Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 68

"டேய்.... அந்த ட்டூத்பேஸ்ட் ஷாஷே அவன் மனசுல என்ன தான்டா நினைச்சுக்கிட்டு இருக்கான்? என்னது இது? வந்தது வந்துட்டோம்; என்கேஜ்மெண்ட்ட முடிச்சுட்டுப் போறோம்ங்குற மாதிரி வெரலப் புடிச்சு இத மாட்டி உட்டுட்ட! என்னையே யோசிச்சு, எனக்காக அழகா இந்த ரிங்க்ல ஒரு ஸ்பெஷலான டிஸைன்லாம் செஞ்சுருக்க; நான் இல்லன்னு சொல்லல.... அதுக்குன்னு பொசுக்குன்னு நிச்சயதார்த்தம்னா மைண்ட் அதுக்கு ரெடியாக வேண்டாமா? ஒரு பெஸ்டிவல் மூடு வர வேண்டாமா? எல்லாம்
லூசுப்பய அவனால..... உனக்கு அஸிஸ்டெண்ட்னா அந்த லூசு உன் பெயிண்டிங்க விக்குற வேலைய மட்டும் பாக்க வேண்டியது தானடா? எதுக்கு உன்னோட பர்ஸனல் விஷயத்துல எல்லாம் தலையிடுறான்?"

"ச்சை...... லைஃப்ல எவ்ளோ முக்கியமான இவண்ட்.... அதுல ஒரு பலூன் இல்ல, ஒரு கேக் கட்டிங் இல்ல, எல்லாரையும் கூட்டி வச்சு ஒரு பங்ஷன் இல்ல; இப்டியா நம்ம என்கேஜ்மெண்ட் நடந்து முடியணும்? இது எல்லாத்துக்கும் காரணம் அவன் மட்டுந்தான்.... அவனுக்கு இருக்குது இன்னிக்கு எங்கையால ஒரு சிறப்பான சம்பவம்!" என்று சொல்லி விட்டு கிச்சனுக்குள் சென்ற சந்தனா அங்கு எதையோ உருட்டிக் கொண்டிருக்க கதிர் ஒருவழியாக தன்னுடைய கிறக்கத்தில் இருந்து தெளிந்து எழுந்து அவள் பின்னால் கிச்சனுக்குள் ஓடினான்.

"அடியேய் வீம்பம்மா..... அந்தப் புள்ள ஒரு க்ரீன் கலர் மண்ணுடீ! அதுக்கு பால் புட்டியில இருக்குற பால மட்டும் தான் சப்பி சப்பிக் குடிக்க மட்டுந்தான் தெரியும்! இன்னிக்கு இப்டி லபோ லபோன்னு கத்துறவ அன்னிக்கு அவங்கிட்ட தான கதிருக்கு பிஸினஸ் தெரியலன்னு சொன்ன! உன் ஐடியாவ எல்லாம் அவங்கிட்ட சொல்லி, அத அவனத்தான செஞ்சு குடுக்க சொன்ன? அப்ப மட்டும் உங்களுக்கு எங்க அஸிஸ்டென்ட் வேணும், இப்ப மட்டும் வேணாமோ?
ரொம்ப வாயக்கூட தொறக்காத குழந்த புள்ள... அவனுக்குப் போயி சூனியம் வைக்கணும்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்குறியே? உனக்கென்ன இப்ப..... நீ பலூன் வச்சு வெளையாடணுமா? கடைக்குப் போயிட்டு அங்க உனக்கு நான் பாக்கெட் பாக்கெட்டா பலூன் வாங்கித் தாரேன்...... இல்ல இல்ல பத்து கிலோவுல ஒரு கேக்க வாங்கி அத நாம ரெண்டு பேரும் மட்டும் தனியா ஒக்காந்து மொக்குவோம். திடீர்னு நடந்தாலும், எல்லாரும் சந்தோஷமா இருந்து நம்ம நிச்சயதார்த்தம் ரொம்ப அழகா தானடீ நடந்து முடிஞ்சிருக்கு..... இதுக்குப் போயி கிச்சனுக்குள்ள வந்து கத்தி, கபடாவெல்லாம் தேடலாமா? வேண்டாம்டா என் அழகு பொம்ம!" என்று சந்தனாவிடம் கெஞ்சி அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான் கதிர்.

காலையிலும் அவன் இரண்டு மதிகளுடன் விளையாடிக் கொண்டே சரியாக சாப்பிடவில்லை. இப்போது எல்லா பிரச்சனைகளும் முடிந்து, இவர்கள் காதலை வீட்டார் ஏற்றுக் கொண்டு எளிய அழகான முறையில் நிச்சயதார்த்தமும் முடிந்ததில் இருந்து எப்போது வயிற்றுக்குள் உணவைத் தள்ளுவோம் என்று நினைக்கும் அளவிற்கு அவனுக்குப் பசி கண்களை கட்டியது..... ஆனால் அவர்கள் இருவரின் விஷயத்தில் சஞ்சீவ் குறுக்கே வந்தது இவளுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வாள் என்று கதிர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உப்பு, வெள்ளைமிளகு, வினிகர், மிளகாய் சாஸ், சோயா சாஸ் என ஒவ்வொரு பொருளாக எடுத்து சந்தனா அவளுடைய ஹேண்ட்பேக்கில் வைத்துக் கொண்டிருக்கவும் கதிர் எரிச்சலடைந்தான்.

"ஏய்.... பிசாசே! ஹோட்டலுக்கு போறப்ப இதெல்லாம் எதுக்குடீ எடுத்து மூட்ட கட்டிக்கிட்டு இருக்க.... அவன் சாப்புடுற சாப்பாட்டுல இத்தனையும் கலக்குறதுக்கா? பாவிமவளே..... சின்னதுல இதெல்லாம் எங்கிட்ட செஞ்சுக்கிட்டு இருந்த; இப்ப அவங்கிட்டயா? நீ எவ்வளவு அடிச்சாலும் தாங்குறதுக்கு அவன் ஒண்ணும் கதிரேசன் இல்லம்மா; ஆப்பிள் குழந்த..... உன் விஷப் பரிச்சையால அவனுக்குப்
பின்னாடி புடுங்கி ஆஸ்பத்திரி பெட்ல படுத்துடுவான். மறுபடியும் பார்றா.... கொணமா சொல்லிக்கிட்டே இருக்கேன்.  அடங்க மாட்டியாடீ நீ? மரியாதயா எல்லாத்தையும் பேக்ல இருந்து வெளிய எடுத்து வை.... வைடீங்குறேன்..... என்ன லுக் விட்டுட்டு இருக்க?" என்று கோபமாக கேட்டு வீட்டைப் பூட்டி விட்டு அவளை அவளுடைய வண்டியில் அமர வைத்து ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் கதிரேசன்.

வண்டியில் வரும் போது சந்தனா கதிரிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. உணவு விடுதியின் வாகன நிறுத்தத்தில் அவளது இருசக்கர வாகனத்தை நிறுத்தியவன் அவள் முன்னால் செல்ல வேகமாக சென்று அவள் கையைப் பற்றி,

"ப்ளீஸ்டா செல்லம்! சஞ்சீவ் பாவம்லமா.... உனக்கு எப்டி ஜெபாவோ எனக்கு அப்டித்தான் அவன்! ஆயிரம் தான் இருந்தாலும், ஏன் ஒரு அறநூறு, ஐநூறா தான் இருந்தாலும் அவன் நம்ம பையன் இல்லயா? அவன ஒண்ணும் செய்யாதடா என் வசந்த கோகிலமே!" என்று சொன்னவனை உறுத்து விழித்தவள்,

"உன்னால இன்னிக்கு அந்த டூத்பேஸ்ட் பொழச்சான்! இனி ஒருக்கா உனக்குப் பதிலா முடிவ அவன் எடுத்தான்? எங்கிட்ட தர்மஅடி வாங்குவான். சொல்லி வை அவங்கிட்ட..... இப்ப எங்கைய விடு இல்ல முன்னால நடந்து தொல!" என்றாள் பல்லைக் கடித்தபடி.

"அப்பாடா...... இம்புட்டு நேரமா
நம்ம ஆளு மேல ஏறி ஒக்காந்துட்டு இருந்த கல்கத்தா காளியாத்தா ஒருவழியா மல எறங்கிட்டா! கதிரு..... தப்பிச்சடா இன்னிக்கு! இனிமே சாப்பாட்ட நிம்மதியா சாப்டலாம்; பசியில கண்ணு வேற சரியா தெரிய மாட்டேங்குதுடா.... யப்பா!" என்று நினைத்தவன் அவளுடன் உணவுவிடுதிக்குள் நுழைந்தான்.

ஆலென், சுமலதா, ஜனார்த்தனன், ஜெபா நால்வரும் ஒரு டேபிளில் அமர்ந்திருக்க மற்றொரு டேபிளில் பாகேஸ்வரி, கல்பனா, குழந்தைகள் இருவரும் அமர்ந்திருனர்.

"பாஸ்.... இங்க வாங்க!" என்று அவனை அழைத்த சஞ்சீவிடம்,

"அட இத்தபயலே.... உன்னைய நான் எவ்ளோ தான் காப்பாத்தணும்னு நினைச்சாலும், நீயா வந்து இவ கையில சிக்குறியேடா........ ஒக்காந்தது தான் ஒக்காந்த! வேற டேபிள்ல போய் உட்கார்ந்துருக்க கூடாதா?" என்று மனதிற்குள்ளாக புலம்பிய படி பாவமான முகபாவத்துடன் சஞ்சீவின் பக்கமாக அமரப்போனவன் சந்தனாவின் ஒரு சிறிய செறுமலில் பம்மிக் கொண்டு அவள் பக்கமாக வந்து அமர்ந்தான்.

"வெல்டன் மிஸ் சந்தனா.... பாஸ புஃல் அண்ட் புஃல் உங்க கண்ட்ரோல்ல வச்சுருக்கீங்க போலிருக்கு. உங்க பக்கத்துல வந்து பவ்யமா ஒக்காந்துருக்காங்க!" என்று அவளிடம் கேட்டவனிடம் சிக்கனமாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள் சந்தானலஷ்மி.

"என்னம்மா சாப்டுற?" என்று கேட்டவனிடம்,

"நூடுல்ஸ் வேணும்!" என்றாள்.

"மதிய நேரம் நீங்க மீல்ஸ் எடுத்துக்கலாமே மிஸ். சந்தனா? ஏன் நூடுல்ஸ் கேக்குறீங்க?" என்று கேட்ட சஞ்சீவிடம் எரிச்சலடைந்த கதிர்,

"அட சும்மாயிருடா கொஞ்ச நேரம்..... மீல்ஸ் எல்லாம் நாம சாப்டுவோம் வா!" என்று சொல்லி விட்டு அவனை தன்னுடன் எங்கோ இழுத்துக் கொண்டு சென்றான்.

கதிருடைய பயத்தையும், சஞ்சீவினுடைய புரியாத பார்வையும் பார்த்து சந்தனாவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. வீட்டில் அவன் அவளிடம் பேசிய பேச்சுக்களை எல்லாம் நினைவு கூர்ந்தவளுக்கு திடீரென ஸ்வீட் பாக்ஸ்களின் நினைவு வந்தது.

இப்போது வேண்டுமென்றே இவளும் பத்தாயிரம் ரூபாய்க்கு  சாப்பாட்டை வாங்கி அடுக்கினால் அவன் என்ன செய்வான் என்று நினைத்து அதற்கும் சிரித்துக் கொண்டாள்.

"பாஸ்... என்ன எங்க இழுத்துட்டு வர்றீங்க?" என்று கேட்ட சஞ்சீவை முறைத்தவன், 

"ஆ....ங்! உனக்கு மூக்கு சீந்தி வாயக் கழுவி உடுறதுக்கு....! உம்மேல அவ செம காண்டுல இருக்காடா; வயசுக்கேத்த மூள வளர்ச்சி இல்லாம பலூன், கேக்கெல்லாம் இல்லாம எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சுங்குறா! அதுக்கு நீ தான் காரணமுன்னு உன் மேல வேற அவளுக்கு செம கடுப்பு!சேதாரமில்லாம ஊரு போய் சேரணுமுன்னா கொஞ்ச நேரம் அமைதியா இருந்து தொல!" என்று சொன்ன கதிரிடம் புரியாத பாவத்துடன்,

"நான் உங்க ரெண்டு பேருக்கும் நல்ல விஷயம் தான செஞ்சேன்? அதுக்கு எதுக்கு அவங்க கோபப்படுறாங்க?" என்றான் சஞ்சீவ்.

"அட ராசய்யா...... பிரச்சன நீ செஞ்ச விஷயத்துல இல்ல தம்பி! அவள ஒருவார்த்த கேக்காம நீ உன் இஷ்டத்துக்கு முடிவெடுத்ததால..... அதுனால தான் அவளுக்கு உம்மேல கோபம்! நீ சாப்டியா... சாப்டலையா?" என்று கதிர் கேட்க சஞ்சீவ் இல்லையென தலையசைத்து,

"நீங்க வருவீங்க... ஸோ சேந்து சாப்டலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்!" என்றான்.

"சரி நல்லா கவனி..... நான் வீட்லயே அவ கிட்ட நிறைய ஆயுதங்கள புடுங்கி தூக்கி எறிஞ்சுட்டு தான் அவள கூட்டிட்டு வந்தேன். இருந்தாலும் நம்ம ரொம்ப உஷாரா இருக்கணும். சூப் குடிக்குறதுல இருந்து கடைசில ஐஸ்க்ரீம் சாப்டுற வரையில ரொம்ப உஷாரா இரு! சாஸ், உப்பு, மிளகுன்னு உன் சாப்பாட்டுல எது வேணும்னாலும் கலந்துருக்கலாம்! டேய்.... நான் பாட்டுல பேசிட்டே இருக்கேன், நீ எங்கடா போற?" என்று கேட்ட கதிரிடம்,

"நீங்க சாப்டுங்க பாஸ்! நான் கொஞ்ச நேரத்துல வந்து ஜாய்ன் பண்ணிக்குறேன்.....!" என்று சொன்ன சஞ்சீவ் ஜெபா அமர்ந்திருந்த டேபிளை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்து அவள் புறமாக வந்தவனிடம், "அங்கிள் எனக்கு கொரோனாட்டோ ஐஸ்க்ரீம் வேணும்!" என்று கேட்டாள் வெண்மதி.

சஞ்சீவ் புரியாமல் கல்பனாவை பார்க்க அவள் சிரிப்புடன் "கார்னெட்டோவ தான் அப்டி சொல்றா!" என்றாள்.

"ஓ ஓகேங்க.... சாப்பாட ஃபுல்லா பினிஷ் பண்ணிட்டியா? வெரிகுட் வெண்மதி..... அங்கிள் உனக்கு ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணிடுறேன்!" என்று சொன்னவன் வெயிட்டரை அழைத்து வெண்மதிக்கு அவளது விருப்பமான ப்ளேவரை அவளுக்கு வாங்கிக் கொடுத்தான்.

"ம்மா... பாப்பாவுக்கு ஐஸ்கீம்!" என்ற இளமதியிடம்,

"ப்ளேட்ல வச்சத சாப்ட்டு முடி! அப்ப தான் உனக்கு ஐஸ்க்ரீம்!" என்றாள் கல்பனா.

அவர்களுடைய உரையாடலைக் கேட்டு புன்னகைத்த படியே ஜெபா அமர்ந்திருந்த டேபிளின் முன்னால் சென்று நின்றான்.

"சாப்டீங்களா ஸார்? மேம் நீங்க?" என்று கேட்டவனிடம் ஆலெனும், சுமலதாவும் சிரித்தமுகமாக தலையாட்டினார்கள்.

"மிஸ்டர் ஜனா.... இளமதிக்கு கொஞ்ச நேரத்துல ஒரு ஐஸ்க்ரீம் மட்டும்..... இந்தாங்க என் கார்ட்! பாஸூம், மிஸ் சந்தனாவும் சாப்டதுக்கு அப்புறம் பில் செட்டில் பண்ணிடுங்க..... வைஃபை பேமெண்ட் இல்லன்னா
பின்நம்பர் பாஸ்ட்ட கேட்டுக்கங்க! 
இன்னிக்கு என்னோட ட்ரீட்!" என்று சொன்னவன் தயிர் சாதத்திற்கு பின்னர் தக்காளி சாதத்தை ருசித்துக் கொண்டிருந்த ஜெபாவைப் பார்த்து விட்டு,

"சாப்டுறதல கூட ஆர்டர் பாஃலோ பண்ண மாட்டியாடா நீ? எழுந்திரி! நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு வேல இருக்கு! போலாம்!" என்றான்.

"நமக்கு கடைசியில கொஞ்சம் ஸ்பைஸி டேஸ்ட் நாக்குல டேஸ்ட் நிக்கணும்! அதான் எல்லாம் முடிச்சு பைனல் டச்சா தக்காளி சாதம்? சரி..... கதிர்ணாவும், சந்துவும் இப்ப தான் வந்தாங்க... நீ சாப்ட மாதிரியே தெரியல,  எங்க கூப்டுற என்னைய?" என்று கேட்ட படி காலாட்டிக் கொண்டிருந்தவனிடம்,

"ஜெபா.... சஞ்சீவ் ஏதோ ஒரு முக்கியமான வேலன்னு தான உன்னைய கூப்டுறாரு. சீக்கிரத்துல சாப்ட்டு முடிச்சுட்டு அவர் கூட போடா!" என்றார் ஆலென்.

"உன்னோட பெரிய இம்ச டாட்! கிளம்பிப் போறேன் இரு!" என்றவன் கையைக் கழுவி விட்டு சஞ்சீவோடு சென்றான்.

சிறுநகை மலரும்!


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro