Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சமாராவின் கைதியாக, அவள்!

தோரனையாய் வெளவால்கள் தொங்கிக் கொண்டிருக்கும் காரிருள் படர்ந்த நீண்ட நடைபாதையில், செல்லும் வழியை காண தீ-பந்தம் தேவையில்லை என்பதுபோல் இருளில் கூட தெளிவாய் தெரியும் தன் பார்வையின் உதவியுடன் அங்கிருக்கும் சுவர்களை தன் கூர் நகங்களால் தேய்த்தவாரே நடந்துக் கொண்டிருந்தாள், சமாரா. ஒத்தையடி பாதையை போல் நீண்டுக் கொண்டிருந்த அந்த பாதையில் நிலவிடும் நிசப்தத்தை கிழித்துக் கொண்டிருப்பது அவளின் நகங்கள் சுவற்றில் உராயும் அந்த சத்தம் மட்டுமே.

அவளுக்கு இடமும் வலமும், இரு தூண்களுக்கு இடையே ஒரு சதுர சுவர் என வரிசைகட்டித் தூண்களும் சுவர்களும் மட்டுமே சதுரம் சதுரமாய் அரண்போல் நிமிர்ந்து நின்றிருந்தது. சம்பந்தமே இல்லாமல் இவ்விடத்தில் எதற்கு இப்படி சுவர்கள் எழுப்பப் பட்டிருக்கிறது என்னும் குழப்பத்தை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் உண்டாக்கிடும், அவ்விடம். ஆனால், சமாரா செய்த அடுத்த காரியத்தால், சந்தேகத்திற்கும் குழப்பத்திற்கும் இடமே இல்லாமல் போனது இங்கு.

முட்டுசந்து போல் அப்பாதை நிறைவடையும் இடத்தில் நின்றவள், வலதுபுறம் இறுதியாக இருந்த சதுர-சுவற்றை நோக்கித் தன் கைகளை உயர்த்திட, அவள் கையின் வழியே பாய்ந்துவந்த கருநிற விசையானது அந்த சுவற்றை தாக்கிய நொடி அதன் கற்கள் விலகி, இரும்புக் கம்பியிட்ட அறை ஒன்றினை காட்டியது. அது ஒரு சிறை! மாய சிறை. அங்கிருக்கும் சதுர சுவர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாய சிறையின் அறைகளே.

தன்னால் திறக்கப்பட்டிருக்கும் அந்த சிறையின் முன் நின்ற சமாரா, "ஹ்ம் இன்றும் உயிருடன் தான் இருக்கின்றாய்." வாயிலில் நின்றபடியே சிறைக்குள் பார்வையை செலுத்தியவள், ஏளனமாகச் சிரித்தாள். அவளுக்கு பதில் மொழியாக, அந்த சிறையினுள் இருந்து மங்கிய வெண்ணிற ஒளியும், நாகம் சீறிடும் சத்தமுமே அவளை முதலில் அடைந்தது. அதனை தொடர்ந்து இரும்புச் சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று இடித்துக் கொள்ளும் சத்தமும் கேட்டது.

"ஒரு தகவலை தெரிவிக்க தான் இப்போது வந்தேன். என் கணவனான ஷேனா- .. ...... ம்ச், எப்படியாயினும் நான் சொல்லும் முன்பே நீ இதை அறிந்து தான் வைத்திருப்பாய். ஹ்ம். இருந்தாலும் சொல்கிறேன், கேள். என் ஷேனா-"

"அவன் உனக்கானவன் அல்ல" ஒரு பெண்ணின் வறண்டுபோன குரலானது சமாராவின் பேச்சை தடுக்கும்படியாக அந்த சிறையினுள் இருந்து வெளிவந்தது. "நீயும் அவனுக்கானவள் அல்ல. அவனுக்கென நிச்சயிக்கப் பட்டவள் அவனை மீட்டெடுப்பாள் உன் வசியத்திலிருந்து." மெல்லியக் குரலாயினும் தெளிவாகவும் அழுத்தமாகவுமே கேட்டது.

"அவன். என். கணவன். எனக்கு மட்டுமே உரிமையானவன் ஷேனா." பல்லைக் கடித்து அவள் சீற.. சிறைகுள்ளிருந்து கேட்ட நாகத்தின் சீற்றத்தால் அவள் சற்று பின்வாங்கினாள். ஆனால், முழுதாய் பின்வாங்கவில்லை. நக்கலுடன், மீண்டும் தன் பார்வையை சிறைக்குள் செலுத்தியவள், "இன்று பார்த்தாய் தானே, என் சொல்லுக்கு அவன் பணியும் விதத்தை. அவன், என் மாமாவின் சொல்லை கேட்க வேண்டுமாயினும் அது என் அனுமதிக்கு பின்பே தான். இதிலிருந்தே உனக்கு விளங்கவில்லையா? முட்டாள். ஷேனா என்றும் எனக்கானவன் தான்"

"ஒருவனை கைபாவையாக்கி உரிமை கொண்டாடுவது நீண்ட காலத்திற்கு நிலைக்காது. துணிச்சல் இருப்பின் உன் வசியத்தை உடைத்துவிட்டு இதே சொல்லை என்னிடம் வந்து சொல்." என்றவளின் கர்வம் மிகுந்த சொல்லால் சமாராவின் கோபம் தலைக்கேறியது தான் மிச்சம், ஓங்கி உதைத்தாள் அந்த சிறையின் இரும்புக் கம்பிகளை. "இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தும் மரணத்தை அழைக்காமல் ஏன் இன்னும் உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டு வாழ்கிறாய்? உன் மகன் வந்து ரட்சிப்பான் என்னும் கனவோ உனக்கு? அப்படியொரு எண்ணம் இருந்தால் அதனை அடியோடு மறந்து விடு. அவனால் இந்த பாதாள கோட்டையை நெருங்கக்கூட முடியாது. தப்பித்தவறி உள்ளே நுழைந்துவிட்டாலும், நீ இருக்கும் இந்த பாதாளகோட்டை சிறையை அவனால் யூகிக்கவே முடியாது. உன் வாழ்நாள் இந்த சிறைக்குள் தான். அதேபோல், ஷேனாவும் எனக்கு மட்டும்தான். அவனின் கனவு ராணி வந்து என் வசியத்தை உடைத்தாலும் மீண்டும் என்வசம் ஆக்கிடுவேன் அவனை." கோபத்திலும் ஆனவத்திலும் கத்தியவள், வேக நடையுடன் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

✨✨✨

ரக்ஷவன் பள்ளிக்கு கிளம்பிய சிறிது நேரத்திலேயே தன்னுடைய வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு, பத்து மணி போல் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள், தேவயாசினி. இங்கே, பார்கவி அம்மாவுடன் பள்ளிக்கு வந்துவிட்ட ரக்ஷவன், இப்போது காலை நேர இடைவேளையில் பள்ளி மைதானத்தில் தன் நட்புகளுடன் பேப்பர்-பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.

அனைத்து பள்ளிகளிலும் இறுதி மாதங்கள் நடந்துக் கொண்டிருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பொதுதேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்க... எட்டாம் வகுப்பு படிக்கும் நம் ரட்சகனுக்கு ஓரிரண்டு வகுப்புகள் மட்டுமே உறுப்படியாக நடந்துக் கொண்டிருந்தது. இதில், அடுத்தவாரம் முதலாக அவனுக்கும் முழு-ஆண்டு தேர்வுகள் தொடங்கவிருப்பதால், அவன் வகுப்பில் உள்ள சிறந்த மாணவர்களுக்கு மட்டும் படிப்பதற்கென முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. மொட்டைமாடி முதல் மைதானத்தில் இருக்கும் மர நிழல்கள் வரையில் பள்ளியின் சுற்றுச்சுவர் நான்கினுள் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்துக் கொள்ளலாம். அந்த வரிசையில் ரக்ஷவனும் அடக்கமே. சேட்டையில் என்னதான் வாலில்லா குரங்காக வலம் வந்தாலும் படிப்பில் அவன் கெட்டிக்காரன் என்பதை பார்கவி அம்மா கூட மறுக்க மாட்டார். அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி இப்போது, இடைவேளை முடிந்து மணியடித்தப் பின்பும் படிக்கச் செல்லாமல் அவன் விளையாடிக் கொண்டிருக்க... கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, பள்ளி வளாகத்தில் ஒரு மாடியின் படியில் அமர்ந்தபடி அவனை நோக்கிக் கொண்டிருத்தாள், தீரா.

அவள் மனதில் தீவிர யோசனை. அந்த யோசனை முழுவதிலும் அவள் கண்முன்னே நிற்கும் அவன் ஒருவனே. அவன் கவசத்தின் ஆயுட்காலம் வெறும் பதினான்கு ஆண்டுகள். குறிப்பாக சொல்லப்போனால், இன்னும் இரு தினங்கள் மட்டுமே. அது உடைந்துவிட்டால், எதிரிகள் அவனை சூழ்ந்து விடுவார்கள். ஆதிலோகம் அழைத்துச்சென்று அவனை காத்துவிடலாம் என்று திட்டம் போட்டால், அங்குதான் பெரிய சிக்கலே! ஆதிகால ரட்சகன் ஆதிலோகத்தில் பாதம் பதிக்கும் அந்த நாளில்தான், பூர்வ ஜென்மத்தில் அவனால் அடைக்கப்பட்டிருக்கும் இருள் சக்திகள் விடுபடும். அதனால், அவன் ஆதிலோகத்தினுள் நுழைந்திடும் சமயம், தன் சக்திகளை உபயோகிக்கக் கூடியவனாக, இருள் சக்திகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டவனாக இருந்திட வேண்டும். ஆனால், இன்னும் அப்படியொரு நல்லகாரியம் நடக்கவில்லையே.

இப்படியாக தீரா, அவனின் யோசனையிலேயே உழன்றுக் கொண்டிருந்த சமயம், "பாப்பூ.... என்ன தனியா விட்டுட்டு எங்க போய்ட்ட நீ?" அவள் அமர்ந்திருந்த படிக்கு மேலே இருந்து பரபரப்பாக ஒரு குரல் கேட்க, "ஷாப்பா.. வந்துருச்சு டா இம்ஸ. எப்டிதான் நா இருக்குற எடத்த கண்டு புடிக்குதோ தெரியலையே!" தலையில் கைவைத்து விட்டாள், தீரா. அதே நேரம், "ஹப்பா... பாப்புவ கண்டு புடிச்சுட்டேன்" அவளை இடித்துக்கொண்டு அருகில் வந்து அமர்ந்தாள், அவள். தீரா, பள்ளியில் சேர்ந்த அதேநாளில் இதே பள்ளியில் சேர்ந்துவிட்டு, அன்றுமுதல் அவளின் வால் போல் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும் வான்மதி.

"அடியேய், நீ எப்போ என்ன தொலச்ச, இப்போ கண்டுபுடிக்க?" தீரா, சலிப்புடன் கேட்க, "இப்போ தா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிளாஸ்-ரூம்ல வச்சுட்டு ஐஸ் வாங்க போனேன். வந்து பாத்தா நா வச்சுட்டு போன பாப்புவ காணோம்!" சீரியசாக கூறியவளை இரு நொடி பார்த்த தீரா அப்படியே வலது பக்கமாகத் திரும்பி அங்கிருந்த சுவற்றில் மூட்டிக்கொண்டாள்.

"பாப்பு, அப்போ இத நானே எடுத்துக்கவா? நீ பிஸியா முட்டிட்டு இருக்க?" அதே சீரியஸ் குரலில் கேட்டபடி, வானு, தன் கையில் இருந்த ஐஸை நீட்டினாள். திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்த தீரா, லபக்கென அந்த ஐஸை பிடுங்கிக்கொண்டு வானுவை ஒருமுறை முறைத்துவிட்டு, ஐஸை சுவைத்துக் கொண்டே, தான் ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலையை மீண்டும் தொடர்ந்தாள். சிறிது நேரம் இருவருமே அமைதியாக ஐஸ் சுவைத்துக் கொண்டிருக்க, "அதுசரி பாப்பு, என் அண்ணன எப்போ நீ கிட்னாப் பண்ண போற?" தன் தொண்டையை செருமி கொண்டு கேட்டாள், வானு.

"எதே! கிட்னாப்பா?" விழிவிரித்து தீரா அவளை நோக்கிட, "என்ன லுக்கு? அதுக்கு தானே இப்டி உன் முட்ட கண்ண வச்சு என் அண்ணன பாத்துட்டு இருக்க?" அசால்ட்டாக கேட்டபடி, தொலைவில் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு புத்தகத்தில் முட்டி கொண்டிருக்கும் ரக்ஷவை நோக்கித் தன் பார்வையை சுட்டிக் காட்டினாள், வானு.

"போடி லூசு பப்பிமா. உன் லூசு அண்ணன கிட்னாப் பண்ணி நா என்ன செய்ய போறேன்" கத்திக்கொண்டே எழுந்தவள், "போ அந்த பக்கம், நா தனியா ஒக்காந்து படிக்கப் போறேன். என்னை கொஞ்சநேரம் தொல்ல பண்ணாம தானியா வுடு." வானுவிடமிருந்து நழுவி, யார் தொல்லையும் இல்லாமல் ரட்சகனை கண்காணிக்க ஏதேனும் இடம் இருக்கிறதா என தேடி ஓடிவிட்டாள், தீரா. அவள் தன்னை தனியாக விட்டுவிட்டு செல்வதை பாவமாக பார்த்த வானு, "சரி, ஓகே" தோளை குலுக்கிக்கொண்டு, தான் அண்ணனென அழைக்கும் ரக்ஷவனை தொல்லை செய்ய கிளம்பிவிட்டாள், வானு.

✨✨✨

ரட்சக ராஜ்யம்.

சிலுசிலுவென காற்று வீசும் ஜன்னலில் ஓரமாக கிடக்கும் தன் கட்டிலில், மல்லாக்க படுத்திருந்த நிலையில் கையில் ஒரு சங்கிலியை வைத்துக்கொண்டு அதை ஆட்டி ஆட்டி பார்த்துக் கொண்டிருந்தாள், மாயா. அந்த சங்கிலி, தங்க நிற வளையங்களை கொண்டு கோர்க்கப்பட்டு, நடுவில் அடர்-சிவப்பு ரத்தினக் கல்- அது உறவு சங்கிலி! அதுவும், சாதாரண உறவுசங்கிலியாகத் தெரியவில்லை; குழந்தை பருவம் முதலாக நிழல்தேசத்து இன்றைய இளவரசனின் கழுத்தில் உறவாடிக் கொண்டிருந்த அதே உறவுசங்கிலியை போல தான் தெரிகிறது.

மாயாவின் கண்கள், அனைத்து கோணங்களிலும் அந்த உறவுசங்கிலியை சுற்றிச் சுற்றி ஆராய்ந்து ஏதோ ஒரு கேள்விக்கான விடையை அதனுள் தேடிக் கொண்டிருந்தது. என்ன கேள்வி என்பது அவளுக்கே விளங்கியதோ என்னவோ? அது அவளுக்கு தான் வெளிச்சம்!

எவ்வளவு நேரமாக இதே வேலையாக இருந்தாளோ! அவளை அதிர்ச்சியடைய வைப்பது போலவே கேட்டது, அவளின் இரட்டை சகோதரி ரக்ஷஹாசினியின் குரல்.

"அம்மூ.. நாம மோசம் போய்ட்டோம், அம்மூ.. நம்மல பாதாளத்துல தள்ளப் பாக்குறாங்க எல்லாருமா சேந்து" படிகளில் ஏறி வரும்போதே கத்திக்கொண்டு ஓடிவரும் ரக்ஷாவின் குரலிலும் காலடி ஓசையிலும் திடுக்கிட்ட மாயா, அரக்கப் பறக்க எழுந்தமர்ந்து, எழுந்த வேகத்திலியே இப்படியும் அப்படியுமாக பரபரத்தாள்; தங்கை, அறைக்குள் நுழையும் முன்பாக தன் கையில் இருப்பதை ஒளித்து வைக்கும் நோக்கில். சரியாக, ரக்ஷா அறையினுள்ளே நுழைவதற்கு இரு நொடி முன்பாகத் தன் காரியத்தில் வெற்றியும் கண்டுவிட்டாள், மாயா.

பத்திறமாகத் தன் போக்கிஷத்தை, தலையனைக்கு அடியில் ஒளித்து வைத்துவிட்டவள், "என்னாச்சு பாப்பா? யாரு என்ன செஞ்சா?" அவள் கூறவரும் காரியத்தில் கவனத்தை பதிக்க.. பதட்டத்தின் உச்சகட்டத்தில் ஒரே குண்டாக தூக்கிப் போட்டாள், ரக்ஷா.

"அம்மூ.. நமக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கலாம். மாப்பிளை தேட ஆரம்பிக்கிறாங்க எல்லாரும்!!!"

❣️ சாகச பயணம் சளைக்காமல் வரும்❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro