Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🕵18🕵

"தள்ளி விடாமல்... பின்னே கட்டி..." என்று பொரிய ஆரம்பித்த மணி, தன் வார்த்தைகளின் பொருள் உணர்ந்து சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள்.

அதைக் கண்டு மீண்டும் துள்ளலுடன் அவளிடம் நெருங்கிய ஜெய் நூலளவு இடைவெளியில் நின்று, "ம்... கட்டி...?" என்று எடுத்துக் கொடுத்தான்.

அவனை தீப்பார்வை பார்த்தவள், "இந்த வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்!" என்று எகிறினாள்.

"வேறு யாரிடம்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறாய்?" என்று அவள் கை விரல்களோடு தன் விரல்களை கோர்த்து இறுக்கினான்.

அவனுடைய நெருக்கமும், செயல்களும் அவளுள் அனலை மூட்ட, தன்னை நிதானிக்கும் வழியறியாது தவித்தவள் அவனிடமே குமைந்தாள்.

"ப்ச்... முதலில் கையை விடுங்கள்!"

"முடியாது... இன்று பிடித்த இந்த கரத்தை வாழும் காலம் முழுவதும் விடாமல் என்னுடனே தான் நான் பிணைத்துக் கொள்வேன்!" என்று உரிமையாய் மொழிந்து அதில் தன் இதழ் தடம் பதித்தான் ஜெய்சங்கர்.

'ஐயோ... இன்றைக்கு என்ன இவன் ஒரு மார்க்கமாகவே நடந்துக் கொள்கிறான்? விவரம் தெரியாமல் கைப்புள்ளை ரேன்ஜுக்கு வந்து தனியாக சிக்கி கொண்டோமோ...'

"உண்மை... என்னுள் உறங்கி கொண்டிருந்த காதல் மிருகத்தை நீ ரொம்ப தான் சீண்டி தட்டி எழுப்பி விட்டாய்!" என்று அவள் மைன்ட் வாய்ஸை கேட்ச் செய்த ஜெய் அவளை அப்படியே கதவின் மீது சாய்க்க, இம்முறை சற்று மிரண்டு தான் போனாள் மணிகர்னிகா.

"ஹேய்... எ... என்ன... விட்டால் நீங்கள் ரொம்ப தான் உளறுகிறீர்கள், இப்பொழுது ஒழுங்காக என்னை விட்டு விடுங்கள். இல்லை... கத்தி ஊரை கூட்ட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை பக்கத்தில் இருக்கும் திலக்கையாவது அழைத்து விடுவேன்!" என்று மிரட்டியபடி தன் மேல் கிட்டத்தட்ட சாயும் நிலையில் இருந்தவனை தன்னிடமிருந்து விலக்க முயன்றாள்.

"செல்லம்... என்ன நீ கொஞ்சம் கூட விவரமே இல்லாமல் இருக்கிறாய், நீ கத்துகிற வரை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன் என்று நினைத்தாயா? எங்கே வாயை திறந்து பார்... என்ன நடக்கும் என்பது அப்பொழுது தெரியும்!" என்று கண்ணடித்தான்.

"என்னடா நீ அநியாயத்திற்கு இப்படி நடந்துக் கொள்கிறாய்? சத்தியமாக உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை!" என்று பரிதாபமாக கூறினாள் மணி.

"என்னது 'டா' வா?"

"அதுதான் இலை மறைவு காய் மறைவு என்று ஒளிந்து சீன் ஓட்டியது எல்லாம் வெளியில் வந்து விட்டதே அப்புறம் என்ன?" என்றாள் அலட்சியமாக.

"அதற்கென்று டா சொல்வாயா?"

"ஐய்யே... அதற்கு எதற்கு இவ்வளவு ரியாக்ஷன் கொடுக்கறீங்க?" என்றவள் சட்டென்று எம்பி அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள்.

"அப்பா... ஜான்சி ராணி, என்ன நீ இந்த போடு போடுகிறாய்? காதலே சொல்லவில்லை... அதற்குள் முத்தமா? உன்னோடு எப்படி தான் காலம் முழுவதும் குப்பை கொட்டப் போகிறேனோ தெரியவில்லையே!" என்று போலியாக மிரண்டான் ஜெய்.

ஹும்... என்று இதழ் சுழித்தவள், "நானாவது பரவாயில்லை நீங்கள் நிண்ணியூர் வந்த பொழுதிலிருந்தே நாசூக்காக என் மனதை தெரிவிக்க முயன்றேன். ஆனால் நீங்கள்... பெரிய லார்ட் லபக்கு தாஸ் மாதிரி திரும்பி கூட பார்க்காமல் யோக்கியவான் போல் சீன் போட்டு விட்டு சந்து கிடைத்ததும் சிந்து பாடிட்டீங்க இல்லை, ம்?" என்று புருவம் உயர்த்தினாள்.

"கள்ளி..." என்று அவள் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன் உடனே சீரியஸாகி, "ஏய் பேசாமல் வெளியே போய் விடலாமா?" என்றான்.

அவன் பேச்சின் தலையும் புரியாமல் வாலும் புரியாமல், "என்ன?" என்று புருவம் சுருக்கினாள்.

"இல்லை... நீ சின்னப்பெண் என்று ஒரு வருடமாக சிரமப்பட்டு காதலை கூட சொல்லாமல் காக்கப்பட்டு வந்த என் கண்ணியம், உன் விளையாட்டு புத்தியை கண்டு மதி மயங்கி தடம் புரண்டு செய்ய கூடாத வேலையெல்லாம் செய்ய சொல்கிறது. சத்தியமாக என்னால் முடியவில்லை உன்னை..." என்று எதையோ உணர்ச்சி வேகத்தில் சொல்ல வந்தவன் சற்றே விழிகளை மூடி நிதானித்து, "இந்த ஒருமுறை மட்டும்!" என மொழிந்து அவள் என்னவென்று விழிக்கும் பொழுதே பட்டென்று அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து காதில் இதழ் பதித்து, "லவ் யூ!" என்று கிறக்கத்துடன் முனகிய அதே வேகத்தில் அவளிடமிருந்து விரைந்து விலகி அவசரமாக வெளியேறினான்.

அவனுடைய அதிரடியில் சிலிர்த்து சிவந்தவளுக்கு வெட்கம் வந்தது.

அதுவரை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய், நேர்க்கொண்ட பார்வையாய் வீறு நடைப் போட்டவளை அவள் தாய் கூட சீண்டுவாள். எந்நேரம் பார் சிலிர்த்துக் கொண்டு திரிகின்ற உனக்கெல்லாம் நாளைக்கு உன் புருஷனிடம் கூட வெட்கம் வராது போலிருக்கிறது. அவனிடம் மட்டும் தான் எதற்கு வெட்கம் கொள்ள வேண்டும், கணவன் மனைவி உறவென்பது இருவருக்கும் பொதுவானது தானே என்று இவள் மனம் அதற்கும் சிலுப்பிக் கொள்ளும்.

ஆனால் இன்றோ, 'நாணமும், பயிர்ப்பும் உடையவனிடம் வந்தால் அழகு தானோ!' என்று ரசனையுடன் எண்ணமிட்டபடி உடல் சிலிர்த்தாள்.

தன்னுள் நிகழ்கின்ற புதுவிதமான ரசாயன மாற்றங்களை லயிப்புடன் அனுபவித்தபடி அப்படியே அங்கேயே விழிமூடி அமர்ந்து விட்டாள் மணி.

"அக்கா... என்ன நீங்க உட்கார்ந்து கிட்டே தூங்கறீங்க?" என்று வினவியபடி அவளை தொட்டான் திலக்.

வேகமாக விழிகளை திறந்தவள் அவனிடம் புன்னகைத்தாள்.

"அது... சும்மா உள்ளே அடைந்து கிடந்தது போரடித்ததால் தூக்கம் வந்து விட்டது. ஆமாம்... சித்தப்பா எங்கே?"

"அவங்க இன்னும் கவாப், லாலிபாப் செய்யலைன்னு அதை ஃபிரை பண்ண போயிருக்காங்க!"

ஓ... என்றவள், இவனை கழற்றி விட்டு விட்டு தான் மட்டும் எப்படி அவனிடம் தனியாக செல்வது என்று சிந்தித்தாள்.

"திலக்... அக்கா மொபைலில் உனக்காக ஒரு புது கேம் வைத்திருக்கிறேன். நீ அதை விளையாடிக் கொண்டிருக்கிறாயா நான் போய் சித்தப்பாவுக்கு உதவி செய்து சீக்கிரமாக சமையலை முடிக்க பார்க்கிறேன் எனக்கு ரொம்பவும் பசிக்கிறது!" என்று வயிற்றை தடவினாள்.

அவளையே யோசனையோடு நோக்கியவன் அலைபேசியை கண்டதும் வேகமாக மண்டையை ஆட்டினான்.

"சோ... ஸ்வீட்... குட்பாய்!" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு எழுந்து சமையலறைக்கு காற்றாக மிதந்து சென்றாள்.

வாயிலில் நின்று ஜெய்யை மேலிருந்து கீழ்வரை அளந்தவள் சற்று முன்னர் தான் எண்ணியதை செயல்படுத்தினாள். ஓசையின்றி அவனை நெருங்கி பின்னிருந்து அணைத்து அவன் முதுகில் கன்னம் பதித்துக் கொண்டாள்.

மணியின் தீண்டலில் சிலிர்த்து திரும்பியவன், "ஹேய்... மறுபடியும் என்னை உசுப்பேற்ற வந்து விட்டாயா? ரொம்பவும் சோதித்தாலும் என்னால் தாங்க முடியாதும்மா, தயவுசெய்து நல்லப்பிள்ளையாய் வெளியே போய்விடு!" என்று அவளிடம் கெஞ்சினான்.

ம்ஹும்... என தலையசைத்து மறுத்தவள் அவன் நடு முதுகில் இதழ் பதித்து, "ஐ லவ் யூ!" என்று மேலும் இறுக்கி கொண்டாள்.

"உன்னை..." என்று அவன் வேகமாக திரும்ப, "ஐயோ... வேண்டாம்... வேண்டாம், ஓகே ஓகே சமாதானம்!" என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

சிரித்தவன் அவள் உச்சியில் இதழ் பதித்து, "எங்கிருந்துடி உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது?" என்று அவள் இடையை வளைத்தான்.

ம்... என்று நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவள், "என் தைரியத்திற்கு என்ன குறைச்சல்? பொதுவாகவே நான் கொஞ்சம் துணிச்சலான பெண் தான். என்னவொன்று இப்படி காதலிப்பேன் என்றெல்லாம் நினைக்கவில்லை, உடன் படித்த மற்ற பெண்களை கேலி செய்து சிரிப்பேன். எப்படி தான் எவனையாவது பார்த்தவுடன் காதலும், அசடு வழியும் வெட்கமும் உங்களுக்கு வருகிறதோ தெரியவில்லை என்பேன். ப்ச்... ஆனால் இன்று நானே அந்த வலையில் வசமாக சிக்கி கொண்டேன்!" என்று அலுத்துக் கொண்டாள்.

ஹஹாவென்று சிரித்தவன், "என்னது வெட்கமா உனக்கா நான் பார்த்ததேயில்லையே!" என்று அவள் முகத்தை கூர்ந்து ஆராய்ந்தான்.

ஹும்... என சிணுங்கியபடி அவன் நெஞ்சில் குத்தியவள், "இப்பொழுது இல்லை!" என்று மறுத்தாள்.

"இல்லையே... இதோ இங்கே இருக்கிறது போலிருக்கிறதே!" என்று அவளின் சிவந்த கன்னங்களை மென்மையாக வருடினான் ஜெய்.

அவன் விழிகளை நேராக நோக்கியவள், "நான் முதலில் உங்களை சமையலறையில் பார்த்தப் பொழுது என்ன நினைத்தேன் தெரியுமா?" என்று தான் மனதில் எண்ணியதை அவனிடம் பகிர்ந்தாள்.

ஓஹோ... என்று அவள் தலையில் முட்டியவன், "அதுதான் கனவை நனவாக்கி கொண்டாயோ... ஆமாம் அது ஏன் சாமி படப்பாடல், விக்ரமின் இன்னொரு திரைப்பட பாடல் உன் நினைவிற்கு வரவில்லையா... உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா?" என்று பாடி அவளின் இதழை நிமிண்டினான்.

மணிகர்ணிகா பதிலளிக்கும் முன், "அக்கா கேம்மை விட்டு வெளியே வந்து விட்டது, எப்படி திரும்ப உள்ளே போறது?" என்று முன்னறையிலிருந்து திலக் கத்த, இருவரும் வேகமாக விலகினர்.

"சரி நான் போய் அவனை பார்க்கிறேன், நீங்கள் சீக்கிரமாக பத்தே நிமிடத்தில் எல்லா வேலையையும் முடித்துவிட்டு என்னை சாப்பிட கூப்பிடுவீர்களாம் பசிக்கிறது!" என்று ஓடியவளை பார்த்து, "எல்லாம் நேரம்டி!" என இவன் திரும்ப மின்னல் வேகத்தில் மீண்டும் வந்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடினாள் அவள்.

வாலு... என்று ரசனையுடன் தன் கன்னம் தடவி முணுமுணுத்தான் ஜெய்சங்கர்.

இருவரும் காதலை பகிர்ந்து கொண்ட பின்னர் மணியின் சேட்டை அதிகரிக்க ஆரம்பித்தது. நினைத்த நேரத்தில் அவனுக்கு போன் செய்து கலாய்ப்பாள்.

"ஏய்... தயவுசெய்து அலுவலகத்திலாவது என்னை விட்டு விடேன்!" என்று அவன் கெஞ்சவும், "சரி போனால் போகிறது பிழைத்து போடா!" என்று எடுப்பாக கூறினாள்.

"நேரில் வந்தேன் என்று வைத்துக் கொள்..."

"என்னடா செய்வாய்?" என்று அலைபேசியிலேயே ஒரு இச்சை அழுந்தப் பதிப்பாள்.

"நோ மணி... என்னை மிகவும் சீண்டுகிறாய், பிறகு வட்டியும் முதலுமாக அனுபவிப்பாய்!" என்று எச்சரித்தான்.

"ஹஹா... பார்க்கலாம் பார்க்கலாம்!" என்று சவால் விட்டாள் அவள்.

மணியின் படிப்பு முடிய இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில் அவள் ஊருக்கு கிளம்பும் முன் செண்பகத்திடம் தன் மனதை தெரிவிக்க காத்திருந்தான் ஜெய்சங்கர்.

அன்று இரவு பத்தை தாண்டவும் ஜெய்யின் அலைபேசியில் மணியின் அழைப்பு ஒலியெழுப்ப ஆரம்பித்து விட்டது.

லேசாக தொண்டையை செறுமி விட்டு, "அம்மா... முக்கியமான கால் வருகிறது, நான் மாடியில் சென்று பேசுகிறேன். நீ சும்மா கதவை மூடிவிட்டு போய் படுத்துக் கொள்!" என்று எழுந்தான்.

"அதென்னடா இப்பொழுது எல்லாம் உன் குழு நண்பர்கள் இரவு பத்து மணிக்கு மேல் தான் தினமும் போன் செய்கிறார்கள்!" என்று ஐயத்துடன் வினவினார் செண்பகம்.

"அது அப்படியில்லைம்மா... இது கொஞ்ச நாட்களாக நாங்களாக வகுத்துக் கொண்டது. அலுவலக நேரத்தில் ஒருவரையொருவர் தொந்திரவு செய்ய வேண்டாம், குற்றங்களின் பின்னனியை பற்றி நாங்கள் துப்பறியும் விஷயங்களை இரவில் பகிர்ந்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டோம்!" என்றவன் அதற்கு மேல் தாமதிக்காமல் மாடிக்கு ஓடிவிட்டான்.

ம்... என்று பெருமூச்சோடு தலையசைத்தவர், "நீ வாடா கண்ணு நாம் தூங்கப் போகலாம்!" என்று திலக்கை அழைத்து கொண்டு தன்னறைக்கு சென்றார்.

கிட்டத்தட்ட அரைமணி நேரத்தை விழுங்கிவிட்டு, "சரி எனக்கு டயர்டாக இருக்கிறது நான் கீழே அறைக்கு சென்று படுத்துக் கொண்டே உனக்கு டெக்ஸ்ட் செய்கிறேன். இதற்கு மேல் நாம் நாளை பேசலாம்!" என்று ஒரு முத்தத்துடன் லைனை கட் செய்து விட்டு கீழிறங்கியவன் செண்பகத்தின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக கதவை திறந்து சாற்றினான்.

லேசாக வெளிவந்த கொட்டாவிக்கு உடலை சோம்பல் முறித்தவாறு அறை வாயிலுக்கு சென்ற ஜெய் அங்கே தன்னறையில் திலக்கின் செயலை கண்டு அதிர்ந்து நின்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro