
❤ சிறுநகை 34
"ஹலோ மிஸ்டர் ஆர்ட்டிஸ்ட்; நீ கையப் பிடிச்சிக்கிட்டு எங்கிட்ட ரொமான்ஸ் பண்ணதெல்லாம் போதும்! கைய விடு..... ஆன்ட்டியும், ஜெபாவும் எப்ப வேணும்னாலும் உள்ள வரலாம்!" என்று சொன்னவளை கிண்டலாக ஒரு பார்வை பார்த்து உச்சுக்கொட்டியவன்,
"த்த்சு! த்த்சு! த்த்சு.......! என்ன அடக்கம்டா சாமி? ஆன்ட்டி வந்துரப் போறாங்க; கைய உடுங்குற? யாரப் பாத்தும் நீயா பயப்படுறவ? இங்க வந்துருக்குறது இது தான் மொததடவ.... ஆனாலும் வந்தவுடனே எங்கப்பங்காரன் கிட்ட போயி வம்பிழுத்து அவன வீட்ட விட்டே ஓட வச்சுட்ட!"
"நேர்ல பார்க்குறப்ப நீ கேட்டத தர்றேன்னு சொல்லிட்டு, எங்கையில தனியாவே மாட்டாம உந்தம்பியையும் உனக்கு வால் பிடிச்சுட்டு அலையச் சொல்லியிருக்க! அவன் என்ன உனக்கு தடுப்புச்சுவரா? அவனத் தாண்டி நான் உங்கிட்ட வர முடியாதாக்கும்? இந்தா இப்ப உன்னைய தனியா உட்டுட்டு எங்கம்மா பின்னாலயே ஓடிட்டான்!
"இப்ப உங்கைய பிடிச்சுட்டு இருக்குற நான் உன்னைய கட்டிப்பிடிச்சா நீ என்ன பண்ணுவ?" என்று அவளிடம் கேட்டு வலம் இடம் என மாற்றி மாற்றி கண்சிமிட்டினான் கதிர்.
"கட்டிப்பிடிச்சா எதுவும் பண்ண மாட்டேன். நேத்து நைட் கார்ல நான் ஒம்மடியில படுத்ததும் நல்லா தூஙகிட்டேன். நீ சரியா தூங்குனியா இல்லையா ரேஷன்?" என்று கேட்டவளை உலக அதிசயத்தைப் பார்ப்பதைப் போல் வியந்து பார்த்தவன்,
"பார்றா.... நம்ம சூபொ தானா இவ? அக்கறையான விசாரிப்பெல்லாம் பயங்கரமா இருக்கு? ஒன்னைய மடியில படுக்க வச்சதுக்கப்புறம் நான் எப்டி லஷ்மி நிம்மதியா தூங்க முடியும்? என்னை அறியாம ரெண்டு மூணு தடவ தூங்கி விழுந்தது தான்..... ஒன்னையே தான் பாத்துட்டு ஜெபா கூடயும் அப்பப்ப பேச்சு குடுத்துட்டு வந்துட்டு இருந்தேன்!" என்று சொன்னவனிடம் உச்சுக்கொட்டியவள்,
"கஷ்டமா இல்லையாடா?" என்று ஆழ்ந்த குரலில் கேட்டாள்.
"இல்லவே இல்லையே!" என்று இருபுறமும் தலையை ஆட்டியவன் மறுபடியும் அவளைப் பார்த்து தன் கண்களை சிமிட்டினான்.
இரண்டு கண்களின் சிமிட்டலை மிகச் சரியாக நிறைய பயிற்சி பெற்றவன் போல் அவன் செய்ததும் சந்தனா சற்றே மலைத்துப் போய் நின்றாள்.
தன்னுடைய சிறுவயதில் இதை அடிக்கடி செய்து, கதிரிடமும் இந்த மாதிரியாக கண்சிமிட்டு பார்ப்போம் என்று சவால் விடுவாள். ஆனால் அப்போது அவனால் அதை ஒருமுறை கூட சரியாய் செய்ய முடிந்ததில்லை.
"என்ன விட பெரிசா வளந்துருக்க.... ஆனா உனக்கு கண்ணடிக்க கூட வரல! நீ வேஸ்ட்டுடா ரேஷன்!" என்று போகிற போக்கில் அவனிடம் சொல்லி விட்டு செல்வாள் சந்தனா.
இப்போது அதைத்தான் அவளை விட அழகாக செய்து எப்படி என் கண்சிமிட்டல் என்ற வகையில் அவளிடம் புருவம் தூக்கி கேட்டான் கதிர்.
"இது..... இது முன்னால உனக்கு செய்ய தெரியாது; செய்ய வராதுல்ல ரேஷன்? இப்ப எப்டிடா?" என்று கேட்டவளின் வாய் அவளறியாமல் கொஞ்சமாக திறந்திருந்தது.
"ஆமா... இது பெரிய ஒம்போது பாஷாணத்தையும் ஒண்ணா சேத்து கட்டுற மாதிரி யாரும் செய்ய முடியாத வேலை பாரு.....! என்னால செய்ய முடியாது! எனக்கு வராது! வாய மூடிட்டு போடீ அங்கிட்டு! பேன்னு வாயத் தொறந்து என்னைப் பாத்துட்டு நிக்குற? அவ்ளோ அழகா இருக்கேனா நான்?" என்று கேட்டவனை கோபமாக ஏதோ திட்ட வாய் திறந்தவள், பாகேஸ்வரியும் ஜெபாவும் வீட்டிற்குள் வருவதைக் கண்டு அவர்களின் அருகில் சென்றாள்.
"அங்கிள் எங்க ஆன்ட்டி.....?" என்று கேட்டவளிடம், "அவரு தெருமுனைல ஆட்டோவுல ஏறி எங்கயோ போயிட்டாரு சந்து!" என்றான் ஜெபா. அவரின் பின்னாலேயே சிறிது தூரம் ஓடியிருப்பான் போலும். சட்டையின் சில இடங்களில் நனைந்து, அவனுடைய வியர்வையின் தடம் தெரிந்தது.
இரண்டு டம்ளர்களில் அவனுக்கும் பாகேஸ்வரிக்கும் தண்ணீர் எடுத்துக் கொடுத்த சந்தனாவை இவளுக்கு இந்த மாதிரியான கரிசனமான செயலெல்லாம் செய்யத் தெரியுமா என்பது போல பார்த்துக் கொண்டிருந்த கதிர் தன் அன்னையிடம்,
"விடுங்கம்மா! இவ கேள்வி கேட்டதுல கோபமாயிருப்பாரு!
ராத்திரி வரைக்கும் எங்கயாவது சுத்திட்டு வீட்டுக்கு வருவாரு!" என்று அசட்டையான குரலில் சொன்னான்.
"என்னய்யா கதிரு நீயே இப்டி பட்டும் படாம பேசுற? அவரு உன் அப்பாய்யா! நம்ம ரெண்டு பேருக்கும் இருக்குற ஒரே சொந்தம்.... உங்கப்பா மேல
இந்தத் தம்பிக்கு இருக்குற அக்கற கூட உனக்கு இல்லையேய்யா? சரி.... ஒனக்குத்தான் அவரு மேல மரியாதயும் அக்கறயும் இல்ல......!"
"பாப்பாவையாவது அவருட்ட மரியாதயா நடந்துக்கன்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்துருக்கலாமுல்ல; இது பாட்டுக்கு அவருட்ட வாய்க்கு வந்தத பேசி வச்சுடுச்சு!" என்று மகனிடம் முறையிட்டவர் அவன் வாயே திறக்காமல் இறுகி நிற்பதைக் கண்டு சந்தனாவின் பக்கம் திரும்பி அவளிடம் பேசினார்.
"ஏம்பாப்பா..... நீயி எங்கிட்ட இப்டி எதையாவது பேசியிருந்தாலும், நா அத ஒண்ணும் பெரிசா எடுத்துக்கப் போறதில்ல. ஆனா அவரு அப்டிப்பட்டவரில்லையே பாப்பா? ரொம்ப கோவிச்சுக்கிட்டு வெளிய போயிட்டாரு பாரு!" என்று தன்னிடம் வருத்தக்குரலில் சொன்ன பாகேஸ்வரியிடம் சந்தனா தெளிவான குரலில்,
"அதுக்கென்ன ஆன்ட்டி பண்ண முடியும்? நான் அவர்ட்ட எதுவும் தப்பா பேசலேயே? ஒருத்தர் கிட்ட பணம், அந்தஸ்து, வசதி இப்டி என்ன வேணும்னாலும் இல்லாம இருக்கலாம். பரவாயில்ல.... ஆனா ரெஸ்பான்ஸிபிளிட்டி இல்லாம இருக்கலாமா?"
"எங்கம்மா ரெஸ்பான்ஸிபிளா இல்லாம இருக்கப் போயித்தான் கோட்டை மாதிரி வீடு, நாலு காரு, ராஜவாழ்க்க இதெல்லாம் இல்லாம இப்ப நாங்க ஒரு மிடில்க்ளாஸ் வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கோம்!"
"அதே தப்ப கதிரோட அப்பாவும் செஞ்சாருன்னா, அத எப்டி என்னால ஏத்துக்க முடியும்? அவனோட அப்பாவ நினைச்சு அவன் எவ்ளோ பயப்படுறான் தெரியுமா? அவனோட சொத்து, சம்பாத்யம் எல்லாத்தையும் இதுவரைக்கும் உங்கட்ட கூட சொல்லாம ஒளிச்சு வச்சுருக்கான்!"
"ஒரு பையன்...... அவனோட அப்பா, அம்மாட்டயே தன்னோட வாழ்க்கமுறைய பத்தி சொல்லிக்க முடியலன்னா அது அவனுக்கு எவ்ளோ பெரிய வலியா இருக்கும்? இதுவரைக்கும் எப்டியோ எனக்குத் தெரியாது பாகேஸ் ஆன்ட்டி! இனிமே கதிருக்கு ஒரு கஷ்டமும் வர்றதுக்கு நான் அலவ் பண்ண மாட்டேன்!"
"எங்கப்பா செஞ்சுட்டு இருக்குற தப்ப நீங்களும் செய்யாதீங்க! தயவுசெஞ்சு மாமாவுக்கு அவரோட தப்ப புரிய வைங்க..... மிஞ்சிப் போனா சண்ட போட்டு இன்னொரு தடவ உங்க கிட்ட இருந்து பிரிஞ்சு போவாரு! அவ்ளோதான? போனா போகட்டும், உங்களுக்கு கதிர் இருக்கான்! உங்கள அவன் ரொம்ப சந்தோஷமா வச்சுப் பாத்துப்பான்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்த ஒரு பிவீசி சேரில் சென்று அமர்ந்தாள்.
பாகேஸ்வரி தன் மகனைப் பார்த்து, "கதிரு.... இப்டி ஒரு ஒதவாக்கர அம்மைக்கும், ஊர்சுத்தி அப்பனுக்கும் பொறந்துருக்காம வேற ஒரு நல்ல அப்பா அம்மாவுக்கு பொறந்துருந்தீன்னா நீ இன்னங்கூட நல்ல படிப்பு, வசதின்னு ராசா மாதிரி இருந்துருப்பியோ என்னவோய்யா? எங்க ரெண்டு பேரையும் இப்டியே உட்டுடு!"
"பாப்பா சொல்றமேனிக்கெல்லாம் உங்கப்பாவ திருத்தணும்னு என்னால இனியும் போராட முடியாது சாமி! இந்தப்புள்ளய நீ இருக்குற எடத்துக்கே கூட்டிட்டுப் போயி கல்யாணம் கட்டிக்கிட்டு, ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தரு அனுசரணையா சந்தோஷமா இருங்கய்யா போதும்!" என்றார் தளுதளுத்த குரலில்.
"எனக்கு அது போதாதும்மா!" என்று சொன்னவன் தன்னுடைய தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றிருக்க சந்தனா அவனிடம்,
"கதிர்.... நான் கொஞ்சநேரம் கல்பனா வீட்ல போயி இருக்குறேன். நீ ஆன்ட்டிட்ட பேசிட்டு இரு!" என்று சொல்லி விட்டு ஜெபாவுடன் அங்கிருந்து வெளியே சென்றாள்.
"ஜெபா.... நீ போன் எடுத்துட்டு வந்தியாடா?" என்று கேட்ட தன் அக்காவிடம்,
"ம்ம்ம்! இருக்கு சந்து! வா நாம அப்டியே கொஞ்சதூரம் நடந்துட்டு வரலாம்! அந்த சிஸ்டர் வீட்டுக்குப் போயி அவங்கள வேற டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்!" என்று சொன்ன தம்பியிடம் எரிச்சல் குரலில்,
"நல்லவேளடா! நீயாவது என் கூட வந்த; இல்லன்னா இந்நேரம் எனக்கு இருக்குற மூளைச்சூட்டுக்கு நான் கதிரை தான் கடிச்சு வச்சுருப்பேன்னு நெனக்குறேன்! இத்தன நாள் என்னைய தான் உங்க ரெண்டு பேருல யாராவது காம்ப்ரமைஸ் பண்ணுவீங்க!"
"இன்னிக்கு என்னடா நானே கேக்காம அந்த வேலைய
நான் செய்யுறதுக்கு என்னைய பிடிச்சு தள்ளி விட்டுட்டீங்க! தலவலிக்குதுடா....... ஆனாலும் கதிரோட அப்பா இப்டி ஒரு அலைஞ்சான் கேரக்டரா இருக்கக்கூடாது! எனக்கு ரேஷன பாத்தா ரொம்ப பாவமா இருக்குடா ஜெபா!" என்று சொன்ன சந்தனாவின் குரலில் இப்போது எரிச்சல் மறைந்து வருத்தம் வந்திருந்தது.
"உனக்கு எதுக்கு சந்து இந்த ஸோஷியல் சர்வீஸ் எல்லாம்? இதெல்லாம் நமக்கு தெரியவும் தெரியாது! செட் ஆகவும் செய்யாது.... பின்ன எதுக்கு இதெல்லாம் நீ ட்ரை பண்ணிட்டு தேவையில்லாம தலவலிய வேற இழுத்து வச்சுட்டு இருக்க? ஓ..... கதிர்ணாட்ட ஸிம்பதிய க்ரியேட் பண்ணி நல்ல பேர் வாங்க பாக்குறியா?" என்று கேட்ட தன்னுடைய தம்பியை முறைத்தவள்,
"ஆமா! அந்த வளந்த திமிங்கலத்துட்ட ஸிம்பதிய க்ரியேட் பண்ணி, அவங்கிட்ட நல்ல பேரு எடுத்து எனக்கு அஞ்சாறு ஆச்சு! போடா லூசுப்பயலே......! ஏதோ கதிரோட முகத்துல கொஞ்சம் சந்தோஷத்த பாத்தா நமக்கு கொஞ்சம் ஹேப்பியா இருக்குமேன்னு தான் இதெல்லாம் செய்றேன்!" என்று சொன்னாள்.
இவள் தான் பேசுதையெல்லாம் உணர்ந்து தான் பேசுகிறாளா இல்லை தன்னுடைய அடிமனதில் இருக்கும் எண்ணம் இவளுக்குப் புரியவேயில்லையா என்று நினைத்த ஜெபா தன் அக்காவிடம் திடீரென,
"தர்பீஸ் சாப்புடுறியா சந்து? நான் எனக்கு ஒரு பீஸ் வாங்கப் போறேன்!" என்று கேட்டான்.
"ச்சீ! ச்சீ! ரோட்ல போட்டு விக்குறதயா? ஏன்டா இங்கல்லாம் சாப்ட்டுக்கிட்டு? அட்லீட்ஸ் முழுபழமாவாச்சு வாங்கிட்டு, வீட்ல வந்து கட் பண்ணி சாப்டேன்!" என்று கேட்க ஜெபா சந்தனாவிடம் மறுப்பாக தலையசைத்தான்.
"சொன்னத கேக்க மாட்ட; என்னமாவது பண்ணு;
நீ மட்டும் சாப்டு! எனக்கெல்லாம் வாங்கிடாத ஜெபா!" என்றவள் அந்த ஏரியாவிலிருந்த ஒவ்வொரு கடையையும் பராக்கு பார்த்துக் கொண்டே இரண்டு நிமிடங்கள் நின்றிருந்து விட்டு பின்னர்
பழத்தை வாங்கிக் கொண்டு வந்த தம்பியுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தாள்.
"ஏன் சந்து..... கதிர்ணா ஹாப்பியா இருக்கணும்னு நினைச்சு நீ அவரோட அப்பா அம்மாட்ட பேசுனேன்னு சொன்னியே? யார்ட்டயும் இவ்ளோ மெனக்கெட்டு மூச்சப்போட்டு இதுவரைக்கும் நீ பேசுனதுமில்ல!"
"அப்போ கதிர்ணா மேல இருக்குற லவ்வ ரியலைஸ் பண்ணுனதால தான் நீ அவருக்காக இதெல்லாம் செஞ்சியா?" என்று கேட்ட தன் தம்பியுடைய கேள்வியில் நடந்து கொண்டிருந்தவள் நடையை மறந்து ஒருகணம் அப்படியே நின்று விட்டாள்.
"என்ன ஸ்டன் ஆகி நிக்குற.... கம்ஆன் கேர்ள்!" என்று சாறு வடியும் வாயால் அவளிடம் சொன்னவன் தன்னுடைய கையில் தர்பூசணியின் கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருக்க,
"இப்டி இன்னொருதடவ என்னத்தையாவது உளறுன.... கொன்னுடுவேன் உன்ன!" என்று அவனிடம் சொல்லி விட்டு அவனைத் தாண்டிக் கொண்டு அவன் முன்னால் நடந்து சென்றாள் சந்தனா.
"இல்ல சந்து......! உங்கிட்ட கேக்குறதுக்கு இன்னொரு கேள்வியும் இருக்கு! கதிர்ணாவோட அப்பா எப்டிப்பட்டவர்னு இப்போ உனக்கு நல்லாத் தெரியும். பல வருஷத்துக்கு அப்புறம் கதிர்ணாவ மீட் பண்ணப் போயி, நீ அவர்ட்ட உங்கிட்ட நிறைய பணம் இருக்குதுல்ல.... ஸோ நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்ட! ஏறக்குறைய அவரோட அப்பாவோட கேரக்டரும் அப்டித்தான இருக்கு? அதுனால அன்னிக்கு எங்கருந்துடா எனக்குன்னே வந்து சேருவீங்கன்னு நினைச்ச கதிர்ணா உன்மேல அவரோட கோபம் மொத்தத்தையும் காட்டுனது நியாயந்தான?"
"நீ அவர்ட்ட அப்டி பேசுனது ரொம்ப ரொம்ப முட்டாள்தனமானம் தான? இன்னிக்கு காலைல இருந்து நடந்தது எல்லாத்தையும் ஒருதடவ மண்டைக்குள்ள ரிவைண்ட் பண்ணி ஓட்டிப் பாத்துட்டு சொல்லு!" என்று கேட்டவனிடம் ஒருபதிலும் சொல்லாமல் கண்களை சுருக்கியபடி யோசனையுடனே நடந்து கொண்டிருந்தாள் சந்தனா.
அவளருகில் வந்து கைகளை கோர்த்துக் கொண்டவனை ஏறிட்டவளிடம்,
"இல்ல.... ரொம்ப யோசிக்குற மாதிரி தெரியுது! போயி லாரியில மாட்டிக்கிட்டு, நீ பாட்டுக்கு மேல போய்ச் சேர்ந்துட்டன்னா..... அதான்! ஒரு ஸேஃப்டிக்கு உங்கையப் புடிச்சிக்கிட்டேன். நீ யோசி; வீடு வர்றதுக்கு இன்னும் பத்து நிமிஷம் டைம் இருக்கு. அதுக்குள்ள நான் இந்த தர்பீஸயும் சாப்ட்டு முடிச்சுடுவேன்!" என்று சொல்லி தன்னுடைய அக்காவின் முகத்தைப் பார்த்தவனின் உதட்டில் ஒரு திருப்திகரமான புன்னகை அமர்ந்திருந்தது.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro