Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 63

"பெத்த புள்ள அவன் வாழ்க்கைய காப்பாத்திக்கறதுக்காக தவிச்சுக்கிட்டு எத்தன யோசனைக்கப்பறம், எத்தன பேர அங்க கூட்டிட்டு கெளம்பிப் போய்ட்டு இருக்கான்.... அவனுக்கு ஆசிர்வாதம் பண்ணி அனுப்பாட்டியும் பரவாயில்ல; இப்டி நந்தி மாதிரி முன்னால நின்னு உயிர வாங்காம இருக்கலாம்ல?
இவன.... அப்டியே கார உட்டு ஏத்தி டயருக்குள்ள சிக்குன வாட்டர் பாட்டில மாதிரி சப்புளுச்சு போட்டா என்ன?" என்று கோபக்குரலில் கத்தியவனிடம்,

"கதிரு.... எஞ்சாமி; நல்ல காரியத்துக்காக வெளிய
கெளம்புறப்ப கோபப்படாதய்யா! நான் எறங்கிப் போயி உங்கப்பா கிட்ட பேசிட்டு வர்றேன்!" என்று மகனிடம் கெஞ்சினார் பாகேஸ்வரி.

"நீங்க இருங்கம்மா! நான் போய் அவர்ட்ட பேசிட்டு வர்றேன்!" என்று சொன்ன சஞ்சீவ் சற்று நேரம் முன்னதாக தன்னுடன் பழம் விட்டு தன்னுடைய மடியில் அமர்ந்திருந்த இளமதியிடம்,

"ஏய் குடுமிப்பாப்பு.... கொஞ்ச நேரம் நீ அங்கிள் மடியில இருந்து எழுந்துரிச்சுக்குவியாம்! அங்கிள் போய் தாத்தாட்ட பேசிட்டு வந்துடுவனாம்! ஓகே....ஜஸ்ட் அ செக்; ஐ வில் பீ பேக்!" என்று சொல்லி விட்டு அவளை காரின் இருக்கையில் அமர்த்தி விட்டு காரின் முன்பாக மறித்தபடி நின்ற கிருஷ்ணராஜின் முன்பாக சென்று கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.

"அப்பா..... எல்லாரும் ஜாலியா கதிர் மாமாவுக்கு வர்ற ஆன்ட்டிய பாக்கப் போயிட்டு இருக்கும் போது ஏன்ப்பா இந்த தாத்தா மட்டும் நம்ம கூட வராம, நமக்கு வழியும் உடாம இப்டி
நிக்குறாரு? கிருஷ்ணா தாத்தா நல்ல தாத்தாவே இல்ல.... என்னப்பா?" என்று மெல்லிய குரலில் வெண்மதி முணுமுணுக்க ஜனார்த்தனன் தன் மகளிடம்,

"ஷ்ஷ்ஷ்! இப்டியெல்லாம் பேசக்கூடாது; நீ பேசுறது பாகேஸ் பாட்டி காதுல விழுந்தா அவங்க ஃபீல் பண்ணுவாங்கல்ல? அதுனால கொயட்டா இரு வெண்ணு!" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

"உங்களுக்கு இப்போ
என்ன வேணும் மிஸ்டர் கிருஷ்ணராஜ்?" என்று சஞ்சீவ் கதிருடைய அப்பாவிடம் கேட்க அவர் சஞ்சீவை ஏறஇறங்கப் பார்த்து விட்டு,

"ஆங்.... போட்ட சரக்கு பத்தல; முதல்ல போட்டதுக்கு முறுக்கு, சிப்ஸூ மாதிரியான
சைட் டிஷ்ஷூம் அடுத்த ரவுண்ட் போடுறதுக்கு எறநூறு ரூபா பணமும் வேணும் தர்றியா?" என்று கேட்க அவரை சாக்கடைக்குள் நாலு கால்களை விட்டபடி நிற்கும் நாய் போல அசூயையாக பார்த்தான் சஞ்சீவ்.

"என்னடா அப்டி குர்ருன்னு பாக்குற? அவன மொதல்ல கீழ எறங்கி வரச்சொல்.....லு! சொல்லு! வரச்சொல்லுடா ........!" என்று நாக்கை மடித்து ஒரிரு கெட்ட வார்த்தைகளை வேறு உதிர்த்தவரால் எங்கே தன் பொறுமை கையை விட்டுப் போய்விடுமோ என்று பயந்து கைகளை இறுக மூடிக் கொண்டு நின்ற சஞ்சீவ் அவரிடம்,

"மிஸ்டர் கிருஷ்ணராஜ்.... நீங்க இப்ப நிதானத்துல இல்ல! உங்க கிட்ட வழி விடுங்கன்னு கெஞ்சிட்டு இருந்தா எங்களோட பொறுமையும் போய்டும் போலருக்கு! ஸோ இப்ப எங்களுக்கு வழிவிடுங்க..... நாங்க மிஸ் சந்தனாவோட வீட்டுக்குப் போயிட்டு வந்து உங்க கிட்ட பேசுறோம்!" என்று சொன்னவனிடம்,

"அது தான்..... முடிய்யாது! முடிய்யவே முடியாது! இத்தன வருஷமா எம்பேச்ச கேட்டு அது ப்ரகாரம் அப்டியே நடந்துக்கிட்டு இருந்தவ, இங்க அவ மவன் வீட்டுக்கு வந்து பங்களா கணக்கா இருக்குற இந்த பெரிய வீட்டப் பாத்ததுல இருந்து என்னைய மதிக்க மாட்டேங்குறா; எம்பேச்ச கேக்க மாட்டேங்குறா! ஒழுங்கா மூடிட்டு இருக்குறதுனா இரு, இல்ல போறதுன்னா போங்குறா! அந்தோ முன்சீட்டுல பகுமானமா ஒக்காந்துருக்குற நாதாரி என்னைய வடக்க எங்கனயாவது போய்த்தொலன்னு சொல்லுது! அது போக இவேன் கட்டிக்கிட
போறவ வேற..... வாயத் தொறந்தா நம்மள நச்சி நார உரிச்சுட்டுத்தே ஓயுவா....! அதுனால இப்ப நீங்க எல்லாரும் அங்கணக்குள்ள போவக் கூடாது! இந்தப் பயலுக்கு கடைசி வர கல்யாணம் காட்சின்னு ஒரு நல்லதும் ஆவவே கூடாது!" என்று கையை உயர்த்தி உயர்த்தி சாபம் வழங்குவது போல் சொல்லிக் கொண்டிருந்தவரின் பேச்சைக் கேட்டு விட்டு காரிலிருந்து இறங்கி வந்து அவர் முன்னால் நின்றான் கதிரேசன்.

"பொதுவா ஒரு நல்லது நடக்குற எடத்துல எல்லாரும் நம்மள வாழ்த்துவாங்கன்னு எதிர்பாக்க முடியுமா? ஒன்னைய மாதிரி நாலு பேரு நாசமாப் போவணும்னு நெனக்கத் தான் செய்வாங்க...... உன்னைய மாதிரி நச்சுப் பேச்சு பேசுற ஆளுங்க பேச்செல்லாம் கேக்கக்கூடாதுன்னு தான கல்யாண வீட்ல எல்லாம் மேளமே கொட்டுறாங்க? நானும் இன்னிக்கு பேசாம அவ வீட்டுக்கு கெளம்புறதுக்கு முன்னாடி ஒரு செண்டை மேள கோஷ்டிய புக் பண்ணியிருக்கலாம். அதச் செய்யாம உட்டுட்டேன்! பரவாயில்ல.... இப்பவும் நாங்க சொன்ன வார்த்தய நாங்க மாத்திப் பேசப் போறதில்ல ஃபாதர்! இருக்குறதுன்னா இரு; போறதுனா போய்க்க..... ஆனா ஒண்ணு வண்டி போக முடியாம, இடைஞ்சலா குறுக்க நிக்காம ஒரு ஓரமாப் போய் கிட! இந்த வெளக்கமாறெல்லாம் வீட்ல கெடக்குமே அந்த மாதிரி.....!" என்று சொன்னவன் காருக்குள் உட்கார்ந்திருந்த தனது தாயின் முகம் சுணங்கி, அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறுவதைக் கண்டான்.

பெற்ற தகப்பனிடம் ஆசி வாங்கிக் கொண்டு தன்னுடைய மனம் விரும்பியவளை பெண் கேட்க செல்லலாம் என்று அவனுக்கும் ஆசை தான்.... என்ன செய்வது? மகனுடைய அன்பையோ, மனைவியினுடைய மரியாதையையோ புரிந்து
கொள்ளக் கூடிய நிலையில் கிருஷ்ணராஜ் இல்லையே?

சஞ்சீவ் கதிரிடம் சமிக்ஞை காட்ட கதிர் தன்னுடைய தந்தையின் தோளுக்கு அடியில் கை கொடுத்து அவரை தூக்கினான். கதிர் ஒரு புறம், சஞ்சீவ் ஒருபுறமாக கிருஷ்ணராஜை தூக்கி வீட்டின் பக்கவாட்டில் செடிகளுக்கு அருகில் அமர்வதற்காக போடப்பட்டிருந்த திண்டில் அமர்த்தியிருந்தனர்.

"யேய்.... என்னங்கடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க?" என்று எரிச்சல் பட்டவரிடம் அடங்காத சினத்துடன்,

"இதுக்கு மேலயும் நீ உன் சலம்பல நிப்பாட்டல? இப்பவே இப்டியே  அடிச்சு உம்மூஞ்சியப் பேத்து, வீட்ட விட்டு தொரத்தி உட்டுடுவேன்யா! செய்ய மாட்டேன்னு நெனக்காத; ஓரளவுக்கு தான் என்னோட பொறுமையும்.......!" என்று கர்ஜித்தான் கதிரேசன்.

விறுவிறுவென நடந்த இளைஞர்கள் இருவரும் வீடு பூட்டியிருக்கிறதே கிருஷ்ணராஜ் போதை தெளிந்தவுடன் எங்கு செல்வார் என்று கூட யோசிக்கவில்லை. அந்த அளவிற்கு இருவரும் அவர் மேல் அளவற்ற கோபத்தில் இருந்தனர்.

"இப்ப அழறத நிப்பாட்டிட்டு எங்க கூட கெளம்பி வரப் போறீங்களா? இல்ல..... காருல இருந்து கீழ எறங்கி உங்க புருஷன  சமாதானம் பண்ணிட்டு இருக்கப் போறீங்களா? ரெண்டுல எதப் பண்ணப் போறீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா நான் கார எடுப்பேன்!" என்று சொன்ன கதிரிடம் எரிச்சலடைந்த கல்பனா,

"டேய்.... அவர் செஞ்ச தப்புக்கு நீ இப்ப எதுக்காக அம்மாட்ட வந்து கத்திட்டு இருக்க? வாய மூடிட்டு ரெண்டு நிமிஷம் பேசாம இரு. எல்லாரும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு கிளம்புவோம்!" என்று சொல்லி விட்டு பாகேஸ்வரியை சற்று சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

சஞ்சீவ் தன்னுடைய மடியில் அமர்ந்திருந்த இளமதியிடம், "எதுக்கு பாட்டி அழுவுறா?" என்ற அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளது குட்டி ஹேண்ட்பேகில் வைத்திருந்த க்ளே செட்டை எடுத்து அவளுக்கு ஒரு பூ ஜாடியை செய்து அவள் கையில் விளையாடக் கொடுத்தான்.

எப்போதும் வட்டம், செவ்வகம் என செய்து பழக்கப்பட்ட இளமதி இன்று சஞ்சீவ் செய்த பூ ஜாடியால் கவரப்பட்டு அதை வைத்துக் கொண்டு சத்தமில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தாள்.

"ச்சை..... நமக்குன்னு சுத்தி சுத்தி டிஸைன் டிஸைனா வருது பாருய்யா பிரச்சன!" என்று சொல்லி தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டவனின் கைவிரல்களைப் பற்றிக் கொண்ட வெண்மதி,

"மாமா.... நீங்க இப்ப கோபப்படாதீங்க! சந்தனா அக்கா வீட்டுக்குப் போயிட்டு வரும் போது நாம எல்லாரும் ஐஸ்க்ரீம் வாங்கி சாப்டலாம்! ஐஸ்க்ரீம் சாப்டா கோபம் போயி ஜாலியாகிடும்!" என்றாள் அவனைப் பாவமாக பார்த்த படி.

வெண்மதியின் பேச்சில் கதிர் அப்படியே உருகிப் போய் விட்டான். இந்தப் பிஞ்சுப் பூவின் அக்கறையும், அவள் தந்த இதமும் அவன் அன்னையிடமிருந்து இப்போது கூட அவனுக்கு கிடைக்கவில்லையே? இன்னமும்
பாழாய்ப் போன கணவனை நினைத்துத் தான் விசும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தவன் பெருமூச்சுடன் தன்னுடைய விரல்களைப் பற்றியிருந்த வெண்மதியின் புறங்கையை அன்பாக முத்தமிட்டான்.

"பேசாம பாட்டிக்குப் பதிலா நீ என்னோட அம்மாவா பொறந்துருக்கலாம்டா வெள்ளநிலா; ஐஸ்க்ரீம் தான.....  கண்டிப்பா அத சாப்ட்டு நாம ஜாலியாகிடுவோம் என்ன?" என்று கேட்டு அவளுக்கு ஒரு ஹைஃபைவ் கொடுத்தவன் தன்னுடைய தாயின் முகத்தை ஒரு முறை பார்த்தான்.

"உங்கப்பா நம்ம கூட வரமுடியலன்னு நெனச்சு நான் அழுவலய்யா கதிரு! புள்ளைக்கு ஒரு நல்லது நடக்குற நாளுல கூட இப்டி வெசமா கக்குறாரேன்னு நெனச்சுத்தான் வருத்தப்பட்டேன். நாங்க எல்லாரும் இருக்கையில, உனக்கு எதுக்குய்யா அந்த ஆளு தொண வேணும்? வண்டிய எடு சாமி! கிளம்புவோம்!" என்று தெளிவான குரலில் உறுதியாக பேசிய பாகேஸ்வரியை பார்த்த கல்பனா கதிரிடம் கண் ஜாடையில்,

"இப்போ ஒனக்கு சந்தோஷமா?" என்று கேட்க அவன் அவளிடம் புன்னகைத்த படி தன்னுடைய காரைக் கிளப்பினான்.

ஆலெனுடைய வீட்டின் முன்பாக அவரும், ஜெபசேகரனும் வந்து கதிருடைய குடும்பத்தை வரவேற்க, கதிருடைய கண்கள் ஆவலாக அவனது லஷ்மி எங்கிருக்கிறாள் என்று தேடிக் கொண்டிருந்தது.

என்றும் இல்லாமல் இன்று புடவையில் வேறு இருந்தாளே.... என்று நினைத்தவனுக்கு வீட்டில் சற்று முன்னதாக நடந்த களேபரம் எல்லாம் மறந்தே போய்விட்டது. ஐஸ்க்ரீம் சாப்பிட்டு ஜாலியாகி விடுவோம் என்று வெண்மதியிடம் சொன்னவன், அந்தப் பனிக்கூழ் இல்லாமலேயே அவ்வளவு குதூகலமாகி விட்டான்.

"ஹாய்... இது யாரு இவ்ளோ க்யூட்டான ரெண்டு குட்டிப் பாப்பாங்க? வெண்மதியும் இளமதியும் தானா? பட்டுப்பாவாடையில ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப அழகாயிருக்கீங்க! உள்ள
வாங்க ஏஞ்சல்ஸ்!" என்றவன், கல்பனா, ஜனார்த்தனன், பாகேஸ்வரி அனைவரும் விழுந்து விழுந்து வரவேற்று விட்டு வேண்டுமென்றே சஞ்சீவை மட்டும் கவனிக்காதவன் போல் நின்று கொண்டிருந்தான்.

"உள்ள வாங்க சஞ்சீவ்!" என்று தன்னை அழைத்த ஆலெனிடம் லேசாக புன்னகைத்த சஞ்சீவ்,

"என்ன... மாப்புக்குச்சி! இன்னுங்கொஞ்சம் வளந்துட்ட மாதிரி தெரியுற!" என்று ஜெபாவிடம் கிண்டல் குரலில்
நலம் விசாரித்தான்.

"ஆமாண்டா சாஷே! ஒன்னையக்கூட எவனோ பல் தேய்க்க இன்னுங்கொஞ்சம் பிதுக்கி எடுத்துட்டான் போலிருக்கு! போனதடவ பாத்தத விட நீயும் தேஞ்சு போயி தெரியுற!" என்று சஞ்சீவை பதிலுக்கு வாரினான் ஜெபா.

"டேய்...... உங்க சண்டையெல்லாம் அப்புறமா வச்சுக்குங்கடா; எங்கடா என் பொம்மைய கண்ணுலயே காணும்?" என்று கதிர் சலிப்படைய அவனிடம் ஜெபா,

"ம்ம்ம்; எங்கக்காவுக்கு புதுசா வெக்கமானியான்னு ஒரு டிஸீஸ் வந்துருக்கு கதிர்ணா! உங்கள பாக்க வரவே மாட்டேன்னு அடம் புடிச்சிக்கிட்டு அவ ரூம் கதவுல காத வச்சுக்கிட்டு நின்னுட்டு இருக்கா! நீங்க போய் அவள என்னன்னு கேளுங்க! நான் போய் நீங்க சாப்டுறதுக்கு கேக், பப்ஸ் ரெண்டையும் எடுத்துட்டு வந்துடுறேன்!" என்றவன் சஞ்சீவிடம்,

"டேய்.... சும்மா ஒக்காந்துருக்க போரடிச்சா நீயும் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு வா!" என்று சொல்லி விட்டு அவனை முறைத்த சஞ்சீவின் முறைப்பை கண்டுகொள்ளாமல் தன் வீட்டின் கிச்சனுக்குள் நுழைந்தான்.

சிறுநகை மலரும்!




Bạn đang đọc truyện trên: Truyen247.Pro