Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌸27🌸

இளங்கதிரை உம்மென்று பார்த்தவள், "சரி கிளம்பலாம் நீங்கள் என்னவோ என்னை கேலி செய்து கொண்டே இருக்கிறீர்கள்!" என்று எழ முயன்றாள்.

இளநகையை எழ விடாமல் தடுத்து தன் பிடியை இறுக்கி கொண்டவன், "சரி அதைப்பற்றி இனிமேல் பேச வேண்டாம் விடு, நீரில் விளையாடுகிறாயா?" என்று வாய்க்காலை சுட்டிக் காட்டி வினவினான்.

உடனே சட்டென்று முகம் மலர தலையாட்டியவள், "ஆனால் நேரமிருக்கிறதா வேறு டிரஸ்ஸும் எடுத்து வரவில்லையே?" என்றாள் யோசனையுடன்.

"நேரமென்ன நேரம்? நாம் கிளம்புவது தான் நேரம். புடவை நனையாதபடி அதோ அந்த பாறையில் அமர்ந்துக் கொள்ளலாம் வா!" என்று அவள் கரம் பற்றி அழைத்து சென்று ஓடும் நீரில் பாதியளவு மூழ்கியிருந்த பாறையில் அமர வைத்தான்.

கால்களால் தண்ணீரை அளைந்தவள், "இந்த பதினோரு மணிக்கு கூட தண்ணீர் நன்றாக சில்லென்று இருக்கிறது இல்லை?" என்று அவனிடம் புன்னகைத்தாள்.

ம்... என்றபடி அவன் மீண்டும் அவளை பின்னிருந்து கட்டிக்கொள்ள, நெற்றி சுருங்க அவனிடம் திரும்பியவள் பின் பழையபடி நீரிடம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அவனுடைய நெருக்கமும், அணைப்பும் அவளுக்கு பிடித்திருந்தாலும் சரியா தவறா என்ற குழப்பத்தையும் கொடுத்தது.

"என்ன ஏதோ கேட்க வந்தாய் பிறகு பேசாமல் திரும்பிக் கொண்டாய்?" என்று இளாவின் கன்னம் வருடினான் கதிர்.

"ம்... ஒன்றுமில்லை இனிமேல் உங்களிடம் எதுவுமே கேட்க கூடாது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்!"

"ஆஹான்... என்னிடம் எதுவும் கேட்காமல் உன்னால் எத்தனை நாட்களுக்கு இருக்க முடிகிறதென்று நானும் பார்த்து விடுகிறேன்!" என்றான் சவாலாக.

மதிய ஓய்விற்கு பிறகு மாலையில் சற்று வேலையிருப்பதாக அறையில் கதிர் லேப்டாப்போடு போராடிக் கொண்டிருக்க அதே நேரம் அமுதா இளநகையோடு போராடிக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா விஷயம் இதோடு நீ வந்து வந்து என்று இழுக்க ஆரம்பித்தே அரைமணி நேரமாகி விட்டது. ஆனால் விஷயம் தான் வெளியே வந்த பாடில்லை. எனக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டும் வந்து... என்கிறாய் பிறகு வேறு எதையாவது பேசுகிறாய். அம்மாவிடம் என்ன தயக்கம் சொல், ஏதாவது சந்தேகமா அல்லது ஏதாவது பிரச்சினையா?" என்றாள் அமுதா.

"பிரச்சினை என்றில்லைமா ஆனால் இருக்குமோ என்று பயமாக இருக்கிறது!" என்றாள் தவிப்புடன்.

"ப்ச்... தெளிவாக சொல்டா!"

"இல்லைம்மா... எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் ஆகப் போகிறது அல்லவா இன்னும் குழந்தை உண்டாகவில்லையே எதுவும் பிரச்சினையாக இருக்குமோ?" என்று கேட்டு அவளிடம் தெளிவுப்பெற முயன்றாள்.

இளாவின் கேள்வியில் இதயம் கனிய, "அப்படியெல்லாம் எதுவும் இல்லை... மாமாவுக்கு இப்பொழுது தானே உன்னை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இனிமேல் தான் குழந்தை பிறக்கும்!" என சூசகமாக பதிலளித்தாள் அமுதா.

'ப்ச்... இவர்கள் என்ன மாமாவை விட மோசமாக குழப்புகிறார்கள்? குழந்தை பிறப்பதற்கும் மாமாவுக்கு என்னை பிடிப்பதற்கும் என்ன சம்பந்தம்?' என்று சலிப்புடன் பெருமூச்செரிந்தாள்.

"என்ன?"

"அட போங்கம்மா... மாமா குழப்பியதற்கு உங்களிடம் ஏதாவது பதில் கிடைக்கும் என்று பார்த்தால் நீங்கள் அவர்களுக்கு மேல் என்னை குழப்புகிறீர்கள்!" என்றாள் அலுப்புடன்.

தன்னை மீறி புன்னகைத்தவள், "அப்படியென்னம்மா உன் மாமா உன்னை குழப்பி விட்டான்?" என்றாள்.

"அதுவா... அடிக்கடி அழுதால் குழந்தை வராது என்கிறாரே அப்படியா?" என்றாள் சந்தேகமாக.

ஏனோ அவ்விஷயத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்து அவள் மனம் முரண்டுப் பிடித்தது.

இளநகையின் கேள்வியில் தானும் குழம்பிய அமுதா, தன் தம்பி எதற்காக இவளிடம் அப்படி சொல்லி வைத்திருக்கிறான் என்று யோசித்தாள்.

"சொல்லுங்கம்மா!" என்று அவளை உலுக்கினாள்.

ம்... என்றவள், "ஆமாம்... நீ அடிக்கடி அழுதாயா என்ன, ஏன்?" என்று பதிலளிக்காமல் அவளிடம் வேறு கேள்வியை கேட்டாள்.

"அடிக்கடி என்றில்லை... இன்று காலையில் தான்!" என்று தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

அவள் முகத்தை கூர்ந்த அமுதா, 'இவள் எதற்காக அழுது அதை சமாளிக்க அவன் அப்படியொரு பொய்யை சொல்லி இருப்பான். காலையில் அதனால் தான் பூ கொடுக்க சென்ற பொழுது இவள் வெளியே வரவில்லை போலிருக்கிறது!' என்றெண்ணிக் கொண்டாள்.

"சரி நீ எதற்காக அழுதாய்?" என்றதும் இளநகையின் முகத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது.

முகமெல்லாம் சிவந்து போக பயத்துடன் எச்சில் விழுங்கியவளை கண்டு அமுதா வியப்படைந்தாள்.

'இது என்ன அப்படி என்ன நடந்திருக்கும் இவள் என்னவோ இப்படி பயப்படுகிறாள்?'

"அது... அது... நீங்கள் என்னை தவறாக நினைத்துக் கொள்ள கூடாது, எல்லாம் மாமா தான். நான் எதுவும் செய்யவில்லை மாமா மேல் தான் தப்பு எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு பயம் தான் இது தப்பு நீங்கள் திட்டுவீர்கள் என்று கூட நான் அழுதேன் தெரியுமா? ஆனால் மாமா கேட்கவில்லை..." என்று அடிக்கொரு மாமா போட்டு பேசியவளை இடைமறித்தவள் பொறுமையின்றி கேட்டாள்.

"அப்படி நீ அழும் அளவுக்கு கதிர் என்ன தான் தப்பு செய்தான்மா?"

அடுத்து தன் தம்பி மனைவி சொல்லப் போகும் பதிலால் இவள் வாயடைத்துப் போக போகிறாள் என்பது புரியாமல் பதில் வேண்டி அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள் அமுதா.

"அதும்மா... நான் எந்த தப்பும்..."

"ஏய்... ஒழுங்காக விஷயத்தை சொல்லுகிறாயா அல்லது என்னிடம் உதை வாங்குகிறாயா?" என்று விரல் நீட்டி மிரட்டினாள் அவள்.

"சரி சொல்லி விடுகிறேன், மாமா என்னை பிடித்திருக்கிறது என்று சொன்னதிலிருந்து சும்மா சும்மா கட்டிப்பிடிக்கிறார், கிஸ் பண்ணுகிறார் என்று பார்த்தால் இப்பொழுது எல்லாம் எனக்கு... எனக்கு உதட்டில்..." என்று திணறியபடி ஒப்பித்தவளின் வாயை மேலே பேச விடாமல் பதறியடித்து வேகமாக பொத்திய அமுதா, லேசான படபடப்புடன் சுற்றும்முற்றும் பார்த்தாள்.

மூத்த தலைமுறையினர் ஹாலில் டிவி சீரியலில் மூழ்கியிருக்க, இவர்கள் இருவரும் அறைக்குள்ளே அமர்ந்து தான் பேசிக் கொண்டிருந்தனர்.

நெஞ்சில் கை வைத்து நிம்மதி பெருமூச்சு விட்டவள் அவளை முறைத்தாள்.

"ஏன்டி விவஸ்தைக் கெட்டவளே இதையெல்லாமா என்னிடம் சொல்வாய்?"

"நீங்கள் தானே ஒழுங்காக சொல் இல்லையென்றால் உதைப்பேன் என மிரட்டினீர்கள்?" என்றாள் பரிதாபமாக.

"ஆமாம்... நான் தான்... எல்லாம் நான் தான்!" என்று அவள் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

சில நொடிகளில் கதிரின் நிலையை எண்ணி வாய் விட்டு நகைத்தவள், "கடவுளே... இதற்காக தான் தப்பு, அழுகை அது இது என்று இத்தனை பில்டப் கொடுத்தாயா? உன்னை எல்லாம் வைத்துக் கொண்டு உண்மையிலேயே என் தம்பி பாவம் தான்டி!" என்றவள் மீண்டும் பீறிட்டு சிரிக்க இளநகை அவளிடம் கோபித்துக் கொண்டாள்.

"என்னம்மா நீங்களும் மாமா மாதிரி கிண்டல் செய்து சிரிக்கிறீர்கள்?"

"பின்னே இப்படி ஒரு ஜீவனை உடன் வைத்துக் கொண்டு நாங்கள் சிரிக்காமல் இருக்க முடியுமா?" என்று புன்னகைத்தாள்.

உர்ரென்று இருந்தவளின் முகத்தை நிமிர்த்தி, "அடி முட்டாள் பெண்ணே... உன் மாமா செய்ததில் எந்த தப்பும் இல்லை. அது இயல்பாக எல்லா கணவன், மனைவிக்குள்ளும் நடப்பது தான். அது மட்டுமில்லை உனக்கு புரியாமல் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் நான் சொல்ல முடியாது உன் மாமாவிடமே கேட்டு தெரிந்துக் கொள். அப்புறம் இன்னொரு விஷயம் இதைப்பற்றி யாரிடமும் மூச்சு விடக்கூடாது!" என்று பதிலுரைத்தவளை தயக்கத்துடன் ஏறிட்டாள் இளநகை.

"அப்பொழுது அழுதால் குழந்தை..."

உஷ்... என்று மேலே பேச விடாமல் வாய் மேல் விரல் வைத்து தடுத்தவள், "உன் மாமா செய்வது எதுவும் தப்பு கிடையாது என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டு அவன் சொல்பேச்சு கேட்டு நட மற்றது தன்னால் நடக்கும்!" என்று அவள் கன்னம் வருடி முறுவலித்தாள்.

அனைவரும் ஊருக்கு திரும்பி நான்கு நாட்கள் ஆகியிருந்தது, இளங்கதிர் கம்பெனிக்கு போவதும் வருவதுமாக இருந்தவன் அவ்வப்பொழுது இளநகையை சீண்டவும் மறக்கவில்லை.

அவனுடைய செயல்களால் லேசாக பதறினாலும் அமுதாவின் சொற்களை மனதில் கொண்டு வந்து அவனிடம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தாள் இளா.

கதிருக்கே அது ஆச்சரியம் தான், 'என்ன இது? என் நடவடிக்கையில் இவளுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை அழுகையும் வரவில்லை மிகவும் அமைதியாக இருக்கிறாளே அது எப்படி?' என்று சிந்தித்தான்.

அன்று இரவே அதற்கான விளக்கத்தை அவனுடைய அக்கா உணவு மேஜையில் போட்டு உடைத்தாள்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்க, "உங்களுக்கு ஒன்று தெரியுமா அம்மா பெண்கள் அடிக்கடி அழுதால் வயிற்றில் குழந்தை தங்காதாம்?" என்றாள் கதிரை ஓரவிழியில் நோக்கியபடி.

தன் அக்காவின் சொல்லில் அதிர்ந்தவன் வாயில் வைத்திருந்த உணவு புரையேற பலமாக இருமினான்.

"என்னடி உளறுகிறாய்?" என்ற கனகம், "நீயேன்டா இப்படி இருமுகிறாய்? அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடு!" என்று இளாவிற்கு உத்திரவிட்டார்.

அமுதாவின் பேச்சு கதிருக்கு புரிந்து விட்டதை எண்ணி பயந்திருந்தவள் தயக்கத்துடன் டம்ளரை எடுத்து நீட்ட, அவளை லேசாக முறைத்தபடி வாங்கி நீர் அருந்தினான் அவன்.

"ம்... நீ என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாயே அழுதால் குழந்தை தங்காது என்று எந்த மடையன் உளறினான்?" என்று தன் மகளிடம் அதிமுக்கியமாக வினவினார் கனகம்.

அமுதா கதிரை நோக்கி கேலியாய் புருவத்தை உயர்த்த, அவனோ தன் தமக்கையிடம் வேண்டாமென பார்வையாலே கெஞ்சிக் கொண்டிருந்தான்.

"அது ஞாபகமில்லைம்மா... காற்று வாக்கில் காதிற்கு வந்தது!" என்று முடித்து விட்டாள் அவள்.

உணவை முடித்துக் கொண்டு நொடியும் தாமதிக்காமல் அறைக்கு வந்து விட்டவன், பொருமலோடு குறுக்கும், நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

'டாமிட்... ரூமிற்கு வாடி இன்றைக்கு இருக்கிறது உனக்கு. அறிவில்லாதவள் நான் சொன்னதை அப்படியே அக்காவிடம் ஒப்பித்திருக்கிறாளே!' என்று மண்டைக் காய்ந்தான்.

மாடிக்கு தங்கள் அறைக்கு செல்வதை தாமதப்படுத்தியபடி இளநகை கிச்சனில் அதையும், இதையும் உருட்டிக் கொண்டிருந்ததை கவனித்த அமுதா, பிள்ளை பயந்து விட்டாள் போலிருக்கிறது என்றெண்ணி சிரித்து கொண்டாள்.

"ஆமாம்... இன்னும் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ? போய் தூங்கு போ!"

"இல்லைம்மா... நான்..."

"நீ எதுவும் சொல்ல வேண்டாம் உன் வேலையெல்லாம் எனக்கு தெரியும் முதலில் கிளம்பு!" என்று விரட்டினாள்.

அவர்கள் இருவருக்குமான நெருக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தான் அமுதா இவ்வாறு கதிரை சீண்டி விட்டிருந்தாள்.

டைனிங்கில் கதிரின் கோபத்தை கவனித்திருந்தவள் மெல்லிய நடுக்கத்தோடு அறைக்கு சென்று கதவை திறந்தாள்.

அவன் பால்கனியில் நின்றபடி யாரிடமோ அலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.

அப்பாடா... என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள், அவன் வருவதற்குள் படுத்து தூங்கி விட வேண்டும் என்று வேகமாக கட்டிலை நெருங்கினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro