Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

6

தன் மனைவியிடம் எப்படியேனும் மருத்துவர் கூறியதை செப்பி விளக்கிடவேண்டும் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தான் எப்போது என்று யோசிக்க அவனுக்கு இதை வீட்டில் வைத்து சொல்வது சரியில்லை எங்கேயேனும் வெளியே அழைத்துச் சென்று சொன்னால் தான் சரிவரும் என்பதை புரிந்து கொண்டு அவளிடம்..

"அம்முலு.. நம்ப இரண்டு பேரும்" என்று தன் வழமையான தோரணையில் பேச்சை ஆரம்பிக்க அவளோ இருவிழிகளையும் சிமிட்டியபடி "என்னங்க"என்று கேட்க அவனது கையில் இருந்த ஊட்டி செல்லும் பஸ் டிக்கெட்டை எடுத்து அவள் முன்பு நீட்டினான்.

"ஊட்டிக்கு போற பஸ் டிக்கெட் ,யாருங்க போறாங்க"என்று வெகுளியாய் கேட்க அவனோ சிரித்து விட்டு "நாம இரண்டு பேரும் தான் போறோம். கல்யாணம் ஆன நாளிலிருந்து நம்ப சொந்த ஊர் தவிர வேற எங்கேயும் நம்ப போனது இல்லை அதான் இரண்டு நாள் இந்த வேலை ஆபிஸ்,குடும்பம் என்று எந்த டென்ஷனும் இல்லாமல் வெளியே போலாம் என்று முடிவு பண்ணேன்"

தன் கூந்தலை காதோரம் ஒதுக்கியபடி "நானும் ரொம்ப நாளா நினைச்சிட்டே இருந்தேங்க..போகனும் எங்கயாவது என்று.. அதற்கு ஏத்தமாதிரி நீங்களும் சொல்றீங்க.. சரி போலாம்".

அன்றிரவே பெட்டியில் துணிமணிகளை அடுக்கிவைத்துக்கொண்டு,தன் கணவனுக்காக பின்னி வைத்திருந்த ஸ்வெட்டர் எடுத்து வைக்கும் போது தான் அப்படி ஓர் ஸ்வெட்டர் இருப்பதை அமுதன் கண்டான்.

"ஏய் அம்முலு இந்த ஸ்வெட்டர் நீ பின்னியதா"என்று ஆச்சரியத்துடன் கேட்க அவளோ அவன் கைகளை பற்றி "ஆமாங்க இது உங்களுக்கு நான் பரிசா குடுக்க நினைச்சு பின்னியது..ஆனால் உங்கள் பிறந்தநாள் வரும் வரை காத்திட்டு இருக்கவேண்டாமேனு ஊட்டியில் உங்களுக்கு இதை பரிசா கொடுத்திடலாம்னு எடுத்து வைத்தேன் அதற்குள் நீங்களே பார்த்துட்டிங்க"என்று சற்று வெட்கப்பட அவனோ அவளை நெருக்கமாக அணைத்து நெற்றியில் முத்தம் பதிக்க நீண்ட நாள் கழித்து இருவருக்கும் இடையே ஓர் காதல் ஸ்பரிசம் நடந்தது.

'இந்த காதல் வெளிப்பாட்டினால் குழந்தை உருவானால் எவ்வளவு நல்லாயிருக்கும் அதை விட்டுவிட்டு ஐ.வி.எப்பாம் ஐ.வி.எப் ,ம்ம்ம்' என்று மனதிற்குள் சளித்துக்கொண்டான் அமுதன்.
"என்னங்க சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகுங்க நம்ப கிளம்பனும். இங்கேயே மசமசனு நின்னுட்டு இருந்தா பஸ் விட்டுடுவோம் போலருக்கு"என்று புன்னகையிக்க அவனும் வார்ட்டோபில் இருக்கும் தன்னுடைய பணியன் மற்றும் டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றான்.

இவளும் ஒரு புதிய சேலையை உடுத்திக்கொண்டு புரப்பட்டாள். "மாமா இரண்டு நாள் நான் வரும் வரைக்கும் பங்கஜம் மாமி உங்களுக்கும் குமரனுக்கும் குழம்பு தரேனு சொல்லியிருக்காங்க நீங்க சாப்பாடு மட்டும் வடித்துக்கொண்டால் போதும் " என்று கூற "அதெல்லாம் நான் பாத்துக்கிறன் தாயி நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா போயிட்டு வாங்க" என்று வழியனுப்பி வைத்தார்.

இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்தை பிடித்து அமர்ந்தனர்.
"என்னங்க எதுக்கு ஏஸி பஸ் எல்லாம். நார்மல் பஸ்ஸில் டிக்கெட் எடுத்துருக்கலாம்ல" என்று கூறிய மனைவியின் தோளில் கைப்போட்டு "அடியேய் பொண்டாட்டி இங்கிருந்தே ஊட்டி ஃபீல் நீ அனுபவிக்கனும் என்று தான் ஏஸிபஸ்ஸில் உன்னை கூட்டிட்டு போறேன்"என்று அவள் தோள்பட்டையை உலுக்க அவளோ சிரித்தவாறே "நல்ல ஆள் போங்க நீங்க"என்று செல்லமாக தன் கணவனின் கண்ணத்தில் கை பதித்தாள்.

மறுநாள் ஊட்டி வந்து சென்றடைந்த இருவரும் தாங்கள் முன்கூட்டியே பதிவு செய்திருந்த ஹோட்டலிலில் சென்று தங்களது அறைச்சாவியை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். ஒரு நிமிடம் அறையை சுற்றிமுட்டி பார்த்தவளுக்கோ ஏதோ புது உலகத்திற்குள் வந்தது போல் இருந்தது. எப்போதும் அடுப்பறையும் வீட்டு மொட்டைமாடியுமே வாழ்விடமாய் இருக்கும் பட்சத்தில் இந்த இரண்டு நாள் ஊட்டி பயணம் அவளுக்கு ஏதோ ஓர் புத்துணர்ச்சி அளித்தது.

இருவரும் அன்று தொட்டபெட்டா சென்றனர் அங்கிருக்கும் டெலஸ்கோப் பார்த்து ரசித்து விட்டு அப்படியே கால்நடையாய் அங்கு வலம்வந்தனர்.
"சார் ..ஒரு போடாடோகிராப்" என்று இன்ஸ்டென்ட் போட்டோகிராபர் கையில் கேமராவை வைத்துக்கொண்டு கேட்க உடனே சரி என்று ஒப்புக்கொண்டு இருவரும் ஓர் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை அவனிடமிருந்து வாங்கி பார்த்தனர்.

"என்னங்க சூப்பரா இருக்குங்க" என்று ரசித்தவளை ஒருநிமிஷம் ரசித்துவிட்டு "அம்முலு உன் கிட்ட ஒன்று சொல்லனும்"

"என்னங்க? நான் இப்போது நல்ல மூட்ல இருக்கேன் இப்ப நீங்கள் எது சொன்னாலும் கேட்டுப்பேன்."என்று புன்னகையிக்க அவனோ தட்டுத்தடுமாறி

"தமிழ்..எனக்கு விந்து முந்துதல் சக்தி ரொம்ப குறைவா" என்று ஆரம்பிக்கும் போதே அவன் கண்களில் கண்ணீர் உருண்டோடியது.

"எ...என்னங்க சொல்றீங்க"என்றாள் சற்று பதற்றத்துடன்.

"ஆமாம் நமக்கு ஐ.வி.எப் பண்ணணும் என்று டாக்டர் அன்னைக்கு சொன்னாங்க. இதை உன்கிட்ட எப்படி சொல்வது என்று தெரியாது தவித்துக்கொண்டு இருந்தேன் அதான் இந்த சந்தர்ப்பத்தில் உன்கிட்ட சொல்லலாம் என்று.."

சற்று மெளனத்தை கடைபிடித்தவள்,ஐ.வி.எப் தானே பண்ணிக்கலாம் விடுங்க ஆனால் அதுக்காக உங்களுக்கு தான் பிரச்சினை இருக்கு என்று நினைத்து கவலைப்படாதிங்க ஏன் எனக்கு எதுவும் பிரச்சினை இருக்காதா என்ன?,எனக்கே மாதவிடாய் பிரச்சினை இருக்கிறது, என்ன செய்றது விடுங்கள். குற்றவுணர்வு உங்களுக்கு வேண்டாம் புரியுதா" என்று கண்களில் வழிந்த அவனது கண்ணீரை தனது கை விரல்களால் துடைத்தவள்.
"வாங்க இரண்டு பேரும் மறுபடியும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்"என்று மறுபடியும் தன் கையில் இருந்த கைப்பேசி மூலம் ஓர் செல்பி புகைப்படம் எடுக்க அவனோ தன் கவலையை மறந்து புன்னகையிக்க..

"இதை இப்பவே முகநூலில் போடுகிறேன். உங்கள் நண்பர்கள் எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் படப்போறாங்க"என்று நகைத்துவிட்டு அதை முகநூலில் பதிவு செய்தாள். செய்த அடுத்த நிமிடமே விருப்பம் பொத்தனை ஒருவர் அழுத்திவிட..இதை காண்பித்து "இங்க பாருங்க சின்ன சின்ன விஷயத்தை அனுபவிக்கனும் என்று அடிக்கடி அறிவுரை சொல்வரே நீங்கதான் இப்ப நீங்களே இப்படி வருத்தப்பட்டாள் எப்படி?" என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

அவளிடம் பேசிக்கொண்டிருக்கும் அந்த நொடி தாயின் கருவறையில் பாதுகாப்பாய் இருக்கும் உணர்வை அளித்தது அவனுக்கு.

"உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே"

அந்த பாடலில் வரிகள் அவனது எண்ணம் ஓட்டங்களில் கேட்க ஒரு நிமிடம் கண்களை மூடி ஊட்டியிற்கே சொந்தமான அந்த சிலுசிலு காற்றை தன்  நாசியில் மெல்ல சுவாசித்தான்.

தொடரும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro