
❤ சிறுநகை 67
கதிர் சந்தனாவை அழைத்து வந்து சுமலதாவின் காலடியில் அமர்ந்து கொண்டான். ஸோஃபாவில் அமர்ந்திருந்த ஆலென், சுமலதா இருவரின் காலடியில் கதிரும், சந்தனாவும் அமர்ந்திருந்தனர்.
"ம்மா.....!" என்று கூறி சுமலதாவின் கால்களைப் பற்றி அசைத்தவனிடம்,
"ஆ....ங்!" என்றார் சுமலதா பயங்கர கனவு ஒன்றில் இருந்து விழித்து எழுந்தவர் போல்.
"சின்ன வயசுல இருந்து அவளுக்குப் பிடிக்கவேயில்லன்னாலும், நீங்க அனுப்புற க்ளாஸ்க்கு எல்லாம் பல்லக் கடிச்சுட்டுப் போயிட்டு வந்தவ..... இன்னிக்கு உங்க கிட்ட இந்த வீட்ல சந்தோஷமே இல்லன்னு பேசியிருக்கக் கூடாது! லஷ்மி பேசுனது, ஆலென் ஸார் பேசுனது இது எல்லாமே உங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துருக்கும்! வாழை நார்ல மாவப் பூசி சாமியா செஞ்சு
அதை கொலு மண்டபத்துல வச்சுட்டு, அந்த நிகழ்ச்சி நல்லா முடிஞ்சதுக்கப்புறம் அந்த சாமிய தூக்கி கீழ போட்டுட்டா எப்டியிருக்கும்..... இன்னிக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ உங்களுக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை வந்துடுச்சு! இவங்க இவ்ளோ பேசுறதுனால இவங்க யாருக்கும் உங்க மேல பாசம் இல்லன்னு நினைச்சுடாதீங்க! எங்கூட வந்தாலும் லஷ்மி உங்கள நினைச்சுட்டு கவலைப்பட்டுட்டு தான் இருப்பா! உங்களுக்கு சில விஷயத்த புரிய வைக்கணும்னு தான் ஆலென் ஸார் இவ்ளோ பேசியிருக்காங்க! அத தப்பா நெனச்சுக்காதீங்க!"
"என்னோட தலையெழுத்தோ என்னவோ...... நான் வாழ்க்கையில நிறைய பாத்தது அவமானத்த மட்டுந்தான்! நான் யாருன்னு தெரிஞ்சவுடனே ச்சீச்சீ இவனா என் பொண்ணுக்கு மாப்பிள்ளன்னு கேட்டீங்களே? அப்பவும் எனக்கு ஒருமாதிரி அவமானமா ஃபீல் ஆச்சு!"
"லஷ்மிய மட்டும் என்னோட பொண்டாட்டி ஆக்கிக்குறதுன்னா இப்பவே இப்டியே கூட நான் அவள கூட்டிட்டுப் போயிடலாம்.... ஆனா எனக்கு அது வேண்டாம்! இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்குப் போயி என் பொண்ணக் குடுக்கணுமாங்குற எண்ணம் எப்ப உங்க மனசுல இருந்து போகுதோ சொல்லுங்க! அப்போ தான் முழு நிம்மதியோட நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியும். அது வரைக்கும் நாங்க காத்துட்டு இருக்கோம்!" என்று கைகூப்பி சொன்னவனின் கையைப் பற்றிய சுமலதா,
"நீக்கு எமன பிச்சு பட்டிந்தா... மீரு ஏமி த்யாகம் சேஸ்துன்னாரோ குருதுன்சுகோண்டி!"
(பைத்தியக்காரா..... உனக்கு என்ன தியாகின்னு நெனப்பா!) என்று கேட்டார்.
"ஏய் சூபொ.... ஹீரோயினம்மா
என்னடீ தியாகம், கீகம்னு எதையோ சொல்லி பயமுறுத்துது! நீ என்னைய விட்டுட்டுப் போயிடுவேன்னு சொன்னியே அத மாதிரி இப்பயும் மொத்தமா சோலி முடிஞ்சுடுச்சாடீ?" என்று முணுமுணுத்தவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு,
"அவ்ளோ ஈஸியால்லாம் சோலி முடியறதுக்கு நாங்க விட்டுடுவோமாடா? பெரிசா தியாகம் செய்றேன்னு சொல்றியே.....? நீ என்ன லுசுப்பயலான்னு கேக்குறாங்க! அவ்ளோதான்; எப்டியோ நம்ம கல்யாணத்துக்கு க்ரீன் சிக்னல் போட்டாச்சு..... உம்மா!" என்று அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தவளின் செயலைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
"கல்ப்பு.... எஞ்சாமி கண்ணத் தொறந்துடுச்சுத்தா! நம்ம கதிருப்பயலுக்கு சீக்கிரத்துல ஒரு நல்லது நடக்கப்போவுது! இனிமே நான் கவலைப்படுற மாதிரி ஒரு கொறையும் இல்ல தங்கம்!" என்று நிம்மதியான குரலில் கல்பனாவிடம் பேசிக் கொண்டிருந்த பாகேஸ்வரியின் அருகில் சென்ற ஜெபசேகரன் அவரது கையைப் பற்றிக் குலுக்கினான்.
"கையக் குடுங்க.... பாகேஸ் ஆன்ட்டி! மாப்ள வீட்டுக்காரங்கன்ற கெத்தெல்லாம் இல்லாம இவ்ளோ நேரமா நீங்க பொறுமையா இருந்ததுக்கே ஒரு அவார்ட் குடுக்கலாம்...... அப்........பாடா!" என்று பெருமூச்சு விட்டவனை குறுகுறுவென பார்த்த படி அவனருகில் வந்து நின்றான் சஞ்சீவ்.
"என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க போல.... உங்க சிஸ்டர் செட்டில் ஆகப் போறாங்கன்னா? இல்ல உனக்கு ரூட் க்ளியர் ஆகுதுன்னா?" என்று கேட்டவனிடம்,
"ம்க்கும்..... நம்ம லைன் க்ளியர் ஆகிட்டாலும் அப்டியே அஞ்சாறு பேரு க்யூவுல நிக்குறாளுக; போடா அங்குட்டு..... பொள்ளாச்சிக்குப் போயி எளநிய பிய்ச்சி வாய்க்குள்ள ஊத்து; எண்ணெய எடுத்து பாட்டில்ல ஊத்து.....பே!" என்றவன் ஆலென், சுமலதா, கதிர், சந்தனா நால்வரையும் அணைத்தபடி நின்று கொண்டான்.
"நேனு அந்த்த செட்டவாடினா (நான் அவ்ளோ கெட்டவளா) ஆலென்?" என்று திரும்ப திரும்ப தன்னிடம் கேட்டுக் கொண்டிருந்த தன் மனைவியை அனைவரும் இருப்பதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் மார்பில் சாய்த்து வைத்துக் கொண்டு அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார் ஆலென்.
பாகேஸ்வரிக்கு அவர்களுடைய அந்நிநோன்யத்தை பார்த்து கண்கள் கசிந்தது. கணவனோ மனைவியோ இருவரில் ஒருவரில் வீணையின் குடமாக இருந்து வீணையைத் தாங்கினால் தான், மற்றொருவர் நரம்பாக இருந்து நாதத்தை வழங்க முடியும். அவரது வாழ்க்கையில் அவர் தான் குடம்; இவர்களுடைய வாழ்க்கையில் ஆலென் தான் குடம் என்று நினைத்துக் கொண்டவர் மனதிற்குள்ளாக அந்த தம்பதியருக்கு சுற்றிப் போட்டுக் கொண்டார்.
"கதிர்..... மதியம் யாரும் வீட்ல சாப்டுற ஐடியாவுல இல்ல.... எங்களுக்கு ட்ரீட் வேணும்! உங்கல்யாணம் ஓகே ஆனதுக்கான ட்ரீட்.....!" என்று கேட்ட கல்பனாவிடம் புன்னகைத்த படி,
"ட்ரீட் தான? குடுத்துட்டாப் போச்சுக்கா!" என்றான் கதிர்.
"அப்ப கெளம்புங்க... கெளம்புங்க! ஆலென்.... உன் வீட்டு ஆளுங்க, உன் பொண்டாட்டி வீட்டு ஆளுங்க எல்லாருக்கும் என் பொண்ணுக்கு மாப்பிள்ள பிக்ஸ் பண்ணியாச்சுன்னு ஒரு க்ரூப் மெசேஜ தட்டி உடு! வாழ்த்துறவன் வாழ்த்தட்டும்! வயிறெரியுறவன் ஜெலுசில் குடிச்சுக்கட்டும்.... என்ன இவனுங்களுக்கு எல்லாம் இத சொல்றது போன்ல டேட்டாவுக்கு பிடிச்ச கேடு..... போனா போவட்டும்! ஒரு மெசேஜப் போட்டு விடு! என்ன கதிர்ணா?" என்று கேட்டவனிடம்,
"இப்பயுமாடா சேகர் நான் உனக்கு கதிர்ணா?" என்று கேட்டு சிரித்தான் கதிர்.
"அண்ணா இல்ல அத்தான்.... ஆனா கதிரத்தான்னு கூப்டுறது ஏதோ காதுல தோட்ட அத்தான், கழுத்துல செயின அத்தான்னு சொல்ற மாதிரியே இருக்குல்ல.....?" என்று தாடையில் கைவைத்து யோசனையாக சொன்னவனை சந்தனா முறைத்தபடி நின்றிருந்தாள்.
"சரி சரி மொறைக்காத! இப்பத்தான் வீட்ல உங்க லவ்வுக்கு ஓகேவே சொல்லியிருக்காங்க. அதுக்குள்ள ரொம்ப ஓவராத்தான் பண்ற!" என்று உச்சுக்கொட்டியவன் சஞ்சீவின் தோளில் கைபோட்டு,
"என்ன கோகனெட் ஆயில் ஷாஷே.... லன்ஞ்ச் சாப்ட போலாமா?" என்றான்.
"இருடா.... எனக்கு கொஞ்சம் பேசணும்!" என்று சொன்ன சஞ்சீவ் ஆலெனிடம்,
"மிஸ்டர் ஆலென்.... இன்னிக்கு நல்ல நாள்னா நாம இந்த விஷயத்த அடுத்த ஸ்டெப்புக்கு எடுத்துட்டுப் போகக் கூடாது? பாஸ் என்கேஜ்மெண்ட் ரிங்க்ஸ ரெடி பண்ணி கொண்டு வந்துருக்காங்க. உங்க சைடுல ரிலேஷன்ஸ் யாரையும் பெரிசா நீங்க இன்வைட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல போலிருக்கே..... அதுனால உங்களுக்கு ஓகேன்னா சின்னதா இன்னிக்கே என்கேஜ்மெண்ட் பங்ஷன நடத்திடலாம்ல?" என்று கேட்டான்.
பாகேஸ்வரி, கல்பனா இருவரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்து சுமலதா சரியென்று சொன்னதிலேயே நிம்மதிப் பெருமூச்சு விட்டு அமர்ந்திருந்தனர். அதற்கு மேல் நிச்சயதார்த்தம் பற்றி எல்லாம் யோசிக்கும் அளவு அவர்களுக்கு நினைப்பே வரவில்லை..... ஆனால் கதிர் சஞ்சீவிடம் காலையில் மோதிரங்களை காண்பித்த போதே சஞ்சீவ் தன் மனதில் ஒரு கணக்குடன் தான் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தான். மனதில் நினைத்ததை ஆலெனிடம் கேட்டும் விட்டான்.
"சைலண்டா நின்னு அவனுக்கு என்ன தேவையோ அத கரெக்டா கேட்டு வாங்கிடுறாப்ல.... நம்மளப் பாரு ஓட்டைப் பானைக்குள்ள நண்ட விட்டாப்ல பத்து ரூபாய்க்கு ப்ரயோஜனம் இல்லாம என்னத்தயாவது லூசுத்தனமா பேசிட்டு இருக்க வேண்டியது; நம்ம சொல்றது ஜோக்குன்னு நெனச்சு அதுக்கு நாமளே சிரிச்சுக்க வேண்டியது...... இப்டியெல்லாம் இருந்தா நீ எப்டிறா ஜெபா உருப்படப் போற? நம்ம வாழ்க்க எத நோக்கிப் பயணிக்குதுன்னே தெரியலயே கர்த்தரே....?" என்று புலம்பிக் கொண்டிருந்தவனிடம்,
"அத ஏன் அவர்ட்ட கேக்குற? உனக்கே தெரியலயா? ஒரு நல்ல ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு வேணும்னா பதில யோசிக்குறியா?" என்று கேட்டு கிண்டல் செய்தான் சஞ்சீவ்.
"டேய்.....ரொம்ப ஆடாதடா! ஒன்னைய மாதிரி நூத்துல நாலு பேரு தான் இருப்பானுக; மத்த தொன்னூத்து ஆறு பேரு என்னைய மாதிரித் தான் இருப்பானுக! தெரியும்ல? இப்ப உனக்கு என்ன வேணும்? சந்துவும் கதிர்ணாவும் மோதிரம் மாத்திக்கணும்.... அவ்ளோதான? மாத்திப்பாங்க உடு!" என்று சொல்லி விட்டு ஆலென் மற்றும் சுமலதாவைப் பார்த்தான்.
"என்ன இன்னும் எம்முகத்த பாக்குற..... உன்னோட டெஸிஷன் தான் என்னோட டெஸிஷன்! இதுக்கு சந்துவும் ஓகே சொல்லியாச்சு வேற... இதுக்கு மேல என்ன இருக்கு யோசிக்க? கதிர் எங்க பங்காரத்த நல்லபடியா பாத்துக்கணும். இன்னிக்குல இருந்து அவ உங்களோட ஃபியான்சி! இத அஃபிஷியல் அனௌன்ஸ்மெண்டா ஆலென் உங்களுக்கு சொல்வாரு!" என்று சொன்ன சுமலதாவினுடைய வார்த்தைகளால் கதிர் தன்னுடைய தலையில் அத்தனை நேரமாக அடைத்துக் கிடந்த தயக்கம், குழப்பம், பயம் அத்தனையையும் தூக்கிப் போட்டு முகம் மலர்ந்தான்.
"இப்ப மட்டும் ரொம்ப பல்லக் காட்டாத....... எங்கம்மாவோட பையன் நான் தான் உங்க பொண்ணுக்கு புருஷன்னு பந்தாவா சொன்னதோட சரி! அதுக்கப்புறம் எங்க அம்மாவ கன்வின்ஸ் பண்றதுக்கு உன் வாயவே தெறக்கலையில்ல நீயி! தனியா கையில சிக்கு! கேரட் ஸ்லைஸர எடுத்துட்டு வந்து ஓவாயில வச்சுத் தேய்க்குறேன்!" என்று முணங்கினாள் சந்தனா.
"ஏ....போடீ! ஒம்மிரட்டலுக்கு எல்லாம் பயந்துடுவோமா நாங்க? உனக்கெல்லாம் என்னைய டேமேஜ் பண்ண கேரட் ஸ்லைஸர் வேணும். எனக்கெல்லாம் என் வாயே போதும்..... எங்கிட்ட ரொம்ப வச்சுக்காத; சீக்கிரத்துல நமக்கு கல்யாணம் வேற ஆகப்போகுது தெரியும்ல?" என்று அவளிடம் சொல்லி புருவம் உயர்த்தினான் கதிர்.
"கல்யாணம் ஆனாப்ல.....? நம்ம ரெண்டு பேருல டேன்ஜரெஸ் பெர்ஸன் யாருன்னு நம்மளோட ரீடர்ஸ்க்கே தெரியும்டா! அப்புறம் எதுக்கு இவ்ளோ பெரிசா டயலாக் எல்லாம் பேசுற? வா..... நம்ம ரெண்டு பேரையும் கூப்டுறாங்க!" என்று அவனிடம் சொல்லி விட்டு போனாள் சந்தனா.
"இப்டி நம்ம மானத்த வாங்குறாளேடா..... கதிரேசா? இவள.... ஒண்ணும் செய்ய முடியாது! சைலண்டா அவ பக்கத்துல போயி நில்லு போ!" என்று மனசாட்சி இடித்துரைக்க அவன் சிரித்தபடி சந்தனாவின் அருகில் சென்று நின்றான்.
ஐநூறு பேர் வந்து வாழ்த்தவில்லை. விதவிதமான அலங்காரங்கள் இல்லை, பெரிய மண்டபம் இல்லை, பலவிதமான பரிசுப்பொருட்கள் இல்லை, விருந்து உபச்சாரம் இல்லை..... ஆனாலும் சந்தனாவிடம் எவ்வாறு இயல்பாக அவனது அறையில் வைத்து அவள் மேலுள்ள காதலைச் சொன்னானோ, அதைப் போலவே வீட்டளவில் தன் நிச்சயதார்த்ததையும் மிக எளிமையாக முடித்திருந்தான் கதிரேசன்.
மோதிரத்தை ஒட்ட வைத்து அவளிடம் இரண்டு இள மான்களின் காதலை காட்டியவன், அவளது கண்களில் தெரிந்த மயக்கத்தைப் பார்த்து அவளிடமிருந்து இரண்டடி தள்ளி நின்று கொண்டான்.
தனியறையில் இருந்தால் அவளிடமிருந்து ஆயிரம் முத்தங்கள் கூட வாங்க தயார்தான்; கூட்டத்தில் அப்போது போலவே ஏதாவது செய்து விடுவாளோ என்று பயமாகவும், வெட்கமாகவும் இருந்தது.
"ரெண்டு பேரும் நல்லாயிருக்கணும் தங்கங்களா!" என்று வாழ்த்திய பாகேஸ்வரியின் ஆசி பெற்றவர்கள் ஆலென், சுமலதாவிடமும் ஆசி பெற்றுக் கொண்டனர்.
"கங்க்ராட்ஸ், கங்க்ராஜுலேஷன்ஸ், வாழ்த்துகள்டா தம்பி!" என்று வாழ்த்திய மூவரிடமும் நன்றி உரைத்தவன் கல்பனாவிடம் வெண்மதி, இளமதியை வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னான்.
"நாம லன்ஞ்ச் தானடா போறோம்? அவங்க அங்கயே வந்து ஜாய்ன் பண்ணிக்கட்டும்! நாம கிளம்பலாம்...!" என்றவள் வருங்கால தம்பதியரை பின்னால் வர விட்டு அனைவருடனும் முன்னால் கிளம்பிச் சென்றாள்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro