Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8

"உனக்கு என்னலாம் செய்யனும்னு ஆசை சொல்லு?" வதுவை கேட்டான் பிரவீன்.

"ம்ம்.. கல்யாணத்துக்கு முன்னாடி உங்களோட டேடிங் போனும்னு ரொம்ப ஆசை. நிறைய இடம் சுத்தி பாக்கனும், நிறைய காதலிக்கனும்... "

"எனக்கும் ஆசை தான், கொஞ்ச நாளாவது நல்லா பேசி பழகி அப்புறம் கல்யாணம் பண்ணிக்கனும்னு. என்ன செய்ய நல்லா எக்குத்தப்பா மாட்டிட்டு இருக்கேன் நகரமுடியாம" என பெருமூச்செறிந்தான் பிரவீன்.

ஆனால் அவன் கேட்டதை செயல்படுத்த கூடியவன் என சீக்கிரத்தில் அறிந்தால் வதனா. அவளை சந்திக்க நேரில் வருவதாக சொன்னான். அந்த சனிக்கிழமை இருவரும் ஒரு மாலில் சந்திப்பது என முடிவாயிற்று.

காலையிலேயே சீக்கிராக சைக்காலஜி கிளாஸிற்கு செல்வது போல தயாராகி அவளின் அத்தானை காண புறப்பட்டாள் வதனா. எப்போதும் பஸ்ஸில் இதுவரை சரியான இடத்தில் அவள் இறங்கியதே இல்லை. மற்றவரிடம் எதும் கேட்க கூச்சப்பட்டு பேசாமல் இவளாக கூகுளில் பார்த்து தான் செல்வாள். ஆனாலும் ஒன்று முன் நிறுத்தத்திலோ அல்லது அடுத்த நிறுத்தத்திலோ இறங்குவாள். சில சமயங்களில் அதற்கு நேர் எதிர் பஸ்ஸில் கூட ஏறி நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்டதும் உண்டு.

இந்த முறை அப்படி எதும் ஆகாமல் சரியாக போய் சேர வேண்டும் என முன்னரே கிளம்பி விட்டாள். பஸ்ஸில் ஏறி இன்று ஜாக்கிரதையாக நடத்துனரிடம் இறங்க வேண்டிய இடம் வந்தாள் தெரிவிக்க சொல்லி அவர் அருகில் உள்ள முன் இருக்கையில் அமர்ந்தாள். அப்படியும் கூகுளில் ஒவ்வொரு நிறுத்தமாக பார்த்து கொண்டே வந்தாள். இறங்க வேண்டிய நிறுத்தம் அருகில் வர வர ஒவ்வொரு நிறுத்தத்திலும் நடத்துனரை ஏறிட்டு பார்த்தாள்.

அவரும் இது இல்லை என தலையாட்டிக்கொண்டு வந்தார். இவள் இறங்க வேண்டிய இடம் வர

"இங்க தான் மா இறங்கனும், இறங்கிக்கோ. இதுக்கு நேரா போனினா வலது பக்கத்துல மால் இருக்கும்" அவருக்கு நன்றி சொல்லி விட்டு இறங்கினாள் வதனா.

அவர் சொன்னது போலவே வலதுபுறம் மால் கண்ணுக்கு தெரிந்தது.  'அப்பாடா அலையாம ஒரு வழியா கரெக்டா வந்து சேந்துட்டோம்' தன்னை தானே மெச்சிக்கொண்டாள் வதனா.

உற்சாகமாக மாலை நோக்கி சென்றாள். அவள் உள்ளே செல்ல முயல அங்கிருந்த செக்யூரிட்டி அவளை தடுத்தார். ஏன் என்று புரியாமல். இவள் பார்க்க

"மேம் இப்போ போக முடியாது.. மால் 10 மணிக்கு மேல் தான் ஓபன். மூவினா 10க்கு உள்ள போலாம், சாரி" என்றான். அப்போது தான் கடிகாரத்தை அவள் பார்க்க மணி 9 என காட்டியது. இப்போ என்ன பண்றது? எங்க போய் வெயிட் பண்றது என சுற்றி அலசினாள். மழை வேறு லேசாக தூறிக்கொண்டு இருந்தது. மாலிற்கு எதிரே இருந்த பஸ் நிறுத்தம் கண்ணில் பட அங்கு நடையை கட்டினாள் வதனா. நல்லவேளையாக நிழல் குடையுடன் இருந்தது.

அங்கு சென்று அமர்ந்து பிரவீனிற்கு அழைத்தாள். "ஹலோ.. ஹான் நான் வந்துட்டேன், மால் இன்னும் தொரக்கல... 10 மணி ஆகுமாம்... ம்ம்ம் சரி வாங்க"

அப்போது தான் அவன் சென்னை சென்ரல் இரயில் நிலையத்திற்கு வந்ததாகவும் சீக்கிரமே வருவதாகவும் கூறி அழைப்பை துண்டித்தான். அவன் வரும்வரை தன் மொபைலில் கதை படிக்க ஆரம்பித்தாள் வதனா. மழை தூறும் வானிலை, யாரும் இல்லா பேருந்து நிறுத்தம்... கையில் கதையென ஒரு மணி நேரம் ஓடியதே தெரியவில்லை அவளுக்கு.

பின் சிறிது நேரத்தில் திரும்ப மாலை பார்க்க அங்கு ஆட்கள் உள்ளே செல்வதை  பார்த்து இவளும் உள்ளே சென்றாள். ஏதாவது ஷாப்பில் அமரலாம் என இவள் இடம் தேட அதே சமயம் பிரவீன் கைப்பேசியில் அழைத்தான்.

"ஹலோ. நான் வந்துட்டேன் நீ எங்க இருக்க?"

"நான் இப்போ தான் உள்ளே வந்தேன். என்டெரன்ஸ் கிட்டதான் இருக்கேன்"

"ஹான் உன்ன பாத்துட்டேன், இதோ வரேன்"

எங்கே என ஆர்வமாக இதயம் சிறகடிக்க கண்களால் அவனை அலசினாள். எதிரே பேக்பாக் மாட்டியபடி நீல நிறத்தில் முழுக்கை சட்டையில் நடந்து வந்தான் பிரவீன். ஆனால் ஏதோ உறுத்த அவனை உற்று பார்த்தாள் வதனா. அவன் இவளை நோக்கித்தான் வந்து கொண்டு இருந்தான் ஆனால் இவளை பார்க்காமல் வேறு எங்கு எங்கோ பார்த்தபடி வந்தான்.

அவளால் நம்ப முடியவில்லை பிரவீன் வெட்கப்படுவான் என்று. அதுவரை இவளிற்கு இருந்த கூச்சம் போய் சிறு குறும்பு எட்டிப்பார்த்தது. இவளை பார்த்து

"ஹாய் வந்து ரொம்ப நேரம் ஆச்சா" என்றான் கண்களை பார்ப்பதை தவிர்த்து. இவளோ அவனின் இந்த வெட்கத்தை இரசித்தபடி இன்னும் உற்சாகமானாள். ஒரு ஆணின் வெட்கம் தான் எவ்வளவு அழகு!!!

"இல்ல இப்போ தான் உள்ள வந்தேன்"

"ஹரியும் அவன் வைஃபும் படம் பார்க்க நேரா வரேன்னு சொல்லிட்டாங்க. சோ அது வரை நாம சும்மா அப்படியே ஏதாச்சும் பாக்கலாம்"

ஆம் இவர்கள் தனியாக வரவில்லை. பிரவீனின் அலுவலக நண்பரும் அவரின் கருவுற்ற மனைவியுடன் படத்திற்கு வருவதாக ஏற்பாடு. இதை அவன் சொன்ன போது கொஞ்சம் கடுப்பாகத்தான் செய்தது வதனாவிற்கு ஆனால் படம் முடிந்து அவர்கள் கிளம்பி விடுவார்கள் என்றவுடன் சிறிது மன ஆறுதல் அடைந்தாள்.

முதல் முறையாக இருவரும் தனியே... கூச்சத்துடன் இருவரும் என்ன பேசுவது என தெரியாமல் அப்படியே நடந்தனர் மாலை சுற்றி...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro