
❤ சிறுநகை 17
மாலை ஏழு மணியளவில் சஞ்சீவின் வீட்டிற்குள் இருந்த நடைபாதையில் கதிரும், வினோதினியும் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். காலையில் சாப்பிட்டு முடித்தவனை சஞ்சீவ் தனது அன்னையிடம் அழைத்துச் செல்ல அவர் தன் மகனிடமும், கதிரிடமும் ஏதோ முக்கியமான மீட்டிங் வந்து விட்டதாக சொல்லி, அவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டிலிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
வினோதினி கிளம்பிய சற்று நேரத்தில் சஞ்சீவும், கதிரும் காரில் ஏறி பொள்ளாச்சியை ஒரு சுற்று சுற்றி விட்டு திரும்பினர்.
இவனை இனிமேல் தன்னுடன் இருக்கச் சொல்ல முடியாதே என்று கதிருக்குத் தான் அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருந்தது. சஞ்சீவிடம் அப்படிப்பட்ட சலனமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை.
ஆறரை மணியளவில் வீட்டிற்கு வந்த வினோதினி சற்று ஃப்ரெஷ் அப் ஆகி விட்டு கதிரை தன் வாக்கிங்கில் கலந்து கொள்ள வருகிறானா என்று கூப்பிட்டார். அவனுடனே கிளம்பி வந்த சஞ்சீவிடம்,
"நான் மிஸ்டர் ரேஷ் கிட்ட பெர்சனலா பேசணும் சஞ்சீவ்!" என்று சொல்லி விட்டார்.
சின்ன சுருக்கம் ஒன்று கூட இல்லாத அவர்களுடைய காட்டன் சுடிதார், கழுத்தில் இருந்து ஒரு அடி கீழே இருந்த அவர்களது போனிடைல், காலில் அணிந்திருந்த மிதமான உயர ஹீல், இடக்கையில் வைத்திருந்த லேட்டஸ்ட் வகை மொபைல் என சஞ்சீவின் அம்மா வினோதினி தன்னுடைய வாக்கிங் நேரத்திலும் ஒரு ஹைஃபையான அம்மா எப்படி இருப்பார்கள் என்பதை கதிருக்கு நேரில் காட்டினார்.
இந்த வீட்டிற்கு வந்த போது கதிர் அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. காலையிலும் அவர்களுடைய அறையின் முன் இரண்டு நிமிடங்கள் தான் நின்றான். அதனால் இப்போது அவர்களைப் பார்த்து அவர்களுடைய தோற்றத்தில் சற்றே திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். இருபத்தாறு வயதான சஞ்சீவிற்கு அவனது அம்மா அவனது அக்கா மாதிரியான தோற்றத்தில் தான் இருந்தார்கள்.
தன்னுடைய அன்னை பாகேஸ்வரியின் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியும், அவர்களுடைய சற்றுப் பெரிய குங்குமப் பொட்டும், கொலுசும் இந்த அம்மாவிற்கு முற்றிலும் பொருந்தாத விஷயங்களாக இருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.
மெதுவான நடைப்பயிற்சியினால் வியர்க்காத அவனுடைய முகத்தில் வினோதினி அவனிடம் கேட்ட முதல்கேள்வியே அவனுக்கு வியர்வையை வரவழைத்தது.
"என்னடா எடுத்த எடுப்புலயே இந்த லேடி இப்டி என்கொயரிய போடுறாங்களேன்னு தோணுதோ மிஸ்டர் கதிர்?" என்று கேட்டு சிரித்தவரிடம் தயங்கியபடி,
"இல்ல.....ம்மா..... அப்டி ஒண்ணுமில்லம்மா! ரெண்டு மூணு மாசத்துக்கு ஒருநாள் அங்க போயி லைட்டா சாப்ட்டு.....!" என்று திணறியவனிடம் இதமான சிரிப்புடன்,
"உங்களோட இந்த ஸ்டேட்மெண்ட் பொய்யா இருக்காதுன்னு நினைக்கிறேன்; தேங்க் காட்! நீங்க ரெண்டு பேரும் டெய்லி அது இல்லாம இருக்கவே முடியாதுங்குற அளவுக்கு ட்ரிங்க்ஸ உங்க ஹேபிட்டா மாத்திக்கல.....!" என்று சொல்லி விட்டு நடந்தார்.
ஏடாகூடமாக புறப்பட்ட ஒரு கேள்விக்கு தான் அளித்த பதில் இவர்களுக்கு மழுப்பல் போல் தோன்றியதோ இல்லை அப்படி தோன்றவில்லையோ என்ற குழப்பத்தில் இருந்த கதிர் இப்போதும் பக்கவாட்டில் திரும்பி வினோதினியின் முகத்தைத் தான் பார்த்தபடியே நடந்தான்.
"ம்மா! உங்களுக்கு எப்டி நாங்க சரக்.... அது வந்து..... அங்க போறதெல்லாம் தெரியும்?" என்ற
முக்கியமான சந்தேகத்தை வினோதியிடம் கேட்டான்.
"எனக்கு எப்டி நீங்க ரெண்டு பேரும் போற இடம், உங்க பழக்கமெல்லாம் தெரியும் மிஸ்டர் ரேஷ்? நான் ஒரு கேள்வி கேட்டதுக்கு நீங்க தான் எனக்கு தேவையான பதில குடுத்தீங்க.....!" என்று தோள்குலுக்கிய படி சொன்ன வினோதினியின் பதிலில் வியந்து,
"அட வில்லத்தனமே..... அப்ப நானா தான் ஒளறிட்டனா?" என்று நடிகர் வடிவேலுவின் பாணியில் சஞ்சீவின் தாயை பேவென்று இதழ் பிளந்து பார்த்துக்
கொண்டிருந்தான் கதிர்.
"என்ன மிஸ்டர் ரேஷ்.... என்னை ரொம்ப நேரமா மேலயும் கீழயுமா பாத்துட்டு இருக்கீங்க? சஞ்சீவ் காலையில உங்களப் பத்தி எங்கிட்ட கொஞ்சம் பேசுனான். இத்தன வருஷமா அவனுக்கு நீங்க ஒரு நல்ல ப்ரெண்டா, கம்பானியனா இருந்ததுக்கு உங்களுக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும்!" என்று தன்னிடம் சொன்ன வினோதினியிடம்,
"அப்டி சொல்றதா இருந்தா நாந்தாம்மா உங்க பையனுக்கு நெறய தேங்க்ஸ் சொல்லணும்! எனக்கு ரேஷ்ங்குற பெயர குடுத்தது அவந்தான்; அவன் மட்டும் இல்லன்னா நான் இன்னிக்கி வரைக்கும் ஸ்கூல்ல ட்ராயிங் சொல்லித் தர்ற ஆர்ட் டீச்சரா தான் காலம் தள்ளியிருப்பேன்.
"சஞ்சீவ் ஒருத்தனுக்கு தான் என்னோட படைப்புகள எப்டி மார்க்கெட் பண்றதுன்னு நல்லாத் தெரியும்! நான் வரைஞ்ச 235 பெயிண்டிங்ல இதுவரைக்கும் 40 பக்கத்துல தான் அவன் விக்க விட்டுருப்பான்! உங்களோட ஆர்ட் வொர்க் ஒவ்வொண்ணும் ஒரு பொக்கிஷம்; அத சந்தையில கத்திரிக்கா மாதிரி வித்து, அதோட மவுச குறைக்கக்கூடாதுன்னு சொல்லி பத்திரமா எடுத்து வைக்க சொல்லிருவாம்மா!"
"உங்க வீடு அளவுக்கு இல்லன்னாலும், என் வரையில ஒரு ஆடம்பரமான வீட்ட எனக்குன்னு வாங்கிக் குடுத்தவன், நான் வாடகைக்கு எடுத்த வீட்ட இப்பத்தான் காலி பண்ணிட்டு கெளம்புனான்; இத்தனையும் எனக்கு எதுக்காகடா பாத்து பாத்து செய்ற? நமக்குள்ள ஏதோ விட்ட குறை, தொட்ட குறைன்னு அழகான உறவு இருக்கோடா சஞ்சீவ்னு கேட்டம்னா என்ன இருக்கு நமக்குள்ள....? அதெல்லாம் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருப்பான்!"
"இனிமே அவனுக்கு என்னோட தேவை இருக்குமோ இருக்காதோ....? ஆனா எனக்கு அவனை மாதிரியான இன்னொருத்தன் கிடைக்கவே போறதில்லம்மா!" என்று தளுதளுத்த குரலில் வினோதினியிடம் சொன்னான் கதிர்.
"காம்டவுன் மிஸ்டர் கதிர்....! சஞ்சு உங்கள டெவலப் பண்ணி விட்டது அவன் செஞ்ச தியாகமெல்லாம் கிடையாது; அவன் உங்கள வளர வச்சு, அதுல கிடைச்ச பணத்த இன்வெஸ்ட்மெண்ட்டா போட்டு
புது புது பிஸினஸ கையில எடுத்து எக்ஸ்ப்ரிமெண்ட் பண்ணியிருக்கான். இன்னிக்கு வரைக்கும் உங்களோட கடைகள்லாம் சக்ஸஸ்புல்லா தான் ரன் ஆகிட்டு இருக்கு? பட் அத ஏன் நீங்க சஞ்சீவ்ட்ட குடுக்கணும்னு நினைக்குறீங்க?" என்று அவனிடம் கேட்டார் வினோதினி.
"என்னால இத்தனயையும் தனியா பாத்துக்க முடியாதுன்னு நினைக்குறேன்மா! இதுவரைக்கும் சஞ்சீவ் தான் அந்த கடைங்களோட பிஸினஸ் எல்லாத்தையும் பாத்துக்கிட்டான்....!"
"இப்பவும் அது அவங்கிட்ட இருந்தா தான், அவன் இத்தன வருஷமா எனக்கு செஞ்ச உதவிக்கெல்லாம் நான் என்னால முடிஞ்சத அவனுக்கு திருப்பிக் குடுத்துட்ட திருப்தி எனக்கு இருக்கும்! அவனுக்கு எப்பவும் எதையும் இலவசமா வாங்கிக்குறது சுத்தமா பிடிக்காது; அதான் கொஞ்சமா காசு குடுத்துட்டு இந்த கடைங்கள எடுத்துக்கோடான்னு அவங்கிட்ட கேட்டுருந்தேன்மா!" என்று வினோதினியின் கேள்விக்கு பதிலளித்தான் கதிர்.
"கொஞ்ச நேரம் உட்காரலாமா மிஸ்டர் கதிர்? நடந்துட்டே பேசுனா அது அவ்வளவு ஈஸியா இல்ல....!" என்று அவனிடம் சொன்ன வினோதினி அந்த வீட்டின் அரை வட்ட வாக்கிங்கை முடித்து சில்ரன்ஸ் ப்ளே ஏரியாவின் பக்கம் வந்திருந்தார்.
குடைக் காளான் போன்ற அமைப்பில் அங்கங்கே உட்காரும் மேஜைகள், அதன் அருகில் ஊஞ்சல், சீசா, பைஃபர் மெட்டிரியலால் செய்யப்பட்ட மரத்தில் மூக்கை உரசியபடி நின்றிருந்த இரண்டு பெரிய பறவைகளின் சிலையின் வயிற்று வழியாக சறுக்கல் என அந்த இடம் கதிர் நேற்றிரவில் பார்த்ததை விட இன்று ரம்மியமாக இருந்தது.
"இங்க பாருங்க மிஸ்டர் கதிர்! நான் இப்டி பேசுறதுக்காக நீங்க என்னை தப்பா எடுத்துக்காதீங்க! இந்த அஞ்சு வருஷத்துல நீங்க சஞ்சீவ் கூட க்ளோஸ் ஆகியிருக்கலாம்! அவன் உங்களுக்கு குடுத்தத அவங்கிட்டயே நீங்க திருப்பி குடுத்துடுறேன்னு சொல்லலாம். பட் அவன் உங்க கிட்ட எதையும் வாங்குற நிலைமையில இல்ல; அதுவும் தவிர கதிர் ப்ரோ ப்ராப்பர்ட்டீஸ நான் வாங்கிக்குறேன்; அதுக்கு பதிலா நாம அவருக்கு நம்ம பிஸினஸ் ஷேர்ஸ அவர் கிட்ட குடுக்கலாம்ங்குறான். அதுல எனக்கு சுத்தமா உடன்பாடு இல்ல மிஸ்டர் கதிர்.....!"
"நீங்க ரொம்ப நல்லவராவே இருக்கலாம்; சஞ்சீவ்க்கு உங்க மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கலாம்..... ஆனா ஒரு ஜாயிண்ட் பேமிலியில இருந்துட்டு, நான் எப்டி திடீர்னு ஒரு மூணாவது மனுஷர்ட்ட என் ஹஸ்பெண்டோட ஷேர்ஸ குடுக்குறேன்னு எல்லார்ட்டயும் சொல்ல முடியும்? அதுவும் சஞ்சீவோட தாத்தா இப்பதான் இறந்துருக்குற இந்த வேளையில..... சஞ்சீவோட இந்த முடிவு கரெக்டா இருக்காது மிஸ்டர் கதிர்! அவன் நினைக்கிற மாதிரி என் மாமனார் என்னோட ஹஸ்பெண்ட வொர்க் ஸ்ட்ரெஸ் குடுத்து கொல்லவும் இல்ல; அவர் இறந்து போன ரெண்டு நாள் முன்னால கூட ஃபேக்டரிக்கு போயிட்டு தான் வந்தாரு.....!"
"தொழில்ல என் ஹஸ்பெண்டோட ஷேர்ஸ் வேற யார் கைக்கும் போறத நான் விரும்பல.....! உங்களுக்கு என்ன சின்ன வயசு தானே? 65 வயசுல சஞ்சீவோட தாத்தா 27 இடத்துல எங்களோட பிஸினஸ franchise பண்ணியிருந்தாங்க தெரியுமா? அவர கம்பேர் பண்றப்ப உங்க வயசு சின்னது; வேகம் பெரிசு தான? ஸோ உங்களால ஒரு 5 கடைய பாத்துக்க முடியாதா?" என்று கேட்ட வினோதினியின் குரலில் உன்னிடம் நான் சொல்ல வருவதை நீ சற்று தெளிவாக புரிந்து கொள்ளேன் என்ற அழுத்தம் தெரிந்தது.
அவரைப் பார்த்து சிறிதாக புன்னகைத்த கதிர் அவரிடம், "தப்புதாம்மா! எல்லாருக்கும் குடுக்குற இடத்துல இருக்குறவனப் போயி எங்கிட்ட இருந்து வாங்கிக்கன்னு கேட்டது தப்புதான்! அதுக்கு அவன் என் அப்பாவோட ஷேர்ஸ தர்றேன்னு சொன்னதும் தப்புதான்! மாசத்துல ரெண்டு பெயிண்டிங் பண்றதுக்கு நான் என் ஆர்ட் கேலரியிலயே சீட்ட தேய்ச்சுட்டு இருக்குறதும் தப்பு தான்; சஞ்சீவ் எனக்காக குடுத்தத நான் எங்கிட்டயே பத்திரமா வச்சு பார்த்துக்குறேன்மா! நான் இங்க உங்க கிட்ட துக்கம் விசாரிக்க தான்மா வந்தேன்; அதனால அப்டியே இன்னிக்கு நைட்டே......" கிளம்புகிறேன் என்ற வார்த்தையை சொல்லாமல் வினோதினியிடம் தலையை மட்டும் ஆட்டினான் கதிரேசன்.
"நான் பேசுனது எதுவும் உங்கள ஹர்ட் பண்ணிடலயே மிஸ்டர் கதிர்?" என்று சற்று தயங்கிய குரலில் கேட்ட வினோதினியிம் புன்னகைத்தவன்,
"ச்சே.... ச்சே! உங்க பிரச்சனைய சொல்லி எனக்கான ஒரு நம்பிக்கையையும் குடுத்து இருக்கீங்க.... இதுல நா ஹர்ட் ஆகுறதுக்கு என்னம்மா இருக்கு? எப்டி பொட்டுல அடிச்ச மாதிரி பாயிண்ட்டா பேசுறீங்கம்மா நீங்க? உங்கள எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! அம்மான்னா உங்கள மாதிரி தான் இருக்கணும்!" என்றான் உறுதியான குரலில்.
"ஓ.... அப்ப உங்களுக்கு உங்க அம்மாவ பிடிக்காது; மிஸ்டர் சஞ்சீவ்க்கு அவர் அம்மாவ பிடிக்காது! ரெண்டு பேரும் மாறி மாறி எங்கள ஒருத்தர்ட்ட இன்னொருத்தர் திட்டிக்குவீங்க அப்டித்தான? இல்லன்னா அவன் இவ்ளோ சீக்கிரமா உங்களோட மிங்கிள் ஆகியிருக்க மாட்டானே? அவன் அழுதுட்டு இருந்தப்ப, நீங்களும் கிட்டத்தட்ட அதே ஸ்டேஜ்ல தான் இருந்தீங்க.... கரெக்டா? அதுனால தான் உங்களுக்குள்ள இப்டி ஒரு பாண்டிங்க்? ஆம் ஐ ரைட்?" என்று கேட்டவரிடம்,
"யப்பா! நீங்க பயங்கரமா எல்லாத்தையும் போட்டு வாங்குறீங்கம்மா! இதுக்கு மேல எனக்கு உங்க கிட்ட எந்த வேலையும் இல்ல! வந்த காரியத்த உருப்படியா செஞ்சனான்னு தெரியல; ஆனா இங்க வந்துருக்கலையின்னா வாழ்க்கையில ஒரு நல்ல அறிவுரைய மிஸ் பண்ணியிருப்பேன். நான் சஞ்சீவ்ட்ட சொல்லிட்டு லக்கேஜ எடுத்து வைக்குறேன்மா!" என்று சொல்லி விட்டு வினோதினியிடம் விடைபெற்றான் கதிர்.
"ஹோல்ட் ஆன் எ செக்.... நான் ஒண்ணுமே பண்ணலன்னு சொல்றது உங்க தன்னடக்கமா இருக்கலாம் மிஸ்டர் கதிர்; ஆனா இனிமே இப்டி சொல்லாதீங்க..... ஒரு நல்ல படைப்ப உருவாக்குறது அவ்ளோ ஈஸியான விஷயமில்ல; உங்களுக்கு அது ஈஸியா வருதுங்குறதால அதோட வேல்யூ தெரியாம இருக்காதீங்க.....!"
"நீங்க எப்ப வேணும்னாலும் இங்க வரலாம், நம்ம வீட்ல ஸ்டே பண்ணலாம்; சீக்கிரமே உங்க கல்யாண இன்விடேஷனோட இங்க வாங்க! ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் ப்ரைட் ஃப்யூச்சர்!" என்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த வினோதினியிடம் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்து விட்டு ஒரு தெளிவான மனநிலையுடன் அங்கிருந்து கிளம்பினான் கதிரேசன்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro