5
வாங்கிய துணிப்பையை நெஞ்சோடு ஆனந்தமாக அணைத்துக்கொண்டு ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தாள் தாரா.
அவளுக்கு அருகில் தனது பையையும் அதேபோல் அணைத்துப் பிடித்தபடி முகம்கொள்ளாப் புன்னகையோடு அமர்ந்திருந்தான் தனுஷ்.
மணியைப் பார்த்தால் எட்டு ஐம்பது. அப்பாவின் ஷிஃப்ட் முடிவது ஒன்பது மணிக்கு. அவர் குடியிருப்பிற்கு வருவதற்குப் பத்து நிமிடங்கள். ஆகமொத்தம் இன்னும் இருபது நிமிடங்களுக்குள் வீட்டில் இருந்தாகவேண்டும் அவர்கள்.
"டைமுக்கு வீட்டுக்குப் போயிடுவோமாடி??"
பேருந்து ஊர்ந்து செல்லும் வேகம் சற்றே கலக்கமளித்தாலும், அம்மாவின் சமாளிப்புத் திறமையை நம்பிக்கையாகப் பற்றிக்கொண்டு, தாரா சிறு புன்னகையைத் தேக்கினாள் உதட்டில். "அதெல்லாம் போயிடலாம்.. புலம்பாம இரு!!"
நாக்கை நீட்டிப் பழிப்புக் காட்டிவிட்டு, தனது கைபேசியில் வீடியோ கேம்ஸ் விளையாடத் தொடங்கினான் தனுஷ். தாரா ஜன்னலின் வழியே சாலையில் விரையும் கார்களைப் பார்த்தாள். ஏனோ சற்றுமுன் பேருந்து நிறுத்தத்தில் பார்த்த ஆண்மகனின் நினைவு வந்தது. எங்கேயோ பார்த்ததுபோன்றே இருந்த அந்த முகம் அவளை சற்றே யோசிக்க வைத்தாலும், பேருந்தில் பலத்த ஹாரன் சத்தம் அதைக் கலைத்து மீண்டும் தன்னிலை திரும்பவைத்தது அவளை. அவள் தம்பியைத் திரும்பிப்பார்த்தாள். காற்றில் அவனது தலைமுடி கலைந்திருக்க, அதை சரிப்படுத்த அவனது தலையைத் தொட முயன்றாள் அவள். அவனோ அலட்சியமாக நகர்ந்து அவள் கையைத் தட்டிவிட்டான். தோளில் ஒன்று வைத்தாள் அவனுக்கு. அவனோ விளையாட்டில் மும்முரமானதால் பதிலடி தரவில்லை.
இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் அவசரமாய்ப் பைகளைத் திரட்டி எடுத்துக்கொண்டு சாலையில் குதித்தாள் அவள். "ஹேப்பி தீபாவளி" எனப் பேருந்தைப் பார்த்து சத்தமாகக் கத்த, சிலர் சிரித்தனர்; சிலர் கையசைத்தனர்: ஓரிருவர் பதில்வாழ்த்தும் கூறினர். தனுஷ் தலையில் தட்டிக்கொண்டு, அவளையும் தோளில் அடித்தான். மாறிமாறி அடித்துக்கொண்டே சிரிப்போடு வேகவேகமாக அடியெடுத்துவைத்து, தங்கள் தெருவுக்குள் வந்துவிட்டனர் அவர்கள். காம்ப்பவுண்ட்டை எட்டிப் பார்த்தபோது, அப்பாவின் டிவிஎஸ் 50 இல்லை அங்கே. நிம்மதிப் பெருமூச்சுடன் வீட்டினுள் நுழைந்து அம்மாவை சத்தம்போட்டு அழைத்தாள் அவள்.
"அம்மா!! சீக்கிரம் வாங்க!!"
"ஷ்ஷ்!! ஏன் இப்படிக் கத்துறீங்க ரெண்டு பேரும்!? அப்பா வர்ற நேரமாச்சு! மொதல்ல உள்ள போங்க!!"
பதற்றமாகக் கிசுகிசுத்தவாறே உள்ளிருந்து வந்தார் தேவி.
தாராவோ அசராமல், தன் பைக்குப் பின்னாலிருந்த மற்றொரு துணிப்பையை உயர்த்திக் காட்டினாள் தேவியிடம். அவரோ அதிர்வான பார்வையோடு, "என்னடா இது!? காசு மிச்சமானா அதைக் கொண்டுவர வேண்டியதுதானே?? எதுக்காகத் தேவையில்லாம இன்னொரு துணி வாங்கின?? அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்!!" என மிரள, தன்னு அவசரமாக முன்வந்து பையைப் பிடுங்கி, அதிலிருந்து ஒரு புதுப் புடவையை வெளியே எடுத்து நீட்டினான்.
"இந்த ஒல்லிப்பிச்சான் எதுக்காக புடவை எடுக்கப்போறா? இது உங்களுக்கு வாங்கினதும்மா!!"
தேவியின் விழிகள் வியப்பில் விரிந்தன.
"தன்னு!? ஏதுடா காசு இதுக்கு??"
தமக்கையும் தம்பியும் தோளைக் குலுக்கினர்.
"சேர்த்து வச்ச பாக்கெட் மணி. எங்களுக்காக நீங்க புடவை வேணாம்னு சொல்லிட்டீங்க, ஆனா உங்களுக்கு புதுப்புடவை இல்லாம எப்படி தீபாவளிய கொண்டாடுவோம் நாங்க?"
தேவி இருவரையும் கண்ணீர்மல்க அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார்.
"என் செல்லம்டா நீங்க!!"
"புடவை பிடிச்சிருக்காம்மா உங்களுக்கு.. தன்னு தான் உங்களுக்கு வாடாமல்லிக் கலர்னா புடிக்கும்னு அடம்பிடிச்சு எடுத்தான்..."
அவர் மகிழ்வாகத் தலையாட்டி, "ரொம்ப அழகா இருக்கு" என்றிட, அந்தச் சிரிப்பு இருவரையும் தொற்றிக்கொண்டது. கைகளைக் காற்றில் உயர்த்தி இருவரும் உள்ளங்கைகளைத் தட்டிக்கொண்டனர் உற்சாகமாக.
மேலும் வாங்கிவந்த பலகாரங்கள், பட்டாசுகள் போன்றவற்றையும் எடுத்துப் பார்த்துப் பிரித்துக்கொண்டிருந்தபோது, சீனிவாசன் உள்ளே நுழைந்தார். தனுஷ் அவரைப் பார்த்த மாத்திரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டுத் தன்னறைக்குள் சென்றுவிட, பெண்களோ அக்கணத்தைத் தவற விட்டிருந்தனர்.
முகத்தில் மட்டற்ற புன்னகையோடு அவர்களிருவரும் திரும்ப, நேரெதிராய் அவரோ உலகின் மொத்த துரதிர்ஷ்டமும் தன் தலையில் விழுந்ததைப்போன்ற உவர்ப்பான முகத்தோடு உள்ளே வர, இரு அணிகளும் சிலகணங்கள் அசவுகரியமாக நின்றன. தாரா சற்றே சிரித்து, "வாங்கப்பா.. இப்பதான் அம்மாவோட புடவையைப் பிரிச்சுப் பாத்துட்டு இருந்தோம்.. நீங்களும் பாருங்களேன்.. நல்லா இருக்கில்ல?" எனக் கையில் இருந்த புடவையை நீட்ட, அவரோ தனது கைப்பையைத் தரையில் போட்டபடி, "என் காசுதான் கரியாப் போகும்னு முன்னவே தெரியுமே, அதை வந்துவேற பார்க்கணுமா!?" என்றார் வெறுப்பாக.
தாராவின் கை அந்தரத்திலேயே நின்றது புடவையுடன்.
முறைப்போடு உள்ளே செல்ல எத்தனித்தவர் ஏதோ தோன்றவும் நின்றார். சுணங்கிய முகத்தோடு சுவரோரம் நின்ற மகளைத் திரும்பிப் பார்த்தார்.
"சிதாரா, இங்க வா."
புன்னகையொன்று முகத்தில் பிறக்க, புடவையுடன் அப்பாவிடம் சென்றாள் அவள்.
ஏற இறங்க அவளைப் பார்த்தவர், "காலேஜ் சேர்ந்து எத்தனை வருஷமாச்சு?" என்றார்.
விரல்களை ஒன்றோடொன்று பிணைந்தவாறே, "ரெண்டு வருஷம்ப்பா.. அ.. அடுத்த வருசத்தோட முடியப்போகுது" என்றாள் அவள், குழப்பமான முகத்தோடு.
"ம்ம்"
அதற்குமேல் கேட்காமல் அவர் சென்றுவிட, தேவி அகன்ற பார்வையோடு மகளையும் கணவன் சென்றடைத்த கதவையும் மாறிமாறிப் பார்த்து ஏதோ சிந்தனையில் நின்றார். தாரா தோளைக் குலுக்கிவிட்டு, ஆசையாக வாங்கிய நீலச் சுடிதாரை அணிந்து பார்க்க அறைக்குள் சென்றுவிட்டாள். தனுஷும் தன் தோழர்களுக்குத் தன் ஜீன்ஸ் பேண்ட்டைப் புகைப்படமாக எடுத்துப் பகிர்வதில் முனைந்துவிட, தேவி அன்றைய இரவு சமையலுக்காகச் சென்றார் சமையலறைக்கு.
சிறிதுநேரத்தில் யாரோ சமையலறை வாசலில் நிற்பதை உணர்ந்து திரும்பியவர், சீனிவாசன் அங்கே யோசனையாக நிற்பதைக் கண்டு திகைத்தார்.
"என்னங்க? இதோ ரெண்டு நிமிஷத்துல டிபன் ரெடியாகிடும்ங்க.. சட்னி அரைச்சுட்டேன்ங்க" என்றார் பதற்றமாக.
அவரோ தலையை அலட்சியமாக அசைத்துவிட்டு, "உன் கல்யாணச் சீதனமாக் கொண்டுவந்த நகைங்க வீட்டுல தானே இருக்கு?" என்றார் சம்பந்தமின்றி. ஏனெனக் கேட்க வாய் முயன்றபோதும், எதிர்க்கேள்வி கேளாமல் மெல்லமாக, "ஆமாம்ங்க, பேங்க்ல இருந்து திருப்பியாச்சு" என்றார் தேவி.
"ஓ.. வேடசந்தூர்ல இருந்த அஞ்சு சென்ட் நிலம்..? அந்தப் பத்திரம் நம்மள்ட்ட தான இருக்கு?"
"இ.. இல்லீங்க.. போனதடவை சிதாரா சீர் பங்ஷனுக்காக நகையைத் திருப்பும்போது, நிலத்தைப் பேசிட்டோமே ராஜசேகருக்கு.."
நிலம் விற்றது முழுவதும் தன்னுடைய யோசனைதான் என்பதை சிறிதும் நினைவில்லாதவர்போல முகம் கடுத்தார் சீனிவாசன்.
"என்னடி சொல்ற!?"
தேவியின் இருபது வருட மணவாழ்க்கையில் அவர் கற்றுக்கொண்டது என்னவென்றால், கணவன் எத்தனை முறை அர்த்தமின்றிக் கேள்விகள் கேட்டாலும் சகித்துக்கொண்டு பதிலளிப்பதைத் தான். இந்தியக் குடும்பங்களின் பெரும்பான்மையான மகளிரின்மீது நடத்தப்படும் மன வன்முறை இது. பொறுமையும் சகிப்புத்தன்மையும் கிட்டத்தட்ட அடிமைத்தனத்தின் அருகே நிறுத்தும் அவர்களை.
குழந்தைக்குச் சொல்வதுபோல மீண்டும், "தாராவுக்கு சீர் வைக்கும்போது, உங்க சொந்தக்காரங்க முன்னாடி சங்கடப்படக்கூடாதுன்னு, நிலத்தை வித்து வட்டி கட்டி, நகையைத் திருப்பினோமே..." என நினைவூட்ட முயன்றார் தேவி.
சட்டென அடுக்களை மேடையில் வைத்திருந்த பாத்திரங்களைத் தட்டிவிட்டார் சீனிவாசன். "சே!"
அவர் போட்ட சத்தத்தில் தாரா அதிர்ந்து அறையை விட்டு வெளியே வந்தாள். தேவி சத்தத்தில் முகம்சுளித்து, உடல் குறுக நின்றார் மூலையில். தன்னு தாராவின் அருகே வந்து நின்றான். இருவரையும் திரும்பி முறைத்த சீனிவாசன், தரையில் இறைந்துகிடந்த பாத்திரங்களின் நடுவே கிடந்த சட்டுவத்தை எடுத்தார் கையில்.
"கையில காசில்லாம எதையெதையோ செஞ்சு எப்படியாச்சும் உங்களைப் படிக்கவைக்கணும்னு நாங்க கஷ்டப்படறோம்!? படிக்காம இங்க என்ன வேடிக்கை வேண்டிக்கிடக்கு ரெண்டு கழுதைக்கும்??"
கையில் இரும்பு சட்டுவத்தோடு அவர் நெருங்க, சிதாரா பேயறைந்ததுபோல நின்றாள். தனுஷிற்கு ஓடிவிட ஆசையிருந்தாலும், தாராவின் முன்னால் நகர்ந்து நின்றான் அவன். அதற்குள் தேவியே ஓடிவந்து சீனிவாசனின் கைகளைப் பிடித்துத் தடுத்தார்.
"என்னங்க, அவங்களை நான்தான் சாப்டுட்டுப் படிக்கலாம்னு சொன்னேன்.. இதோ இப்பப் போயிடுவாங்க படிக்க. நீங்க வாங்க, நான் அடைதோசை வார்க்கறேன் உங்களுக்கு..." என்றபடி அவரை அழைக்க, தன்னு தேவியின் கண்ஜாடையைப் புரிந்துகொண்டு தாராவை இழுத்துக்கொண்டு உள்ளே சென்று கதவடைத்தான்.
"ஒருநாள் இல்ல ஒருநாள் ஒரேயடியா இங்கிருந்து ஓடப்போறேன் நானு!" அடிக்குரலில் கோபமாக முணுமுணுத்தான் தன்னு.
தாரா மருண்ட கண்களை மறைத்துச் சிரித்தாள்.
"இங்கிருந்து தெருவைத் தாண்டறதுக்குள்ள திரும்ப ஓடிவந்துடுவ! அம்மாவோட சாப்பாட்டை விட்டுட்டு எங்கிட்டாச்சும் போவியா நீ!?"
தன்னுவும் சிரித்தான்.
"அந்தப் பாசக் கயிறுதான் தாரா என்னைக் கட்டிப் போடுது!"
"கயிறு இல்லடா, அது உன் வயிறு!"
"ஏய்!!"
இருவரும் தாக்குதலுக்குத் தயாராகிய நிலையில் சட்டெனக் கதவு தட்டப்பட்டது.
"தாரா, தன்னு, சாப்பிட வாங்க!"
நத்தைபோலக் கதவின் பின்னிருந்து தலையை மட்டும் விட்டு எட்டிப்பார்த்த தனுஷ், "ஹிட்லர் சாப்பிட்டுப் போயிட்டாரா?" என்றான் தாழ்ந்த குரலில். தேவிக்கு சிரிப்பு வந்தாலும், முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டே, "அப்பாவை மரியாதையா பேசு தன்னு! வா, தோசை ஆறிடப் போகுது" என அழைத்துச்சென்றார்.
தரையில் கிடந்த தனது நீலவண்ணச் சுடிதாரை பெருமூச்சோடு மடித்துவைத்துவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்தாள் தாராவும். "அப்பாவுக்கு என்ன டென்ஷன்? ஏன் கத்தினார்?" என்றாள் அவள். தேவி தெரியவில்லை என்பதுபோலத் தலையாட்டினார்.
"ஏதாச்சும் காசுப் பிரச்சனையா இருக்கும்.. எதைக் கொண்டுபோய் அடகு வைக்கலாம்னு யோசிச்சிருப்பாரு. நீ சாப்பிடு."
அவள் சற்றே சோகமாகப் புருவம் தூக்கினாள்.
"போனஸ் பணத்தை செலவு பண்ணாம அவருகிட்டயே குடுத்திருக்கலாமோ?"
தனுஷ் அலட்சியமாக, "ஆமா.. இந்த ரெண்டாயிரத்து சொச்சம்தான் அவரை அம்மா நகையை அடகு வைக்காமத் தடுக்கப் போகுதாக்கும்!? பேசாம சாப்பிடுவியா.." எனத் தோளில் இடித்தான் அவளை.
தாரா திரும்பி அன்னையைப் பார்த்தாள். அவர் முகத்திலும் விரக்தியான உணர்வுதான் நிரம்பியிருந்தது. ஏனோ இந்த வருட தீபாவளி இயல்புபோல இனியதாக இருக்கப்போவதில்லை என்று உணர முடிந்தது அனைவராலும்.
****************************************
ஹாய், ஹாய்!!!
தீபாவளி வரப்போகுது.. கதையிலும், நிஜத்திலும்!! அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! என்ன ப்ளான் எல்லாருக்கும்??
தாராவோட தீபாவளி எப்படி இருக்கப் போகுது? (கதையைப் பத்தி ஓரளவு எல்லாரும் ஊகிக்க முடிஞ்சிருக்கும், இல்ல?) ஆதித் அடுத்த அத்தியாயத்தில் நம்மை சந்திப்பான்.
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது.. உங்கள் மது!! வாசித்தமைக்கு நன்றி! கதை பிடித்திருந்தால் வாக்களித்து, நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளவும்!! நன்றி!!
Check out Madhu_dr_cool on Instagram for cool , random ideas of my stories!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro