
❤ சிறுநகை 32
சந்தனா, ஜெபா இருவருமாக சேர்ந்து கதிரை சென்னையிலுள்ள அவனுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தனர். அவனை இங்கே அழைத்து வந்தனர் என்ற வார்த்தையை வெறும் அலங்காரத்திற்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்! மற்றபடி காரில் அவனது இருக்கைக்கு பக்கவாட்டில் சந்தனாவும், முன்னால் ஓட்டுநர் இருக்கையில் ஜெபாவும் அமர்ந்து கொண்டு அவனை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு தான் இங்கு வந்திருந்தனர்.
காரில் அவளுடைய இடுப்பைக் கட்டிக் கொண்டு மார்பில் முகம் சாய்ந்தவனை முறைத்தவளிடம்,
"என்ன இப்டி டெரர் லுக் உடுற? நீதான என்னைய வலுக்கட்டாயமா புடிச்சு காருக்குள்ள அடைச்சு சென்னைக்கு இழுத்துட்டுப் போற! அப்ப நான் என் இஷ்டப்படி தான் காருக்குள்ள படுத்துட்டு வருவேன்!" என்று சொன்னான்.
"கதிர்ணா..... நீங்க படுக்குறதுன்னா காரோட ஸீட்லயே சாய்ஞ்சு படுக்க வேண்டியதுதான? ஏன் சந்துவப் போட்டு ஜுஸ் பிழிஞ்சுட்டு இருக்கீங்க? அவளுக்கு இப்டி யாரும் மேல ஒரசுனாலே பிடிக்கவே பிடிக்காது!" என்று மெதுவான குரலில் பேசிய ஜெபாவிடம்,
"நான் இவள ஒரசுறது பிடிக்கலையின்னு இவ எங்கிட்ட சொல்லட்டும் சேகர்! அப்புறம் பாத்துக்குறேன்! நீ வண்டிய கேர்புல்லா ஓட்டு!" என்று அவனிடம் சொன்னவன் சந்தனாவிடம் எங்கே
நான் உன் மார்பில் கிடப்பது பிடிக்கவில்லை என சொல் பார்ப்போம் என்று அவளுக்குப்
பார்வையால் சவால் விட்டான்.
"நல்லா தூங்குற வரைக்கும் இப்டி ஒக்காந்துக்க! அதுக்குப்புறம் வண்டிய நிறுத்தி ஒன்னைய டிக்கிக்குள்ள தூக்கிப் போடுறேன் இரு!" என்று மெல்லிய குரலில் அவனிடம் சொல்லிப் பல்லைக் கடித்தவளிடம்,
"ச்சே.... ச்சே! நீ அதுக்குல்லாம் சரிப்பட்டு வர மாட்டடா செல்லம்; எங்கைய தூக்கக்கூட ஒனக்கு சத்து பத்தல..... நீ எங்க மொத்தமா நம்மள தூக்குறது? காமெடி பண்ணாத சூபொ!" என்று சொல்லி விட்டு வாகாக அவளது மார்பில் ஒண்டிக் கொண்டான்.
முன்னால் இருந்து தன்னுடைய அக்காவின் நிலையைப் பார்த்த ஜெபாவுக்கு அவள் கதிரை மார்பில் சாய்த்திருந்தது ஒன்றும் விரசமான செயலாக தெரியவில்லை.
அவள் உயரத்திற்கும் அதிகமான உயரம் உள்ள குழந்தையை மார்பில் சாய்த்து, இப்போது அவனுடைய தலையை இதமாக வருடி சுகமாக தூங்க வைக்கும் வேலையைத் தான் செய்து கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் தெரிந்த அமைதியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன்,
"மனசுக்குப் பிடிச்சவங்க குடுக்குற டார்ச்சர் கூட ரொம்ப சுகமா இருக்கும் போலயே?" என்று நினைத்து லேசாக புன்னகைத்துக் கொண்டான்.
ஒரு மணி நேரம் கதிரை தன்னுடைய மார்பில் தாங்கியவள், அதற்கு மேல் அவனுடைய பாரம் தாங்காமல் அவனை கன்னத்தில் தட்டி எழுப்பி விட்டாள்.
"எனக்கு தூக்கம் வருது கதிர்..... எப்ப போவோம் சென்னைக்கு? உடம்பெல்லாம் வலிக்குது. வயிறு பசிக்குது!" என்று ஒவ்வொன்றாக புலம்பிக் கொண்டே இருக்க ஜெபா தலையில் அடித்துக் கொண்டான்.
கதிர் கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல் அவளுக்கு தன்னுடைய பையில் வைத்திருந்த இரண்டு வாழைப்பழங்களை சந்தனாவிற்கு சாப்பிடக் கொடுத்து, தண்ணீர் கொடுத்து, அவளுக்குப் போர்வை எடுத்து தந்து கால் வரை போர்த்தி விட்டு, முடிந்தவரை ஓரமாக நகர்ந்து அவனுடைய மடியில் படுக்க வைத்துக் கொள்ள அதற்கு மேல் சந்தனா இருவரையும் அனற்றாமல் நிம்மதியாக தூங்கி விட்டாள்.
"எப்டி கதிர்ணா? இந்த இம்சய இவ்ளோ அசால்டா சமாளிச்சுட்டீங்க? சென்னைக்குள்ள எண்டர் ஆகுற வரைக்கும் கத்திக்கிட்டே இருப்பான்னு நெனச்சேன். ரெண்டே ரெண்டு வாழப்பழத்த குடுத்து அவள போர்வைக்குள்ள wrap பண்ணிட்டீங்க? பெரிய ஆளு தான் நீங்க?" என்று கதிரை பாராட்டியவனிடம் சின்ன சிரிப்புடன்,
"லஷ்மியப் பத்தி தெரியாதா சேகர் நமக்கு? இங்க அவளோட மூணு பெரிய பிரச்சன..... பசி, தூக்கம், குளிரு. மூணையும் சமாளிக்க நாம ரெடியா வந்துருந்ததால இந்தோ எம்பொம்ம இப்ப எம்மடியில படுத்து தூங்கிட்டு இருக்கா பாரு......! வெளிய எங்கயாவது வந்தா இவள ஒரு நாலு வயசு பாப்பா மாதிரித்தான் நாம நெனைக்கணும். ட்ரீட் பண்ணனும்..... உங்களுக்கு எல்லாம் எப்டியோ தெரியல சேகர்;
எனக்கு இவள சமாளிக்குறது ரொம்ப பிடிச்ச விஷயம்..... எப்படா இப்டி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு ஏங்கிட்டு இருந்த விஷயம் கூட!" என்று சொன்ன கதிரின் கண்களில் தெரிந்த காதலைப் பார்த்த ஜெபா ஆச்சரியப்பட்டுப் போனான்.
கல்பனா, பாகேஸ்வரி இருவரின் விருப்பத்திற்காக சென்னைக்கு
கிளம்புவோம் என்று நினைத்திருந்தாலும், கதிருடைய அப்பா என்று அழைக்கப்படும் கிருஷ்ணராஜ் என்பவர், தன்னுடைய பிள்ளை திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணைப் பார்த்தால் என்ன பேசுவார் என்று தெரிந்து கொள்ள
சந்தனாவிற்கு ஆவலாக இருந்தது.
"சென்னைக்கா........? ம்ஹூம்! அதெல்லாம் வேண்டாம்; சும்மாயிரு லஷ்மி!" என்று அவளது யோசனைக்கு மறுப்பு
சொன்னவனை அரைத்து எடுத்து ஒருவழியாக சென்னைக்கு கிளப்பிக் கொண்டு வந்து விட்டாள்.
வெள்ளி மதியம் அங்கிருந்து கிளம்பியவர்கள் ஞாயிறு மதியம் இங்கிருந்து கிளம்புவதாக திட்டமிட்டு வைத்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவில் கதிர் தன்னுடைய வீட்டிற்கு வந்ததும்
உறக்கக்கலக்கத்தில் அவனை வரவேற்று அவன் காரை நிறுத்த கார் பார்க்கிங்கை திறந்து விட்ட கல்பனாவிடம் மன்னிப்பு கேட்டவன், மறக்காமல் தனது ஸாரையும், கல்பனாவின் சகோதரனையும், அவள் கணவன் மற்றும் புகுந்த வீட்டினரையும் அந்த நேரத்திலும் நலம் விசாரித்தான். சந்தனாவையும், ஜெபாவையும் கல்பனாவிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
கல்பனாவும், சந்தனாவும் வீட்டின் முன்பாக நின்று சற்று பேசிக் கொண்டிருக்க ஜெபா கல்பனாவிடம் சிரிப்புடன் தலையாட்டி விட்டு கதிருடைய வீட்டிற்குள் லக்கேஜை எடுத்துக் கொண்டு சென்றான்.
இளமதி இவனுக்காக உறங்காமல் ஹாலில் அரை உறக்கமும்
விழிப்புமாக இருந்து விட்டு, தன் அன்னை கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் வேகமாக வெளியே ஓடி வந்து அவன் இடுப்பில் தாவிக் கொண்டாள்.
"நீ நல்லா தூங்கியிருப்பன்னுல்ல நெனச்சேன்..... உள்ள இருந்து இப்டி ஓடி வர்ற? குட்டி நிலாவுக்கு இன்னும் தூக்கம் வரலையாக்கும்?" என்று அவள் மூக்கை ஆட்டி கேட்டான் கதிர்.
"நிலா எப்டி நைட்டு தூங்கும் மாமா? அது காலையில தான் தூங்கும்!
மாமாவ பாக்கத்தா பாப்பா தூங்காம முழிச்சுதுந்தேன்!
நாளைக்கு நாம சீக்கிதமா முழிச்சு நெதய ட்தாயிங் போடணும் என்ன...?" என்று கேட்டவளிடம் பொய்யான சலிப்புடன் உச்சுக்கொட்டிய கதிர்,
"ஏய் காத்து பலூனு.... உன்னைய அம்மா படின்னு சொன்னாங்கன்னா போ எனக்கு போதடிக்குதுன்னு சொல்றல்ல? அப்புறம் என்னைய மட்டும் எப்பப்பாரு இத வரைஞ்சு குடு, அத வரைஞ்சு குடுன்னு கேட்டுட்டே இருக்க! எனக்கும் வரைய போரடிக்குது போ! நாம காலையில நிறைய விளையாடலாம்..... சரியா?" என்று கேட்டவனிடம் தலையாட்டி விட்டு சந்தனாவை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டின் உள்ளே சென்றாள் இளமதி.
"அந்த குட்டிப்பாப்பாவ எனக்கு ஏன் நீ இண்ட்ரோ குடுக்கல?" என்று கோபமாக கேட்டவளிடம்,
"தூக்கம் வருது, எப்படா சென்னை வரும்னு சேகர்ட்ட நாலுதடவ கேட்டு காருக்குள்ளயே கையையும், காலையும் உதைச்சு டான்ஸ் ஆடுனது யாரு? இதுல உனக்கு இண்ட்ரோ வேற கேக்குதா? காலையில மதிய மீட் பண்ணும் போது அவகிட்ட பேசிக்கலாம்! கிளம்புற வரைக்கும் பாதி நேரம் நாம அங்க தான் இருப்போம்..... எங்கூட வா!" என்று சொல்லி பக்கவாட்டுப் பாதையில் அவளை அழைத்துச் சென்றான் கதிர்.
பாகேஸ்வரியின் வாய் நிறைந்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு படுத்து உறங்கியவர்கள், சனிக்கிழமை காலை ஏழரை மணிக்கு மேல் தான் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தனர்.
அன்றைய தினம் தன் வழக்கமான ஊர்சுற்றலுக்கு கிளம்பாமல் கிருஷ்ணராஜ் கதிரேசன் என்பவன் எதற்காக திடீரென இங்கு வந்திருக்கிறான், அவனது கூட ஒட்டிக் கொண்டு வந்திருக்கும் இளைஞனும், பெண்ணும் யார் யார்? இப்போது வந்திருப்பவன் ஏதாவது மகன் சென்டிமெண்ட் டயலாக்குகளை பேசி தன்னுடன் இருக்கும் இந்த பாகேஸ்வரியையும் அவனுடன் அழைத்துச் சென்று விட்டானென்றால் மறுபடியும் பழையபடி தான் கஷ்ட ஜீவனம் அல்லவா செய்ய வேண்டியது வரும்?
பொண்டாட்டியின் அருமை என்ன என்பது சில வருடங்கள் பரதேசம் போய் விட்டு வந்ததற்கு பின் அல்லவா தெரிகிறது? வேளாவேளைக்கு ராஜ உபசாரத்துடன் உணவென்ன? அவள் சம்பாதியத்தில் அவ்வப்போது தரும் இருநூறு, ஐநூறு போன்ற சில்லரை கவனிப்புகள் என்ன? மகனுக்கும் தனக்கும் நடுவே அரணாக நின்று அவள் தன்னை காப்பாற்றுவதென்ன?
இத்தனை லாபத்துக்கு பாகேஸ்வரி என்ற இவள் பயன்படும் போது இவளை இவளுடைய மகனிடம் விட்டு விடுவதற்கு தான் என்ன முட்டாளா? என்று நினைத்தவர் கிச்சனுக்குள் ஏதோ வேலையாக இருந்த தன்னுடைய மனைவியிடம்
சென்று நின்றார்.
"பாகேஸூ; என்னம்மா.... மகன் வந்துருக்குற சந்தோஷத்துல காலையில சாப்பாட்டுக்கு தடபுடலா ஏதோ ஏற்பாடு நடக்குது போலிருக்கு? எங்கிட்ட முதல்லயே அவன் வாரான்னு நீ சொல்லியிருந்தன்னா நான் காலையில மொத வேலையா
போயி நண்டு, கோழின்னு கெடைச்சத வாங்கிட்டு வந்துருப்பேன்லமா? இப்பப் பாரு.... கொஞ்சம் கூடுதலா நேராயிடுச்சு! பரவாயில்ல. ஒரு பையும் ஐநூறு ரூபா பணமும் குடும்மா! நா கடைக்குப் போயிட்டு வாரேன்!" என்று தன் மனைவியிடம் கேட்டார்.
"வேண்டாங்க! கதிரு நேத்தே எங்கிட்ட இன்னிக்கு அசைவம் எதுவும் வேண்டாமுன்னு சொல்லியிருச்சு! ஏதோ ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகப்போதாம். நீங்க வெரசாப் போயி குளிச்சுட்டு வாங்க. உங்களுக்காக உங்க புள்ள ஒரு தங்க மோதிரத்தயும், எனக்காக ஒரு மூக்குத்தியையும் வாங்கிட்டு வந்துருக்காப்டி!"
"நேத்து ராத்திரி அம்புட்டு தூக்கக் கலக்கத்துல இருந்தும், நமக்கு வாங்குன தங்கச் சாமானுகள குடுத்துட்டுத் தான் படுத்துச்சு! சாமி ரூம்பு அலமாரியில மோதிரத்த வச்சுருக்கேன். குளிச்சதுக்கு அப்புறம் அத எடுத்து அளவு சரியா இருக்கான்னு போட்டுப் பாருங்க!" என்று பாகேஸ்வரி சொல்ல கிருஷ்ணராஜ் இது மிகவும் சுதாரிப்பாக இருக்க வேண்டிய தருணம் என்று நினைத்தார்.
"என்னம்மா திடீருன்னு தங்கமெல்லாம்? ஒம்மவன் ஊருல அந்த சஞ்சீவ் உதவியால தான் பொழப்ப ஓட்டுறான்; சாப்பாட்டுக்கு, தங்குறதுக்கே பணத்துக்கு என்னத்த செய்றானோ என்னவோன்னு சொல்லிக்கிட்டு இருப்ப! இப்ப என்ன திடீர்னு மோதிரம், மூக்குத்தியெல்லாம் வாங்கிட்டு வந்துருக்காங்குற? மோதிரம் ஒரு பவுனு, மூக்குத்தி அரைப்பவுனுன்னு வச்சுக்கிட்டாலுமே எம்புட்டு ரூவா ஆச்சும்மா?" என்று கேட்டவரிடம்,
"அது வந்து.....!" என்று பாகேஸ்வரி ஏதோ சொல்ல ஆரம்பிக்க சரியாக அந்த நேரத்தில் சமையலறை வாசலில் வந்து நின்றான் கதிரேசன்.
"எமப்பய..... மையாலுல படுத்துருந்தாலும், காது மொத்தத்தையும் அவே ஆத்தா பக்கத்துலதே வச்சிருப்பான் போலிருக்கு! ஒண்ணு பேசுறதுக்குள்ள இவனுக்கு மூக்கு வேத்துடுச்சாக்கும்? இன்னும் இவங்கூட வந்த குட்டியும், அந்தப்பயலும் யாருன்னு நான் கேட்டே முடிக்கல! அதுக்குள்ள வந்து நின்னுட்டான் பாரு!" என்று மனதிற்குள் எரிச்சலடைந்த கிருஷ்ணராஜ் மகன் முன் தன் பல்லைக் காட்டினார்.
"நல்லா தூங்குனியாய்யா? நாங்க ரெண்டு பேரும் பேசுனதுல எழுந்திரிச்சுட்டியா? அதான் தனி தனி ரூம்போட இருக்குற ஒரு பெரிய வீடு வேணுங்குறது! இங்க பாரு.... பெரிய சைஸூ எலிப்பொந்து மாதிரி ஒரு வீடு! உங்கைய நீட்டுனா இங்கிட்டு தட்டும்! கால நீட்டுனா அங்கிட்டு தட்டும்! என்ன பண்றது? உன்னைய ஒழைக்க விட்டுட்டு, அந்த காசுல நாங்க ஒக்காந்து திங்க வேண்டியிருக்கு! எல்லாம் எங்க தலையெழுத்து!" என்று வருத்தக்குரலில் கூறி தோளில் கிடந்த துண்டால் தன்னுடைய
கண்களை மூடிக் கொண்டவரை ஒருவிதமான ரௌத்ரமான பார்வையுடன் முறைத்துக் கொண்டிருந்தான் கதிரேசன்.
"என்னாங்க.... இப்டி பேசுறீங்க! இருக்குற எடம் பெரிசா சிறுசான்னு முடிவு பண்றது நம்ம மனசு தான? நாளப்பின்ன நமக்கு மதிப்பாப்பா மாதிரி பேரன், பேத்திக வந்தாலும் இந்த வீட்ல தான் அதுங்கள நாம வச்சிருக்கணும்!"
"நம்மள பாத்துக்குறதுல நம்ம புள்ளைக்கு என்ன செரமம் வந்துடப் போவுது? நா நல்ல நெலைமையில தான் இருக்கேன்னு தம்பியே எங்கிட்ட சொல்லுச்சுங்க.....! அதுனால நீங்க இப்டியெல்லாம் எதுவும் பேசாதீங்க! அவனுக்கு கஷ்டமாயிருக்கப் போவுது!" என்று சொன்ன பாகேஸ்வரி கதிரிடம்,
"தம்பி பால் ஆத்தித் தரவாய்யா?" என்று கேட்க அவன் தன் அன்னையிடம் தலையாட்டி விட்டு, சமையல் அறைக்கு உள்ளே சென்று காலையில் பல்துலக்கி விட்டு குடிக்கும் ஒரு செம்பு
தண்ணீரைக் குடித்து விட்டு வெளியே சென்றான்.
"நல்ல நெலைமையில இருக்கேன்னு அவேன் ஆத்தாக்காரிட்ட சொன்னானா? எங்கருந்து இவனுக்கு காசு வந்துருக்கும்? ஒருவேள நிறைய காசு வச்சுருக்குதுன்னு சொல்லி இந்தப் புள்ளைய கல்யாணம் பண்ணிக்க நினைச்சுருப்பானோ? எம்பொண்டாட்டி வாயக் கிண்டுன மாதிரி அந்தப் புள்ள வாயையும் கொஞ்சம் கிண்டுனா போச்சு! மொதல்ல குளிச்சுட்டு வந்து, அந்த மோதிரத்த பதுக்குவோம்!" என்று நினைத்தவர், அந்த வீட்டின் வரவேற்பறையில் படுத்திருந்த ஜெபா மற்றும் சந்தனாவையும், ஒரு ஓரமாக அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கதிரையும் ஓரக்கண்ணால் பார்த்தபடியே குளியலறைக்குள் நுழைந்தார்.
மோதிரம் கிடைத்த மகிழ்ச்சியோ என்னவோ மனிதர் காலை உணவுநேரத்தில் அனைவரையும் நிம்மதியாக சாப்பிட்டு முடித்து எழ விட்டுவிட்டார். பத்து மணியளவில் மெல்ல சந்தனாவிடம் பேச்சை ஆரம்பித்தார்.
"கதிருப்பய உனக்கு ப்ரெண்டாம்மா? ஏதோ பெரிய இடத்து பொண்ணுங்க எல்லாம், பை நிறைய பணத்த எடுத்து வச்சுக்கிட்டு என்னத்தையாவது ஷாப்பிங் பண்ணுங்களாம்ல? அந்தமாதிரித்தேன் இந்தப் பையன உனக்குத் தெரியுமா?" என்று கேட்ட கிருஷ்ணராஜிடம்,
"ஸாரி அங்கிள்! கதிர் என்னோட ப்ரெண்டும் இல்ல; நான் பை நிறைய பணத்த வச்சுக்கிட்டு ஷாப்பிங் பண்ற பொண்ணுமில்ல! என்னோடது சுமாரான ஒரு மிடில் க்ளாஸ் பேமிலி தான்..... அண்ட் நாந்தான் உங்க வருங்கால மருமக!"
"மொத மொதல்ல நாங்க ரெண்டு பேரா சேர்ந்து எங்களோட வருங்கால மாமனார், மாமியார பாக்க வர்றோம்.... எப்டி வெறுங்கையோட வர்றது? அதுனால தான் உங்களுக்கு மோதிரமும், ஆன்ட்டிக்கு மூக்குத்தியும் வாங்கிட்டு வந்தோம். என்ன பாகேஸ் ஆன்ட்டி எங்களப் பத்தி இன்னும் அங்கிள் கிட்ட நீங்க எதுவும் சொல்லலையா?" என்று கொஞ்சம் கூட பதட்டமோ, பயமோ அடையாமல் நிதானமாக கிருஷ்ணராஜின் கேள்விக்குப் பதிலளித்தாள் சந்தனா.
இவள் தான் நான் கட்டிக்கொள்ளப் போகும் பெண் என்று தன்னுடைய அப்பனிடம் சொல்வதற்கு கதிருக்கு சுத்தமாக விருப்பம் இருக்கவில்லை. ஏனோ அந்த வேலையை பாகேஸ்வரியும் செய்ய தயங்கிக் கொண்டிருந்தார். இப்போது சந்தனா கிருஷ்ணராஜிடம் நான் உங்களுடைய வருங்கால மருமகள் என்று பட்டென சொல்லி விட தாய், மகன் இருவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு பிறந்தது.
"டேய் சேகர்......! என்னடா உங்கக்கா எங்கப்பன் கிட்டயே இந்த போடு போடுறா.....? சாதாரணமா ஒருபொருள வாங்குனத,
உங்கள பாக்க வர்றதுக்கு தான் தங்கத்துல உங்களுக்கு கிப்ட் வாங்கிட்டு வந்தம்னு சொல்லி கரெக்டா எங்க போடணும், எப்டி போடணும்னு தெரிஞ்சு பிட்ட போடுறாளோடா?"
"ம்ஹூம்...... நமக்கெல்லாம் இவகிட்ட இருக்குற அளவுக்கு கூறுவாறு ஒருநாளும் வரப்போறதில்ல...... ஆனா அவ
ஒவ்வொருவாட்டியும் என்னைய கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு யார்ட்டயாவது சொல்றப்ப எனக்கு அப்டி இருக்குடா! இங்க பாரேன் எங்கையில முடியெல்லாம் சிலித்துக்கிட்டு நிக்குது!" என்று சொல்லி ஜெபாவிடம் தன் கையைக் காட்டியவனிடம்,
"ஷ்ஷ்ஷ்.... சும்மாயிருங்க கதிர்ணா! உங்க அம்மா பாக்குறதுக்கு ரொம்ப இன்னொசென்டா தெரியுறாங்க! அவங்களோட ஹாப்பினெஸ் கூட ரொம்ப லைவ்லியா இருக்கு! பட் உங்கப்பா.... ம்ஹூம் அவரப் பாத்தாலே, எதையோ மனசுக்குள்ள மறைச்சு வச்சுட்டு வெளிய ஒண்ண பேசுறவர் மாதிரிதான் எனக்குத் தோணுது! இதுல நீங்க வேற நடுவுல சிலிக்குது, கிழிக்குதுன்னு சொல்லி என்னைய டிஸ்டர்ப் பண்ணாதீங்க! நான் சீரியஸா நடக்குறத வேடிக்கை பாத்துட்டு இருக்கேன்!" என்றான் ஜெபசேகரன்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro