வாடா.... உன்னைய என்ன இங்க டான்ஸ் ஆடுற போட்டிக்கா கூப்டாங்க? சும்மா சம்யூ பக்கத்துல வந்து நின்னு கையையும் காலையும் அசை போதும்!" என்று சொல்லி விட்டு அவனை கையைப் பிடித்து இழுத்து சென்றாள் சந்தனா.
கொஞ்சம் துள்ளல், நிறைய துடிப்பு, கொஞ்சம் குறும்பு, நிறைய பொறுப்பு நிறைந்த ஒரு நல்ல ஆண்மகன் தன்னுடைய பேத்திக்கு வருங்கால கணவன் ஆகப் போகும் மகிழ்ச்சியில் அனைவருடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக விருந்து சாப்பிட்டார் பிரகாஷ்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro