Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அது என் குச்சி டப்பா..

......... ஏழாம் தெருவில் தொடங்கி அருகில் அமைந்திருக்கும் காட்டுப்பகுதி வரையில் நகர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேகமலையின் இந்த ஒரு பகுதியில் மட்டும் தீடீரென உருவாகிய சூறைகாற்றால் நேற்று பகல் முதல் தெரு முழுவதும் பாழடைந்த தோற்றத்தில் காணப்பட்ட நிலையில் தன்னார்வலர் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சேதாரமடைந்த மின் கம்பங்கள் மற்றும் சாலையில் முறிந்து கிடக்கும் மரங்களை அகற்றி ஒரே நாளில் தெருவை பழைய நிலைக்குக் கொண்டுவர உதவி செய்திருப்பதாகவும் தெரு மக்களும் அவர்களுக்கு உதவிகரம் நீட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மலை பகுதிகளில் ஏற்படும் இதுபோலான தீடீர் சூழல் மாற்றங்களுக்கான காரணங்களை புவியியல் வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் இது போன்ற அண்மை செய்திகளுக்காக....

'நியூஸ்ல வர்ற அளவுக்கு சம்பவம் பண்ணி வச்சுருக்கியே டா ரக்ஷவா' என்னும் மைண்ட் வாய்சுடன் டிவியை குறுகுறுவென பார்த்தபடியே சாக்ஸ் போட்டு பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான், ரக்ஷவன்.

"ரக்ஷவ், எல்லா திங்க்ஸயும் எடுத்துட்டல்ல? அப்றம் போற வழில வந்து பென் மறந்துட்டேன் இங்க் ஊத்த மறந்துட்டேன்னு சொல்லக் கூடாது." தன் கை பையில் அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டே வந்த பார்கவி அம்மாவின் சொல்லை கேட்ட பின்பே தலையில் இரு கையையும் வைத்தவன், " மயூ, இங்க் பாட்டில் எடுத்துட்டு வாயேன்" என வீட்டுக்குள் குரல் கொடுக்க, "அதானே பாத்தேன் என்னடா ஆளுக்கு முந்தி கெளம்பீட்டானேன்னு" அவனுக்கு கேட்கும்படியே முணுமுணுத்தவாறு அவனருகில் வந்து நின்ற பார்கவி அம்மா, தன் மொபைலை கையில் எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தார்.

"இந்தா.. உன் பென்ல இங்க் பில் பண்ணியே எடுத்துட்டு வந்துட்டேன்" பரிட்சைக்கு தேவையான தன் உடைமைகளுடன் சேர்த்து அவனுடையதையும் எடுத்துக்கொண்டு வந்த மயூரி, தன்னுடைய ஷூ மற்றும் சாக்ஸை எடுத்துக்கொண்டு வாயிலுக்க நகர, ரக்ஷவை அழைத்துக்கொண்டு அவள் பின்னேயே நடந்த பார்கவி அம்மா, "என்னடா ரக்ஷவ், உன் அம்மாவுக்கு கால் ரீச் ஆகவே மாட்டுது.. நேத்துல இருந்து ட்ரை பண்ணுறேன்" என சொன்னது தான் தாமதம், ரக்ஷவ், மயூவுடன் சேர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்து தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்ற மூவரும் கூட திகைத்து நின்ற நேரம் நொடிக்கணக்கில் நிலமையை தன் கைவசத்தில் கச்சிதமாக எடுத்துக்கொண்டான், அர்ஜுன்.

"இங்கருந்து ஊருக்கு சிக்னலே கெடைக்க மாட்டுது ஆன்டி. நாங்களே காலலை தான் அம்மாக்கு கால் பண்ணோம். அத்த கிட்ட கூட பேசுனோம்.. அத்த உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க.. ஆனா அண்ணன் ஃபோன கொண்டு வர்றதுக்குள்ள சிக்னல் கட்டாகீருச்சு." தன் வாய்க்கு வந்ததை இஷ்டத்துக்கு அடித்துவிடும் அர்ஜுனை அனைவரும் பே என பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அவனை நம்பிய ஒரே ஜீவன் பார்கவி அம்மா தான். 

"அப்டியா பா.. ஆமா இங்க கொஞ்சம் சிக்னல் வீக் தான். உள்ளூர்குள்ளயே இருந்தா தான் ஓரளவுக்கு ரீச் பண்ண முடியும். மறந்துட்டேன்."

"ஓஹ்.. சரி என்ன சொல்லணும் ஆன்டி. சப்போஸ் நெக்ஸ்ட் டைம் நாங்க பேசுனா சொல்லிக்கிறோம்"

"ஒன்னுல்ல... ரக்ஷவ்க்கு நேத்து முடியாம போனத சொல்ல தான் அவளுக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தேன்."

"அத நாங்களே காலைல சொல்லிட்டோம் ஆன்டி. ரக்ஷவ் கூட காலைல பேசுனான். அவன் உங்கட்ட சொல்லல?" எவ்வளவு நேரம் ஒருவனே சமாளிக்க என அவனையும் கோர்த்து விட, "அ- ஆமா.. ஆமா  'ம்மா. பேசுனேன் அம்மாட்ட.  நல்லா சாப்புட்டு போய் எக்ஸாம் எழுத சொன்னாங்க" தினறித் தினறி எப்படியோ சமாளித்துவிட்டான் அவனும். இருந்தும் அவன் மனதினுள் ஏக்கம் ஒன்று எழுந்தது, ஒவ்வொரு பரீட்சைக்கும் கேட்கும் அந்த சொற்களை கேட்க முடியாதா என.

"இத முன்னாடியே சொல்ல வேண்டியது தானே டா. இவ்வளவு நேரம் அமைதியா நின்ன?" என அவனிடம் சொன்னவள், பதிலையெல்லாம் எதிர்பார்க்காமல், "மித்ரா... சாப்ட்டதும் வந்து கதவ பூட்டிகோ டா.. பாத்து பத்ரமா இரு. எதாச்சும்ன்னா ஓடனே கால் பண்ணிரு சரியா." பார்வை வீட்டுக்குள் செலுத்திய பார்கவி அம்மா, தன் மகளிடம் சொல்லும்போதே உள்ளிருக்கும் சகோதரன்கள் மீது தன் கண்களை மாற்றி மாற்றி நகர்த்தியபடியே "சொல்றது புறியிதுல?" என மகளை பார்க்க.. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள், "ம்ம் புரியுது 'ம்மா.. நான் பாத்துக்குறேன். நீங்க போய்ட்டு வாங்க" என மூவருக்கும் கையசைத்து வழியனுப்பி வைத்தாள்.

"ஓய்.. என்ன உங்கம்மா இப்டி சந்தேகமா லுக்கு விட்டுட்டு போறாங்க. எங்கள பாத்தா என்ன டெரரிஸ்ட் மாறியா தெரியுது?" அம்மா மீதுள்ள கடுப்பை மகள் மீது கொட்டினான் ஹர்ஷன் என்னும் தன்மான சிங்கம். பார்கவி அம்மாவின் பார்வையை எல்லாம் கண்டுகொள்ளாமல் சாப்பாட்டிலேயே குறியாக இருந்த அர்ஜுன், 'இது எந்த கேப்ல நடந்துச்சு' என்பது போல் அவர்கள் இருவரையும் நிமிர்ந்து நோக்க, "பின்ன.. யாருன்னு தெரியாத ரெண்டு பசங்க கூட பொண்ண விட்டு போறாங்கள்ள.. கொஞ்சம் அப்டி தான் இருப்பாங்க." வீம்புக்கென அவனை சீண்டினாள் மித்ரா. 

"அவ்ளோ பயமா இருந்தா பொண்ணையும் கூடவே கூட்டிட்டு போக வேண்டியது தானே"

"அச்சச்சோ.. நாங்கலாம் அப்டிக்கா போனதும் நீங்க எதையாச்சும் ஆட்டைய போட்டுட்டு இப்டிக்கா ஓடிட்டீங்கன்னா என்ன பண்ணுறது. அதான் உங்க ரெண்டு பேரையும் கவனிச்சுக்க என்ன விட்டுட்டு போய்ருக்காங்க"

"ஓ மை காட். இது எங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? வா டா ஹர்ஷா நாம அத்த வீட்டுக்கு போய்ரலாம்" இருவருக்கும் நடுவில் புகுந்து அர்ஜுன் கத்த.. ஹர்ஷாவை விட்டுவிட்டு அர்ஜுனிடம் வம்புக்கு தாவிவிட்டாள் இப்போது.   

"போங்க.. நா நிம்மதியா எந்த பயமும் இல்லாம எங்க வீட்டுலயே இருப்பேன்"

"எங்கள பாக்க பயமா இருந்தா ஏன் வீட்டுக்குள்ள விட்டீங்கலாம்?"

"ஏதோ என் தம்பிக்கு சப்போர்ட்டா இருக்கீங்களேன்னு தான். அதுவும் தேவா அம்மாவோட கெஸ்ட்டுங்குற ஒரே காரணத்துக்காக தான் எங்க அம்மாவும் உங்கள உள்ள விட்டுருக்காங்க" நக்கலாக புன்னகைத்தபடியே தன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு தட்டை தூக்கியபடி நின்ற நேரம், "ஹலோ... நாங்களும் ஜென்டில்மென் தான் மா" ஹர்ஷன் அவளை நோக்கி நிமிற, "அது சரி" புன்னகைத்துவிட்டு கிச்சனை நோக்கி நடந்தாள் அவள்.

' என் பேச்சுக்கு இவ்வளவு தான் ரியாக்ஷனா' என்னும் பார்வையுடன் ஹர்ஷன் அவளை பார்த்தபடி இருந்த நேரம், "ஹலோ பிரதர்" நைசாக அவனருகில் வந்து கிசுகிசுத்த அர்ஜுன், "எனக்கு அன்னியா வர்றதுக்கான பத்து பொருத்தமும் இவங்களுக்கு கரக்ட்டா இருக்கு.. நம்ம அம்மாட்ட சொல்லி பேசி முடிச்சுருவோமா?"  என கண்ணாடிக்க, "ஒத வாங்க போற நீ." என்றபடி சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டான் அவனும்.

"நல்லது சொன்னா எவன் கேக்குறான். நல்லதுக்கு காலமில்ல டா அர்ஜுனா" தனக்குதானே சத்தமாக புலம்பிக்கொண்டு மீண்டும் தன் சாப்பாட்டினுள் மூழ்கி விட்டான், அர்ஜுன்.

✨✨✨

~ மங்கிய செங்கதிர்களை பரப்பிக் கொண்டிருக்கும் செந்நிலவினை உச்சி வானில் கொண்ட அந்த இருள் படர்ந்த மலை உச்சியில் ஒரேயொரு பாறை மட்டும் மலையை விட்டு சற்றே நீண்டு தனித்து நிற்க.. அதன் விளிம்பில் நின்று எல்லையில்லா அந்த பாதாளத்தினுள் தன் பார்வையை பதித்து வைத்திருந்தான் அவன்.

நேரம் நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டே தான் இருந்தது. எதையோ தேடிடும் அவன் பார்வையும் முற்றுபெற்றது போல் தெரியவில்லை அவன் தேடுவது கிடைப்பது போலும் இல்லை. சிலைபோல் மணிக்கணக்காக நிற்பவன் நிலையை கலைக்கவென நடந்தது அந்த மாற்றம். கிலுகிலுக்கும் வளையலோசையுடன் இரு கைகள் வந்து அவன் வயிற்றை கட்டியனைப்பதை கீழே குனிந்து பார்த்தவன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு.

"ஒருவழியாக என்னை தேடி வந்துவிட்டாயா?"

"ம்ம். என் மன்னனை தேடி வராமல் வேறு யாரை தேடிப் போவேன்?" காந்தக் குரல் தன் செவியினுள் ரீங்காரமிடும்போதே தன்னை பிடித்திருந்த இரு கைகளையும் உறுவி முன்னுக்கு இழுத்தான் அவனின் அழகியை. இழுத்தக் கையோடு அந்த பாதாளத்தை நோக்கி அவளை திருப்பிவிட்டு, அவள் செய்தது போலவே பின்னிருந்து அனைத்தவன், "அங்கு ஏதோ இருக்கிறது" அவள் கழுத்தில் தன் நாடியை வைத்து மீண்டும் அந்த பாதாளத்தை பார்க்கத் தொடங்கினான். அவனின் அழகியும் தன் மன்னனின் தோளில் தலையை சாய்த்தபடியே, "ம்ம். இருக்கிறது" இருள் சூழ்ந்த பாதாளத்தை நோக்கினாள்.

"என்ன இருக்கிறது?"

"முக்கியமான ஒன்று. என் மன்னனுடைய முக்கியமான ஒன்று"

"எனக்கு வேண்டும்"

"இங்கேயே இருந்தால் எப்படி கிடைக்கும் மன்னா?" தன் நிலையிலிருந்து மாறாமலே கையை உயர்த்தி அவன் கன்னத்தை தாங்கியவள், "அங்கு செல்ல வேண்டும் நீ" மறு கன்னத்தில் மெல்லிய முத்தம் ஒன்றினை வைக்க... அவள் கண்ணுக்குள் நோக்கியவன், "இவ்வழியாக எப்படி செல்வேன் அங்கே?" அப்பாவியாய் நோக்கியவனை, "இவ்வழியாக வேண்டாம். என் வழியாக செல்லலாம்" அவன் கைகளை கெட்டியாக பிடித்து அவ்விடத்தை விட்டு வேறு வழியாக நடக்கத் தொடங்கினாள் அவனின் அழகி. ~

"ஷேனா... ஷேனா எந்திரி.... ஷேனா.." நடு காட்டுக்குள் இருக்கும் வேகமில்லா நீரோட்டம் கொண்ட அந்த ஓடையினுள் அரையும் குறையுமாக நனைந்துப்போய் சுயநினைவற்று ஜுரத்தில் நடுங்கிக் கொண்டிருப்பவனை போட்டு குலுக்கினாள் சமாரா. இருந்தும் என்ன பயன்? கல்லில் அடிபட்டு இரத்தம் வழிந்து காய்ந்து போய் இருந்த அவன் நெற்றியில் எதேச்சையாக அவள் கை பட்ட நொடியில் லேசாக முணங்கியவன் தான், இப்போதைக்குக் கண்விழித்து எழும் நிலையில் இல்லை.

நேற்று பகல் பொழுதில் ரக்ஷவனால் உருவாக்கப்பட்ட சூறைகாற்று, இவர்கள் மூச்சடைத்து மயங்கிய பின்பே சமாராவை மரத்தடியிலும் ஷேனாவை ஓடைகரையிலும் என இருவரையும் காட்டுக்குள் போட்டுவிட்டு கலைந்திருக்க.. முழுதாக ஒரு நாள் முடியப்போகும் நிலையில் சற்று முன்பே மயக்கம் தெளிந்து எழுந்த சமாரா, ஐந்து நிமிட தேடலுக்குப் பின் சற்றே மோசமடைந்த நிலையில் இருக்கும் ஷேனாவை கண்டுபிடித்துவிட்டாள்.

என்னதான் முயற்சித்தும் ஷேனாவை எழுப்ப முடியாத நிலையில் தன் சக்தியை கொண்டு அந்த ஓடையை விட்டு அவனை மேலே இழுத்துவந்து போட்டவள்  மீண்டும் எழுப்ப முயற்சிக்க.. ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்படியும் அப்படியும் புரண்டபடி அனத்திக் கொண்டே கிடந்தவன் குளிரில் நடுங்கியபடி சுருண்டுக் கொண்டான்.

"ஹ்ம். நீ இங்கேயே இரு. நான் தனியா போறேன் இப்போ" மயக்கத்தில் கிடப்பவனை பார்த்து சொன்னவள் அவனருகில் தன் சக்தியை செலுத்திட கருநிற நெருப்பொன்று பற்றிக்கொண்டது அவனருகில்.  

✨✨✨

தேர்வு மணி அடித்து இரண்டு நிமிடம் கடந்திருந்தது. பள்ளி மைதானத்தில் ஒரு ஈ எறும்பு கூட தென்படாத நிலையில் தீரா மட்டும் வாக்கிங் சென்று கொண்டிருந்தாள், எவன் எப்போது எந்த திசையில் இருந்து குதித்து வந்து தன் ரட்சகனை தூக்கிச் செல்வான் என்னும் பீதியுடன். 

நேற்று வந்த ஷேனாவும் சமாராவும் நேற்றிலிருந்து காணவில்லை தான், இருந்தும் அது அவளுக்கு கூடுதல் பயத்தை கொடுத்துக் கொண்டிருந்தது, ஏதும் பெரிய சதி திட்டம் தீட்டுகிறார்களோ என. 

அவள் நடந்துக் கொண்டே இருந்த நேரம், திடீரென சூழலில் உணர்ந்த மாற்றத்தால் நொந்துக் கொண்டபடி, "கடவுளே இவன் பவர் எப்போ தூங்குது எப்போ எந்திருக்குதுன்னு ஒன்னுமே புரிய மாட்டுதே" தன் ரட்சகனை வசை பாடிக்கொண்டே அந்த ஆற்றல் வெளிபடும் திசையை நோக்கி நடக்க முற்பட்ட நேரம், "ஹலோ..  ஹலோ எக்ஸ்கியூஸ் மீ" பூட்டு போட்ட கேட்டுக்கு வெளியே இருந்து ஒரு குரல் கேட்டதில் பின்னால் திரும்பி பார்த்த தீரா, குழப்பத்துடன் சுற்றிமுற்றி தேடினாள், இவன் யாரை அழைக்கிறான் என.   

"உங்கள தான்.. அங்க வேற யாரும் இல்ல..  நீங்க தா பாப்பா" ஏதோ ஜெயில் கம்பியை பிடித்துக் கொண்டு நிற்கும் நினைப்புடன் நின்றிருந்த இருபது வயது மதிக்கத்தக்க வாலிபன், சரியாக தீராவை பார்த்து தான் அழைத்தான்.

 "நான் பாப்பாவா?" முணங்கிக் கொண்டும், முறைத்துக் கொண்டும், பிறர் பார்வையில் இருந்து தன்னை மறைத்து வைத்திருந்த தன்னுடைய மாயம் எப்போது தன்னை விட்டு நீங்கியது என குழம்பிக் கொண்டும் பள்ளி நுழைவாயிலை நோக்கி நடை போட்டவளின் கண்கள், பக்கவாட்டில் தோன்றிய கருநிற மாயவாயிலை கவனித்த நொடியில் அவளும் அவளை அழைத்தவன் முன்னால் வந்து நின்றிருக்க, "என் தம்பி இங்க தான் நயன்த் படிக்கிறான் இத மறந்து வச்சுட்டு போய்ட்டான். கொஞ்சம் அவன்ட்ட குடுத்துறீங்களா?" என்றவன், இள நீல நிற பிளாஸ்டிக் பென்சில் பாக்ஸை கேட்டுக்குள் நுழைக்க, "சரி குடுங்க" அதை வாங்கிக் கொண்டவள், "நயன்த் சி செக்ஷன். அவன் பேரு-" சமாராவை கண்ட கலவரத்தில் ரட்சகனின் ஆத்ம சக்தியின் வீரியம் அதிகமாக இருப்பதையும் உணர்ந்து கேட்டில் நிற்கும் கைதியின் சொல்லை காற்றுக்கு தாரை வார்த்துவிட்டு சென்றுவிட.. பாவம், தன் தம்பியை நினைத்து பரிதாபம் கொண்டான் அந்த அண்ணன்காரன்.

கையில் பென்சில் பாக்ஸுடன் ரக்ஷவின் தேர்வறையை  அடைந்து விட்டவள், உள்ளே சென்றால் தன்னையும் பிடித்து அமர வைத்து தேர்வு எழுத சொல்லி விடுவார்கள் என் அஞ்சிக்கொண்டு, உள்ளிருக்கும் சூப்பர்வைசர் கண்ணில் சிக்காமல் மறைந்து நின்று ரக்ஷவை பார்த்துவிட்டவள், 'எங்க போச்சு அந்த வௌவால் மூஞ்சி' என தன் பார்வையை சுற்ற விட்டுக் கொண்டிருந்த சமயம், "அது என் குச்சி டப்பா" அவளின் பின்னால் மிக அருகில் கேட்டக் குரலால் திடுக்கிட்டு பின்னால் திரும்பிட.. திருவிழாவில் தொலைந்தவன் தன் உறவுகளை கண்டுபிடித்த தோரனையில் அவள் முன் நின்றிருந்தான் அவன்.  

"குச்சி டப்பாவா?" தீரா குழம்ப, "ம்ம். அதான்..  அந்த் பாக்ஸ்." அவள் கையை சுட்டிக் காட்டினான் அவன். 

"ஓஹ் உங்க அண்ணன் குடுத்தாங்க. நீங்க தான் நயன்த் சி- பேரு..... எதோ சொன்னாங்-"  இம்முறை பல்ப் வாங்கியது தீராவின் முறை ஆகிற்று. அவன் அண்ணனுக்காக இவளை பழி வாங்குவது போலவே, பேசிக்கொண்டு இருக்கையிலேயே தன்னுடைய குச்சி டப்பாவை அபகரித்துக் கொண்டு தேர்வறைக்குள் புகுந்துகொண்டான்.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro