பொள்ளாச்சியில் ஆண்களுக்கான கேஷூவல் வியரில் இருந்து
திருமண சூட்கள் வரையிலும் நிச்சயதார்த்தம், பார்ட்டிகளுக்கான ப்ளேஸர்ஸ் தைக்கவும் புகழ்பெற்ற Fit and Bright Suits கடையின் முன்பாக தன்னுடைய எண்ஃபீல்டை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் சஞ்சீவ்.
இங்கு அவனுக்கு சில வேலைகள் இருந்தன. இங்கிருக்கும் ஒருத்தியிடம் நிறைய பேச வேண்டும். நிறைய கேட்க வேண்டும். அதற்காக தான் இந்த விஜயம்!
வேறு வேறு துணிகளில், டிஸைன்களில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த கோட்ஸ், ப்ளேஸர்ஸை பார்வையிட்ட படியே அந்தக் கடையின் வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சென்று உங்கள் முதலாளியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு தன்னுடைய விஸிட்டிங் கார்டை அவரிடம் நீட்டினான்.
அவன் தந்த கார்டை கொண்டு வந்து தன்னுடைய முதலாளியிடம் நீட்டிய படி தன்னை விட வயதில் மிகவும் சிறிய தன் முதலாளியிடம்,
"இந்தாரு குணாப்புள்ள.... ஒன்னைய பாக்கணும்னு சொல்லிக்கிட்டு ஒரு கஸ்டமரு வந்துருக்காரு! ஆளு பாக்க தெலுங்கு படத்துல எல்லாம் நடிக்குமே ஒரு தம்பி அது பேரு கூட...... பொத்துன்னு விழுகுறாப்ல...... என்னவோ ஒண்ணு வருமே!" என்று சொன்ன தன்னுடைய உதவியாளர் சுந்தரவடிவு அக்காவிடம் அவனது விசிட்டிங் கார்டை பார்வையிட்டபடி,
"வடிவக்கோவ்..... நீங்க இப்டி பேசுறத கேக்க முடிஞ்சா ஆக்டர் ராம் பொத்தினேனி ஒங்க வாய் மேலயே பொளுக்குன்னு ஒரு குத்து உடப் போறாராட்டம் இருக்கு! வந்துருக்குறது கஸ்டமரு இல்லீங்கக்கா..... அவரு என்ற ஆளு! அவர வாயப் பொளந்துக்கிட்டு பாத்ததெல்லாம் போதும்; மளமளன்னு கடைக்குப் போயிட்டு ரெண்டு வெனிலா மில்க் ஷேக் வாங்கிட்டு வந்துடுங்க!" என்று சொன்னவள் விரிந்த புன்னகையுடன் தனது ரோலிங் சேரிலிருந்து எழுந்து சென்று அவனை அந்த அறை வாசலில் நின்று வரவேற்றாள்.
"வாங்க தல! இன்னிக்கு பொள்ளாச்சியில சாரக்காத்தோட மழ அடிக்குதா என்ன? நீங்களே நம்பள தேடி நம்ம பக்கம் ஒதுங்கீருக்கீங்க! ஒக்காருங்க! ஒங்க வீட்ல அதான் நம்ப வீட்ல கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டீங்களா?" என்று சொன்னவளை ஒருமாதிரியாக பார்த்தபடியே அந்த அறையின் கதவை கையால் ஸ்டைலாக தள்ளினான் சஞ்சீவ்.
"ஏனுங்க.... நான் உங்க கிட்ட என்ன கேட்டா நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இந்த கதவ சாத்துனா உள்ளுக்குள்ளார இருந்து லாக் ஆகிக்கிடுமுங்க! நான் உங்களுக்கு மில்க்ஷேக் வாங்கிட்டு வர சொல்லியிருக்கனுல்ல?" என்று அவனிடம் சொல்லி விட்டு கதவருகில் சென்றவளிடம்,
"அது கூட தெரியாமயா கதவ நான் மூடுனேனுங்க? நாங்க வேல பாக்குற எடமும் ஒண்ணும் பொட்டிக்கட இல்லிங்க! இந்தக்கட மாதிரி அதுவும் பெரிய எடந்தானுங்க! அதுனால ஆட்டோமேடிக் லாக் பத்தியெல்லாம் எங்களுக்கும் தெரியுமுங்கம்மணி!" என்று அவளைப் போலவே பேசிக் காட்டியவனை பார்த்து புன்னகைத்தவள்,
"நம்ம ஊர்க்காரவிய்ங்க மாதிரியே நல்லாத்தான் பேசுறீங்க......!
சரி ஒங்ககிட்ட என்னத்துக்கு தேவையில்லாம வாயக் குடுத்துக்கிட்டு? கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டீங்களான்னு ஒரு கேள்விய கேட்டேன். அதுக்கு மட்டும் பதிலக் காணுமுங்க? என்னைய கட்டிக்கிட பயமா இருக்கா?" என்று கேட்டவளிடம்,
"இல்லையே.....!" என்று தலையாட்டியவன்,
"உங்கள கட்டிக்கிட எனக்கென்ன கசக்குதா அம்மணி?" என்று கேட்டு அவளுடைய அருகில் வந்து அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை தன்னுடைய அணைப்பிற்குள் கொண்டு வந்தான்.
"நேத்து சாயங்காலம் நீங்களும் உங்க அப்பாரும் சேந்து ஷவர்மா சாப்புடு போனீங்களாட்டம் இருந்துச்சு! சாப்பாடு சாப்ட போனா, அத மட்டுந்தானுங்க சரியா செய்யணும். அத உட்டுப்போட்டு அந்நேரத்துல போயி பொன்னுரங்கம் தாத்தா அவிய்ங்க குடும்பத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு போறத நெனச்சா கொஞ்சம் கெதுக்கு கெதுக்குன்னு இருக்குப்பான்னு உங்கப்பாருட்ட மூக்க சிந்தக்கூடாது. பக்காத்தால ஒக்காந்து எவனாவது உங்க பேச்ச முழுசா கேட்டு, அத வேற எவங்கிட்டயாவது புள்ளி கமா மாறாம சொல்லியும் இருக்கலாம்!" என்று சொன்னவனிடம்,
"ஏராசா..... என்னைய வேவு பாத்தீங்களாக்கும்? அதான் இங்க நேர்ல வந்துருக்கீங்க....?" என்று அவனிடம் கேட்டாள்.
அவளது கேள்விக்கு ஆமென தலையாட்டியவன் அவளது
கண் இமைகளை உரசும் அளவிற்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.
அவனது சட்டையிலிருந்து சற்றே அதிகமாக வந்த லாவண்டர் ஸ்ப்ரேயின் மணமும், அவனது க்ளீன் ஷேவ் மற்றும் ரோஜா நிற இதழ்களின் நிறமும், ஆண்களில் இவன் வெள்ளை ரகம்தான் என்று சொல்லும் கலர் காம்ப்ளக்ஷனும், அவளது ஹீல்ஸின் புண்ணியத்தால் ஒரே உயரத்தில் இருந்த இருவரது தோளும், ஒற்றை சுருக்கம் கூட இல்லாமல் அயர்ன் செய்து அவன் அணிந்திருந்த முழு வெள்ளை நிற ஸ்லிம் ஃபிட்டும், அதற்கு போட்டியாக கறுநிற பேண்ட்டும், படிய வாரியிருந்த அவனது தலைமுடியும் என்று அவனது இத்தனை அம்சங்களும் வரிசையாக பொழியும் அம்பு சரங்கள் போல் நெஞ்சைத் துளைக்க இவன்
இவ்வளவு பக்கத்தில் நின்று கொண்டா தன்னை இம்சிக்க வேண்டும் என்று நினைத்து பேச்சில்லாமல் நின்று கொண்டிருந்தாள் குணாளினி.
"என்ன ஆச்சுங்க? அப்டியே பேச்சு மூச்செல்லாம் ஒடுங்கிப் போயி என்னயவே ஆன்னு பாத்துக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கீங்க?" என்று அவளிடம் கேட்டு கண்ணடிக்க,
"ம்ப்ச்! என்னைய கிண்டல் பண்ணுற விட்டுட்டு ஒழுங்கா பேசப் போறீங்களா? இல்லையா?" என்று கேட்டாள் அந்தப் பாவை.
"ஒழுங்கா பேசணுமா? நான் பேசிடுவேன். என்ன உனக்குத்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும் பரவாயில்லயா?" என்று கேட்டவனை புரியாத பார்வை பார்த்தாள் குணா.
"என்ன இன்னொசென்ட் மாதிரி லுக் விடுற? உன்னை கட்டிக்க எனக்கு பயம் இல்ல! என்னைக் கட்டிக்க உனக்குத் தான் பயமாயிருக்கு அப்டித்தான....?" என்று கேட்டவனிடம் பதில் பேசாமல் சற்று தயங்கி,
"அப்டியெல்லாம் இ.....!" என்று தொடங்கியவளின் இதழ்களை தன் ஒரு கையால் மூடியவன்,
"இல்லன்னு பொய் சொல்லாத! எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சுடுச்சு. என்னைய நீ அடிச்ச அன்னிக்கே எங்க பேமிலியில இருக்குறவங்க ஏகபோகமா உன்னை அவங்க வீட்டு மருமகளா செலக்ட் பண்ணிட்டாங்க! ஸோ நீ படிச்சது, இந்த ஷாப், உன்னோட கஸ்டமர்ஸ் எல்லாத்துக்கும் என் பேமிலியோட இன்டேரக்ட் ஸப்போர்ட் இருந்துருக்கு! அதுனால தான் உன்னால இவ்ளோ சீக்கிரத்துல இந்த பொஸிஷன்ல வந்து உக்கார முடிஞ்சது! எங்க தாத்தா பாத்து ஓகே பண்ணி வச்ச பொண்ணு நீ; உங்க பிஸினஸ தவிர எல்லாரோட கடைக்கும் எங்க கம்பெனி செட்டில் பண்ணிட்டாங்க. நீங்க பணமா வாங்கிக்க விருப்பமும் படல. எங்க மேல கோபமாவும் இருந்தீங்க..... ஸோ
ரெண்டு பக்க பேச்சுவார்த்தையில
அவங்களோட டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி நீ கிடைச்சதுல அவங்களுக்கு ப்ராஃபிட்! உன்னோட லைஃப் ஸ்டைல் கொஞ்சம் மேல வந்ததுனால உனக்கு ப்ராஃபிட்...... என்னை வச்சு உங்க ரெண்டு பேரு பிஸினஸூம் நல்லபடியா தான் நடந்துருக்கு!"
"நான் உன்னை நினைச்சு பெருமைப்படுறேன்; உன் கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு! ஐ லவ் யூ! இதெல்லாம் உன்னைய நீயே கம்பெல் பண்ணி உன் வாயில இருந்து வரவச்ச வார்த்தைங்க..... அதான?" என்று கேட்டவனிடம் எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்து கொண்டாள் குணாளினி.
"நான் உங்கிட்ட தான்டீ பேசிட்டு இருக்கேன்..... யெஸ் ஆர் நோ ஏதாவது ஒரு பதில் சொல்லு!" என்று கத்தியவனின் தொண்டை நரம்பு புடைத்து அவனது கோபம் நன்றாகவே புரிந்தது குணாளினிக்கு.
"இல்ல.... கல்யாணம்ங்குறது வாழ்க்கையில ஒருக்கா தான் பண்ணிக்குறதுங்க; உங்கள மாதிரி ஒரு ஆளக் கட்டிக்கிட கொஞ்சம் ப.....!" என்று பேசி அஞ்சிய பார்வை பார்த்தவளை தீப்பார்வையால் முறைத்தவன்,
"என்னை மாதிரி ஆளுன்னா.... நான் என்ன பொறுக்கியா, ரவுடியா, இல்ல ஊருக்கு பத்து பொண்ணுங்கள வச்சுருக்குறவனா?" என்று காரமாக கேட்டான்.
"அப்டி ஏதாவது பிரச்சனை இருந்தாக் கூட பரவாயில்லங்க! அதட்டியோ, அன்பா சொல்லியோ திருத்திரலாமுங்க! உங்களுக்கு யாரோட அன்பும் புடிக்காதாமா; மனசுல இருக்குறத வாயத்தொறந்து பேச மாட்டிங்களாமா; கட்டிக்கிட போற ஆம்பள இப்டியெல்லாம் இருந்தா ஒரு பொண்ணு அந்த ஆளுக்கு வாக்கப்பட போறத நெனச்சு
பயப்படுறது நியாயந்தானுங்களே? எங்க அப்பாருட்ட நா இந்தமாரி பேசிட்டு இருந்தங்காட்டியும் நீங்க என்னைய தப்பா நினைச்சுட்டீங்களாக்கும்?"
"உங்க தாத்தா எங்கள கூப்ட்டு எங்ககிட்ட பேசுனது உண்மதானுங்க..... ஆனா எங்கடையில ஊறுற எறும்பு, ஈயி, கொசு மொதக்கொண்டு ஒங்க தயவாலதா எங்கடைக்கு வருதுன்ற மாதிரி நினைச்சுக்குறது ஒங்க மண்டக்கனமுங்க! உங்கள கட்டிக்கிடவே வேண்டாங்குற எண்ணமெல்லாம் வரவே இல்லிங்க.... ஆனா உங்க கூட பேசணும், உங்கள பத்தி கொஞ்சமாச்சு தெரிஞ்சிக்கிடணுமுங்க! அதுக்குத்தா அன்னைக்கு உங்கள பாக்க வந்தப்ப அப்டி பேசிட்டு வந்தனுங்க! ரெண்டு குடும்பத்தோட சந்தோஷத்துக்காக நம்ம ரெண்டு பேரோட வாழ்க்க வெளாயாட்டு
சாமானாகிடக் கூடாதுல்ல?
ஒக்காந்து பேசலாமுங்களா?" என்று கேட்டவளிடம்,
"வேண்டாம்! இதுவே கம்பர்டபிளா தான் இருக்கு!" என்றவன் அவளை மறுபடியும் கட்டிக் கொண்டு நின்றான்.
"உன் பேரென்ன?" என்று கேட்டவனிடம்,
"சுத்தமுங்க! இன்னும் உங்களுக்கு என் பேரு கூட தெரியாதா? எம்பேரு குணாளினிங்க! குணா, குனி, இனின்னு எம்பேர கண்டபடியெல்லாம் நீங்க சுருக்குனாக்க எனக்கு கோபம் வருமுங்க; ஏற்கனவே ஸ்கூல்ல, காலேஜ்ல, இங்கல்லாம் அப்படித்தானுங்க எம்பேர சுருக்கி கூப்ட்டு என்னைய கோபப்படுத்துதுக..... அதுனால என்னைய கட்டிக்கிட போறவராச்சும் என் பேர அழகா கூப்டணும்னு நினைக்குறேனுங்க!" என்று அவனுக்கு பெரிய விளக்கம் கொடுத்தாள் குணாளினி.
"நைஸ் நேம்..... குணாளினி! உன் பேரு எனக்குப் பிடிச்சிருக்கு! உன்னை நான் ஃபுல்நேம் வச்சே கூப்டுறேன்!" என்று அவளிடம் சொன்னான் சஞ்சீவ்.
"நின்னுட்டே பேசுறீங்களே? ஒக்காருங்களேன்!" என்று சொன்னவள் அவனுடைய அணைப்பில் இருந்து விடுபட முயன்றாள்.
"ஹே.... ஹோல்ட் ஆன்! ஒன் செக்! உன் ட்ரெஸ்ல ஒண்ணு பாக்கணும்!" என்று சொன்னவனிடம்,
"என்.....னது? ஏனுங்க இப்டியெல்லாம் தப்பு தப்பா பேசுறீங்க?" என்று அவனிடம் சொல்லி அதிர்ந்தவள் தனது டாப்பின் முன்னங்கழுத்து பகுதியில் கை வைத்துக் கொண்டாள்.
"நாங்க ஒண்ணும் தப்பா பேசலங்க அம்மணி! நீங்க தானுங்க எங்கள தப்பானவனா நினைக்குறீங்க! ட்ரெஸ்க்குள்ளங்குற வார்த்த தானுங்க தப்பு! நான் ட்ரெஸ்லன்னு தாங்க சொன்னேன். உங்க டாப்ஸ் சைஸ் என்னன்னு தானுங்க பாக்க நெனச்சேன். கல்யாணம் பண்ணிக்க போற அம்மணிக்கு துணி, நகை இதெல்லாம் வாங்கிக் குடுக்கணுமில்லங்க?" என்று சொன்னவன் அவளது கழுத்துப் பகுதியில் இருந்த அளவைப் பார்த்துவிட்டு அதை தன் மனதில் பதித்துக் கொண்டான்.
"என்னோட வாழ்க்கையில நீ உட்பட எல்லாமே என்னோட பேமிலி எனக்கு குடுத்ததா தான் இருக்கு குணாளினி; ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் பத்தி எம்எஸ் கோர்ஸ் படிக்கணும்னு நினைச்சேன்..... முடியல!"
"எனக்கான கேரியர நானே உருவாக்கி எங்கயாவது ரிசர்ச் இன்ஸ்டிடியூட்ல வொர்க் பண்ணனும்னு நெனச்சேன். அதுவும் முடியல. நடக்கவே நடக்காதுன்னு தெரிஞ்சாலும்
ஏதாவது ஒரு பொண்ண பாத்து பழகி லவ் பண்ணி மேரேஜ் செஞ்சுக்கணும்னு நினைச்சேன். இப்ப அதுக்கும் வழியில்ல! ஆல்ரைட்.....!"
"என்னோட பேமிலியில இருக்குறவங்க என்ன ஆசைப்படுறாங்களோ அது மட்டுந்தான் என் லைஃப்ல நடக்கும்!" என்று சொன்னவன் ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு,
"நான் கிளம்பட்டுமா குணாளினி? லெட்ஸ் ட்ரை ட்டூ பேர் ஈச் அதர்!" என்று சொல்லி விட்டு கிளம்பப் போனான்.
"இல்லங்க..... நீங்க தப்பா புரிஞ்சுருக்கீங்க; உங்க வீட்ல எல்லாரும் உங்க கிட்ட எவ்ளோ அன்பா.....!" என்று பேசியவளிடம் திரும்ப வந்து அவள் உதட்டில் மறுபடியும் தன்னுடைய விரலை வைத்தான் சஞ்சீவ்.
"நான் யோசிச்சு வச்ச விஷயம் கரெக்டா இல்லையான்னு க்ளியர் பண்ணிக்க தான் நான் உங்கிட்ட வந்தேன் வொய்ஃபி! உனக்கென்ன.... நீ இந்த அளவுக்கு உன்னோட பிஸினஸ்ல வளந்தது
எங்க ஸப்போர்ட்டால மட்டுமில்ல உன்னோட பர்ஸனல் டேலண்ட்னாலயும்னு நான் ஒத்துக்கணும். அவ்ளோதான? ஒத்துக்குறேன் போ!" என்று சொல்லி விட்டு தன் ஷூ சப்திக்க நடந்து சென்று அந்த அறையின் கதவை திறந்தான்.
"ஏனுங்க! உங்களுக்காக மில்க் ஷேக் வாங்கிட்டு வரச் சொன்னேனுங்க. இருங்க, ஒக்காந்து ரெண்டு நிமிஷத்துல அதக் குடிச்சுட்டு போவீங்களாம்!" என்று ஒருவழியாக நியாபகம் வந்து அழைத்தவளிடம் சிறிதாய் புன்னகைத்தவன்,
"சம் அதர் டே! பை!" என்று சொல்லி கையசைத்து விட்டு சென்று விட்டான்.
"அவனா வந்தான், அம்மணின்னான், வொஃய்பின்னான், கட்டிப் புடிச்சான், அளவென்னன்னு பாக்குறேன்னான், பேர் ஈச் அதர்னு சொன்னான், டாட்டா காட்டிட்டு போய்ட்டே இருக்கான். ஏங்கண்ணு குணாளினி என்னைய கட்டிக்கிட உனக்கு பயமாயிருக்குன்னு சொல்றியே.....?"
"ஒனக்காக நா என்ன செய்யோணும்? எப்டி இருக்கோணும்னு ஒத்த கேள்வி கேட்டானா? இந்த ஆள புரிஞ்சிக்கிட நம்மளோட ஒன்றர கிலோ மூளையெல்லா பத்தாது போலிருக்கேடீ அழகி?" என்று அவளுக்குள்ளாகவே சலித்துக் கொண்ட குணாளினி மணியைப் பார்த்தபடி தன்னுடைய நித்திய அலுவல்களை கவனிக்க சென்றாள்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro