
❤ சிறுநகை 11
ஹைதராபாத் நகரில் ஜுப்ளி ஹில்ஸ் ஏரியாவிலிருந்த ஒரு பெரிய வில்லா அங்கங்கே உதிர்ந்த பூக்களும், குறுக்கும் மறுக்குமாக கிடந்த நிறைய இருக்கைகளும், குவிந்து கிடந்த நிறைய பரிசுப்பொருட்களும், கழற்றி வைத்திருந்த ரோஜாப்பூ இதழ்கள் கொண்ட மாலைகளுமாக
சற்று முன்னர் தான் ஒரு திருமணத்தை நடத்தி முடித்த வீடு என்று சொல்லாமல் சொல்லியது.
காலையில் பிரமாண்டமாக நடைபெற்ற தன்னுடைய சகோதரனின் மகன் ஸத்வினின் திருமணத்திலும், மாலையில் அதை விட பிரமாண்டமாக நடைபெற்ற திருமண வரவேற்பிலும் சுமலதா மிகப்பெரிய சந்தோஷத்துடன் பங்கெடுத்துக் கொண்டார்.
இந்த மாதிரியான குடும்ப விழாக்களில் பங்கெடுப்பதற்கு நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு பொழுதே கிடைத்ததில்லை. அப்போதெல்லாம் சுமலதாவிற்கு ஒரு மாதத்திற்கே பத்து, இருபதிற்கு மேலாக சுபநிகழ்வுகளுக்கான அழைப்பு பத்திரிக்கைகள் வந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு அழைப்பையும் மதித்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு அன்றைய பர்ஸ் கனத்தை பொறுத்து ஏதாவது ஒரு பரிசொன்றை சுமலதா வாங்கி தன்னுடைய செகரெட்டரியிடம் கொடுத்து அனுப்புவார்.
துக்க நிகழ்வுகளுக்கு என்றால் எவ்வளவு தாமதாக என்றாலும் அன்றைய தினமே நேரில் சென்று அவர்களுடைய குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி விட்டு நிறைய பணஉதவியும் செய்து விட்டுத் தான் வருவார். இப்படி கூட வேலை செய்த நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்களின் குடும்பத்துக்கு எல்லாம் பார்த்து பார்த்து உதவியும் கவனிப்பும் தந்த சுமலதா தன்னுடைய குடும்பத்தில் மூன்று நபர்கள் தன் இருப்பையும் அரவணைப்பையும் விரும்புகிறார்கள் என்று இன்றுவரை புரிந்து கொள்ளாமல் போனது தான் மிகப்பெரிய சோகம்!
இன்றும் தன் அண்ணன் மகன் ஸத்வினுக்கும் அவனது மனைவிக்கும் ஆலென் தந்த ஒருலட்சத்தில் ஓரளவுக்கு திருப்திகரமான பரிசை வாங்கி கொடுத்தது சுமலதாவிற்கு மனநிறைவாக இருந்தது.
என்ன ஒன்று அவனுடைய திருமணத்தில் அனைவரும் குடும்பம் குடும்பமாக நிற்கும் பொழுது தான் மட்டும் தனியாக நிற்பது ஒருவிதமான அசௌகர்யத்தை அவருக்குக் கொடுத்தது.
ஆலென் இங்கு வந்திருந்தாலும் அவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்திருக்காது! சந்து, ஜெபா இவர்களுடைய கதையெல்லாம் கேட்கவே வேண்டாம்! ஓரிடத்தில் தங்களுக்கு திருப்திகரமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றால் சத்தமே காட்டாமல் அந்த இடத்திலிருந்து அடுத்த நிமிடமே இருவரும் காணாமல் போயிருப்பார்கள். முன்பெல்லாம் இந்த மாதிரியான விஷயத்தில் காணப்பட்ட அவர்களுடைய ஆர்ப்பாட்டம் இப்போதெல்லாம் அவர்களிடம் இல்லவே இல்லை. அப்படியே அவர்களுடைய அப்பா ஆலெனை கார்பன் காப்பி எடுப்பவர்களாக மாறியிருந்தனர்.
தான் மட்டுமாக இந்த திருமணத்திற்கு புறப்பட்டு வந்தது சரிதான் என்று நினைத்துக் கொண்ட சுமலதா தன்னுடைய கணவரிடம் இப்போதே பேச வேண்டும் என்ற உணர்வு தோன்ற அவருக்கு கால் செய்தார்.
"சுமா..... சொல்லுடா; கிளம்பிட்டியா?" என்று கேட்ட தன்னுடைய கணவரிடம்,
"என்ன ஆலென்..... எடுத்த எடுப்புல
கிளம்பிட்டியான்னு தான் கேப்பியா நீ? மேரேஜ் எப்டி நடந்தது? ரிசப்ஷன் எப்டி நடந்ததுன்னெல்லாம் கேக்க மாட்டியா? நம்ம சந்துவுக்கும் நாம கூடிய சீக்கிரத்துல இப்டி க்ராண்டா ஒரு பங்ஷன நடத்தணும் ஆலென்! என்ன டெகரேஷன்ஸ், என்ன சாப்பாடு, எப்டி பங்ஷனுங்குற....... பங்ஷனுக்கு வந்துருந்தவங்க எல்லாரும் அண்ணாவைப் பத்தியும், அவரு சம்பந்தியோட ஸ்டேட்டஸ் பத்தியும் தான் பெருமையா பேசிட்டு இருந்தாங்க தெரியுமா?" என்று ஆர்வமான குரலில் பேசிக் கொண்டிருந்த தன் மனைவியின் பேச்சைப் பாதியில் நிறுத்திய ஆலென் சுமலதாவிடம்,
"சுமா.... சுமா! போதும்டா! நம்ம சந்துவுக்கு நடக்குற கல்யாணம் உங்க அண்ணன் பையனுக்கு நடந்த கல்யாணம் மாதிரி கண்டிப்பா நடக்காது! அவ கல்யாணத்துக்கு நாலே நாலு பேர் வந்தாலும் அவங்க எம்மோள மனசார வாழ்த்துறவங்களா இருக்கணும். ரெண்டு மனசு சந்தோஷமா இணையுற இடத்துல சும்மா ஸ்டேட்டஸ பத்தி வெட்டி வாய் பேசிட்டு இருக்குற கும்பல் எல்லாம் எண்ட மோள் பக்கத்துல கூட வர வேண்டாம். கல்யாணம் தான் நல்லா நடந்து முடிஞ்சிடுச்சுல்ல..... சந்தோஷம்! கர்த்தருடைய கிருபையால மணமக்கள் சந்தோஷமா இருக்கட்டும்! நீ எப்ப இங்க வர்ற.....? அதச் சொல்லு முதல்ல!" என்று கேட்டார்.
"கிளம்பணும் தான்; ஆனா இங்க ஒருமாதிரி ஜாலியா இருக்கே ஆலென்..... சரி; நாலே பேரோட நம்ம சந்துவுக்கு கல்யாணமா? நீ என்ன லூசா? எப்டி இப்டியெல்லாம் பேசுற? சந்துவுக்கும் நாம ஸத்வின் கல்யாணம் மாதிரி தான் க்ராண்டா கல்யாணம் பண்ணனும். நான் அங்க வந்ததும் நாம ரெண்டு பேருமா சேந்து முதல் வேலையா உன் சொந்தத்துல நம்ம சந்துவுக்கு நல்ல மாப்பிள்ள பாக்க ஆரம்பிக்கிறோம்.....!"
"நம்ம பண்ணுன லவ் மேரேஜ் இப்ப நம்ம புள்ளைங்க ரெண்டு பேரு தலையில வந்து விடிஞ்சு நிக்குது. அவங்களுக்கு உன்னோட பக்கத்து சொந்தமாவது கூட நிக்கட்டும்னு தான் உன்னோட மதத்த நான் அவங்க பேரோட சேத்து விட்டேன்; அதுனால இப்ப இந்தப் பக்கம் உங்க மூணு பேரையும் யாரும் எதுலயும் சேத்துக்க மாட்டேங்குறாங்க! எங்க அண்ணா, அண்ணி கூட சந்து, ஜெபா என்ன பண்றாங்க, நீ எப்டி இருக்கன்னு ஒரு வார்த்தை கேக்கல தெரியுமா?" என்று வருத்தத்தோடு சொன்ன தன் மனைவியிடம்,
"சரி விடும்மா! இதல்லாம் நம்ம முதல்ல இருந்து பாத்தது தான? அவங்க என்ன புதுசாவா நம்மள ஒதுக்குறாங்க? என்ன ஒண்ணு.... முன்னயெல்லாம் உனக்கு உன் பிறந்த வீட்டு மனுஷங்களோட பங்ஷனுக்கு போகுறதுக்கு டைம் இருக்காது. இப்ப நிறைய நேரமும் இருக்குறதால அவங்கள தேடுற! அவ்வளவு தான்! ஜெபாவுக்கு நாளைக்கு கொஞ்சம் டைட் வொர்க் இருக்குறதால நைட் வீட்டுக்கு வர லேட் ஆகும்னு சொன்னான்மா; அதுனால தான் நீ வர்ற டைம கேக்குறேன்!" என்று கேட்ட ஆலெனிடம்,
"நான் நாளைக்கு மார்னிங் தான் இங்கருந்து கெளம்புறேன் ஆலென். என்னை பிக்கப் பண்ணிக்க ஜெபாவ அனுப்பாத; நீயே வந்துடு; என்னன்னு தெரியல. இங்க வந்ததுல இருந்து உன்னை ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருக்கு! டின்னர் சாப்டியா?" என்று தன்னுடைய மனைவி கேட்க ஆலென் லேசாக சிரித்துக் கொண்டார்.
"சுமா! பேசுறது நீ தானாம்மா? எனக்கு பசிக்குது ஆலென்னு சொல்லாம நீ சாப்டியான்னு எல்லாம் கேக்குறியே....? என்னாச்சு உனக்கு?" என்று கேட்டவரிடம் சிணுங்கிய குரலில்,
"போ ஆலென்.... நான் என்ன செய்ய? நீ தான் நமக்கு கல்யாணம் ஆனதுல இருந்து என்னை ஒரு
குழந்த மாதிரியே கவனிச்சுக்குற? பாவம் நீ; உன்ன விட்டுட்டு தனியா வந்துட்டேனே? நீ சாப்டியான்னு கேப்போம்னு நினைச்சா அதுக்கும் சிரிக்குற; கிண்டல் பண்ணுற! நம்ம வீட்ல உன்னை தவிர வேற யாருக்கும் பொறுப்புங்குற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியல!" என்று சொன்னார் சுமலதா.
"ச்சே...ச்சே! அப்டியெல்லாம் சொல்லாத சுமா; பிள்ளைங்க ரெண்டும் முதல்ல இருந்ததுக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்ல; மேடம் நீங்க தான் கொஞ்சமா பொறுப்புக்கு ஸ்பெல்லிங் கத்துக்கணும்!" என்று தயங்கிய குரலில் சொன்னவரிடம் குற்ற உணர்வு பொங்கிய மெதுவான குரலில்,
"நாந்தான் உனக்கு ரொம்ப இம்சையா இருக்கேன்ல ஆலென்.....? இனிமே மாசா மாசம் நீ போடுற பட்ஜெட் படியே நாம செலவு பண்ணலாம்! எனக்கு நீ ஒரு வாரத்துக்கு ஆயிர ரூபா மட்டும் குடு போதும்; நம்ம வட்டி அமௌண்ட்ட எல்லாம் நாம சந்து கல்யாணத்துக்கே சேத்து வைக்கலாம்; நிறைய செலவு பண்ணலயின்னா அத அப்டியே நிறைய ஸேவிங்ஸா கன்வெர்ட் பண்ணிடலாம்ல?" என்று கேட்ட தன்னுடைய மனைவியிடம்,
"ஐ லவ் யூ சுமா.....!" என்றார் ஆலென் காதலுடன்.
"ஏய்...... என்னப்பா திடீர்னு?" என்று வெட்கக்குரலில் தன் கணவரிடம் கேட்டவரிடம்,
"உனக்கு நான் இந்த விஷயத்த அட்வைஸாவோ இல்ல வார்னிங்காவோ சொல்லி புரிய வச்சுருந்தா, நீ ரொம்ப கஷ்டப்பட்டுருப்ப! உங்க அண்ணன் பையன் கல்யாணத்துல போயி உட்கார்ந்துருக்குறப்ப நம்ம மோள பத்தி யோசிக்குற பாத்தியா? இத நீ உன் வாழ்க்கையில முதல் தடவையா செய்ற சுமா! இனிமே நம்ம குடும்பம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். சந்துவோட பேசுறியா? அவ ப்ரெண்டு வீட்டுக்கு வர்றாங்கன்னு சொல்லி அவ ஏதோ ட்ரிங்க் ரெடி பண்ணிட்டு இருக்கா!" என்று சுமலதாவிடம் சொன்னார் ஆலென்.
"ஆமெனு டிஸ்டர்ப் செய ஒத்து.... (அவளை தொந்தரவு செய்யாதீங்க) நான் நாளைக்கு ஊருக்கு வந்துட்டு கால் பண்றேன்!" என்று சொன்ன தன்னுடைய மனைவியிடம்,
"சரி எல்லாம் இருக்கட்டும்; நான் இன்னிக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன். அதுனால நீயும் எங்கிட்ட ஐ லவ் யூ சொல்லு! நீ எத்தன படத்துல பக்கம் பக்கமா எவ்ளோ டயலாக்ஸ் பேசுனவ...... எங்கிட்ட லவ் யூ சொல்றதுல உனக்கு என்ன சுமா கஷ்டம்?"
என்று மனைவியிடம் உரிமைச் சண்டையிடும் குரலில் கேட்டார் ஆலென்.
"தேவுடா அது நாக்கு சால கஷ்டமே;
ஈ மனுஷகி அசலு சிக்கு லேது..... போன் பெட்டு" (அட கடவுளே அது எனக்கு ரொம்ப கஷ்டந்தான்;
இந்த மனுஷனுக்கு கொஞ்சங்கூட வெட்கமில்லை..... போனை வையுங்க) என்று சிரித்த படியே மறுமுனையில் போனை கட் செய்தார் சுமலதா.
ஒன்பது மணியளவில் கதிர் தன்னுடைய காரை சந்தனாவின் வீட்டு சுற்று சுவர் அருகே பார்க் செய்து விட்டு அவளுடைய வெள்ளையும் பிங்க்கும் கலந்த நிற ஊட்டி ரோஜா செடியிலிருந்து ஒரு ரோஜாவைப் பறித்து எடுத்துக் கொண்டு அவள் வீட்டிற்குள் வந்தான்.
கடனே என்று முடியை ஒரு சுருட்டு சுருட்டி கொண்டையாக்கி ஹேர்பின் குத்தியிருந்த சந்தனா அவனது கையில் இருந்த அவளது வீட்டுத் தோட்டத்தின் ரோஜாவைப் பார்த்து பல்லைக் கடித்து விட்டு "டேய்..... எங்க ரோஸ் தான இது? எதுக்குடா இத பிய்ச்சுட்டு வந்த?" என்று கதிரிடம் கேட்டாள்.
"ஏய்.... பூவப் பறிச்சதுக்கு எதுக்கும்மா இவ்ளோ கோபப்படுற? எனக்கு முள் குத்திடும்னு கவலைப்பட்டதுனால திட்டுறியா? டோண்ட் வொர்ரி. என் கைக்கு ஒண்ணும் ஆகல லஷ்மி! எங்கயும் முள் குத்தாம பூவ ஜாக்கிரதையா பறிச்சுட்டேன்....!" என்று சொன்னவனிடம் கடும் கோபத்துடன்,
"உனக்கு எங்க முள் குத்துனா எனக்கென்னடா வந்துச்சு?
பூவப் பறிச்சுட்டன்னு உங்கைய பாத்தாலே தெரியுது! ஏன் அதப் பறிச்சேன்னு தான் உங்கிட்ட கேக்குறேன்!" என்று கேட்டு ஃப்ரையிங் பேனை அவன் முகத்திற்கெதிராக ஓங்கிக் கொண்டு நின்றவளிடமிருந்து ஆலென் தான் தக்க சமயத்தில் அங்கு வந்து அவனை அடிபடாமல் காப்பாற்றினார்.
"கதிர்.... வாப்பா! சந்து சொன்ன அவளோட ப்ரெண்ட் நீ தானா? நான் அவ வேலை பார்க்குற இடத்துல இருந்து யாரோ வரப்போறாங்களோன்னு நினைச்சேன். எந்தா மோளே கதிரோடு அநாவசியமாய்ட்டு வழக்கிடான் போவுன்னது?"
(கதிரோடு தேவையில்லாமல் ஏன் சண்டைக்குப் போகிறாய்?) என்று இருவரிடத்திலும் பேசியவரை முறைத்த சந்தனா,
"ஈவ்னிங் டைம் ஆகிட்டாலே செடி பக்கத்துலயே போகக்கூடாதுன்னு நீதான ஆலென் சொல்லுவ; இவன் நைட்டு ஒம்போது மணிக்கு போயிட்டு பூவப் பிச்சா இவன தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா?" என்று தன் தந்தையிடம் கேட்டாள்.
"சரி விடுடா.... நம்ம கதிர் தான? தெரியாம பூவப் பறிச்சுட்டான்; வீட்டுக்கும் கூப்ட்டுட்டு ப்ரையிங் பேன தூக்கிட்டு அடிக்கப் போனா கதிர் நம்மள பத்தி என்ன நினைப்பான்?" என்று சந்தனாவிடம் கேட்டார் ஆலென்.
"தப்பால்லாம் எதுவும் நினைக்க மாட்டேன் ஸார்.... முதல் தடவையா உங்க வீட்டுக்குள்ள கெஸ்டா உள்ள வந்துருக்கேன்; அதான் ஸ்வீட்ஸ், காரம் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். பூ மட்டும் வாங்க மறந்துட்டேன்; அதான் உங்க வீட்டுத் தோட்டத்துல இருந்து ஒரே ஒரு ரோஸ எடுத்தேன் ஸார்! அது தப்பு தான்னாலும் இந்தப் பொண்ணு இப்டியா என்னைய அடிக்க வர்றது ஸார்?" என்று கேட்டவனிடம்,
"ஸாரி கதிர்..... இது சந்துவுக்கு ரொம்ப பிடிச்ச இடம்; இங்க இருக்குற செடியெல்லாமே அவளே அவ கையால வாங்கிட்டு வந்து நட்டு வளர்த்தது; அதுனால இத யாரு தொட்டாலும் மோளுக்கு பிடிக்காது!" என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் ஜெபாவின் பைக் சத்தமும் கேட்டது.
"ம்ம்ம்..... ஜெபாவும் வந்துட்டான் சந்து; கதிர டின்னர் டேபிளுக்கு கூட்டிட்டுப் போடா! நான் இதோ வர்றேன்!" என்று சொன்னவர் வாசல் பக்கமாக சென்றார்.
ஆலென் சற்று தள்ளி சென்றதும் சந்தனாவை முறைத்த கதிர் அவளிடம், "ஏய் ஃபெதரு, என்னடீ அப்பா பக்கத்துல இருக்காருன்னுட்டு ஓவரா ஆட்டம் போடுற; என் மேல அக்கறப்படுற மாதிரி நடிக்கவாவது செய்யேன்; உனக்கு முள்ளு குத்துனா எனக்கென்னங்குற? என்னைய..... உன்னோட ரேஷன நீ மண்டையில அடிப்பியா?" என்று கேட்டவனிடம்,
"ஆமா! நீ பெரிய இவன்.... உம்மேல
நான் எதுக்குடா அக்கற காட்டணும்?
உன்னைய அடிக்குறதுக்கு பாகேஸ் ஆன்ட்டிட்ட பெர்மிஷன் வேற வாங்கணுமாக்கும்? என்னைய நீ கோபப்படுத்துனன்னா, உன்னை நான் அடிக்கத்தான் செய்வேன்டா ரேஷன்!" என்று அவனிடம் சொல்லி விட்டு அவன் வாங்கி வந்திருந்த பொருட்களை ஹாலில் இருந்த ஒரு சிறிய டைனிங் டேபிளில் வைக்கும்படி பணித்து விட்டு சமையலறைக்குள் சென்றாள்.
"திமிரு திமிரு; உடம்பெல்லாம் திமிருடீ உனக்கு..... இவ கண்ணசைக்குறதுக்கு நாம எதுக்கு ரெஸ்பான்ட் பண்ணி அவ சொன்ன வேலையப் பார்த்துட்டு இருக்கோம்?" என்று தனக்குள் நினைத்துக் கொண்ட கதிர், பொருட்களை அவள் சொன்ன இடத்தில் வைத்து விட்டு கைகழுவிக் கொண்டு சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro