
❤ சிறுநகை 1
நள்ளிரவு ஆரம்பித்த கனமழை அன்று அதிகாலை ஆறு மணி வரையிலும் இளம் சாரலாக பெய்து கொண்டிருந்தது. இப்படிப்பட்ட தூறல் மழையெல்லாம் எங்கள் பக்தியை தடைசெய்யாது என்று நம்மிடம் சொல்லும் வகையில் சுசீந்தரம் தாணுமாலய பெருமாள் கோவிலுக்கு முன்னால் இருந்த கார்பார்க்கிங்கில் தன்னுடைய பலீனோ காரை நிறுத்தியிருந்தான் ரேஷ் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நம் கதையின் நாயகன் கதிரேசன்.
கடவுளைப் பார்க்க செல்லும் முன் தன் தாயிடம் பேசுவோம் என்று நினைத்தவன் அலைபேசியில் அவர்களை அழைத்தான்.
"யய்........யா! என்னய்யா காலங்காத்தால கூப்ட்ருக்க? வாடக்காத்துல நனைஞ்சு ஒங்காதுக்கு ஏதும் பிரச்சனையா சாமி?" என்று கேட்ட தன்னுடைய அன்னையிடம்,
"ம்ப்ச்! கூப்டுற நேரமெல்லாம் கை வலிக்குதா? காலு வலிக்குதா? காது வலிக்குதான்னு தான் கேப்பீங்களா நீங்க..... எப்டிம்மா இருக்கீங்க? உங்க நியாபகம் வந்துச்சு; அதாம்மா கூப்ட்டேன்!" என்று முதலில் அவர்களை கடிந்து கொண்டும், பின்பு அன்பை நிரப்பியும் பேசியவாறு.
"இல்லய்.....யா; கூதக்காலமுல்ல? அதான் ஒனக்கு பனி சேராதேயின்னு யோசிச்சு அப்டிக் கேட்டுப்புட்டேன்; நீயி நல்லாயிருக்கயின்னா ரொம்ப நல்லது..... அடுத்து ஊருக்கு எப்பய்யா வார? அக்கா, புள்ளைக ரெண்டும் நீ எப்ப வாரன்னு எங்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்குதுக!" என்று சொன்னவரின் குரலில் நானும் தான் உன்னை இங்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற மறைமுக ஏக்கம் நன்றாகவே தெரிந்து.
"வர்றேன்ம்மா! இங்க கொஞ்சம் வேலைய முடிச்சுட்டு ரெண்டு மூணு நா இருக்குற மாதிரி வாரேன்.... வச்சிடவா?" என்று கேட்டவனிடம்,
"சரி தங்கம்! எப்பவும் மகராசனா இருக்கணும்!" என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்தார் கதிரின் தாய்.
"எப்பவும் மகராசனா இருக்கணும்!" இதுதான் அவனுடைய அன்னை "போன வச்சிடாவாம்மா?" என்று அவன் கேட்கும் போதெல்லாம் கடைசியாக சொல்லும் வார்த்தை.
அன்னையின் இந்த வாழ்த்தை பெறுவதற்காகவே தான் அவரை கதிர் இப்போது அழைத்தான்......
அவனுக்குத் தேவையானது அவன் வாயைத் திறந்து கேட்காமலேயே அவன் அன்னையிடமிருந்து அவனுக்கு கிடைத்து விட்டது! இது போதும்..... இந்த வாழ்த்தால் இன்னும் பெரிதாக பல சாதனைகளை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டான் கதிர்.
அன்னையிடத்தில் இவ்வளவு பாசமும் உரிமையும் கொண்டவன் இன்று தன்னுடைய புதிய தொழில் ஆரம்பிப்பதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லையே ஏன் என்ற கேள்வி வாசகர்கள் யாருடைய மனதிலாவது தோன்றியிருந்தால் இந்தக் கேள்விக்கான பதில் இன்னொரு தருணத்தில் உங்களுக்கு கிடைக்கும்!
தாயின் ஆசி கிடைத்து விட்டது, இனி சஞ்சீவ் சொன்னது போல கடவுளைப் பார்க்க செல்வோம் என்று நினைத்தவன் கடவுள் பக்தியால் இங்கு வந்தானா? இல்லை தன்னுடைய உதவியாளன் சஞ்சீவின் அனற்றலுக்காக வந்தானா என்று அவனிடம் கேட்டால் கண்டிப்பாக இரண்டாவது காரணத்தை தான் தேர்வு செய்வான்.
ஒவ்வொரு புதிய தொழிலை ஆரம்பிக்கும் முன்னரும், இங்கு வந்து ஒருவரை விட்டு இன்னொருவரிடம் நாங்கள் பாரபட்சம் காட்டி கும்பிடவில்லை
என்று சொல்லும் வகையில் மும்மூர்த்திகளும் ஒருவராக நிற்கும் தாணுமாலய பெருமாளையும், ஆஞ்சநேயரையும் ஒரு கும்பிடு போட்டு விட்டு புதிய துவக்கத்தை ஆரம்பிப்பது மிகவும் நல்ல பலனைத் தருகிறது என்பது சஞ்சீவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்தப் பையனின் நம்பிக்கையை எதற்கு பொய்யாக்குவானேன் என்று கதிரும் சஞ்சீவிக்கு காரோட்டியாக இங்கு வந்து சேர்வான்! இங்கு வருவதற்கு பலனாக இந்த இடத்தில் இருந்து அவனது முக்கிய புரஃபொஷனுக்கான சில பல இன்ஸ்பிரேன்ஷன்களும் அவனுக்குக் கிடைக்கும்!
கதிரேசன் கவர்மெண்ட் காலேஜ் ஆஃப் பைன் ஆர்ட்ஸ், சென்னையில் பெயிண்ட்ங்கை தன் படிப்பாக ஏற்று முடித்தவன்! ஒரு குறிப்பிட்ட வடிவம், நிறம், கோடு ஆகியவற்றை வைத்து ஒரு காட்சியை சுதந்திரமாக அமைக்கும் Abstract painting, எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் வண்ணச் சாயத்தைப் பயன்படுத்தித் தீட்டப்படும் ஓவியமான Oil painting,
கம்ப்ரெஸ் செய்யப்பட்ட காற்றின் மூலம் வர்ணப்பூச்சை பெயிண்ட் செய்யும் spray painting, மெழுகை சூடாக உருக்கி அதன் மூலம் செய்யும் Encaustic painting இவைகளில் எல்லாம் நிபுணன்!
பத்து, பதினோரு வயதில் க்ரையான், வாட்டர்கலர் கொண்டு வீட்டின் வெளிப்புற சுவரில் வரைய ஆரம்பித்த கலை 31 வயதில் அவனை இருந்த இடத்தில் இருந்தே பன்னாட்டு பணத்தை எல்லாம் சம்பாதிக்க வைத்திருந்தது.
"யார் இந்த ரேஷ்? இவருடைய படைப்புகளைக் கண்டு நாங்கள் வியக்கிறோம்? இந்த ஓவியரைப் பற்றி ஏன் நாங்கள் எதையுமே தெரிந்து கொள்ள முடியவில்லை....? இவருடைய ஒரு நேர்காணல், பேட்டி மாதிரியான எதையாவது நீங்கள் எங்களுக்குத் தர முடியுமா?" என்று கேட்கும் வெளிநாட்டவர்களிடம் எல்லாம் சஞ்சீவ் புன்னகைத்த படி நீட்டுவது ரேஷ் என்ற கலைஞன் தன்னுடைய ஓவியத்தை வாங்கியவர்களுக்கு, தன்னுடைய ஓவியம் அவர்களுக்குப் பிடித்திருந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்று சொல்லி அவர்களுக்கு தன்னுடைய கையொப்பமிட்டு கொடுக்கும் ஒரு நன்றி கார்டும்... அந்தந்த நாட்டவர்களுடைய மொழியில் அவனுடைய இரண்டு வரி நலம் விசாரித்தலும் மட்டுந்தான்!
"ஏன் பாஸ்.... இப்டி இருக்கீங்க? எங்கிட்ட நல்லாத்தான பேசுறீங்க? அதேயே நம்ம கஸ்டமர்ஸ் கிட்ட செஞ்சா என்ன? உங்களோட பெயிண்டிங்க தெரிஞ்ச அளவுக்கு உங்கள யாருக்கும் தெரிய மாட்டேங்குது பாருங்க!" என்று சில நேரங்களில் ஆதங்கப்படுவனிடம் சிறு சிரிப்புடன்,
"ரொம்ப நல்லதுன்னு நெனடா சஞ்சீவ்! நான் உன்னைய மாதிரி ஷார்ப் ப்ரையின் எல்லாம் கெடையாது; நம்ம பெயிண்டிங்க வாங்குறவங்க கிட்ட பேசணுங்கறதுக்காக நான் எட்டு மொழிய எல்லாம் கத்துக்கிட்டு இருக்க முடியாது! நீ வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி பேசித் தர்ற ரெண்டு வார்த்தய திருப்பி பேசறத மட்டுந்தான் என்னால நம்ம பெயிண்டிங்க வாங்குறவங்களுக்காக செய்ய முடியும்; இதுக்கு மேல என்னைய தொந்தரவு பண்ணாத!" என்று சொல்பவனை "போய்த் தொல!" என்று விட்டு விட்டு தன்னுடைய அடுத்த வேலைகளைப் பார்க்க போய் விடுவான் சஞ்சீவ்.
அவனுடைய ஒவ்வொரு பெயிண்டிங்கிலும் காணப்பட்ட தனிப்பட்ட ஸ்டைலும், பலவிதமான பெயிண்டிங் டெக்னிக்குகளில் அவனுடைய ஈடுபாடும் தான் இந்த தொழிலில் கதிர் இவ்வளவு சம்பாதித்தற்கு காரணம்......
அவனுடைய ஒவ்வொரு பெயிண்டிங்கும் அவனது சிக்னேச்சர் சிம்பலான Resh என்ற நாலு எழுத்து வார்த்தை அந்த பெயிண்டிங்கின்னுள்ளேயே எங்காவது ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். அதைத் தேடி கண்டுபிடிப்பதே அவனைப் பற்றி நன்றாக தெரிந்த அவன் பெயிண்டிங்கை வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய டாஸ்க்காக இருக்கும்!
இப்படிப்பட்ட ஒரு படைப்பாளி, தனது படைப்புகளின் மூலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் நாகர்கோவிலில் உள்ள சொத்துக்களை வாங்குவதற்கு பயன்படுத்திக் கொண்டிருந்தான்.
முதலில் துணிக்கடை, அடுத்ததாக நகைக்கடை, பின்னர் ஒரு பெண்கள் அழகுநிலையம், நாலாவதாக பெண்களுக்கான ஒரு ஷீ மார்ட் ஆரம்பித்து வியாபாரங்கள் அனைத்தையும் கவனிக்க தேவையான ஆட்களும்
ஏற்பாடு செய்து தொழிலில் லாபத்தை பார்த்த பின்,
இப்போது ஐந்தாவதாக ஒரு மொபைல் ஷோரூமை வாங்கியதற்கு தான் இப்போது இந்த கோவிலில் தரிசனத்துக்காக இருவரும் வந்திருந்தார்கள்.
"பாஸ்.... ஷர்ட்ட கழட்டிட்டு, இந்த பட்டுத்துண்ட உங்க இடுப்புல கட்டிங்கோங்க!" என்று தனக்கு அறிவுரை தந்த தன்னுடைய ஆல் இன் ஆல் அழகுராஜனிடம் சிறு எரிச்சல் குரலில்,
"ஏன்டா எப்ப பாத்தாலும் நீ என்னைய ஒரு சின்னப் பையன் மாதிரியே ட்ரீட் பண்ற.....? உங்கூட கோவிலுக்குள்ள வரணும்; வரலையின்னா நீ உடமாட்ட! அப்போ சட்டைய கழட்டணும்னு
எனக்குத் தெரியாதா.....? இங்க வர்ற ஒவ்வொரு தடவயும் எனக்கு இத நீ சொல்லத் தேவயில்ல; வாய மூடு!" என்று சஞ்சீவிடம் சொல்லி விட்டு அவனிடம் ஒரு முறைப்பை செலுத்தியவன், தனது சட்டையைக் கழற்றி காரின் பின்புற இருக்கையில் மடித்து வைத்து விட்டு வெற்று மார்புடன் கோவிலுக்குள் சென்றான்.
இதைவிட கதிரேசன் மற்றும் சஞ்சீவ் இருவரின் உடற்தோற்றத்தை வர்ணிக்க நமக்கு சரியான நேரம் வாய்க்காது என்பதால் அவர்கள் இருவரையும் நாம் சற்று உற்றுக் கவனிக்க வேண்டியதாகிறது.
சஞ்சீவ்..... 26 வயது நிரம்பிய ஒரு துடிப்பான இளைஞன்; கற்பூர புத்தி, கம்ப்யூட்டர் மூளை;
அவனது ஐந்தடி எட்டு அங்குலம், கதிரின் ஆறடி இரண்டு அங்குல உயரத்திற்கு முன் சற்று குறைவாக தெரியும்! அவனது சுண்டினால் ரத்தம் வரும் வெள்ளை நிறம் கதிரின் மாநிறத்துக்கு முன் மிகவும் அதிகமாக தெரியும்!
கதிர் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினமும் சில பல வொர்க் அவுட்களை மறக்காமல் செய்பவன்; சஞ்சீவ் அந்த மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் எனக்கு ஒவ்வாமை என்று கூறும் நருஞ்சான் வகை! கதிரேசனுக்கு இவனிடம் மிகப்பிடித்தது அவனது மின்னல் வேக செயல்பாடுகளும், நைநை என்று பின்னாலேயே அடுத்து என்ன செய்ய என்று கேட்கும் ஆட்டு மூளையாக இல்லாமல் தன்னிச்சையாக அவன் செயல்படுவதும் தான்! பிடித்த இரண்டைப் போல் அவனிடம் பிடிக்காத இரண்டு குணங்களும் இருந்தது!
முதலாவதாக தான் கதிரிடம் சொல்லும் வேலைகளை கதிர் குறித்த நேரத்திற்குள் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பான் சஞ்சீவ்! அவர்கள் இருவருக்குள் முதலாளி, தொழிலாளி என்ற பேதம் எல்லாம் இல்லை என்றாலும், சஞ்சீவ் கதிருக்கு ஒரு டைட்லைனை தந்து விட்டான் என்றால் கதிர் அந்த அவகாசத்துக்குள் எப்படியும் தனது சமீபத்திய பெயிண்ட்ங்கை முடித்து அவன் கையில் கொடுத்திருக்க வேண்டும்!
"எனக்கு நீ பாஸா..... உனக்கு நான் பாஸா சஞ்சீவ்....?" என்று கதிர் அவனிடம் அலுத்துக் கொண்டாலும், இப்போது ஒரு மாதத்திற்குள் முடிக்கும் ஒரு ஓவியம், சஞ்சீவின் தூண்டுதல் இல்லை என்றால் நான்கைந்து மாதங்களுக்கு அப்படியே கேன்வாஸாக ஒரு மூலையில் தான் கிடக்கும் என்று கதிருக்கு தெரியும்!
சில படைப்பாளர்களின் இயல்பு இப்படித்தான்..... அவர்களது படைப்புக்கு வெளியில் இருந்து ஒரு ஊக்க சக்தி அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்; இல்லையென்றால் அப்படியே தேங்கி நின்று விடுவார்கள்! கதிரேசனும் இந்த இயல்பினன் தான்! சஞ்சீவின் தார்க்குச்சி இல்லாமல் ஒழுங்காக தான் குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்க மாடட்டோம் என்று அவனுக்கே தெரியும்!
இரண்டாவதாக சஞ்சீவ் சில நேரங்களில் கதிரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவனிடம் மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு நோண்டுவான். கதிரும் அப்படி அவனிடம் உரிமை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அதற்கும் தடா தான்!
உன்னுடைய எல்லா விஷயங்களிலும் நான் மூக்கை நுழைப்பேன்.... ஆனால் என்னுடைய விஷயம் எதிலும் உன் தலையீடு இருக்கக்கூடாது என்று நினைக்கும் ஆதிக்க மனோபாவம் தான் சஞ்சீவுடையது!
சஞ்சீவுடைய இந்த இயல்பை தெளிவாகப் புரிந்து கொண்டதால் கதிரும் அவனிடம் அவனது குணத்திற்கேற்ப நடந்து தன்னுடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்வான்.
"பாஸ்.... நீங்க வாங்குற எல்லா ப்ராப்பர்ட்டீஸூம் ஒரு பொண்ணை இம்ப்ரெஸ் பண்றதுக்கு பக்காவா போதும்; ஸோ இதுக்கப்பறம் எதுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு? சென்னை போய் அம்மா, அப்பாவ இங்க கூட்டிட்டு வந்துட்டு மேரேஜ்க்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்க வேண்டியதுதான? இட்ஸ் ஆல்ரெடி லேட்! உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னா நானும் நெக்ஸ்ட் இயருக்குள்ள என் மேரேஜ பத்தி யோசிக்கலாம்!" என்று யோசனை சொன்னவனிடம்,
"எதுக்குடா எனக்காக நீ நெக்ஸ்ட் இயர் வரைக்கும் கல்யாணத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கணும்? இப்பவே உன் வீட்ல போயி மேரேஜ்க்கு அரேன்ஜ் பண்ணச் சொல்லு! எப்டியும் த்ரீ, ஸிக்ஸ் மன்த்ஸ்ல ஒரு பொண்ணு கிடைச்சிடுவா! ஆல் த பெஸ்ட்! பட் என்னோட லைஃப நான் பாத்துக்குறேன். அதப் பத்தி நீ வொர்ரி பண்ணிக்காத!" என்று கூறி சஞ்சீவின் வாயை அடைத்து விட்டான்.
"மேரேஜ்க்கு அரேன்ஜ் பண்ணச் சொல்றதெல்லாம் சரிதான்.... ஆனா என் வீட்ல இருக்குறவங்க என்னோட பெட்டர்ஹாஃப இன்னுமா டிஸைட் பண்ணாம இருக்கப்போறாங்க.....? படிச்சது அவங்க இஷ்டப்படி தான்! இங்க வர்ற வரைக்கும் வாழ்ந்தது அவங்க இஷ்டப்படி தான்; அங்க போனா என் கல்யாணமும் அவங்க இஷ்டப்படி தான்..... நான் உங்க கூட இருக்குற வரைக்கும் தான் பாஸ் நான் நெனக்குறத நானே செஞ்சுக்குற சுதந்திரம் கூட எனக்குக் கெடைக்கும்!" என்று நினைத்து லேசாக சிரித்துக் கொண்டான் சஞ்சீவ்.
"என்ன சிரிப்பு?" என்று அவனை ஒரு பார்வை பார்த்த படி கேட்ட கதிரிடம்,
"ஒண்ணுமில்ல! வாங்க உள்ள போகலாம்...... நமக்கு அருள் குடுக்குறதுக்காக சாமிய நாம ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைக்க வேண்டாம்!" என்று சொல்லி கதிரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றான் சஞ்சீவ்.
இப்படிப்பட்ட நல்ல தோழனாக எப்போதும் கதிரின் உடனிருப்பவன் இப்போது கோவிலில் ஆஞ்சநேயரின் சந்நிதி முன் நின்று கொண்டு கண்மூடி இருகைகளை கூப்பி,
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்
என்று முணுமுணுப்பாக பக்தியுடன் ஆஞ்சநேயரின் நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தான்.
அவனது கதிர் பாஸ் இன்று தொடங்கப் போகும் இந்த பிஸினஸும் மற்றைய வியாபாரங்களைப் போல நல்ல லாபம் பெற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டான் சஞ்சீவ்!
ஆனால் எனக்கும், இந்தப் பையனின் வேண்டுதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; நான் சும்மா போகிற போக்கில் உங்களைப் பார்த்துக் கொண்டு போகலாம் என்று தான் இங்கு வந்திருக்கிறேன் என்ற மாதிரியான ஒரு பாவத்தை முகத்தில் காட்டிய படி, கும்பிடக் கூட செய்யாமல் தனக்கு முன்னால் நின்ற ஆஞ்சநேயரின் உருவத்தை தலை நிமிர்த்திப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான் கதிர்!
இப்போது பெயிண்டிங்கில் தான் ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள்; தொழில்களின் மூலம் நல்ல வருமானம் வருகிறது; வெளிநாடுகளில் அவனுடைய பெயிண்டிங்கிற்கு நல்ல மவுசு இருக்கிறது! எல்லாம் சரி தான்; பேங்கில் பணம், கையில் நாலைந்து தொழில்கள், பெரிய வீடு, போக வர சொகுசாக கார் இதெல்லாம் கிடைத்து விட்டதாலேயே ஒரு மனிதன் வாழ்வில் சந்தோஷமாக இருக்கிறான் என்று சொல்லி விட முடியாதே......?
"நான் இப்ப சந்தோஷமா இல்ல! என்னிக்கு அவ எதுக்க ஒக்காந்து அவ கண்ண நேருக்கு நேரா
பாக்குறேனோ, என்னிக்கு அவ எனக்கு குடுத்ததுக்கு எல்லாம் சேத்து வச்சு அவளுக்கு திருப்பி குடுக்குறனோ அப்பதான் நான் சந்தோஷமா இருப்பேன்; அது உங்களுக்குத் தெரியும்தான? பின்ன ஏன் அதுக்கான சந்தர்ப்பத்த இன்னும் எனக்கு நீங்க ஏற்படுத்தித் தராம இருக்கீங்க?"
அப்பா, அம்மாவை விட்டுட்டு இந்த ஊருக்கு வந்த இத்தன வருஷத்துல ஒருதடவ கூட அவ என் கண்ணுல படுற வாய்ப்பே கிடைக்கல..... ஆனாலும் அவளோட மொகம் அப்டியே மனசுக்குள்ள பதிஞ்சு போய் நிக்குது!
அவள நா சீக்கிரமா பாக்கணும்! உங்களால முடிஞ்சா அதுக்கு உதவி பண்ணுங்க!" என்று கடவுள் ஆஞ்சநேயர் ஏதோ அவனுக்கு இன்னொரு உதவியாளன் போல அவனது வேண்டுதலை சற்று வித்தியாசமான முறையில் அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தான் கதிரேசன்.
சிறுவயதில் நூறு பேரின் முன் கிட்டத்தட்ட இடையில் இருந்து நழுவி விழுந்திருந்த கால் சாராயை கையால் பிடித்துக் கொண்டு தொப்பலாக தண்ணீர் வடிய வடிய நெஞ்சு முழுக்க அவமானத்துடனும், கண்கள் முழுக்க கண்ணீருடனும் நின்றது இன்னமும் நினைவில் இருந்து நீங்காமல் நன்றாக பதிந்து போயிருந்தது.
"நீ என்னைய படுத்துன பாட்டுக்கெல்லாம் என்னிக்கு கண்ணுல படுறியோ அன்னிக்கே அங்கயே வச்சு கொல பண்ணனும்டீ உன்ன...... இல்ல, இல்ல..... அவ்வளவு சுலபமா ஒன்னைய கொன்னு எல்லாம் போட்டுடக் கூடாது!"
"என்னைய நீ வச்சுருந்த மாதிரி எடுபுடியாத் தான் ஒன்னையும் நான் என் வீட்ல வச்சுருக்கணும்..... ஒங்க அம்மாக்காரி, அப்பன், தம்பிக்காரன் எல்லாரும் வாயில அடிச்சுக்கிட்டாலும் சரித்தான்..... நான் நினைச்சத நடத்திக் காட்டுறேனா இல்லையான்னு பாருடீ.....!"
"எங்கிட்ட வந்ததுல இருந்து
தண்ணி சோறு சிக்கனுன்னு எல்லாமே உனக்கு கிராம் கணக்குல அளந்து தான் சாப்புடக் குடுப்பேன். அவ்வளவு ஏன் நான் தர்ற முத்தத்தக் கூட அளந்துதான் குடுப்.....!" என்று எண்ணிக் கொண்டிருந்தவன் அவள் மேல் கொண்டிருந்த தன்னுடைய பழி உணர்ச்சி எப்போதும் போல
இப்போதும் காணாமல் போனதை எண்ணி தன்னுடைய தலையைக் கோதிக் கொண்டான்.
அவளைக் கடைசியாகப் பார்த்து ஆண்டுக்கணக்காகி விட்டது. அவள் என்னைப் பேசிய பேச்சுக்கும், எனக்குச் செய்த இம்சைகளுக்கும், எனக்குப் பரிசளித்த அவமானத்திற்கும் தண்டனையாக அவளை ஒருதடவை சாகும் வரை தூக்கிலிடும் தண்டனையே கொடுக்கலாம்!
அவள் மீது இவ்வளவு கோபம் இருந்தும், இவ்வளவு வன்மம் இருந்தும் இந்த பழியுணர்ச்சியுடன் கூடவே கண்மூடித்தனமான காதலும் கைகோர்த்துக் கொண்டு நிற்பது ஏன்?
"அவ இத்தன தப்பு செஞ்சான்னு கணக்கு சொல்ற நானு, இன்னும் ஏன் அவள மறக்கவே இல்ல.....
எனக்கு ஏன் அது ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்கு?
அவளப் பாக்குறதுக்கு முன்னாடியே மனசு இத்தனை பாடுபடுது. அவளப் பார்த்தா அவகிட்ட நான் என்னோட கோபத்த காட்டுவேனா, காதலக் காட்டுவேனான்னு தெரியலயே?" என்று இருதலை கொல்லி எறும்பு போல் மனதிற்குள்ளாக தவித்துக் கொண்டிருந்தான் கதிரேசன்.
இன்று நேற்றல்ல..... பல ஆண்டுகளாக அவன் மனதிற்குள்ளாக அடக்கி வைத்திருக்கும் தவிப்பு இது; எவள் ஒருத்தியை இன்று கண்ணால் கூட பார்த்து விட வேண்டாம் என்று நினைக்கிறானோ, அவள் ஒருத்தியை மட்டுந்தான் அன்று மனதார நேசிக்கவும் செய்தான்!
"ஒன்னைய பாத்தேன்..... பாத்த நிமிஷமே நீ செத்தடீ!" என்று சொல்லிக் கொண்டே தான் அவள் விரும்பும் விதமாக ஒவ்வொரு கடைகளையும் திறந்து, அவள் வசிக்கும் ஊரிலே கூட வசித்துக் கொண்டிருக்கிறான்.
"என்னோட ட்ரெஸ், சேகரோட
ட்ரெஸ் எல்லாம் ட்டூ தவுசண்ட், ஃபைவ் தவுசண்ட் ரேன்ஜ் இருக்கும் ரேஷன்.... நாங்க ரெண்டு மூணுதடவ போட்டு கழட்டிக் குடுக்குற துணியப் போட்டுக்கவே நீ எங்களுக்காக இன்னுங்கொஞ்ச நேரம் வேல செய்யலாம்!" என்று சிறுவயதிலேயே பெரிய மனுஷி போல் பேசியவள் இப்போது தன்னுடைய ரேஷ் ரெடிமேட்ஸில் அனைத்து ஃப்ளோரிலும் சுற்றி அவளுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு
ஆயிரக்கணக்கில் அல்ல லட்சக்கணக்கில் கூட தன் பணத்தை காலி செய்ய மாட்டாளா என்ற எண்ணம் சில நேரங்களில் கதிருக்கு தோன்றும்!
இப்போது அவனுடைய மனநிலையை அவனது மனதிற்குள்ளாக இருந்தவள் கண்டு கொண்டாள் போலும்......
"பாத்தியா..... பாத்தியா? என்னைய கஷ்டப்படுத்தணும்ங்குற பத்தி
உன்னால யோசிக்கக் கூட முடியல தான? நீ இப்பவும் எனக்கு ஸ்லேவா இருந்து நான் நினக்குறத எல்லாம் செய்யணும்னு தான் ஆசப்படுற!
ஏய்..... ரேஷன் ஷாப்! நீ எங்க? நான் எங்க? எவ்ளோ பெரிய உயரத்துக்கு வந்தாலும், நீ என்னை பிடிக்க முடியாதுடா! எப்பவுமே நீ எனக்கு கீழ தான்; என்னை ஜெயிக்குறத பத்தி இல்ல; எம்பக்கத்துல நிக்குறத பத்திக் கூட ஒருநாளும் யோசிச்சுடாத ரே..........ஷன்!" என்று கீச்சிடும் குரலில் அவன் மனதிற்குள்ளாக கதிருக்கு ஒரு பேச்சு கேட்டது.
"அப்டிதான்டீ யோசிப்பேன்;
இப்ப நீ கோடீஸ்வரி இல்லடீ! இந்நேரம் உனக்கே 28 வயசு ஆகியிருக்கும்! அப்ப அந்த ஈரோயின் அம்மாவுக்கு மார்க்கெட்டே போயிருக்குமுல்ல? எனக்குத் தெரிஞ்சு இப்ப நீ சோத்துக்கே துந்தநாதான் போட்டுக்கிட்டு இருப்ப! என்னோட இந்த மொத்த வாழ்க்கையில நான் அவமானப்பட்டதும், ஏமாந்ததும் உங்கிட்ட மட்டுந்தான்! அதுக்கெல்லாம் உனக்கு பதில் குடுக்க வேணாம்? வங்குல இருந்து கெளம்புற எலி எந்தப் பக்கமா போகும்னு யோசிச்சு யோசிச்சு தான் பொம்பளைங்க யூஸ் பண்ற பொருள் இருக்குற கடையாப் பாத்து வாங்கி வச்சிருக்கேன்! ஒருநாள் இல்ல ஒருநாள் எங்கையில மாட்டுவ! மவளே அன்னிக்கு இருக்குடீ ஒனக்கு; நீ செஞ்ச வேலைக்கெல்லாம் சேத்து மொத்தமா செட்டில்மெண்ட்டு!" என்று தன் மனதிற்குள்ளாக கருவிய படியே ஆஞ்சநேயரிடமிருந்து தன் கண்களை விலக்கியவனை சஞ்சீவ் உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.
"என்ன பாஸ்..... பயங்கரமான யோசன? சீரியஸா எதுவும் யோசிச்சுட்டு இருந்தீங்களா? நான் உங்க கிட்ட கிளம்பலாமான்னு கேட்டேன்; நீங்க பதிலே சொல்லலையே?" என்று கதிரிடம் கேட்டான்.
"இல்ல சஞ்சீவ்...... நாம இங்க நெறய தடவ வந்துருக்கோம், ஆனா மொத தடவையா நான் சாமிட்ட ஒரு வேண்டுதல் வச்சிருக்கேன்! அது நடக்குமா, நடக்காதாங்குறத பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன். போலாமா?" என்று சஞ்சீவிடம் கேட்டு கோவிலில் இருந்து வெளியேறி காரை பார்க் செய்திருந்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தான் கதிரேசன்.
பழியுணர்ச்சியும், காதலும் ஒருத்தியிடமே இருக்கும் போது கதிருடைய பழியுணர்ச்சி ஜெயிக்குமா? காதல் ஜெயிக்குமா?
நாயகியை அவன் சந்திக்கும் தருணம் எப்போது ஏற்படப் போகிறது?
முன்போல அளவில்லாத உரிமை உணர்ச்சியை கதிரிடம் காண்பித்து விட்டு நாயகி என்ன பாடுபடப் போகிறாள்?
ஆழ்மனதிற்குள் புதைந்து கிடக்கும் முதல் காதலும், கதிருடைய ஆசையும் நாயகியை பார்க்கும் போதும் அடங்கியிருக்குமா?
இந்த கேள்விகளுக்கான விடைகளை எல்லாம் அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்!
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro