
❤ சிறுநகை 6
"இந்தப் பையன் என்னத்தப் பேசப் போறான்னு யாருக்குத் தெரியும் கண்ணு? இரு அவங்கிட்டயே கேப்போம்!" என்று கல்பனாவிடம் சொன்ன பாகேஸ்வரி தன்னுடைய மகனின் முகத்தைப் பார்த்து,
"சொல்லுய்யா கதிரு!" என்றார் ஒருவிதமான ஆவலுடன்.
"ம்மா..... நான்...... சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்! எனக்கு ஒரு பொண்ணு பாருங்க!" என்று சொன்னவனுடைய பேச்சு எதிரில் அமர்ந்திருந்த இருவரும் சற்றும் எதிர்பாராத பேச்சாக இருந்தது.
"நீ கல்யாணம் பண்றதுன்னா பண்ணிக்க கதிர்! அதுக்கு எதுக்கு அம்மா உனக்காக பொண்ணு பார்க்கணும்?" என்று அவனிடம் கேட்ட கல்பனாவிடம் சலித்த குரலில் உச்சுக்கொட்டிய கதிர் அவளிடம்,
"நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா, எனக்காக அம்மா தானக்கா பொண்ணப் பாக்கணும்....? வேற யாரு பாப்பாங்க? நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருங்க. அம்மா எங்கிட்ட பேசட்டும்!" என்று சொன்னவன் தன் அன்னையிடம்,
"என்னம்மா..... நான் சீக்கிரத்துல கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" என்று கேட்டான்.
"மவராசனா பண்ணிக்க சாமி! உன் கல்யாணத்துக்கு முகூர்த்தம் பாக்குறதுல இருந்து பொண்ணுக்கு பட்டு வாங்குறது வரைக்கும் நானும், கல்பனாவும் சேர்ந்து போயி செய்யுறோம்; ஆனா பொண்ண மட்டும் நீதான்யா பாத்துக்கணும்!" என்று சொன்னார் பாகேஸ்வரி.
"ஏன்.... அது ரொம்ப கஷ்டமான வேலையின்னு நினைச்சு அத செய்ய உங்களுக்கு இஷ்டமில்லையோம்மா? இல்ல நம்ம மகனுக்கு எல்லாம் எவன் பொண்ணு குடுப்பான்னு யோசிச்சீங்களா?" என்று கேட்டவனிடம்,
"உனக்கு ஏன்யா பொண்ணு கிடைக்காது? அதெல்லாம் ராணி கணக்கா ஒருத்தி வருவா பாரு! அம்மா அதுக்காக யோசிக்கல
கதிரு; நீ காலேஜ்ல படிக்குறப்பவே ஏதோ ஒரு பொண்ண ஆசப்பட்டன்னு எனக்குத் தெரியும். இருவத்தோரு வயசுலயே நீ ரொம்ப அழுத்தமான பையந்தான கண்ணு; பொறுப்பில்லாத அப்பன், வெவரந்தெரியாத அம்மான்னு ஒனக்கு கிடைச்ச நாங்க ரெண்டு பேரும் சரியில்லன்னா நீ என்னதாம் பண்ணுவ பாவம்...... ஆனா என்னதான் வெவரமில்லாதவளா இருந்தாலும் நீ யார் மேலயோ பிரியம் வச்சிருந்தது மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சது ராசா!"
"அந்தா சொல்லுவ, இந்தா சொல்லுவன்னு பாத்து பாத்து இத்தன வருஷம் ஓடுனதுதா மிச்சம்; நீ இன்னும் அந்தப் பொண்ணப் பத்தி ஒன்னையும் எங்கிட்ட சொல்லக் காணும். ஏன்யா அந்தப்புள்ள ஒன்னைய விட்டுட்டு வேற எந்தப் பயலயாவது கல்யாணம் பண்ணிக்கிட்டதால தான் நீ இத்தன வருஷத்துல ஒருதடவ கூட கல்யாண பேச்சையே எடுக்கலயா?" என்று பதில் கேள்வி கேட்டார் பாகேஸ்வரி.
"கதிர்..... மனசு விட்டுப் பேசணும்னு தான் நீ இங்க வந்து உட்கார்ந்துருக்க; பேசணும்னு நினைக்குறத இப்பவே தெளிவா பேசி முடி; உங்க அப்பா வந்துட்டா நமக்கு இவ்வளவு ரிலாக்ஸா பேசுறதுக்கு டைம் கிடைக்காது!" என்று சொன்ன கல்பனாவிடம் மெல்ல தலையசைத்தவன் அப்போதும் எதையோ யோசித்தபடி தான் அமர்ந்திருந்தான்.
"கதிரு..... எனக்கு வாய்ச்ச வீட்டுக்காரரு அவ்வளவு நல்லவரு இல்ல தங்கம்! பொய் சொல்றது, பொறுப்பில்லாம எங்கயாவது சுத்துறது, வேல வெட்டிய பாக்காம எவம்பின்னாலயாவது அப்பப்ப போயிடுறதுன்னு இருந்தாலும்
உங்கப்பா மாதிரி ஆளே அவரோட
வாழ்க்கையில சந்தோஷமா தான தங்கம் இருக்காரு? அப்ப ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத, சொல்ற மாதிரி ஒரு குறை கூட இல்லாத நீயெல்லாம் உங்கல்யாண வாழ்க்கையில எவ்வளவு சந்தோஷமா இருக்கணும்? யோசிச்சுப் பாருய்யா!" என்று அவனிடம் சொன்ன பாகேஸ்வரி,
"நீ வெளியூர்ல இருந்தாலும் ஒங்கூட பேசுறப்ப எல்லாம் உங்கல்யாணத்த பத்தி பேசி தூரத்துல இருக்குற ஒன்னைய கஷ்டப்படுத்த வேணாமுன்னு தான் தங்கம் அம்மா இத்தன நாளா அந்தப் பேச்சையே எடுக்கல. ஆனா நீயே இன்னிக்கு இதப்பத்தி பேசிட்ட பிறகு இனியும் நான் சும்மாயிருக்க மாட்டேன். நீ ஆசப்பட்ட பொண்ணு இந்த பூமியில உயிரோட தானய்யா இருக்கா?" என்று கேட்ட தன் அன்னையிடம்,
"ஆமாம்மா!" என்றான் கதிர் கம்மிய குரலில்.
"ரொம்ப சந்தோஷம். அந்தப்புள்ளைக்கு வேற எந்த ஆம்பள கூடயும் கல்யாணம் ஆகிடலல்லய்யா?" என்று கேட்டவரிடம் இல்லையென தலையை மட்டும் அசைத்தான்.
"அப்ப நீ ஆசப்பட்ட பொண்ணே தான்யா எம்மருமக! ஒனக்கு 31 முடியறதுக்குள்ள நீ குடும்பஸ்தனாயிருக்க தெரியுதா? இந்த விஷயத்துல உங்கப்பன் என்ன சொல்லுவாரோன்னு எல்லாம் யோசிச்சுட்டு இருக்காத; அந்த புள்ளயோட வீட்லயும், அந்த புள்ளையும் மட்டுந்தான் சம்மதம் சொல்லணும். அத மட்டும் எப்டி சரிகட்டுறதுன்னு யோசி! சரியாய்யா?" என்று கேட்ட பாகேஸ்வரியிடம் சின்னதாக தலையசைத்த கதிர் இவ்வளவு நேரமாக வாயில் விரலை வைத்துக் கொண்டு அவர்கள் மூவரையும் தன் குண்டு கண்களால் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையிடம் ஏதாவது விளையாடுவோம் என்று நினைத்து இளமதியை தூக்கிக் கொண்டு அவள் அறைக்குள் சென்றான்.
"ஐய... என்னம்மா நீங்க? இத்தன வருஷமா அவன் ஏன் கல்யாணம் பண்ணிக்கலங்குற கேள்விய கேக்காமயே உட்டுட்டீங்க? ஆசைப்பட்ட பொண்ண விட்டுட்டு பத்து வருஷமா தனியாவே இருந்துட்டு இப்ப எனக்கு ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிக்கிட்டு வந்து நிக்குறான்! இவனுக்கு என்ன தான் பிரச்சனைன்னு தெரியலயேம்மா?" என்று கேட்டு தலையைப் பிடித்துக் கொண்ட கல்பனாவிடம்,
"கண்ணு.... அவன் நம்பகிட்ட
இவ்வளவு பேசுனதயே என்னால நம்பவே முடியல. அந்தப் பொண்ண உள்ளுக்குள்ள ரொம்ப தேடுறானோ என்னவோ.....?
நீ மட்டும் தனியா போயி அவங்கிட்ட பேசும்மா! நானும் உங்கூட இருந்தன்னா அவன் இதுக்கு மேல வேற எதுவும் பேசுறானோ இல்லையோ?" என்று சற்று ஆதங்கத்துடன் சொன்னார் பாகேஸ்வரி.
தன் மகள்கள் இருவரின் ஸ்டடி ரூம் மற்றும் படுக்கை அறையாக அவ்வப்போது பயன்படும் அந்த அறைக்குள் கல்பனா நுழைந்த போது கதிரின் வயிற்றுப் பகுதியில் சாய்ந்து கொண்டு நின்ற இளமதி தன் அன்னையை முறைத்து விட்டு,
"கதவ தட்டிட்டு வத மாட்டியா?" என்று கேட்டாள்.
"ஏய் குட்டிக் கொரங்கு; என்ன இவன பாத்தவுடனே உன் வாய் எங்கிட்ட இஷ்டத்துக்கு பேச ஆரம்பிக்குது? இவன் இங்கருந்து இன்னிக்கு நைட்டோ, நாளைக்கோ கிளம்பிடுவான். அதுக்கப்புறம் நீ எங்க கிட்ட தான்டீ வரணும்! என் நேரம்...... நான் ஒன்னைய மாதிரி நண்டு கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டியதிருக்கு பாரு!" என்றவள் கதிரின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு,
"ம்ம்ம்! சொல்லுடா!" என்றாள் அவன் முகத்தைப் பார்த்த படி.
"சொல்லுடான்னு மட்டும் கேட்டா எதன்னு சொல்றது? எதப்பத்தி சொல்லணும்னு சொல்லுங்க. அதப்பத்தி சொல்றேன்!" என்று கல்பனாவிடம் சொன்னவன் இளமதியை காலில் ஏற்றி சற்று தூரம் வரை தூக்கி இறக்கி விளையாடிக் கொண்டிருந்தான்.
"மாமா அம்மாவ வெளிய போவச் சொல்லு!" என்று சிணுங்கிய குழந்தையிடம் கோபத்துடன்,
"எங்க உங்க மாமாவ எங்கிட்ட அப்டி சொல்லித்தான் பாக்கச் சொல்லேன் பாப்போம்!" என்று சிலிர்த்துக் கொண்டு நின்றாள் கல்பனா.
"குட்டிநிலா.... அம்மாட்ட இப்டியா பேசுவாங்க? அவங்களுக்கு ஸாரி சொல்லு!" என்று குட்டிப் பெண்ணிடம் அவன் கேட்டதும் அவளுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.
"போதா! நா பாட்டிட்ட போறேன்!" என்று அவனிடம் சொல்லி விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.
"இந்தக் குழந்தைங்களுக்கு ஸாரிங்குற வார்த்தைய சொல்றதுல என்ன தான் பிரச்சனையோடா கதிர்......? ஸாரி அதுங்க வாயில இருந்து லேசுக்குள்ள வரமாட்டேன்னு அடம்பிடிக்குது! நீ வா; நாம கொஞ்சம் இம்சை இல்லாத இடத்துல போய் உக்காந்து பேசுவோம்!" என்று அவனிடம் சொல்லி விட்டு அந்த அறையிலிருந்து அவனை அந்த வீட்டின் கிச்சனில் வராண்டாவில் இருந்து வெளிப்புறம் பரந்திருந்த லான் பகுதிக்கு கூட்டிச் சென்று அங்கே அமரச் சொன்னாள் கல்பனா.
"இது நமக்கே நமக்கான இடம்! இங்க எந்த டிஸ்டர்பென்ஸூம் இல்ல; இப்ப சொல்லு திடீர்னு ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு அம்மாட்ட கேட்ட?" என்று கேட்டவளிடம்,
"கல்யாணம் பண்ணி வைங்கன்னு எதுக்கு கேப்பாங்க கல்பனாக்கா? கல்யாணம் பண்ணிக்குறதுக்கு தான்!" என்றான் கதிர் குறுஞ்சிரிப்புடன்.
"டேய்..... அப்பலேர்ந்து நீ என் பொறுமைய ரொம்ப சோதிச்சுக்கிட்டு இருக்க! நான் உங்க அம்மாவ மாதிரியெல்லாம் கிடையாது. எனக்கு கோபம் வந்துச்சுன்னா ஓங்கி அப்பிருவேன் பார்த்துக்க!" என்று கையை நீட்டிக் கொண்டு நாக்கை துருத்தியவளிடம் மென்சிரிப்புடன்,
"நீங்க கைய ஓங்கி காட்டி என்னை பயமுறுத்த.... நான் என்ன வெள்ளநிலாவா இல்ல குட்டிநிலாவாக்கா? சரி; அடிச்சுருவேன் அடிச்சுருவேன்னு சொல்றீங்களே..... ஒரு நாளாவது பிள்ளைங்க மேல கை நீட்டியிருக்கங்களா? எங்க அம்மாட்ட நான் வாங்குன அடியெல்லாம் எனக்கு இன்னும் ரொம்ப தெளிவா நியாபகம் இருக்கு. அதுனால இப்ப நீங்க என்னை அடிச்சாலும் அத சந்தோஷமா வாங்கிக்குவேன். வேண்டாம் என்னை அடிக்காதீங்கன்னெல்லாம் சொல்ல மாட்டேன்!" என்று சொன்னவனிடம் உச்சுக்கொட்டிய கல்பனா,
"என்ன கதிர் விளையாண்டுக்கிட்டு இருக்க? நான் உங்கிட்ட எவ்ளோ முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருக்கேன். நீ என்னடான்னா அந்த டாபிக்குள்ளயே நுழையாம எஸ்கேப் ஆகிட்டு இருக்க?" என்று கேட்டபடி நொந்து கொண்டாள்.
தன்னுடைய பிரச்சனையை தனது தாய்க்கும், நண்பனுக்கும் அடுத்தபடியாக இந்த சகோதரி காது கொடுத்து கேட்கின்றாளே என்ற உணர்வே கதிருக்கு அவனுடைய இப்போதைய நிலையை கல்பனாவிடம் சொல்லத் தூண்டியது. ஆனால் தனது மனப்போக்கை அப்படியே வெளியில் உரைப்பதற்கும் அவனுக்கு சற்றே பயமாக இருந்தது. கல்பனாவின் கண்களை தயக்கமாக நோக்கியவன் அவளிடம்,
"விஷயம் இதுதான்க்கா! நான் முன்னால அவள விட கீழ இருந்தேன்; இப்ப அவ கீழயும், நான் மேலயும் இருக்கோம். அதுனால அவளுக்கு எங்கிட்ட காதல் பொத்துக்கிட்டு வந்துடுச்சு. நீதான் பணம் வச்சுருக்கியே..... இப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டு ஒருநாள் வந்து நின்னா; உன்னைய கொல பண்ணிடுவேன்; மரியாதயா ஓடிப்போயிடு; எம்மூஞ்சியிலயே முழிக்காதன்னு சொல்லி அவள திருப்பி அனுப்பி விட்டுட்டேன்;
"அவள பக்கத்துல சேத்துக்கவும் முடியல; ஒருதடவ எங்கிட்ட அவ வந்துட்டுப் போனதுல இருந்து அவள இனிமே பாக்காம இருக்க முடியும்னும் தோணல. இப்ப நான் என்னதான்க்கா பண்ணனும்?" என்று கேட்டவனிடம்,
"அவள லவ் பண்ணு; இப்பவே பண்ற தான்..... அந்த லவ்வ இன்னுங்கொஞ்சம் அதிகமாக்கு; அப்புறம் அவ பண்ணுன தப்பு எல்லாம் உனக்கு கொஞ்சம் கொஞ்சமா மறந்து போய்டும்; ஃபைனலி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே தான்!" என்று சிரிப்புடன் சொன்னாள் கல்பனா.
"ஆனந்தமும் கிடையாது; ஒரு மண்ணும் கிடையாது! அவள நினைச்சாலே உடம்புல மிளகா பட்ட மாதிரி எரியுதுங்குறேன்; இப்பவே பண்ற; இன்னுங்கொஞ்சம் பண்ணுன்னு உளறுறீங்க! நான் அவள கண்டிப்பா பழிக்குப் பழி வாங்கியே தீரணும் கல்பனாக்கா! என்னைய வேண்டாம்னு சொன்னவளுக்கு அவ்வளவு ஈஸியா எல்லாம் நான் கிடைச்சிடக்கூடாது!" என்று பல்லைக் கடித்தவாறு இறுகிய குரலில் உரைத்தவனைப் பார்த்துக் கொண்டிருந்த கல்பனாவிற்கு தன் எதிரே அமர்ந்திருந்தவனின் மனநிலை பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு பெரிய நூல்கண்டு போல தெரிந்தது.
இவனிடம் இப்போது என்ன பேசினாலும் சரிவராது என்று நினைத்த படி அவன் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தாள். இரண்டு நிமிடங்களில் அவன் ஓரளவிற்கு அமைதியடைந்த பின்னர் அவனிடம்,
"டேய் தம்பி கருவேப்பில கொத்தமல்லி மாதிரி அவளுக்கு நீ ஈஸியா கிடைக்கிறியோ... இல்ல ப்ளாட்டினம் மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டு கிடைக்கிறியோ? எப்டியும் நீ அவளுக்குக் கிடைக்கப்போறன்னு ஆகிப் போச்சுல்ல? அப்புறம் என்னடா பழிக்குப் பழி புளிக்கு புளின்னு என்னத்தயோ உளறிட்டு இருக்க? அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லு! நான் அவ கிட்ட போய் சில விஷயத்த பேசுணும்!" என்று சொன்ன கல்பனாவிடம்,
"ரைட்டர் பட்டுக்கோட்டை பிராபகரோட நாவல்ஸ் படிச்சிருக்கீங்களாக்கா நீங்க?" என்று கேட்டான் கதிரேசன்.
"டேய்.... நான் இங்க எவ்ளோ முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன். நீ என்னாடான்னா சம்பந்தமேயில்லாம திடீர்னு ரைட்டர் பட்டுக்கோட்டை பிரபாகர் கிட்ட போயிட்ட! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா!" என்று சற்றே அசதியான குரலில் கேட்ட கல்பனாவிடம்,
"அவரோட ஒரு நாவலோட தலைப்பு தான் உங்க கேள்விக்கு என்னோட பதில்.....!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து எழுந்தவனின் கூடவே ஓடிச் சென்று,
"டேய் கதிர்..... நீ லவ் பண்ற பொண்ணு யாருங்குறத கூட நான் வேற வழியில கண்டுபிடிச்சுக்குறேன்டா! ஆனா இப்ப என்னமோ அதான்கா இது, இதுதான்கா அதுன்னு ஏதோ ட்டூ இன் ஒன் கத சொன்னியே..... அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போடா. உனக்கு புண்ணியமாப் போகும்!" என்று கேட்டவளிடம்,
"அது மட்டும் ரகசியம்!" என்று மெதுவான குரலில் சிரிப்புடன் சொல்லி விட்டு "நான் இன்னிக்கு நைட் ஊருக்கு கிளம்புறேன்க்கா. வெண்மதி ட்யூஷன் போயிட்டு வந்த அப்புறமா அவள கொஞ்ச நேரம் வீட்டுக்கு வந்துட்டு போக சொல்லுங்க, இல்ல என்னை கூப்டுங்க! இப்ப கிளம்புறேன்!" என்று அவளிடம் சொல்லி விட்டு சென்றான் கதிர்.
தன் தாயிடம் பேசி விட்டு ஊருக்கு வந்ததில் இருந்து கதிருக்கு ஒருதடவை அவள் வீட்டிற்கு சென்று வந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. இரண்டு நாட்களில் இருபதாயிரம் முறையாவது இதை நினைத்து தவித்திருப்பான். அன்றைய மதியம் சாப்பாட்டை முடித்துக் கொண்டு சாவகாசமாக அமர்ந்திருந்த வேளையில் சஞ்சீவ் அவனிடம்,
"பாஸ்.... அடுத்து எப்போ சென்னைக்குப் போறோம்?" என்று கேட்க கதிர் சிறு சிரிப்புடன்,
"எதுக்கு..... மறுபடியும் நீ ஒரு ஷாப்பிங்கை போடுறதுக்கா? இந்தவாட்டி நீ எங்கூட சென்னைக்கு வந்திருந்தியா வரலையான்னு எனக்கு ஒரு டவுட்டே வந்துருச்சு தெரியுமாடா? இங்கல்லாம் எங்கூடவே இருக்குறவன் அங்க எப்பப் போனாலும் ஷாப்பிங் போறேன், சினிமா போறேன், தீம் பார்க் போறேன்னு சொல்லி என்னைய தனியா விட்டுட்டுப் போய்டுற! அம்மாவும், கல்பனா அக்காவும் அவளப் பத்திக் கேட்டு என்னை என்ன கொட கொடஞ்சாங்க தெரியுமா?" என்று சஞ்சீவிடம் குறைபடித்தான் கதிர்.
"பாஸ்..... நீங்க தனியா இருக்கும் போது உங்க கூடவே சுத்துறது சரிதான்; ஆனா நீங்க உங்க பேமிலி மெம்பர்ஸ பாக்க பர்சனல் விஸிட்டுக்காக போகும் போது நான் எப்டி உங்க கூடவே சுத்திட்டு இருக்க முடியும்? அதான் சென்னை போனா உங்கள கொஞ்சம் ஃப்ரீயா விட்டுட்டு, நானும் கொஞ்சம் ஃப்ரீயா இருக்குறது! மிஸ் சந்தனா விஷயத்துல நீங்க அடுத்து என்ன முடிவெடுக்குறதா இருக்கீங்க? என் கெஸ் கரெக்ட்டுன்னா அவங்களையும் அவங்க வீட்லயே போய் ஒரு ப்ரெண்ட்லி விஸிட் மாதிரி மீட் பண்ணுவீங்க..... அப்டித்தான?" என்று கதிரிடம் கேட்டான் சஞ்சீவ்.
"ம்ப்ச்! அப்டித்தான்டா நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நான் யாரு? அவங்க யாரு? அவங்க கிட்டப் போயி அவள எப்டிடா கல்யாணம் பண்ணிக் குடுங்கன்னு தைரியமா கேக்குறது?" என்று யோசனையுடன் கூறிய படியே சஞ்சீவின் முகத்தைப் பார்த்தான்.
"ஐயய.... எந்நேரம் பாரு நான் யாரு நான் யாருன்னு புலம்பிக்கிட்டு? நீங்க யாருன்னு உங்களுக்கு இன்னும் சரியா புரியல பாஸ். நீங்க ஒரு பேமஸ் ஆர்ட்டிஸ்ட் ரேஷ்; உங்கள பாக்க, உங்களுக்குள்ள இருக்குற இந்த அழகான ஸ்கில்ல பத்தி தெரிஞ்சுக்க வேர்ல்டு லெவல்ல நிறைய பேரு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. ஆனா நீங்க யார் கையிலயும் சிக்காம நீங்க உண்டு, உங்க வேலை உண்டுன்னு என்னைய மட்டும் உயிர வாங்கிட்டு இருக்கீங்க. உங்க
காம்ப்ளெக்ஸ தூக்கி ஒரு ஓரமா போடுங்களேன் பாஸூ!" என்று திட்டியவனிடம்,
"முடியலயேடா சஞ்சீவ்.....! எனக்குள்ள இருக்குற திறமைக்கு உள்ளூர்ல ஏன் வெளிநாடு வரைக்கும் நல்ல அங்கீகாரம் கிடைச்சிருக்கு தான்; ஆனா ஒரு சாதாரண மனுஷனா, கதிரேசனா எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்குமாங்கறத அவ கிட்ட தான் போய் கேக்கணும்; வேற யாரோட கருத்தும் எனக்கு வேணாம். ஒரே ஒருத்தி..... என்னைய பாத்து அவ பக்கத்துல நிக்குறத பத்திக் கூட ஒருநாளும் யோசிச்சுடாதன்னு சொன்னால்ல அவளோட ஒப்பினீயன் மட்டுந்தான் எனக்கு வேணும்!" என்று சொன்ன படி எங்கோ இலக்கில்லாமல் பார்த்தபடி மேஜையில் குத்தினான் கதிரேசன்.
"சரி சரி..... மேஜையில குத்தி கண்ணாடிய உடைச்சுடாதீங்க
பாஸ்; அது சரி; நேரா டைரக்டா கல்யாணத்துக்கே போயிட்டீங்களே? அப்போ மிஸ் சந்தனாவ மன்னிச்சு அவங்க கூட ஒரு ஸ்மூத்தான வாழ்க்க வாழணும்னு ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா? இவ்ளோ சீக்கிரத்துல அப்டி ஒரு நல்ல முடிவ எடுத்துட்டீங்களா?" என்று பரபரத்த படி கதிரிடம் கேட்டான் சஞ்சீவ்.
"டேய் என்ன விளையாடுறியா நீ? அவளை நான் மன்னிக்கவும் இல்ல; அவ செஞ்சதெல்லாம் மறக்கவும் இல்ல! ஆனா அவ எங்கூடவே இருக்கணும்னு மட்டுந்தான் முடிவு எடுத்துருக்கேன்; அவள எம்பக்கத்துல கொண்டு வந்து வச்சுக்கிட்டு, அவ எங்கூட இருக்குறப்ப என்னோட உணர்வுகள் அமைதியா இருக்கா? இல்ல வழக்கம் போல கொதிச்சுக்கிட்டே இருக்கான்னு டெஸ்ட் பண்ணிப் பாக்கப் போறேன்!" என்று சொன்ன கதிரிடம்
"உங்கள அசிங்கமா ஏதாவது சொல்லி திட்டிடப் போறேன் பாஸ்!" என்று சொல்லி கதிரை கேவலமான ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.
"நீ என்னை என்ன சொல்லி திட்டுனாலும் பரவாயில்ல; நான் நினைக்குறத நான் செய்யத்தான் போறேன் சஞ்சீவ்! எனக்கு அவசரமா ஒரு டென் எல் வேணுமே.... கிடைக்குமாடா?" என்று கேட்ட கதிரிடம்,
"எதுக்கு..... ஒரு பொண்ண டெஸ்ட் சாம்பிளா வாங்கிட்டு வர்றதுக்கு தான அந்தக் காசு? பேங்க்ல ட்ரா பண்ணித் தர்றேன்; ஆனா ஒண்ணு..... இப்டி ஒரு சீப்பான வேலை செஞ்சீங்கன்னா, நீங்க ஒரு க்ரியேட்டரே இல்ல பார்த்துக்கங்க!" என்று சொன்னான் சஞ்சீவ்.
"டேய்.... நீ சொல்ற மாதிரி காசு குடுத்து ஓட்டிக்கிட்டு வர்றதுக்கு அவ என்ன பால்மாடுன்னு நினைச்சியா? சுடிதார் போட்ட ஒரு காட்ஸில்லாடா; ஆய்ஞ்சுபுடுவா ஆய்ஞ்சு..... நீ எனக்காக வேணும்னா பாவப்படு;
அவளுக்காக பாவப்படவே படாத!"
"எனக்கு நானே செய்வினை வச்சுக்க ஒரு சூனியபொம்மைய வாங்குற மாதிரி தான் நம்ம கிட்ட வேலை பார்க்க நான் அவள கூட்டிட்டு வரப்போறேன்; ஸோ முதல்ல அவளுக்கு ஏத்த மாதிரி ஒரு வேலையத் தேடு!" என்று சொன்ன கதிர் தன்னுடைய அறையில் குட்டி குட்டி எல்ஈடி பல்புகள் பொருத்தப்பட்ட டிஸைன் ஃபால்ஸ் சீலிங்கை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.
"ஆளுக்கு ஏத்த வேலை குடுக்குறதெல்லாம் சரிதான்; உங்க சூனிய பொம்ம என்ன படிச்சிருக்காங்க?" என்று கேட்ட சஞ்சீவை உறுத்த விழிப் பார்வையால் முறைத்தான்.
"எனக்கு மட்டுந்தான்டா அவ சூனியபொம்மை. நீ மிஸ். சந்தனாவுலயே இரு என்ன? அவ என்ன படிச்சிருக்கான்னு தெரியல. போறப்ப கேட்டுட்டு சொல்றேன்!" என்று சஞ்சீவிடம் சொல்லி விட்டு தன்னுடைய புதிய ஓவியத்தை விட்ட இடத்தில் இருந்து தொடரும் பணிக்கு சென்று அமரப் போனான்.
"சுமா..... ப்ளீஸ் புரிஞ்சுக்கோம்மா! நடக்கப்போறது உங்கண்ணன் பையன் கல்யாணம்னாலும் நம்மளால என்ன செய்ய முடியுமோ அதத்தான்மா கல்யாணப்பரிசா வாங்கிக் குடுக்க முடியும்; இதுல எல்லாம் கவுரவம் பாக்காத சுமா!" என்று தன் மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்த ஆலென் தொடர் வாக்குவாதத்தால் சற்றே ஓய்ந்து போயிருந்தார்.
சந்தனா தன்னுடைய அறைக்குள் காதைப் பொத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். இன்று விடுப்பு எடுத்து வீட்டில் இருந்ததற்கு பதிலாக வேலைக்கே சென்றிருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.
ஒருலட்சம் ரூபாய்க்கு திருமணப் பரிசு வாங்கும் நிலைமையிலா அவளது குடும்பம் இப்போது இருக்கிறது?
மூன்று பேரும் சேர்ந்து முக்கி முக்கி சம்பாதிக்கும் முப்பதாயிரத்தில் துண்டு விழாமல் பட்ஜெட் போடுவதற்கே ஒவ்வொரு மாதமும் முழி பிதுங்குகிறது! இதில் நான் என் அண்ணன் மகன் கல்யாணத்தில் கேவலம் ஒருலட்சத்துக்காவது பரிசு தர வேண்டாமா என்று தன் அன்னை கேட்ட கேள்வியில் சந்தனாவுக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது.
ஜெபா, ஆலென் இருவரும் இரண்டு நாட்களாக சுமலதாவின் பக்கம்
தலையையே நிமிர்த்தாமல் அவள் கண்களைத் தவிர்த்து வந்தனர்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro