
❤ சிறுநகை 21
"நான் உள்ள வரலாமா ஸார்....?" என்று ஆலெனிடம் கேட்ட போதே அவளது ஒருகையை தனது கைக்குள் வைத்து அதை ஆலெனும், ஜெபாவும் பார்க்கும்படியாக அவர்களுக்கும் காட்டிக் கொண்டு அழுத்தமாகப் பற்றியிருந்தான் கதிர்.
காரிலிருந்து இறங்கும் போதே எச்சரிக்கையாக அவனை விட்டு விலகி ஓடப் போனவளை மதுரை மஹாலின் நெடுந்தூண் போல் வழிமறித்து அவள் கையைப் பற்றிக் கொண்டு அவள் கூடவே தான் அவனும் வீட்டுப் படியேறினான்.
"இன்று அவள் வீட்டிலிருந்து அவனது ஜாகைக்கு புறப்படும் வரையில் அவளது கையை விடும் உத்தேசமும் தூரிகை கொண்டு கித்தானில் ஜாலம் செய்யும் அந்த நிபுணனுக்கு இல்லவேயில்லை.
"வா கதிர்.... எப்பவும் வழக்கமா வர்ற நேரத்துக்கு சந்து வரலையின்னதும் நானும், சுமாவும் பயந்து போயிட்டோம். சந்து மோளோட சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிட்டு அங்க அவ இருக்காளான்னு பார்த்துட்டு வந்துடுறேன்னு ஜெபா கிளம்பும் போது தான் அவளோட மெசேஜ் வந்தது! அதுக்கப்புறம் தான் எங்க ரெண்டு பேருக்கும் நிம்மதியா இருந்தது!"
"நாளைக்கு காலையில நான் சந்துட்ட பேசிக்குறேன்னு சொல்லிட்டு சுமா போய் படுத்துட்டா! திடீர்னு நீங்க ரெண்டு பேரும் எதுக்குப்பா வெளிய போனீங்க? ஒண்ணும் பிரச்சனையில்லையே?" என்று ஆலென் அவனிடம் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒருவிதமான நக்கல் சிரிப்புடன் அவளைப் பார்த்து புருவம் தூக்கினான் கதிர்.
"என்னப்பா நீங்க? பிரச்சனை இருந்தா தான் கதிர்ணா சந்துவோட பேசணுமா என்ன? அவரோட பிஏவும் இங்க இல்ல; அவரோட அப்பா, அம்மாவும் சென்னையில இருக்காங்க. இந்த ஊர்லயே இப்ப கதிர்ணாவுக்கு ப்ரெண்ட்லியா பேச கிடைச்சவங்க நாம மட்டுந்தான்...... ஆனா நீங்க இவளக் கூட்டிட்டு எங்க போயிட்டிங்க கதிர்ணா? சாப்டீங்களா இல்லையா?" என்று வா என்ற வரவேற்பு கூட செய்யாமல் பதட்டமாக பேசிய ஜெபாவிடம் புன்னகை முகத்துடன்,
"எங்க போவோம் சேகர்? ரெண்டு பேருமா என் வீட்டுக்குப் போகலாம்னு நினைச்சோம்.
அதுக்குள்ள உங்க அக்கா தான் எனக்கு ஒரு ட்ரீட் தர்றேன்னு சொன்னா! அதான் அவளோட வொர்க் முடிஞ்சவுடனே ஸ்நாக்ஸ் சாப்ட போயிட்டு, கொஞ்ச நேரம் பீச்ல போயி காத்து வாங்கிட்டு, லேட் ஆகிடுச்சேன்னு நினைச்சு இங்க வந்தோம். இன்னும் நாங்க நைட் சாப்பாடு சாப்டலப்பா! ஆங்.... மறந்தே போச்சு பாரேன்!"
"உங்கக்கா அவளோட வொர்க் ஸ்பாட்ல இருக்குற எல்லாருக்கும் ஸ்வீட்ஸ் வேற வாங்கி வச்சிருக்காப்பா! கார்லயே பார்ஸல்ஸ மறந்து விட்டுட்டு வந்துட்டேன்; நீ போயி அத உள்ள எடுத்துட்டு வந்துடேன்!
ஏன்னா.... எந்த ஸ்வீட்டான நியூஸ சொல்றதுக்கு அவங்களுக்கு எல்லாம் இவ ஸ்வீட் வாங்கி வச்சிருக்காளோ தெரியல!"
"ஒருவேள சீக்கிரமே நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோமே அது பத்தின அனௌன்ஸ்மெண்ட்ட தான் எல்லார்ட்டயும் சொல்லப் போறியா லஷ்மி?" என்று அவள் உயரத்திற்கு ஏற்ற படி சற்று குனிந்து அவளிடம் உரத்த குரலில் கேட்டுக் கொண்டிருந்தவனை வன்மத்துடன் முறைத்துப் பார்த்தாள் சந்தனா.
உள்ளே எரியும் கோபத்துக்கு விட்டால் கதிரை இரும்பு உருக்கும் கொதிகலனுக்குள் இறக்கியிருப்பாள்! அவளது கோபமும், எரிச்சலும் ஆலெனுக்கும், ஜெபாவுக்கும் புரிந்ததோ இல்லையோ கதிருக்கு
நன்றாகவே புரிந்தது. கடையில் வாங்கிய மொத்த இனிப்புகளின் ஒட்டுமொத்த இனிப்பை விட இவளது எரிச்சல் அவனுக்கு தித்திப்பாக இருந்தது.
மரத்தை வெட்டுகையில் ரம்பம் முன்னும் பின்னுமாக போய் வருவதைப் போல தனது கண்முன் சந்தனாவின் இப்போதைய கோப முகத்தை பார்த்த கதிருக்கு, தன்னுள் கனன்று கொண்டிருந்த கோபம் மற்றும் அவமானத்தின் வலி சற்று பின்னே சென்றது.
"எ.........ன்னது? கல்யா.....ணமா? அன்னிக்கு அம்மா இவளுக்கு நீங்க வேண்டாம்னு சொன்னப்ப இவ மண்டைய மண்டைய ஆட்டுனதா ஆலென் சொன்னாரு! இப்ப நீங்க ரெண்டு பேருமே தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா கதிர்ணா? அப்போ இனிமே உங்கள நான் அத்தான்னு கூப்ட பழகிக்கணும் போலிருக்கே?" என்று கதிரிடம் ஒருவித உற்சாகத்துடன் கேட்டான் ஜெபசேகரன்.
அக்காவின் கணவன் என்று வரப்போகும் எவனோ ஒருவனது குணாதிசயங்களை முதலில் இருந்து புரிந்து கொள்வதற்குப் பதிலாக அந்த ஒருவன் கதிர்ணாவாகவே இருந்து விட்டால் நன்றாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் ஜெபாவுக்கு!
"எப்ப கல்யாணம் பண்றதா ரெண்டு பேரும் முடிவு....!" என்று கதிரிடம் கேட்க ஆரம்பித்திருந்தவனை "ஜெபா....!" என்ற ஆலெனின் கட்டளைக்குரல் பாதியிலேயே நிறுத்தியிருந்தது.
"கதிர், மோளே.....! ரெண்டு பேரும் உள்ள வாங்க! நாம சாவகாசமா உட்கார்ந்து எல்லாத்தையும் பேசலாம்! டேய் ஜெபா... இவங்க ரெண்டு பேரும் சாப்டலையின்னு சொன்னாங்கல்ல; கிச்சனுக்குப் போயி நாலஞ்சு தோச சுட்டு எடுத்துட்டு வா!" என்று தன் மகனிடம் ஒரு வேலையை கொடுத்து அவனை அங்கிருந்து அனுப்ப முயற்சித்தார் ஆலென்.
"அட என்ன ஆலென் நீங்க? அங்க பாருங்க.... சந்து அவருக்குப் பக்கத்துல தான் உட்கார்ந்துருக்கா; இவள உட்டுட்டா எங்க ஓடிப்போயிடுவாளோங்குற மாதிரியே அவ கையப் புடிச்சுட்டே உட்கார்ந்துருக்காரு! இதப் போயி மிஸ் பண்ணிட்டு நான் எப்டி தோச சுடுறது? நான் இங்க தான் இருப்பேன்!"
"நீங்க வேணும்னா போயி உங்க மகளுக்கும், கதிர்ணாவுக்கும் தோச சுட்டு எடுத்துட்டு வாங்க. கதிர்ணா சட்டுன்னு உங்கள வேற மாதிரி கூப்ட வரமாட்டேங்குது.
எல்லாம் கன்ஃபர்ம் ஆகட்டும்! நான்
கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணி உங்கள கூப்டுற முறைய மாத்திக்குறேன். அதுவரைக்கும் நாம இப்டியே மெயின்டைன் பண்ணிக்குவோம்!" என்று கதிரிடம் சொன்னான் ஜெபசேகரன்.
"பரவாயில்ல சேகர்.... ஒண்ணும் அவசரமில்ல! காலையில உங்க அம்மா எழுந்திரிச்சவுடனே அவங்க கிட்ட பெர்மிஷன் கேட்ட பிறகே நீ என்னை அத்தான்னு கூப்டலாம்!" என்று ஜெபாவுக்கு பதில் தந்தான் கதிரேசன்.
இவனுடைய மொத்தப் பேச்சிலும் இவன் தன்னுடைய தந்தையின் கேள்விகள் எதற்கும் பதிலே சொல்லவில்லை என்று சந்தனாவிற்கு உறைத்தது. இதற்கு மேல் ஹாலில் உட்கார்ந்திருக்க வேண்டாம் என முடிவு செய்தவள் தன் தந்தையிடம்,
"ஆலென்..... எனக்கு டின்னர் வேண்டாம்! நீங்க சாப்ட்டுட்டு கதிர அனுப்பி வைங்க! நான் தூங்கணும்; ஸோ என் ரூமுக்குப் போறேன்!" என்று சொல்ல அவளின் பேச்சை மறுத்து,
"என்னம்மா நீ பீச்ல இருக்கும் போதே எங்கிட்ட பசிக்குதுன்னு சொன்னியே? இப்ப தூங்கப் போறேங்குற! சாப்டாம படுத்தா எப்டி உனக்கு நைட் தூக்கம் வரும்? நீங்க மூணு பேரும் ஒக்காருங்க. உங்களுக்கு நான் தோச போட்டு எடுத்துட்டு வர்றேன்!" என்றான் கதிர்.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்! நீ உன் வேலையப் பாரு! ஆலெனாவது, ஜெபாவாவது எனக்கு சாப்பாடு குடுப்பாங்க!" என்று கதிரிடம் சொன்னாள் சந்தனா.
"அப்பக்கூட நீ போய் எல்லாருக்கும் தோச ஊத்த மாட்ட? உங்க அப்பா உங்கிட்ட கேட்ட மாதிரி அவர் சாப்ட்டாரான்னு நீ அவர்ட்ட கேக்க மாட்ட..... அப்டித்தான? சரி விடு.... பொறந்ததுல இருந்து இப்டி இருந்தா உன்னை சொடக்கு போடுற நேரத்துக்குள்ள எப்டி மாத்த முடியும்?" என்று சிறுநகைப்புடன் பேசியவனை ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளங்கைகளை இறுக மூடிக் கொண்டு பல்லைக் கடித்தாள் சந்தனா.
"கதிர்.... என் பிள்ளைங்க ரெண்டு பேரோட தேவைகள பாத்து செஞ்சு குடுக்குறது தான்ப்பா எனக்கு கிடைக்குற பெரிய சந்தோஷம்! நீ எம்மோள எதுவும் சொல்லாத! நாங்க ரெண்டு பேரும் சாப்டாச்சு! நீயும், சந்துவும் சாப்ட்டு முடிச்சீங்கன்னா நீ சீக்கிரத்துல வீட்டுக்கு கெளம்புவ!" என்று கதிரிடம் ஒருவித சங்கடமான குரலில் சொன்னார் ஆலென்.
இதுவரை வீட்டுக்கு வந்த எவரிடமும் இப்படி கிளம்பு என்று மறைமுகமாக சொல்வதைப் போல் அவர் பேசியதேயில்லை. இவனிடம் போய் இப்படிப் பேச வேண்டியிருக்கிறதே என்று அவருக்கு சங்கடமாக இருந்தது.
"அவ்ளோ சீக்கிரமால்லாம் என்னை அனுப்பிடலாம்னு நினைக்காதீங்க ஸார்! என் வேல முடியுற வரைக்கும், யார் என்ன சொன்னாலும் நான் இங்கருந்து கெளம்ப மாட்டேன்!" என்று சொன்னவன் அதற்கு மேல் ஹாலில் வெட்டியாக நின்று கொண்டிருக்கவில்லை.
சமையலறைக்குள் சென்று சந்தனாவிற்கு பிடித்த மாதிரியாக மெல்லியதான ரோஸ்ட் வகையான தோசைகளை ஒன்று ஒன்றாக ஊற்றி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்டில் வைத்து மூன்று தட்டுகளை அவள் முன்பாக அவள் அமர்ந்திருந்த டேபிளில் கொண்டு வந்து வைத்தான்.
"இந்தப் பையன் எதையுமே கொஞ்சங்கூட மறக்கல போலிருக்கே.... கர்த்தரே!" என்று முணங்கிய ஆலென் அவன் அடுப்படியை விட்டு நகர்ந்ததும் அவனுக்கான தோசைகளை ஊற்றிக் கொண்டிருந்தார்.
"வேல முடிச்சிட்டீங்கன்னா உங்க கிட்ட பேசணும் ஸார்! உங்க வீட்ல இருந்து சாப்பாட்ட எல்லாம் நான் எதிர்பாக்கல. சந்தானலஷ்மிய மட்டும் குடுங்க போதும்!" என்று அவனுக்காக இரவு உணவை தயாரித்துக் கொண்டிருந்தவரிடம் சொன்னான் கதிர்.
"இரு கதிர்..... இவங்க ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ளயே வச்சுக்கிட்டு மூணாவதா உன்னையும் என்னால சமாளிக்க முடியாதுப்பா! முதல்ல நீ சாப்ட்டு முடி! அப்புறமா நீ என்ன சொன்னாலும், நான் பொறுமையா கேக்குறேன்!" என்று அவனுக்கு உத்தரவாதம் தந்தார் ஆலென்.
அவரது பேச்சைக் கேட்டு சிறிதாக சிரித்துக் கொண்டவன் தோசைகளை சந்தனாவின் முன் கொண்டு போய் வைத்தான்.
"டேய்.... எதுக்கு இப்டி ஒவ்வொரு தோசையையும் ஒவ்வொரு தட்டுல தூக்கிட்டு வர்ற! ப்ளேட் கழுவ உம்மாமியாரா வருவாங்க? இந்தா.... இந்த ப்ளேட்ஸ்லயே ஒண்ண நீ சாப்டுறதுக்கு எடுத்துக்க! தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்!" என்று சொல்லி விட்டு வெறும் தட்டை அவன் புறமாக நகர்த்தி விட்டு தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
"மாமியார் தான் உள்ள தூங்கிட்டு இருக்காங்களே? அவங்க எப்டி ப்ளேட் கழுவுற கஷ்டமான வேலையெல்லாம் செய்வாங்க செல்லம்....? நீ சாப்ட ப்ளேட்ட கழுவி வைக்குறது எனக்கு புதுசா என்ன? இன்னிக்கும் அந்த வேலைய நானே செஞ்சுடுறேன் விடு. ஆனா
முன்னால எல்லாம் ஒவ்வொரு டிஷ் எடுத்துட்டு வரும் போதும், ஒவ்வொரு புது ப்ளேட்ல வச்சு எடுத்துட்டு வரணும்னு நீதான சொல்லுவ? உங்க வீட்ல நான் சமைச்ச சட்டி பாத்திரத்த கழுவுனத விட, இப்டி வேலைக்கு பத்து தட்டு, இருபது டம்ளருன்னு கழுவுனது தான் அதிகம்!" என்று சொல்ல அவள் விண்டு வாயில் வைத்த தோசையை முழுங்கி விட்டு அடுத்த வாயை எடுக்காமல் கண்களை இறுக மூடி அப்படியே தட்டின் முன் அமர்ந்திருந்தாள்.
தன்னுடைய படுக்கையை உதறி ஹாலில் விரித்து வைத்துக் கொண்டிருந்த ஜெபா கதிரின் பேச்சைக் கேட்டு விட்டு தன் அக்காவின் அருகில் வந்து அவள் தோளைப் பற்றி ஓர் அழுத்தம் கொடுத்தான்.
"கதிர்ணா! ப்ளீஸ்; நீங்க மறுபடியும் மறுபடியும் பழச எல்லாம் பேசி சந்துவ ரொம்ப எம்பாரெஸ் பண்ணாதீங்களேன்! நாங்க ரெண்டு பேரும் முன்னைக்கு இப்ப ரொம்ப மெச்சூர்டாகிட்டோம்..... எங்க வேலைய நாங்களே செஞ்சுக்குறோம். சென்னை வீட்ல என் பெட்ரூம் இந்த வீட்ல பாதி அளவு இருக்கும். அதெல்லாம் மறந்துட்டு நான் இங்க ஹால்ல தான் படுத்துருக்கேன். இப்டி நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டது நிறைய இருக்கு! கதிர்ணா ஏதோ அவங்க மனசுல இருந்தத பேசிட்டாங்க!
நீ டிஸ்டர்ப் ஆகாம சாப்ட்டு முடி சந்து!" என்று இரவு உணவை சாப்பிட்டு முடிக்க தன் அக்காவை வற்புறுத்திக் கொண்டிருந்தான் ஜெபா.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro