Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 19

இனியா, ராசுவின் பிரச்சனை முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. வீட்டில் ஒவ்வொருவரும் இனியாவை எவ்வாறு தேற்றுவது என்று தெரியாமல் ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவளை மேலும் துன்புறச் செய்து கொண்டிருந்தனர். அதில் முதலாவதும், முக்கியமானமானதுமான நபர் ஷைலஜா. இனியா மலைக்கு வந்ததும் அவளை அணைத்துக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் அப்புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாய் தன் கைப்பிள்ளையை இடுப்பில் இறுக்கிக் கொள்வது போல் தன் தோழியை இறுக்கிக் கொண்டாள்.

"லட்டு உன் மொபைலை குடுடீ....." என்று இனியாவிடம் போனை வாங்கி ராசுவின் அழைப்பு ஜெய் நந்தனுக்கு போகும் படி டைவர்ட் செய்து விட்டாள்.

"நமக்கு நடுவில வருவானாம்ல்ல....ராஸ்கல், எப்படி வர்றான்னு நானும் பார்க்குறேன்! ஏன்டீ அப்பா, அம்மா, அண்ணா, விவேக் சித்தப்பாவுக்கு எல்லாம் தான் அவனை தூக்கி போட்டு நாலு மிதி மிதிக்கணும்னு தோணல. உன்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டானே.....
உனக்கு கூடவா அவனை எதுவும் செய்யணும்னு தோணல?" என்று கேட்ட ஷைலஜாவிடம்,

"எல்லார் கிட்டயும் பேசும் போது ஒரு டஃப்னஸோட பேசுறான் ரூபி; என் கிட்ட மட்டும் பாவமா தலைய குனிஞ்சுட்டு பேசுறான். ஆனா நான் அவனை அடிக்காம சும்மா எல்லாம் விடல. அடிச்சேன் ரூபி; ஆனா எனக்கு தான் கை வலிச்சது. அவன் அதை என்ஜாய் பண்ணிட்டு இருந்தான்!" என்று இனியா சொல்ல ஷைலு தலையில் அடித்துக் கொண்டாள்.

ராகவும், பார்கவும் இனியாவுடன் பேசுவதற்கு கூப்பிட்ட பொழுது, "ரூபி ப்ளீஸ்டி.... அத்தான் கிட்ட எல்லாம் நான் பேசல! நீயே பேசு. எல்லாரும் அவனை திட்டறதை கேட்கும் போது எனக்கு அவன் மேல கோபம் கோபமா வருது!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் இனியா. ஷைலஜா பார்கவ், மற்றும் ராகவிடம் இனியாவுக்கு சற்று தனிமை தேவைப்படுகிறது, இப்போது அவள் அறிவுரை, ஆலோசனை எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்று புரிய வைத்து விட்டு ராகவிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

"ஏய் ஷைலு..... உன் கல்யாணத்துக்காவது என்னை இன்வைட் பண்ணுவியாடீ......? இனியாட்ட மேரேஜ் விஷ்ஷஷ் சொன்னேன்னு சொல்லிடு. மாமா, அத்தை, ஜீவா மச்சான் எல்லாரும் நல்லா இருக்காங்களாடீ.....?" என்று கேட்ட தன் மாமன் மகனிடம்,

"மாணிக்கம் தாத்தா, மல்லிகா ஆன்ட்டி, சக்தி, முத்து பத்து நாள் முன்னாடி பிறந்த சிந்தாமணி கன்னுக்குட்டி வரைக்கும் எல்லாரும் நல்லா இருக்காங்க. எனக்கு கல்யாணம்னா கண்டிப்பா உனக்கு சொல்லி விடுறேன். முதல் ஆளா வந்து சாப்பிட்டுட்டு அடுத்த ப்ளைட்ட புடிச்சி ஊருக்கு கிளம்பிடு. உன் வாழ்த்த நம்ம லட்டு கிட்ட பத்திரமா சேர்த்துடுறேன். பாகி அத்தான் அப்பவே கால் கட் பண்ணிட்டு போய்ட்டாங்க போலிருக்கு! வேலை வெட்டி இல்லாததுனால நீ இன்னும் கிளம்பலையா?" என்று கேட்ட ஷைலஜாவிடம்,

"என்னைய டீஸ் பண்றது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ முதல்ல போய் குளி ரூபிம்மா! பார்க்கவே அழுது வடியுற; இன்னமும் ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை தான் குளிச்சிட்டு இருக்கியாமே.....
கேள்விப்பட்டேன்!" என்று சிரிப்புடன் வினவியவன் ஷைலஜா "டேய் உன்னைய....." என்று  பல்லைக் கடித்தவுடன் சத்தமில்லாமல் நழுவி விட்டான். சிறு வயதில் இருந்தே ஷைலஜா குளியலுக்கு மிகவும் சோம்பல் படும் வகை; அவளை எரிச்சல் படுத்த வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டால் போதும். மூச்சில் அனல் பறக்க கிளர்ந்தெழுந்து விடுவாள். ராகவ் தன் மாமன் மகளை வெறுப்பேற்றிய திருப்தியில் தன் வேலையை பார்க்க கிளம்பினான். மரபணு பற்றி ஆராயும் ஹ்யூமன் ஜெனடிக் இன்ஜினியரிங் கோர்ஸில் இளங்கலை நான்காவது வருடப்படிப்பில் இருக்கிறான் ராகவ். சிறு வயதில் இருந்தே புத்தங்களை ஆராய்ந்தே மண்டை வீங்கியவன், குடும்பத்தினர் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் தனக்கு கிடைத்த ஸ்காலர்ஷிப்பில் வெளிநாட்டில் தான் படிக்கப் போகிறேன் என்று முடிவெடுத்து கடைசி வருடம் வரை தரமான  ஸ்கோருடன் சிறந்த முறையில் படித்து வருகிறான். இதற்கு மேல் என்ன என்ற கேள்வி தான் சில நாட்களாக அவன் மனதுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.

வீட்டுக்கு சென்றால் தந்தையுடன் சேர்ந்து தொழிலை கையில் எடுப்பதா, அல்லது படிப்புக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்து செல்வதா, தன் அண்ணனை போல் தனக்கும் செய்து கொண்டு குடும்பத்துக்கும் செய்வதா என்ற சுயஅலசலில் முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தவன் வழக்கம் போல குழப்பங்களை எல்லாம் மண்டைக்குள் ஓர் ஓரமாக தள்ளி விட்டு கல்லூரிக்கு கிளம்பி சென்றான்.

கவிப்ரியா ஜீவாவின் அழைப்பை இருபதாவது தடவையாக கட் செய்து வைக்கவும் மறுபடியும் அவனிடம் இருந்து  அழைப்பு வந்தது.

"திமிர் பண்ணாதடீ! ஜீவா குட்டி தான் இத்தன தடவை கூப்பிடுறான்ல; போனை எடுத்து பேசேன்!" என்று சொன்ன தன் தாயிடம்,

"நீ சும்மா இரு! உனக்கு ஒண்ணும் தெரியாது. டார்லிங் மேலயும், உன் ஜீவாக்குட்டி மேலயும் நான் செம காண்டுல இருக்கேன். இனியாவை ஒருத்தன் தூக்கிட்டு போய் தாலி கட்டுவானாம். இதுக ரெண்டும் பின்னாடியே போய் கல்யாணம் பேசி முடிச்சுட்டு வருங்களாம். அன்னிக்கு எங்கண்ணாவை என்ன அடி அடிச்சான்..... இப்ப எவனோ ஒருத்தன அடிக்கறதுக்கு எங்க வலிக்குதாம் உங்கண்ணன் புள்ளைக்கு...... என்னைய கூட இப்படி எவனாவது தூக்கிட்டு போய் தாலி கட்டினா இப்படி தான் போகட்டும்ன்னு விட்டுடுவானா......
இன்னிக்கி வர்றேன்னு சொல்லியிருக்கான் ல்ல..... அவன மடியில தூக்கி வச்சுட்டு கவனிச்ச..... அப்புறம் இருக்கு உனக்கு;
ச்சே மாமா மேல நான் ஒரு ஹீரோ இமேஜ் வச்சுருந்தேன். அது மொத்தமா டேமேஜ் ஆகிடுச்சும்மா!" என்று புலம்பிக் கொண்டு இருந்தாள் கவிப்ரியா.

இனி சென்னையிலேயே தங்கியிருந்து தனது அலுவலகத்தை நிர்வகிப்பது எல்லாம் முடியாத காரியம் என்று ஜீவா முதலிலேயே யோசித்து வைத்திருந்தான். அதனால் அவனது கல்லூரி தோழன் ஒருவனிடம் தனது அலுவலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வருகிறேன் என்று தன் தந்தையிடம் அனுமதி கேட்டவனிடம் யோசனையுடன்,

"மூணு, ரெண்டு நாள்ல வந்துடுவல்ல ஆனந்த்..... எனக்கு நீ இல்லன்னா ஒரு மாதிரி கஷ்டமா..... சீக்கிரம் வந்துடுப்பா. புதுசு புதுசா நிறைய பிரச்சனை வருது. நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும்!" என்று கேட்டார் ஜெய்.

"அப்பா..... இவ்வளவு நாள் யாரும் என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலையேன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்ப்பா! இனிமே நீங்களே வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னா கூட நான் நம்ம வீட்ல இருந்து கிளம்பவே மாட்டேன். பட் ஒரு நாலஞ்சு பேரோட ஆஃபிஸ் ஆரம்பிச்சு வச்சாச்சுல்ல..... என் பேட்ச் மேட் அரவிந்த்ன்னு ஒரு பையன்..... ரொம்ப எஃபீஷியண்ட் ப்பா! பட் சரியான வாய்ப்பு இல்லாம சும்மா சுத்திட்டு இருக்கான். அவன் நம்ம ஆஃபிஸை டேக்ஓவர் பண்ணிட்டான்னா அதுக்கப்புறம் உங்க ஏஞ்சலை சைட் அடிக்கறதுக்கு மட்டும் அப்பப்போ போயிட்டு வந்தா போதும்!" என்று சொன்னவனிடம் குறுஞ்சிரிப்புடன்,

" ஓ...... நீ அப்பப்போ சென்னைக்கு போறது ஏஞ்சலுக்காக மட்டும் தான்னு மீரா, கீதா அத்தை கிட்ட லேசா போட்டு விடட்டுமா?" என்று அவர் கேட்டதும் ஜீவா கை கூப்பி தொழுது விட்டான்.

"தெய்வமே.... போட்டு குடுத்து நம்ம சோலிய முடிச்சுடாதீங்க. ஏதோ போற நேரமெல்லாம் ஒரு உருண்டை பருப்பு சாதம் கிடைக்குது. அதிலயும் மண்ணை அள்ளி போட்டுட்டு காலை ஆட்டிட்டு உட்கார்ந்து இருப்பீங்களா....ஏன் இந்த வில்லத்தனம் பண்ணையாரே?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன்,

"அம்மா அத்தைங்களுக்கு ஏதாவது திங்க்ஸ் எடுத்து வச்சுருப்பா. கேட்டு வாங்கிட்டு போ. ராஷ் ட்ரைவிங் பண்ணி வித்தையெல்லாம் காட்டக் கூடாது. துரையண்ணாவை கூட்டிட்டு போறியா?" என்று கேட்ட தன் தந்தையிடம்,

"வேண்டாம்ப்பா! நான் பத்துலயே போறேன்! ஆள விடுங்க! இந்த அம்முலு ஏதோ செடி வேணும்ன்னு கேட்டாளே..... எடுத்து வச்சுட்டீங்களா? போயிட்டு வர்றேன்ப்பா!" என்று சொல்லி விட்டு தன் அன்னையிடம் சென்றான் ஜீவானந்தன்.

"ஹாய் மீராத்தை.....!" என்று உற்சாக குரலுடன் உள்ளே நுழைந்தவனை வாசலிலேயே கைகளை விரித்து மறைத்து நின்று முறைத்தவள்,

"எங்க வந்த?" என்றாள் குரலில் தன் கடுப்பை நன்றாக காட்டி

"கேப்ஸி என்ன கேள்வி இது.....எங்க மாமா, அத்தை வீட்டுக்கு வந்தேன். ஷ்ஷ்ஷ்...... அப்பா! என்ன சூடு; சென்னை சிட்டி ஏன் இவ்வளவு ஹாட்டா இருக்குன்னு தெரியல. மலைல க்ளைமேட் எப்படி இருக்கு தெரியுமா..... மேகம் கருக்குது.... சாரல் அடிக்குதுன்னு டெய்லி பாட்டு பாடலாம்.... அப்படி இருக்கு போ!" என்று சொன்னவனை ஏற இறங்கப் பார்த்தவள்,

"காணாதத கண்டா இப்படித்தான் பாட்டெல்லாம் வரும்! இது என் வீடுடா..... இங்கிலீஷ் தெரியும்ல.... அங்க பாரு என் பெயர் எழுதி இருக்கு..... உன்னையெல்லாம் உள்ள விட முடியாது. போடா!" என்றவளை எரிச்சலுடன் பார்த்தவன்,

"உன் பேரு எழுதியிருந்தா வீடு உன்னதாகிடுமா? நிறைய ரோட்டுக்கு எல்லாம் தலைவர்கள் பேரு வச்சுருக்காங்க. அப்போ ரோடெல்லாம் அவங்களோடதுன்னு க்ளைம் பண்ண முடியுமா? ட்ரைவ் பண்ணிட்டு வந்தது கால் வலிக்குது அம்முலு! உள்ள விடுடீ ப்ளீஸ்!......." என்று கெஞ்சிக் கொண்டிருந்தவனை, "ஜீவாக்குட்டி எப்படா வந்த? உள்ள வா....!" என்று கூப்பிட்டார் மீரா.

"அதுக்கு தான் அத்தை அப்போலேர்ந்து ட்ரை பண்ணிட்டு இருக்கேன். இந்த குடைமிளகாய் மூக்கி உள்ள விட மாட்டேங்கிறா.....தள்ளிப் போ பிசாசே!" என்று அவளிடத்தில் சண்டையிட்டு கொண்டிருந்தவன் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவளை தோளில் தூக்கிப் போட,

"ம்ஹூம்! நந்து என்னை கன்னுக்குட்டி மாதிரி தூக்கு. அப்போ தான் வலிக்காது!" என்று சிணுங்கினாள் கவிப்ரியா.

"கழுதைக்குட்டி மாதிரி தூக்குறேன். எருமை இதுக்கு தான் இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்தியா.....?" என்று திட்டினாலும் அவளுக்கு வலிக்காமல் இரு கைகளாலும் அவள் உடம்பை ஏந்திக் கொண்டு ஸோஃபாவில் அமர வைத்தான் ஜீவானந்தன்.

"நீயும், மாமாவும் இனியா மேட்டர்ல ஏன் உங்க கோபத்தை காட்டவேயில்ல? அவனுக்கு தான் மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு மாமா ஏன் நினைச்சாங்க?" என்று கேட்டவளிடம் புன்னகையுடன்,

"ராசு தப்பானவன்னா இந்நேரம் உயிரோட தரைக்கு மேல இருந்திருக்க மாட்டான் கேப்ஸி! இனியா மேல அவனுக்கு அவ்வளவு காதல் இருக்கு. ஆனா அதைக் காட்ட தெரியாம உரிமை உணர்வை காட்டி அவளை டாமினேட் பண்ணிட்டு இருக்கான். இனியாவும் அவனை கொஞ்சம் கன்ஸிடர் பண்ண ஆரம்பிச்சுட்டான்னா போதும். அவன் ஆட்டமெல்லாம் க்ளோஸ்..... ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. ஆனா இனியாவோட கோபம் கொஞ்சம் தணியனும். அவ கழுத்தில தாலி கட்டி முறைப்படி அவர் நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகட்டும், அப்புறம் காட்ட வேண்டியதுக்கெல்லாம் சேர்த்து வச்சு காட்டு காட்டுன்னு காட்டுவோம். நீ வெயிட் பண்ணு செல்லம்!" என்றவனிடம் சிரிப்புடன் தலையாட்டி விட்டு சென்றாள் கவிப்ரியா.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro