Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வாள் ரகசியம்...

தன் குழப்பத்தை தீர்க்கவென ஆதிலோகம் வந்திருந்த தீரா, இப்போது நுவழி பாட்டியையும் சேர்த்து குழப்பத்தில் ஆழ்த்தியது தான் மிச்சம். ஆதிலோக சரித்திரத்தில் இதுவே முதல் முறை, தன்னிடம் வந்த ஒரு கேள்விக்கு பதில் இல்லை என சொல்லி நுவழி பாட்டி அனுப்பி வைப்பது.

பாட்டியிடமே பதில் இல்லை என்றால் இனி எங்கு சென்று யாரை    கேட்டபதென தீவிர யோசனையுடன் சாலையில் நடந்து கொண்டிருந்தவளின் கவனம், இப்போது, தனக்கு முன்னால் அமைதியாக நடந்து கொண்டிருந்தவனை நோக்கி நகர்ந்தது.

பாட்டியை பார்க்கும் முன் தன் அபி மாமாவை ஒரு எட்டு பார்த்துவிட்டு செல்லலாம் என நினைத்து வீட்டிற்கு சென்றிருந்தவள், சக்திகள் முழுதாக குணமாகும் முன் அவனும் இப்படி தன்னுடனே வந்துவிடுவான் என நினைத்திருக்கவில்லை. விஷயத்தை சொல்லி பாட்டியை சந்திக்க போகிறேன் என சொல்லும்போதே தானும் வருவதாக வீம்பாக நின்றவன், இப்போது, சாலையில் கவனம் இல்லாமல் அவ்வப்பொழுது கால்களை இடறிக் கொண்டு நடப்பதை கண்டு பரிதாபம் கொண்டது அவள் மனம்.

"மாமா நீ இன்னும் முழுசா குணமாகல.. ஏன் இப்டி கொழந்த மாறி அடம்புடிச்சு கஷ்ட்டப்படுற?

"எனக்கு வீட்டுல இருக்குறது புடிக்கல."

"அதுவும் சரி தான்... ஒரே எடத்துல இருந்தா யாருக்கு தான் புடிக்கும். ஆனா, உன்னோட சக்திகள் சீக்கிரமே உன்கிட்ட திரும்ப வரணும்னா நீ ரெஸ்ட் எடுக்கணும் மாமா"

"அத அப்பறம் பாத்துக்கலாம்"

"ஆனா-"

"கொஞ்ச நேரம் அமைதியா வரியா?" அபி எரிச்சலாக கத்த, ஆத்ம-சக்தி முழுமையாக குணமடையும் வரையில் அபியின் செய்கைகள் வழக்கம்போல் இருக்காது என அரவிந்தன் எச்சரித்திருந்ததால், "சொன்னா கேக்கவா போற?" தனக்குள்ளேயே முணங்கிக்கொண்டு அமைதியாக நடந்தாள் அவள். சில நொடிகள் கடந்த நிலையில் அபியே வாயை திறந்தான்.

"அந்த சக்தி எப்டி இருந்துச்சு?"

"எந்த சக்தி, மாமா?"

"அதான்.. அங்க வச்சு சொன்னியே... பூமில உணர்ந்ததா ஒரு சக்தி.... ரட்சகன் சக்திக்கு சமமா.."

"ஹான்.. எல்லாம் நுவழி பாட்டி கிட்ட சொன்னது மாதிரி தான் இருந்துச்சு, மாமா.. கொஞ்சநேரத்துல என்னையவே கன்ஃப்யூஸ் பண்ணிருச்சு.. ரக்ஷவ் கிட்டருந்து வெளிவருதுன்னு தான் நா நெனச்சுட்டு இருந்தேன்... ஆனா இல்ல.... வேற திசைல இருந்து வந்துச்சு." நொந்து கொண்டபடி கூறி சில அடிகள் அமைதியாக யோசித்துக்கொண்டே நடந்தவள், "ஒருவேல அவன் போன அந்த கோவில்ல இருந்த மாதிரி ஸ்கூல்லயும் எதாச்சும் வழி     இருக்குமோ? " சட்டென மனதில் தோன்றியதை தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். எல்லாம் காதில் விழுந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தான், அபி.

"இப்போ பாட்டிக்கே எதுவும் தெரியல... இனி எங்க போய் யாருகிட்ட என்னான்னு கேப்பேன் நான்? தனக்குத்தானே புலம்பியவள், வீடு வரும் வளைவை நெருங்கிய நேரம், "சரி மாமா.. அவனுக்கு ஸ்கூல் முடியுற நேரமாச்சு... நா கெளம்புறேன்.... நீ பாத்து வீட்டுக்கு போ" அவனிடம் விடைபெற்று மாயவாயிலின் வழியில் பூமி சென்றாள், தீரா. அவள் தனக்கு கையசைத்துவிட்டு செல்வதை அமைதியாக பார்த்துத்துக்கொண்டே, வீடு இருக்கும் வளைவில் வளைந்தான், அபி.

✨✨✨

சமாரா சொன்ன சொல்லை மீற வழியில்லாமல், கண்களை திறந்து வைத்த நிலையிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஷேனாவின் மனம் முழுவது அவனின் அந்த நீண்ட கனவுதான். அடியோடு வெறுக்கும் ஒருத்தியை தன் மனம் ஏன் இவ்வளவு ஆழமாக நினைத்து நினைத்து உருகுகிறது என அவன் மீதே அவனுக்கு கோபம் எழுந்தது. அவனின் ஜுரம் அந்த உணர்வை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருந்தது.

மனதின் வெறியை வெளியேற்ற வழி தெரியாமல், ஷேனா கோபத்தில் எறிந்துக் கொண்டிருந்த சமயம், "ஷேனா... வேட்டைக்கு நேரமாச்சு.." இவ்வளவு நேரமும் கண்களை மூடி ஏதோ தியானத்தில் இருப்பது போல் அமர்ந்திருந்த சமாரா, ஏளன புன்னகையுடன் எழுந்து நின்றாள். 

சட்டென அவன் பார்வை சமாராவை நோக்கி நகர, "நீ இருள் வாரிசோட மறுபிறப்பா, இல்ல.. அந்த வாரிசுக்கு பொறந்த கொழந்தையோட மறு ஜென்மமான்னு தெரியாது... ஆனா உன்னோட ஆத்ம சக்தி அவங்களுக்கு இருந்த அதே சக்தி தான். இப்போ அது ரட்சகன் கிட்டயும் இருக்கு.. ரட்சகனால கட்டுபடுத்த முடியாத அவனோட ஆத்ம-சக்தில இருக்குற இருள்-வாரிசோட சக்திகள வெளிவரவச்சு அத நீ கட்டுபடுத்தீட்டா போதும்..." என நிறுத்திய சமாரா, 'உன் மூலமா அவனயும் நா வசியம் பண்ணிருவேன்' மனதில் நினைத்துக் கொண்டே, "மத்தத நான் கவனிச்சுகுறேன்" என சொல்லிவிட்டு கருநிற மாயவாயிலை திறந்து நடக்க.. எழுந்து அவளுடன் இணைந்து நடந்தான், ஷேனா.

✨✨✨

தன் அத்தை வீட்டு திண்ணையில் ஒரு மூலையில் அமர்ந்து மொபைலில் விளையாடிக் கொண்டிருக்கும் தம்பியின் அருகில் நின்று சாலையை பராக்கு பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷனின் பார்வை, பக்கத்து வீட்டிலிருந்து வெளிவந்து தன் அத்தை வீட்டு படியில் ஏற முனையும் மித்ராவை கவனித்த நோடி, "ஹாலோ.. ஹாலோ... எங்க வீட்டுக்கு எதுக்கு வறீங்க மேடம்?" வேகமாக வந்து முதல் படியில் நின்றான்.

"இது ஒன்னும் உங்க வீடு இல்ல.. என் தம்பியோட வீடு" ஏதோ யோசனையோடே வந்தவள் அவனின் பேச்சை கேட்டு, படியில் ஏறிக்கொண்டே வம்புக்கு தயாரானாள்.

"தம்பியோட வீடுன்னா, போய்ட்டு தம்பி இருக்கைல வாங்க.. அவன் ஸ்கூலுக்கு போய்ருக்கைல நீங்கபாட்டுக்கு உள்ள வந்து எதையாச்சும் திருடீட்டு போய்ட்டீங்கன்னா? அப்பறம் எங்க மச்சானுக்கு தானே லாஸ்"

"சபாஷ் சரியான கேள்வி" தன் மொபைலை கவிழ்த்து போட்டுவிட்டு சுவாரசியமாக இவர்களை பார்த்தபடி அர்ஜுன் கத்த, "என்ன? ரெண்டு பேரும் சேந்து பழி வாங்குறீங்களா?" இருவரையும் மாற்றி மாற்றி மித்ரா பார்க்கையில், "அப்டியும் சொல்லாம்" அலட்டிக்கொள்ளாமல் பதில் கொடுத்தான், ஹர்சன்.

"சரி சரி... ரொம்ப நல்லாவே பழி வாங்குறீங்க... இப்போ என் கூட யாராச்சும் ஸ்கூல் வரையும் வாறீங்களா? உங்க மச்சான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்துருக்கனும் இன்னும் வரல.. என் தங்கச்சியும்."

"அதுக்கு ஏன் மேடம் நாங்க தொனைக்கு வரனும்? உங்க ஸ்கூல் தானே?" அவள் சொல்ல வருவதன் விபரீதம் புரியமல் அவளை வம்பிலுக்கும் நோக்கத்திலேயே குறியாக இருந்த ஹர்சன், "ஏன்? நாய் தொறத்தும்ன்னு பயமா?" நக்கலாக கேட்க, "அந்த கூட்டம் மறுபடி வந்துருக்குமோன்னு கூட பயமா இருக்கலாம் டா அண்ணா" சீரியசாக கூறினான் அர்ஜுன்.

"ஹம்ம்..  உங்கள விட உங்க தம்பி புத்திசாலியா இருக்கான்." இப்போது மித்ரா வம்பிலுக்க... பதில் பேசவில்லை ஹர்ஷன். அவள் இங்கு வந்த நோக்கத்தின் விபரீதத்தை இப்போதே புரிந்தவன், இரு நொடி சிந்தனைக்குப் பின் "சரி, நா வண்டி சாவிய எடுத்துட்டு வரேன்.. வண்டிலையே போலாம்.." என வீட்டுக்குள் விரைய முற்பட்ட நேரம், "உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைல?" ஒருநொடி தயங்கி நின்று மித்ராவை நோக்க, "வண்டில போனா தா சீக்கிரமா போக முடியும்.. சீக்கிரம் போய் சாவி எடுத்துட்டு வாங்க." அவள் கூறிய பின்பே சாவியை எடுக்க விரைந்தான்.

✨✨✨

 "இந்த அம்மா ஈவ்னிங் கிளாஸ இவ்ளோ சீக்கிரமா விட மாட்டாங்களே... என்ன ஒரு அதிசயம்!" ரக்ஷவனுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் முடியும் நேரத்திற்கு முன்னதாக ஆதிலோகத்தில் இருந்து பள்ளிக்கு வந்துவிட்ட தீரா, வெறிச்சோடி கிடக்கும் வகுப்பறையை பார்த்துவிட்டு சாலைக்கு நடந்தபடியே அவன் காவலுக்காக தான் விட்டுச்சென்ற தன் சகோதரன்களுக்கு அழைப்பு விடுத்தவள், தன் வீடு இருக்கும் திசை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.  

"டேய் எங்க டா-" வீரின் குரல் மறுபுறம் கேட்டபின் பேச்சை தொடங்கியவள், மறுமுனையில் கூச்சல் சத்தமும் சண்டை சத்தமும் கேட்டதில் சட்டென உறைந்து நின்றாள். 

"ஹாலோ...டேய் என்ன நடக்குது அங்க? எங்க இருக்கீங்க...?"

"நீ சொன்ன அந்த பிசாசு வந்துருச்சுன்னு நெனைக்குறேன்.. இங்க மண் ரோட்ல- டேய்... ரவி!..." பேசிக்கொண்டு இருக்கையிலேயே கத்தியவன் அடுத்து எதுவும் பேசவில்லை.

"டேய்.. என்னடா நடக்குது அங்க...?"

"ஹாலோ...."

"டேய் ஃபோன எடுத்து பேசு  டா.." மொபைல் இன்னுமும் இணைப்பில்தான் இருக்கிறது, அங்கு கேட்கும் குரல்களை வைத்தே சொல்லிவிடலாம். ஆனால், அதை கவனிக்கதான் அங்கு  ஆளில்லை. நடப்பதை ஓரளவு யூகித்தவள், அவளாகவே அழைப்பை துண்டித்துவிட்டு, "ரோடு முழுக்க மண்ணு தான் இருக்கு.. மண் ரோட்ல இருக்கோம்ன்னா?.." நகத்தை கடித்துக்கொண்டே, வீடு செல்லும் முழு வழியையும் தன் மணக்கண்ணின் முன் நிறுத்தியவள் எந்த இடத்தை குறிப்பிட்டிருப்பான் என யோசிக்க..  'அந்த ஒத்தையடி பாதையோ?' சட்டென பல்ப் எறிந்தது அவள் சிந்தையில்.  

ஒரு யூகத்தில் அந்த ஒத்தையடி பாதைக்கு மாயவாயிலை திறந்து உள்ளே சென்றவளை முழு வேகத்தில் வந்து தாக்கியது ரட்சகனின் காற்று சக்தி... அந்த குறுகிய சாலையின் ஓரத்தில் அடர்ந்து கிடந்த புதரை தாண்டிச் சென்று ஷேனாவுடன் சேர்ந்து விழுந்தாள், தீரா. அருகருகே விழுந்து கிடந்த இருவருக்கும் முன்பாக நெருப்பு வளையம் சூழ காற்றில் பறந்துக் கொண்டிருந்தான், ரக்ஷவன்.

விழுந்த வேகத்தில் எழுந்துகொண்ட ஷேனா, தன் தங்க நிற வாளில் தீப்பொறிகள் பறக்க மீண்டும் ரக்ஷவை நோக்கி விரைய.. எவ்வித அலட்டலும் இல்லாமல் தன்னை சூழ்ந்திருக்கும் நெருப்பை ஒற்றை கையசைவில் அவனை நோக்கி செலுத்தினான், ரக்ஷவ். தங்க நிற வாளை கொண்டு ரட்சகனின் நெருப்பை தடுத்து லாவகமாக ஷேனா தப்பிக்க.. இரு கைகளாலும் பிடித்திருக்கும் அவன் வாளில் பட்டு இரண்டாக பிழந்த அந்த நெருப்பானது ஷேனாவின் இருபுறமும் பாய்ந்தது. 

இவையெல்லாம் ஒருபுறம் நடப்பதை பார்த்துக்கொண்டே, "யம்மா... இவன காப்பாத்த வந்தா.... இவன் என்னையவே பந்தாடுறான்..." ஆற அமர பொறுமையாக எழுந்து நின்ற தீரா, 'இனி என்ன அவசரம், அதான் ரட்சகன் ஃபார்ம்க்கு வந்துட்டானே' என்பதுபோல் இடுப்பில் ஒற்றை கையை வைத்துக்கொண்டு சுற்றிலும் நடக்கும் மற்றவைகளை கவனித்தாள். 

ஷேனாவின் வாளில் பட்டு ரட்சகனின் நெருப்புக் கதிர்கள் சிதறிக் கொண்டிருக்க.. காற்றில் பறக்கும் ரக்ஷவை சூழ்ந்து கொண்டிருந்த நெருப்பை கண்டு அஞ்சியபடி ஒரு மரத்தோடு ஒன்றிக்கொண்டு நின்றிருந்தாள், மயூறி. 'இந்த காட்சியில், எங்கே தன் சகோதரன்கள்?' என அலசிய தீராவின் கண்கள், சில அடி தூரங்கள் தள்ளி அவர்களையும் கண்டுகொண்டது. 

சாலையை விட்டு விலகி இருக்கும் ஒரு ஆலமரத்தோடு ரவியை வைத்து அமுக்கியபடி இருக்கு மனித வௌவாளாகிய சமாராவின் தலையை இருபுறமும் பற்றியபடி எதையோ சத்தமாக உச்சரித்துக் கொண்டு நின்றிருந்தான், வீர். 'ரக்ஷவ பத்ரமா பாத்துக்க சொல்லி விட்டுட்டு போனா இவனுங்க என்ன அந்த பிசாச புடிச்சு வச்சு வெளையாடிட்டு இருக்கானுங்க?' என்னும் பார்வையில் அம்மூவரையும் தீரா பார்த்துக் கொண்டிருந்த நேரம், ரவியை தன் பிடியிலிருந்து விடுவித்து வீரின் பிடியிலிருந்து விலகி பெரும் அலறலுடன் வானில் எகிறிப் பறந்த சமாரா, ஷேனாவின் கவனத்தை நொடிநேரம் கலைத்திருக்க.. அவன் கவனம் சிதறிய நொடியில் ரக்ஷவின் நெருப்பு அவனை மீண்டும் தாக்கி தூர தள்ளியது. 

"ஷேனா.. நான் சொன்னத செய்.." வலியிலும் எரிச்சலிலும் கத்தியபடியே மனித ரூபத்திற்கு வந்த சமாரா அவனை நோக்கிக் குரல் கொடுக்க.. நடக்கப் போவது என்னவென தெரியாவிட்டாலும் சமயோஜிதமாக செயல்பட்ட ரவி, ஷேனாவை நோக்கி விரைந்து  வரும்போதே வீர் தனது மந்திர உச்சரிப்பால் மீண்டும் சமாராவை அடக்க முற்பட்டான். 

ஷேனாவை அவன் வாளோடு சேர்த்து மடக்கிப் பிடித்திருக்கும் ரவியை நெருங்க முனைந்த தீரா, மிக அருகில் கேட்ட ஒரு பைக் சத்தத்தால், யாரோ எவரோ என பதறியடித்து திரும்ப..  தெரிந்த முகங்களை கண்டதில் கொஞ்சமாக நிம்மதி கொண்டாள்.

பயத்தின் விளிம்பில் மரத்தோடு ஒட்டி நிற்கும் தங்கையை கவனித்தபடியே ஹர்ஷனின் வண்டியில் இருந்து இறங்கினாள், மித்ரா. தம்பியை தாண்டி சென்று தங்கையை நெருங்கவும் முடியாமல் அவளை அப்படியே விடவும் முடியாமல் தவித்து நிற்க.. ஹர்ஷனின் பார்வை நேராக தீராவை உருத்து நோக்கியது. அவளும் அவனை தான் நேருக்கு நேராக பார்த்திருந்தாள். 

இப்படி ஆளுக்கு ஒரு பக்கமாக உறைந்து நின்ற நேரம், மனித உருவிற்கு மறியிருந்த சமாரா வீரின் தொடர் மந்திர உச்சரிப்புகளால் மேலும் மேலும் எரிச்சலடைந்து மீண்டும் வௌவாளின் உறுவிற்கே மாறி, காற்றை கிழிக்கும் வேகத்தில் ஷேனாவை நோக்கி விரைந்த அந்த நேரம், சமாராவின் கோர அலறலால் அனைவரின் பார்வையும் அப்புறமாக திரும்ப.. நொடி மாறாமல் மறுபுறம் கேட்டது மயூரியின் அலறல். தன்னை சூழ்ந்திருந்த நெருப்பு வளையத்தை விசிறி எரிந்து, ரட்சகன் தான் தாக்கியிருக்கிறான் அவ்விருவரையும்.  

சமாரா காயம்பட்டத்தை கண்களால் கண்ட நொடியில் ரவியை உதறித் தள்ளிய ஷேனா அவளை நோக்கி ஓடும்போதே, இங்கே, மயூரியின் நிலையை கண்டதால் ஷேனாவை கண்டுகொள்ளாத ரவி, ஷேனா தன் பிடியில் விட்டுச்சென்ற தங்க நிற வாளுடன் மயூவை நோக்கி விரைந்தான். வலியில் அழத் தொடங்கிய மயூவை ஹர்ஷன் மற்றும் மித்ராவும் கூட நெருங்கியிருக்க.. நெருப்பிலிருந்து தப்பிக்க கவசமாக தன் கைகளை பயன்படுத்தியிருந்த மயூவின் கைகளில் நெருப்புக் காயங்கள் சற்று மோசமாகவே இருந்தது. 

ரக்ஷவன் இன்னும் காற்றிலேயே இருந்த நிலையில், சமாராவும் ஷேனாவும் எப்போது அங்கிருந்து மாயமாகினார்கள் என்பதை எவரும் கவனிக்கவில்லை. வீரும் தீராவும் மட்டும் சாலையின் நடுவில் நின்று மாற்றி மாற்றி இரு பக்கமும் பார்த்துக் கொண்டிருந்த நேரம், மெல்ல மெல்ல சுயநினைவிற்கு திரும்பிக் கொண்டிருந்த ரக்ஷவன், காற்றிலிருந்து முழுதாக கீழே வந்த நேரம் மயங்கிச் சரிய.. சரியாக அவனை பிடித்துக் கொண்டான் வீர்.

"நீங்க நேத்து ரக்ஷவ்க்கு ட்ரீட்மென்ட் பாக்க வந்த டாக்டர் தானே..?" நீண்ட யோசனைக்கு பின் ரவியை அடையாள கண்டுகொண்ட ஹர்ஷன் கேட்க.. கண்ணீருடன் மயூவும் மித்ராவும் அப்போது தான் அவனை கவனித்தார்கள்.  

"ஆமா நாங்க தான்.. இப்போ பயப்படுறதுக்கு ஒன்னும் இல்ல.. கொஞ்சம் வலிக்கும் தான்-"

"அப்போ நீ யாரு?" ரவி பொதுவாக சொல்லிக்கொண்டே மயூவின் காயத்தில் தன் காட்டன் கர்சீப்பால் மிதமாக கட்டு போடும்போதே ஹர்சனின் குழப்ப பார்வை தீராவை நோக்கியது.

"நான் தான் டா நேத்து இவனுங்கள கூட்டிட்டு வந்த- ஓஹ்.. நேத்து நீங்க என்ன பாக்கவே இல்லைல.. உங்க தம்பி அர்ஜுன் சொன்னது என்ன பத்தி தான்." சிம்பிளாக தன்னை அறிமுக படுத்திக் கொண்டாள் அவள். பரிட்சயமான குரலாக இருந்ததால் அவன் மேலும் எதுவும் கேட்காமல் இருக்க, "சரி.. நாம இங்க இருந்து இப்போ கெளம்பலாமா? இவன் ரெஸ்ட் எடுக்கனும்." ரக்ஷவை தன் கையில் தூக்கிக்கொண்டு வந்து நின்றான், வீர். 

"ம்ம்.. இந்த பொண்ணுக்கும் ட்ரீட்மென்ட் குடுக்கனும்.." அவன் கூற்றை ரவியும் ஆமோதிக்க, "சரி, நீங்க எல்லாம் வண்டில போங்க.. நா வீட்டுக்கு வந்துறேன்" தீரா சொன்ன பின்பு, மயூவும் மித்ராவும் ஹர்ஷன் வண்டியில் ஏறிக்கொள்ள.. ரக்ஷவை தன் பைக்கில் நடுவில் அமர வைத்த வீர், ரவியுடன் புறப்பட்டான். 

அவர்கள் புறப்பட்டதும் ரவி தன் கையில் தினித்துவிட்டு சென்ற அந்த தங்க நிற வாளை திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே தன் வழக்கமான வழியான மாயவாயில் வழியாக வீட்டிற்கு புறப்பட்டாள், தீரா.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro