
❤ சிறுநகை 62
புதன்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து தன்னுடைய வீட்டு வாசலில் இரண்டு புள்ளி கோலமிட்டு, அந்த கோலத்தின் நடுவே ஒரு விளக்கை ஏற்றி வைத்த சந்தனா, இதில் இன்னும் ஏதோ குறைகிறதே என்று கன்னத்தில் கை வைத்து யோசித்தாள். விளக்கைச் சுற்றி அடுக்கு செம்பருத்தி பூக்களை பறித்து வட்டமாக அடுக்கி விட்டு திருப்தியாக கைகளை தட்டிக் கொண்டாள்.
அவளது தந்தை அவளிடம் அடிக்கடி செய்யும்படி கேட்கும் மிகப்பெரிய வேலை இதுதான்! எப்போதும் அவரது பேச்சைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாதது போல் ஓடி விடுபவள், இன்று வாழ்நாளில் முதன்முறையாக வீட்டின் முன்பாக விளக்கேற்றி இருந்தாள்.
தந்தை சொல்வது போல் இந்த செயலினால் ஐஸ்வர்யம் வருமா வராதா என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. அவன் வருவான்.....! இது அவளுடைய வேலை என்று தெரிந்ததும் ஆச்சரியமாக புருவம் தூக்கி யாரும் அறியாத நேரம் அவளைப் பார்த்து கண்சிமிட்டுவான். அது போதும் என்று நினைத்தவள் லேசான சிரிப்புடன் இந்த செயல்களை எல்லாம் செய்து முடித்தாள்.
ஹாலுக்கும், வராண்டாவுக்குமாக எட்டு முறை நடந்து கொண்டிருந்தவள், ஹாலில் ஒரு ஓரமாக சிவனே என்று குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஜெபாவின் கை விரலை வேறு ஒரு முறை மிதித்து விட்டாள்.
"ஐயயோ.... தெரியாம உன்னை மிதிச்சுட்டேன் ஜெபா எழுந்திரிடா; எழுந்திரி!" என்று சொன்னவள் அவன் முழு தூக்கக்கலக்கத்தில் பாதி அமர்ந்து "என்ன..... ச.....ந்து?" என்று கேட்கவும்,
"ஒண்ணுமில்லடா! தெரியாம உன் வெரல மிதிச்சுட்டேன். அதான் ஸாரி கேக்கலாம்னு உன்னை எழுப்பி விட்டேன்......!" என்று சொல்ல அவன் பெரிதான கொட்டாவியுடன்,
"இன்னும் ஒருக்க என்னைய மிதிக்க கூட செஞ்சுக்கோ! ஆனா தயவுசெஞ்சு தூங்க உடு. காலங்காத்தால அரகொற தூக்கத்துல எழுப்பி இப்டி
உயிர வாங்காத!" என்று சொல்லி விட்டு மறுபடியும் குப்புற கவிழ்ந்து கொண்டான்.
"டேய்.... ஆறு மணியாச்சுடா! அது சரி; நீ எழுந்திரிக்க இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கோ.....?
ரொம்ப ஸாரிடா ஜெபா!" என்று அவனிடம் சொன்னவள் அவனுக்கு கழுத்து வரை போர்த்தி விட்டு தன்னுடைய தந்தை வாக்கிங்கை முடித்து வரும் நேரமானதால் அவரை எதிர்பார்த்து சிறிது நேரம் வராண்டாவில் கிடக்கும் சேரில் சென்று அமர்ந்தாள். அதற்கு மேல் அங்கும் அவளால் சும்மா அமர்ந்திருக்க முடியவில்லை.
ஒரு முடிவுடன் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டவள், தான் அணிந்திருந்த டீஷர்ட், ட்ராக்ஸை கழற்றி எறிந்து விட்டு நல்ல வெள்ளை நிறத்தில் பட்டு ஜரிகை போட்டிருந்த கேரள பட்டையும், அந்தப் புடவைக்குப் பொருத்தமான ஒரு அடர் சிவப்பு நிற ப்ளவுஸையும் போட்டுக் கொண்டாள். தன் தாய் தனக்கு கற்பித்த விஷயங்களில் புடவை கட்டுவது ஒன்று தான் உருப்படியான விஷயம் என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.
ஆறு ஆகி பத்து நிமிடங்கள் தான் ஆகியிருந்தது. அவன் இந்நேரத்தில் என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசித்தாள். கண்டிப்பாக படுக்கையில் கிடக்காமல்
எழுந்து கொண்டிருப்பான்; நிலாக்களுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பான் இல்லை பாகேஸ்வரி, கல்பனா இவர்களுடன் ஏதாவது அரட்டை அடித்துக் கொண்டிருப்பான் என்று நினைத்தாள்.
நேற்றே அங்கு போயிருக்க வேண்டும்! சஞ்சீவ் இவளைப் பார்த்தவுடன், "சொல்லுங்க மிஸ் சந்தனா.... என்ன இந்தப் பக்கம்?" என்று கேட்டு புருவம் உயர்த்துவானோ என்று நினைத்து தான் அங்கு போவதை தவிர்த்து விட்டாள். கதிராவது இரவுநேரத்தில்
அவளைப் பார்க்க வந்து விட்டு ஆலென் கையால் சாப்பிட்டுப் போவான் என்று நினைத்தாள். அப்படியும் எதுவும் நடக்கவில்லை.
தன்னுடைய மன உணர்வுகளை யாரிடமாவது முழுதாக சொன்னால் தேவலை என்று தோன்றியது சந்தனாவிற்கு. அவளுக்குத் தான் அப்படி தன்னுடைய பெர்சனல் விஷயங்களை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு தோழி என்று யாருமே இல்லையே? சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த போது கூட சக பணியாளர்கள் எல்லாரையும் பார்க்கும் போது ஒரு சின்ன புன்னகை செய்வாள்.... அவ்வளவுதான்! மற்றபடி உயிரான தோழி, தோழன் என்று ஒருவர் சந்தனா, ஜெபா இருவருக்குமே அமையவில்லை.
ஒரு ஏற்றத்தில் நின்று திடீரென பள்ளத்தில் விழுந்த இருவரும் சமதளத்தை அடைவதற்காகவே வாழ்வில் நிறைய போராடிக் கொண்டிருந்தனர். இதில் பழைய பழக்கங்களின் குத்தல் பேச்சுகளையும் ஒதுக்கியிருந்தனர்.
புதிய பழக்கங்களை ஏற்றுக் கொள்ளவும் பயந்தனர். அதனால் சந்தனாவுக்கு ஜெபாவும், ஜெபாவுக்கு சந்தனாவும் என சகோதர உறவுக்கு மேல் ஒரு நட்புணர்வையும் வளர்த்துக் கொண்டனர்.
புடவையை மாற்றி கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்துக் கொண்ட சந்தனா திருப்திப்பட்டுக் கொண்டாள். தன்னுடைய படுக்கையில் தலையணைக்குப் பக்கத்தில் ஒரு ஓரமாக கிடந்த வட்ட வடிவ ஸ்மைலி முகத்தை கையில் எடுத்தாள். மஞ்சள் நிறத்தில் கண்களுக்குப் பதிலாக ஹார்ட்டின் வடிவமும், சிரித்த வாயுமாக அழகாக இருந்தது அந்த வட்ட வடிவ தலையணை!
"ஹாய் ஸ்மைலி..... இத்தன நாள் நான் உன்னைய பெரிசா கண்டுக்கிட்டது கூட கிடையாது. பட் இன்னிக்கு..... ம்ஹூம் நேத்து நைட்ல இருந்து எனக்கு சுத்தமா தூக்கமே வரல தெரியுமா? எல்லாம் அந்த ரேஷன் பயலால தான்..... நான் இப்டியெல்லாம் மாறிப் போயிருவேன்னு நானே நினைக்கல..... பட் இந்த சந்தனாவ எனக்கே ரொம்ப பிடிச்சுருக்கு! உனக்கும் என்னை பிடிச்சுருக்கா?" என்று கேட்டவள் அந்த தலையணை ஆமென சொல்வது போல் அதை ஒரு முறை அவளே மேலும் கீழுமாக ஆட்டிக் கொண்டாள்.
"ஓ..... உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கா? ஓகே..... ஓகே!" என்றவள்,
"இனிமே நீ தான் என்னோட ப்ரெண்டு! நான் என் மூச்சு முட்டுற சந்தோஷத்த மட்டும் உங்கிட்ட தான் தனியா, ரகசியமா ஷேர் பண்ணுவேன் என்ன? எனக்கு கதிர்ட்ட இருந்து கிடைக்கப்போற பர்ஸ்ட் கிஸ் கல்யாணத்துக்கு அப்புறம் தான்னு நெனச்சுட்டு இருந்தேன்.... ஆனா அந்தப்பய ரொம்ப மோசம் தெரியுமா?"
"சென்னையிலயும் இப்டித்தான் என்னை டெம்ப்ட் பண்ணி விட்டு வெக்கப்பட வச்சான்! இங்க அவன் வீட்லயும்...... கடவுளே என்னென்ன செஞ்சுட்டான் தெரியுமா? அவனோட கண்ணும், உதடும் அப்டியே என் உடம்புக்குள்ள ஊசி குத்துற மாதிரி துளைக்குது!
கிட்டத்தட்ட பாதி பர்ஸ்ட் நைட்ட முடிச்சுட்டு கட்டுப்பாடா இருக்கேன்னு சொன்னான் பாத்தியா? அங்க நிக்குறான். பட் அந்த இடத்துல எங்க ரெண்டு பேரோட எந்த ஆசைக்குமே ரெண்டு பேரும் நோ சொல்லிக்கவேயில்ல! கேட்டதெல்லாம் குடுத்து சொல்லப்போனா அப்பாடா அப்படிங்கற நிம்மதியான
உணர்வு.... இது ஏன் வந்ததுன்னு தெரியல, ஆனா எனக்கு வந்தது ஸ்மைலி!"
"இன்னிக்கு கதிர் அம்மா கிட்ட பேச ஆன்ட்டிய கூட்டிட்டு இங்க வரப்போறான். இங்க அவனுக்கோ, எனக்கோ மனசு வலிக்குற மாதிரி ஏதாவது கஷ்டம்.... ம்ஹூம்! அந்த மாதிரி இனிமே எனக்கு எந்த கஷ்டமும் வராம இருக்கணும்..... சந்து பாவம்ல? அதுனால அவளுக்கு கஷ்டமெல்லாம் போதுமாம்! இனிமே அவ உன்னை மாதிரி எப்பவும் ஹாப்பியாவே இருக்கணும்னு நீ ப்ளெஸ் பண்ணுவியாம்? டீல்?" என்று பெருவிரல் உயர்த்திக் காட்டி விட்டு
தன்னுடைய புதிய தோழியுடன், அவள் மட்டுமாக என ஐந்தாறு செல்ஃபிக்களை எடுத்து கதிருக்கு அனுப்பி வைத்தாள்.
"இன்னும் அங்க ஒக்காந்துட்டு என்னடா பண்ற? சீக்கிரமா கிளம்பி வாயேன்!" என்று அவள் அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் அப்படி ஒரு ஏக்கம்!
ஒரு மனிதனை ஒரு நாள் பார்க்கா விட்டால் இவ்வளவு ஏக்கம் உண்டாகுமா என்ற அவளது யோசனை ஆச்சரியம் தான் தந்தது அவளுக்கு! அவளைப் போலவே தான் இன்னொருவனும் தன் வீட்டில் புலம்பிக் கொண்டிருந்தான் என்பதை பாவம் சந்தானலஷ்மி அறிந்திருக்கவில்லை. அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்த போது கதிர் குளியலறையில் நின்று குளித்துக் கொண்டிருந்தான். கை, முகம், தலை, கண் என அத்தனையிலும் சோப்பு, ஷாம்ப்பூ நுரையுடன் இருந்தாலும் அலைபேசியை நோண்டியவன்,
"ங்கொய்யால..... சேலையில எப்டி இருக்கா பார்றா கதிரு!" என்று மெச்சிக் கொண்டான்.
"உம்மா..... உம்மா.... உம்ம்ம்ம்ம்ம்மா!" என்ற சத்தத்துடன்
அவனது இதழ் அலைபேசியின் டிஸ்ப்ளேவில் பட்டு அலைபேசியும் சோப்பும் நீருமாக ஆனது.
சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே.....
உள்ளம் எனும் வீடெங்கும்
உன்னழகை நான் தானே
சித்திரத்தை போல் என்றும்
ஒட்டி வைத்து பார்த்தேனே
எனைத் தழுவும் இளந்தளிரே
உனக்கென நான் வாழ்கிறேன்
அற்புத ஓவியம் கண்கள்
கற்றது எப்படியோ
உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ.....
என்னுடைய காதலிய
ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன்
வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க
எம்மனசு சத்திரமா.....
என்று குளித்து முடிக்கும் வரையிலும் சித்திரம் சம்பந்தப்பட்ட பாடல்களாக நியாபகம் இருந்த பாடல்களை இரண்டு இரண்டு வரிகளைப் பாடிக் கொண்டிருந்தான் கதிர்.
அவனுடைய வீக்பாயிண்ட்களில் இது ஒன்று. பின்னணியில் பாடல் ஓடினால் கூடவே சேர்ந்து முழுப் பாடலையும் பாடி விடுவான். இப்படி திடீரென குஷி வந்தால் இரண்டு வரிகளுக்கு மேல் பாடல் நியாபகம் வராது அவனுக்கு. அதுவும் இப்போது பாடியதெல்லாம் அவனது விருப்பப்பாடல் பட்டியலில் உள்ளவை. அதனால் தான் இவ்வளவாவது பாட வருகிறது.
குளித்து முடித்தவன் தலையில் சொட்டிய நீருடன் பனியன், ட்ராக்ஸில் வெளியே வர அந்த அறையில் சஞ்சீவ் கையைக் கட்டிக் கொண்டு தன்னை முறைப்பதைப் பார்த்து, நாக்கைக் கடித்துக் கொண்டான்.
"என்ன....?" என்று கேட்டவனிடம்,
"ஒண்ணுமில்லயே.... நீ போய் குளிச்சு ரெடியாகல? சீக்கிரத்துல சாப்ட்டு கெளம்ப வேண்டாமா? போடா!" என்று சஞ்சீவிடம் சொன்னான்.
"இன்னொருத்தன் நம்ம ரூம்ல இருக்கானே? வாஷ்ரூம்ல நம்ம போடுற சத்தம் அவனுக்கு கேக்கும்ங்குற அறிவு கூடவா இல்ல உங்களுக்கு? அதென்ன உம்மா உம்மா உம்மான்னுட்டு......? திஸ் இஸ் ட்டூ மச்! இந்த ஒலகத்துல நீங்க ஒருத்தர் மட்டுந்தான் லவ் பண்றீங்களா? ஒழுங்கா பிஹேவ் பண்ணுங்க. பாட்டு பாடுறாராம் பாட்டு...... தள்ளுங்க!" என்று எரிச்சலடைந்த குரலில் சொன்ன சஞ்சீவிடம்,
"கோபப்படாதடா தம்பி! குளிச்சுட்டு கொஞ்சம் முடிஞ்ச அளவு சீக்கிரமா.....!" என்று பாவமான குரலில் அவனிடம் சொன்ன கதிரிடம்,
"ஏன் நாங்கல்லாம் பாட்டு பாட வேண்டாமா? அரை மணி நேரம் கழிச்சு தான் வெளிய வருவேன்! என்னை டிஸ்டர்ப் பண்ணாம சத்தமில்லாம ரெடியாகுங்க புரியுதா?" என்று மிரட்டி விட்டுப் போனான் சஞ்சீவ்.
அடுத்த ஒரு மணி நேரத்தில்
சந்தனாவைப் போலவே கதிரும் இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியாக கடக்கும் என எதிர்பார்த்து பாகேஸ்வரி, கல்பனா, ஜனார்த்தனன், சஞ்சீவ், வெண்மதி, இளமதியுடன் வீட்டிலிருந்து கிளம்பும் நேரத்தில் சரியாக கிருஷ்ணராஜ் கதிருடைய காரின் எதிரே வந்து நின்றார்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro