
❤ சிறுநகை 7
அன்று மாலை ஏழு மணியளவில் கதிரேசன் சந்தனாவின் வீட்டைத் தேடி வந்தான். தன்னுடைய மனைவியிடம் சற்றுநேரம் கொஞ்சம் அமைதியாக இரு என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்ட ஆலென் தன் வீட்டிற்கு வந்திருந்த உறவினனை வரவேற்றார்.
அங்கங்கே நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு நிறப் பூக்களிட்ட ரவுண்ட் நெக் லாங் மேக்ஸி ஒன்றை அணிந்திருந்தாள் சந்தனா.
வீட்டுக்குள் இலகுவான அணிவதற்கென்றால் இந்த வகையிலான உடை சவுகரியமானது தான்...... ஆனால் அவளது மார்பு வரை சரியாக மூடியிருந்த உடையின் லேஸ் அவளுடைய வழவழப்பான கைகளை மூடாமல் விட்டது தான் அந்த உடையில் இருந்த தவறு!
"அப்பாவும், தம்பியுமா ரெண்டு ஆம்பளைங்க வீட்ல இருக்காங்க தான? அவங்க முன்னால இப்டி என்னையப் பாரு, எங்கையப் பாருன்னு காட்டிக்கிட்டு ட்ரெஸ்ஸூ போட்டு இருக்காளாம் ட்ரெஸ்ஸூ! இருடீ..... என் வீட்டுக்கு வந்த பெறகு இந்த மாதிரியெல்லாம் ட்ரெஸ்ஸ போட்டுட்டு சுத்து! கத்திரிக்கோல எடுத்து சைடுல கிழிச்சு உடுறேன்..... உன் ட்ரெஸ்ஸ!" என்று கொதித்து பொங்கிக் கொண்டிருந்தவனிடம்,
"டேய் கதிரு..... அவ எங்கடா உன் வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தா? உங்க அடுத்த மீட்டிங்கயெல்லாம் நான் இன்னும் ப்ளான் பண்ணவே இல்லயே..... அதுக்குள்ள நீ ஏன் ஓவரா பொங்குற? ஆலென், ஜெபா ரெண்டு பேரும் அவள நீ பாக்குற மாதிரி வித்தியாசமா எல்லாம் பாக்கல..... காமால உன் கண்ணுல மட்டுந்தான் தம்பி இருக்குது!" என்று கதிருக்கு அறிவுரை சொன்னாள் இந்தக் கதையின் ரைட்டர்!
"வைஷூ அக்கா! நீங்க எதுக்கு எங்க ரெண்டு பேருக்கு நடுவுல வர்றீங்க? எங்க சண்டைய நாங்க பாத்துக்குவோம்; வீணா நீங்க இதுக்கு உள்ளல்லாம் வராதீங்க!" என்று அழுத்தக்குரலில் சொன்னவனை,
"என்னமும் செஞ்சு தொலைங்க பக்கிகளா!" என்று திட்டி விட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பி விட்டாள் வைஷூ.
இடுப்பை கச்சிதமாக பிடித்திருந்த உடையை இன்னும் அழகாக்க கோபத்துடன் தன் இடுப்பில் கைவைத்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து இப்போது மறுபடியும் அவள் மேல் காதல் வயப்பட்டான் கதிரேசன்.
"எவ்ளோ அழகா இருக்கா? என் கண்ணுக்குத் தான் இப்டி பயங்கர அழகா தெரிஞ்சு தெரியுறாளா..... இல்ல உண்மையிலயே அழகா தான் இருக்காளா? சஞ்சீவ் சொன்ன மாதிரி நான் லூசா தான் ஆகிட்டனோ?" என்று நினைத்துக் கொண்டிருந்தவனுடைய
மூளை வேலை பார்க்க ஆரம்பித்ததும் அவனது காதல் உணர்வு மெல்ல மங்கி மறைந்தது.
"ஹலோ ஸார்; என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா? உங்கள பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு; எப்டி இருக்கீங்க ஸார்?" என்று கேட்டபடி தன்முன் கையை நீட்டியிருந்தவனின் கையை பத்து நொடிகளுக்குப் பின் இறுக்கமாக பற்றி குலுக்கியவர்,
"நீ கதிர் தான....?" என்ற புதிய சந்தேகத்தையும் கேட்டார்.
"ஆமா ஸார்! உங்க கிட்ட வேல பார்த்த அதே கதிர் தான்; என்ன ஸார் இத்தன வருஷத்துல ரொம்ப இளைச்சுட்ட மாதிரி தெரியுறீங்க?" என்று ஸ்நேகமாக அவரிடம் கேட்டவனிடம்,
"ம்ம்! ஆலெனுக்கு டயபடீஸ்..... அதுதான் இப்டி இருக்காரு! நீ எங்க இங்க?" என்று கேட்ட படி கையை கட்டிக் கொண்டு அவனை முறைத்தபடி நின்று கொண்டிருந்தாள் சந்தனா.
"இந்த பிள்ளா யாரு சந்து? ஹாண்ட்ஸம்மா இருக்கான்ல? ஏதாவது ப்ரொட்யூசரா இருப்பானோ? ஃப்ரீப்கேஸ் வச்சிருக்கான் பாரேன்!" என்று ஆர்வக்குரலில் மெதுவாக தன்னிடம் கேட்ட தாயிடம்,
"நோர் முய்ம்மா! (வாயை மூடுங்க) பெட்டி வச்சிருக்குறவன் எல்லாம் ஒனக்கு ப்ரொட்யூசரா?
டெரரிஸ்ட்ஸ் கூட ஃப்ரீப்கேஸ வச்சுக்கிட்டு தான் அங்கிட்டும், இங்கிட்டும் அலையுறானுங்களாம். இவன் ஏன் அந்த மாதிரி ஒரு ஆளா இருக்கக்கூடாது? லோப்புல வெள்ளு (உள்ளே போங்க)" என்று சொன்ன தன்னுடைய மகளிடம் தலையை ஆட்டிய சுமலதா தன் கணவரிடம்,
"ஆலென்..... இந்தப் பையனுக்கு சாப்ட ஏதாவது எடுத்துக் குடுத்துட்டு என்னன்னு பேசி அனுப்புங்க!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
கதிரின் தோற்றமோ இல்லை அவனது பேச்சோ இல்லை அவை இரண்டுமோ சுமலதாவை கவர்ந்திருக்கிறது; அதனால் தான் அவனுக்கு உபசரிப்பு வழங்குங்கள் என்று சொல்லி விட்டு செல்கிறாள்; ஆனால் சந்தனாவின் பேச்சு தான் இப்போது சுமலதாவின் பேச்சை விட தவறாக இருக்கிறது என்று நினைத்த ஆலென் தன் மகளிடம்,
"சந்து..... இந்தப் பையன் எவ்ளோ வருஷம் கழிச்சு நம்மள தேடி நம்ம வீட்டுக்கே வந்துருக்கான்; இவன இன்சல்ட் பண்ற மாதிரியா பேசுவ நீ? கதிர்ட்ட ஸாரி கேளு!" என்று சொன்னார்.
"ஏன் கேக்கணும்? நானும் தான் இவன தேடி ரொம்ப வருஷம் கழிச்சு இவன் வீட்டுக்கே போனேன். அப்போ இவன் என்னை அழ வைக்கல? என் கழுத்தப் பிடிச்சுக் கூட நெரிச்சான் ஆலென்! நான்லாம் இவங்கிட்ட ஸாரி கேக்க மாட்டேன்!" என்று சொன்னவளின் பேச்சில் கதிர் எந்தவிதமான ஆச்சரியமும் அடையவில்லை. இப்படி அவள் பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம் அடைந்திருப்பான்.
"என்ன கதிர் இதெல்லாம்? சந்தனா உன்னை பாக்க வந்துருந்தப்ப நீ அவ கிட்ட ரொம்ப கோபப்பட்டியாப்பா?" என்று அவனைக் குற்றம் சாட்டும் பார்வையுடன் அவனிடம் பேசினார் ஆலென்.
"இதுதான் ஸார் நீங்க பண்ற தப்பு! உங்க பொண்ணு மேல ஒருத்தன் கோபப்பட்டா அங்க தப்பு யாரு மேலன்னு ஒரு கேள்விய கேளுங்க! அதுதான் சரியா இருக்கும்!" என்றான் கதிர்.
"ஏய்... என்னை அழ வச்சல்ல நீ? அப்ப உம்மேல தான தப்பு?" என்று கதிரிடம் கேட்டாள் சந்தனா.
"சந்து..... இருடா நாம கொஞ்சம் பொறுமையா ஒக்காந்து பேசலாம்!" என்று சொன்ன ஆலெனிடம்,
"விடுங்க ஸார்; உங்க பொண்ணு அப்ப இருந்த மாதிரியே தான் இப்பவும் இருக்காங்க! நான் உங்ககிட்ட வாங்குன பணத்த திருப்பி குடுத்துட்டுப் போலாம்னு தான் வந்தேன். இன்னிக்கு எங்கிட்ட இருக்குறது எல்லாம் நீங்க குடுத்த இந்தப் பணத்துல இருந்து உருவானது தான்; உங்களுக்கு தேவைப்படுறத செஞ்சு தர்ற
கடமையும் எனக்கிருக்கு;
அதுனால தயவுசெஞ்சு இத வேண்டாம்னு சொல்லாதீங்க ஸார்!" என்று மெதுவான குரலில் சொன்ன கதிர் தன்னுடைய பக்கவாட்டில் வைத்திருந்த பெட்டியை எடுத்து ஆலெனின் முன் நீட்டினான்.
"இதெல்லாம் எதுக்கு கதிர்? நீ நிறைய வருஷமா எங்களுக்காக செஞ்ச ஹெல்ப்புக்காக நான் குடுத்த பணம்ப்பா அது; சொல்லப்போனா உனக்கு பணம் குடுத்ததே எனக்கு மறந்து போயிடுச்சு; நீ அத மறுபடியும் எங்க கிட்ட எடுத்துக்கிட்டு வந்து குடுக்குறதெல்லாம் நல்ல மனுஷத்தன்மை கதிர்! தேங்க்யூ!" என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆலென்.
அவர் அவனிடம் பேசிக் கொண்டிருந்த போதே உரிமையாக அவனுடைய பெட்டியை திறந்த சந்தனா அவன் கொண்டு வந்திருந்த பணத்தின் அளவைப் பார்த்து விட்டு "அப்பாடா" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
இவன் ஒருவனிடம் போய் என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்டதும் இவனுக்கு ஆலென் என்று ஒருவரின் குடும்பம் இருப்பது நியாபகம் வந்து, பணத்தை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விட்டான். இதைப் போல சுமலதா வாரி வாரி கொடுத்த
நிறைய பேருக்கு இப்போது தொடர்பு கொண்டு அவர்களும் இது போல் சுமலதா அவர்களுக்கு செய்ததில் பத்தில் ஒரு பங்கையாவது திருப்பிக் கொடுத்தால் தாங்கள் பழைய படி கோடீஸ்வரர்களாகவே ஆகி விடலாம் என்று நினைத்து ஏக்கப் பெருமூச்சு விட்ட சந்தனா தன்னுடைய தந்தையிடம்,
"ஆலென்.... இதுல டென் லாக்ஸ் இருக்கு! நல்லவேள; அம்மா இங்க இல்ல; அவங்க கையில ஒண்ண மட்டும் நாளைக்கு காலையில குடுத்துட்டு மத்தத ஸேப்கார்ட் பண்ணிடுப்பா! மிஸ்டர் கதிர் இந்தாங்க உங்களோட ஃப்ரீப்கேஸ். ஸோ நைஸ் ஆஃப் யூ! நீங்க கிளம்பலாம்!" என்று சொல்ல அவன் மெலிதான புன்னகையுடன் ஆலெனிடம்,
"ஸார்..... உங்க கையால கொஞ்சம் ஜுஸ் கிடைக்குமா? நீங்க செஞ்சு தந்தத குடிச்சு ரொம்ப வருஷம் ஆகிடுச்சுல்ல? உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லன்னா அத போட்டுத் தாங்க!" என்று கேட்டான்.
"ஆலென்.... நீ இரு! இவனுக்கு எங்கிட்ட ஏதோ பேசணும் போலிருக்கு! அதான் உங்கிட்ட சம்பந்தமேயில்லாம இந்த நேரத்துல போயி ஜுஸெல்லாம் கேக்குறான். நீங்க வாங்க மிஸ்டர் கதிர்; நாம தனியா போய் பேசலாம்!" என்று சொன்ன சந்தனா,
"இதோ வந்துடுறேன் ஆலென்!" என்று சொல்லி விட்டு கதிருடன் தன்னுடைய வீட்டின் மாடிக்கு சென்று கொண்டிருந்தாள்.
"சுமலதா, சந்தனான்னு ரெண்டு பொண்ணுங்கள சமாளிக்குறதுக்குள்ள என்னோட வாழ்க்கையில நான் இன்னும் எத்தன சவால பாக்க வேண்டியதிருக்குமோ கர்த்தரே..... என்னோட மோள்ட்ட இருந்து கதிர நீங்க தான் காப்பாத்தணும்!" என்று வேண்டிக் கொண்டு மாடியைப் பார்த்த படி வீட்டின் முன்பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் ஆலென்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro