
❤ சிறுநகை 35
சந்தனா பேசிய பேச்சுகளின் சூடு அடங்கும் முன் கதிர் பாகேஸ்வரியிடம் இத்தனை ஆண்டுகளாக தன் மனத்திற்குள்ளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த ரகசியங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கொட்டித் தீர்த்து விட்டான்.
சஞ்சீவினுடைய உற்ற ஆலோசனை மற்றும் துணையால் நாகர்கோவிலில் தன்னுடைய ஆர்ட் கேலரியை நிறுவியது, பிறகு அங்கேயே வீடு வாங்கியது, சென்னையில் இந்த வீடு வாங்கியது, மெல்ல அடுத்தடுத்த சொத்துக்களையும் வாங்கியது, அவனுக்கு ஆலென் ஸார் கொடுத்த பணத்திற்கு மேலும் அவரிடம் திரும்ப கொடுத்து விட்டது என்று பணம் சம்பந்தப்பட்ட ஒரு விவரத்தை கூட மறைக்காமல் அனைத்தையும் ஒப்பித்து விட்டான்.
சந்தனாவின் வார்த்தைகளும், தன்னுடைய தந்தை இங்கு இல்லாமல் இருந்ததும் மனதிலுள்ள எல்லாவற்றையும் தாயிடம் வெளிப்படுத்த
அவனுக்கு மிகப்பெரிய சந்தர்ப்பமாக அமைந்தது.
இன்னும் நூறு வருடங்கள் ஆகியிருந்தாலும் சந்தனாவைப் போல் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என தன் தந்தையைப் பற்றி பாகேஸ்வரியிடம் அவனால் பேசியிருக்கவே முடியாது. தன் அன்னை எவ்வளவு வெகுளியாக இருந்தாலும், இத்தனை ஆண்டு தாம்பத்யத்தில் கணவனைப் பற்றி கொஞ்சங்கூடவா புரிந்து கொள்ளாமல் இருந்திருப்பார்கள்?
அவரின் போக்கு தனக்குத் தெரியாதென தாய் நடிக்கும்போது, நான் மட்டும் அதை ஏன் தெரிந்தது போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துத் தான் கதிர் இவ்வளவு வருடங்களாக தன்னுடைய தந்தையின் கடிவாளத்தை மிகவும் இறுக்காமல் சற்று தொங்கலிலேயே இருக்கட்டும் என விட்டு வைத்திருந்தான். ஆனால் இன்று தன் தாயிடம் அனைத்தையும் பேச வேண்டிய அவசரமும் அவசியமும் அவனுக்கு ஏற்பட்டு விட்டது.
"உங்க பையன் வாயில விரல வச்சா கடிக்கத் தெரியாதவன் இல்ல....!" என்று சொன்னதில் இருந்து, "நான் கூடிய சீக்கிரத்துல மிஸஸ் கதிரா உங்கள சந்திக்குறேன்!" என்று முடித்தது வரை தன் வார்த்தைகளினாலேயே சந்தனா அவனுக்கு எத்தனை தைரியத்தை கொடுத்து அவனுடைய வாய்ப்பூட்டை ஒரேடியாக உடைத்து விட்டாள்?
ஒருத்தரைப் பிடிக்கா விட்டால் அவர்களிடம் அவள் எவ்வளவு ராட்சஸியோ, அதைப் போல் ஒருவரைப் பிடித்து விட்டால் அவள் அவ்வளவு தேவதை..... அவளுடைய இந்த இயல்பையும் நன்றாக தெரிந்து வைத்திருந்ததால் தானே அவன் இத்தனை வருடங்களாக பொறுமை காத்தாலும், அவளைத் தவிர வேறு ஒருத்தி என் வாழ்வில் இல்லவே இல்லை என்ற நிலைப்பாட்டில் நின்றது......?
"கதிரு.... நீ சொல்றதெல்லாம் கேக்கயில என் உடம்பே நடுங்குதுய்யா! இத்தன கட, ஒன்னோட வரையுற வேல எல்லாத்தையும் நீ ஒருத்தனே பாத்துடலாமாய்யா? இந்த வீடு நம்மளதுன்னு கடசி வரைக்கும் உங்கப்பாட்ட சொல்லிடாத தங்கம்! அந்த மனுசன் கல்பனாக்காவ வெளிய போன்னு சொல்லிட்டு, அந்த வீட்டுக்குள்ள போயி ஒக்காந்துக்கிட்டு தான் மறுவேல பாப்பாரு!" என்று சொன்ன தன்னுடைய தாயிடம் சற்று யோசனையுடன்,
"அதுக்குத்தாம்மா நான் உங்கள எங்கூட வந்துடுச் சொல்றேன்! எப்டி யோசிச்சாலும் இந்த ஊரு எனக்கு ஏதாவது ஒரு வலியத் தான் நியாகப்படுத்திட்டே இருக்கு! அதுனால பெரிய வீட்ல கல்பனாக்காவே எப்பவும் இருக்கட்டும்! நீங்க இப்பயாவது எங்கூட வந்துருங்க! எல்லாரும் ஒரே வீட்ல இருக்கலாம்!"
"ஒரு வாரம் முன்னால கல்பனாக்காவோட வீட்டுக்காரரு என்னைய போன்ல கூப்ட்டுருந்தாரு. வெண்மதி ஸ்கூல்ல டூருக்கு போக ஃபீஸ் கட்டிட்டு வர சொல்லியிருக்காங்க. அன்னிக்கு கண்டிப்பா பணத்த கட்டியே ஆகணும்; அப்போ பாத்து
நம்ம குட்டி நிலாவுக்கு உடம்பு சரியில்லன்னு அக்கா டாக்டர்ட்ட போறதுக்கு வேற அப்பாயின்மெண்ட் கேட்டு வச்சு இருந்துருக்காங்க. அதுனால ஹாஸ்பிட்டலுக்கு போறதுக்கு முன்னால அந்த பணத்த இவர்ட்ட குடுத்து கொஞ்சம் இந்தப் பணத்த வெண்மதி ஸ்கூல்ல அவ பேருல எக்ஸ்கர்ஷன் ஃபீஸா கட்டி ரெஸிப்ட் வாங்கிட்டு வந்துடுறீங்களா அப்பான்னு கேட்டுருக்காங்க. இந்தாளு மண்டைய ஆட்டி அந்தப் பணத்த வாங்கிப் பையில வச்சுட்டு, அதுக்கப்புறம் கல்பனாக்காட்ட அதப்பத்தி வாயவே திறக்கலயாம். ஃபீஸ ஸ்கூல்ல கட்டவும் இல்லையாம்.........!"
"பணத்த அவர்ட்ட குடுத்ததுக்கு அவங்க வீட்டுக்காரர்ட்ட வேற செம திட்டு வாங்கியிருக்காங்க. இப்ப எதுக்கு என்னை இங்க வரச் சொல்லியிருக்காங்கன்னா மெதுவா நம்ம கிட்ட, எங்க மாமனார் மாமியார பாத்துக்க ஆளில்ல; அதனால நாங்க அவங்க கூடவே இருக்கப்போறோம்னு சொல்லிட்டு, இந்த வீட்ட காலி பண்ணிட்டு போற ஐடியாவுல இருக்காங்க. சரி அவங்க போகட்டும்னு அவங்கள அப்டியே உட்ரவாம்மா? இப்ப நான் என்ன செய்யணும்னு நீங்க சொல்லுங்க!" என்று கேட்டான் கதிர்.
"ஐயோ.... கல்பனாவ எல்லாம் இங்கருந்து போகச் சொல்ல வேணாம்யா கதிரு! இத்தன வருஷத்துல அது என்னையோட ஒரு மக மாதிரி பழகிடுச்சு! அந்த புள்ள மனசுல கஷ்டத்த வச்சுக்கிட்டு, எங்கயும் கிளம்ப வேணாம். அதுக்குப் பதிலா நாமளே நீ இருக்குற வீட்டுக்குப் போயிருவோம்..... ஆனா உங்க அப்பாவ எப்டிய்யா கதிரு நாம அந்தூருல சமாளிக்குறது?" என்று கவலைக்குரலில் தன் மகனிடம் கேட்டார் பாகேஸ்வரி.
"நீங்க இதுவரைக்கும் அதுக்கு முயற்சி பண்ணலன்னு வேணா சொல்லுங்கம்மா! ஆனா அவர மாத்துறது முடியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க! ஒத்தையாளா இருந்து ஒரு வைராக்கியத்துல என்னைய பாடுபட்டு வளத்தீங்கல்ல? அதே முயற்சிய உங்க புருஷன வழிக்கு கொண்டு வர்றதுக்கும் போடுங்க! இங்க வந்து சேருற வரைக்கும் என் முன்னால பிரச்சனை மட்டுந்தான் இருந்தது. அதுக்கான பதில் இல்ல! ஆனா இப்போ நான் ரொம்ப தெளிவா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் இன்னும் பத்து நாளுக்குள்ள நாகர்கோவிலுக்கு வர்றீங்க! நம்ம கடையில ரெண்டு கடைங்கள நீங்களும் அப்பாவுமா சேந்து பொறுப்பா பாத்துக்குறீங்க! அவர் அங்க அவரோட சொரண்டல ஆரம்பிக்காம பாத்துக்குறது உங்க பொறுப்பு! அப்பளம் போடுறேன், வடகம் போடுறேன்னு வெயிலுல கிடந்து காயுற பழக்கத்த முதல்ல நிப்பாட்டுங்க! புருஷன் என்ன சொன்னாலும் ஆட்டும் ஆட்டும்னு கேக்குற பழக்கத்தையும் தயவுசெஞ்சு விடுங்க! அதுக்கு மேலயும் அவர் நம்ம கடையில இருந்து, பணத்த எடுத்தாருன்னா எடுத்து செலவழிச்சுட்டுப் போகட்டும்மா!" என்று சொன்ன கதிரிடம் உறுதியான குரலில்,
"இருய்யா கண்ணு! நா மொதல்ல போயி நம்ம கல்பனாட்ட ரெண்டு வார்த்த பேசிட்டு வாரேன். இவ்வளவும் தெரிஞ்ச பெறவு அவகிட்ட மன்னிச்சிடுன்னு ஒரு வார்த்த கேக்கலையின்னா மனசு அடங்காது நமக்கு! போயிட்டு வந்துடுறேன்யா!" என்று சொன்னவரிடம்,
"நானும் உங்ககூட வர்றேம்மா.....!" என்றவன் பாகேஸ்வரியின் பின்னாலேயே சென்றான்.
கல்பனாவிடம் வழக்கம்போல எல்லாவற்றையும் பாகேஸ்வரி கொட்டித்தீர்க்கும் வரையிலும், கதிர் வெண்மதி, இளமதி இருவருடன் அமர்ந்து உலக மேப்பில் நாடுகளை கண்டுபிடித்து கொண்டிருந்தான். அவன் K எழுத்தில் நாடுகளை தேடி எழுதிக் கொண்டிருக்க, வெண்மதி V என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் நாடுகளை தேடி ஒரு ரைட்டிங் பேடில் எழுதிக் கொண்டிருந்தாள். இளமதி அவர்கள் இருவரும் விளையாடுவதைப் பார்த்து எரிச்சலடைந்து தன் கதிர் மாமாவை பட்டர்ஃபிளை வரைந்து தரச்சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
பாகேஸ்வரியிடம் பேசி முடித்த கல்பனா கதிரின் அருகில் வந்து அமர வெண்மதி தன்னுடைய அன்னைக்கு ஸோஃபாவில் நிறைய இடம் தர வேண்டுமென நினைத்து கதிருக்கு அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டாள்.
"என்ன ஸார்..... இந்த தடவ இங்க வந்து அம்மா கிட்ட நிறைய பேசுனீங்க போலிருக்கு! நான் உன்னை எதுக்கு இங்க வரச்சொன்னேன்னும் முன்னாடியே தெரியுமா உனக்கு?" என்று கல்பனா அவனிடம் கேட்க கதிர் தன்னுடைய அக்காவிடம்,
"எல்லாம் எமக்குத் தெரியும்! எல்லாத்தையும் பேசி சரி பண்ணவும் செஞ்சாச்சு! ஸோ டோண்ட் வொர்ரி! வெள்ள நிலா, குட்டி நிலா நீங்க ரெண்டு பேரும் உங்க பேவரைட் ஸாங்க இப்ப பாடுங்களேன். குட்டி ஸ்டோரி பாட்டு!" என்று அவன் கேட்டதும் குழந்தைகள் இருவரும்,
"லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா; ஆல்வேஸ் பீ ஹாப்பி! டிஸைன் டிஸைனா ப்ராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் சில் பண்ணு மாப்பி!" என்று கோரஸாக அவர்களது அழகான குரலில் அந்த பாடலை தங்களுடைய கதிர் மாமாவிற்காக பாடி முடித்தனர்.
"டேய் நான் உங்கிட்ட பேசணும்னு வந்தா, நீ என்னடா பிள்ளைங்கள பாட்டு பாட சொல்லி அதுங்க கூட சேந்து விளையாடிட்டு இருக்க? அப்பா அம்மாவ அங்க கூட்டிட்டுப் போறது சந்தனாவுக்கு ஓகே தானா? நீ இந்த விஷயத்துல அவ விருப்பத்த கேட்டியா இல்ல எங்க வீட்டுக்காரரு மாதிரி நான் என்ன சொல்றேனோ அதத்தான் நீ கேக்கணும்னு சொன்னியா?" என்று கல்பனா அவனிடம் கேட்க,
"அடடடா! கொஞ்ச நேரம் மனுஷன நிம்மதியா விளையாட உடுறீங்களா நீங்க? அங்க பாருங்க.... நீங்க என் கூட வந்து பேச ஒக்காந்த நேரத்துல வெள்ள நிலா ஆறேழு கன்ட்ரீஸ தேடிப் பிடிச்சுட்டா! உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு சொல்றேன். அனைத்தும் மிகச்சிறப்பாக நடந்தது. இனியும் நடக்கும்! நான் உங்க வீட்டுக்காரருட்டயும் எல்லாத்தையும் தெளிவா சொல்லிடுறேன். நீங்க கத கேக்கணும்னா அவருட்ட எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கங்க. சரியா?" என்று சொன்ன கதிர் வெண்மதியிடமிருந்து மேப்பை புடுங்கிக் கொண்டு அதில் மண்டையை கவிழ்த்து நாடுகளை தேடிக் கொண்டிருந்தான்.
"கதிர் மாமா! நீங்க பண்றது சீட்டிங்! மேப்ப எங்கூட ஷேர் பண்ணிட்டு அப்புறம் எழுதுங்க....!" என்று அவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் வெண்மதி.
"அக்கா மாமாவ நாம டிஸ்கோல்.... டிஸ்கோல்னு அடிக்கணும்!" என்று தன் அக்காவிற்கு ஆலோசனை சொல்லி அவன் மடியில் ஏறி அமர முயன்று கொண்டிருந்தாள் இளமதி.
"ம்ஹூம்! இதுங்க மூணுட்டயும் நாம இனிமே ஒண்ணும் பேச முடியாது!" என்று அலுத்துக் கொண்ட கல்பனா, இத்தனை வருடங்களாக தனக்கு ஒரு நல்ல துணையாக இருந்த பாகேஸ்வரி கிளம்பப் போகிறார் என்று வருந்தினாலும், கதிர் இனி தன் அன்னையுடன்
கவலையில்லாமல் இருப்பான் என்பதில் மிகவும் மகிழ்ச்சியுற்றாள்.
தன்னுடைய கணவனிடம் சொன்னது போலவே கதிரிடம் பேசினால் அவன் நமக்கு வந்த சிக்கலுக்கு ஏதாவது வழி சொல்வான் என்ற நினைப்பு, அவனை அழைத்து சிக்கலை சொல்லும் முன்னரே தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து புன்னகைத்துக் கொண்டாள்.
அவனுடைய வீட்டிலிருந்து அவனது பெற்றோரை தான் விரட்டுவது போன்ற ஒரு பிரமை தோன்றியது கல்பனாவுக்கு. எங்கே அந்த மடையன் தன்னை எதையாவது பேச விட்டால் தானே அவனிடம் எதையாவது பேசி விளக்க முடியும்? அவன் தான் றெக்கை இல்லாமல் அமர்ந்த நிலையில் பறந்து கொண்டிருக்கிறானே? இந்த சந்தோஷம் இப்படியே நிலைத்தால் சரிதான் என்று நினைத்த கல்பனா அவனை நினைத்து புன்னகைத்த படி தன்னுடைய அறைக்குள் சென்றாள்.
வெளியில் போய் விட்டு வந்ததில் இருந்து சந்தனா கதிரின் முகத்தைப் பார்க்கவில்லை. அவனிடம் பேசவுமில்லை. மதிய சாப்பாட்டை சாப்பிடும் வேளையிலும் அந்த சிறிய வீட்டில்
அவனிடமிருந்து விலகி ஒதுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
"வெளியில போறவரைக்கும் நல்லாத்தான இருந்தா? ஓ.... மேடம் வெளியில போனதுக்கப்புறம் தான் நான் ஏன் இந்த லூசுப்பயலுக்காக இதெல்லாம் செஞ்சேன்னு நினைச்சுப் பார்த்துருப்பா! உடனே கோபம் வந்துடுச்சு போலிருக்கு..... கோபம் வந்து இவ குதிக்கலையின்னா தான் அது அதிசயம்; இப்டி உம்முன்னு இருக்குறதெல்லாம் நார்மல் தான்; நம்ம சூபொ நார்மலா தான் இருக்கு!" என்று நினைத்து புன்னகைத்துக் கொண்டவன் சாப்பாட்டை வழக்கமாக கொறிப்பதற்கு பதிலாக அள்ளி அள்ளி வாய்க்குள் திணித்து விட்டு விக்கிக் கொண்டிருந்தாள்.
"மெதுவா.... மெதுவாடா பாப்பா! அவசரமா சாப்டதுல விக்கல் வந்துடுச்சு பாரு; இரு நா ஒனக்கு தண்ணி கொண்டாரேன்!" என்று சொன்ன பாகேஸ்வரி அனைவருக்கும் பரிமாறி விட்டு அவருடைய தட்டில் சாப்பாடு போட்டு இப்போது தான் சாப்பிட ஆரம்பித்திருந்தார்.
"நீங்க இருங்க ஆன்ட்டி! பாதி சாப்பாட்டுல எழுந்திரிக்க வேண்டாம்! நான் கிச்சனுக்குள்ள போயி தண்ணி குடிச்சுக்குறேன்!" என்று அவரிடம் சொல்லி விட்டு
சமையலறைக்கு சென்று அண்ணாந்து தண்ணீரை வாய்க்குள் ஊற்றிக் கொண்டிருந்தவளின் இடையில் தன்னுடைய இருவிரலால் உரசினான் கதிர். அவன் சாப்பிட்ட தட்டை எடுத்து சிங்க்கில் போட வந்திருப்பான் போலும்.
அவனது தொடுதலினால் வாய்க்குள் வைத்திருந்த சிறிது தண்ணீரை தன்னுடைய சுடிதார் டாப்பில் சிந்தியவள் அவனை முறைக்க அவன் அவளது மூக்கை தன்னுடைய விரல்களால் பிடித்து,
"எங்கிட்ட பேசாம தேவையில்லாம இப்டி முறுக்கிக்கிட்டா அப்புறம் உனக்கு விக்கலு, வாந்தி, பேதியெல்லாம் வரும்...... இப்ப என்னடீ பிரச்சன உனக்கு?" என்று கேட்டவனிடம்,
"நான் உம்மேல கோபமா இருக்கேன்; இங்க ஜெபா, பாகேஸ் ஆன்ட்டி, கல்பனா எல்லாரும் உனக்கு ஸப்போர்ட் பண்ணியே பேசுறாங்க. இப்பவே நான் ஆலென்ட்ட போகப் போறேன். என்னைய நாகர்கோவில்ல கொண்டு போய் விடு!" என்றாள் சந்தனா.
"போடீ நீயும் உன் கோபமும்....! ஊருக்கு போறப்ப போவம்! தண்ணிய குடிச்சுட்டு வாய மூடிட்டு போய் ஒக்காரு; இல்ல...... நம்ம ரெண்டு பேரும் இங்க தனியா தான் நிக்குறோம்! நான் செம சந்தோஷத்துல வேற இருக்கேன்! இந்த சிச்சுவேஷன நான் யூஸ் பண்ணிக்கிற மாதிரி வச்சுக்காத!" என்று சொன்னவனை ஒருமாதிரியாக பார்த்து விட்டு சமையலறைக்குள் இருந்து வெளியேறி சென்றாள் சந்தனா.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro