Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 19

"என்னங்க.... பவிய கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தீங்க! ஆனா வரல. அதுக்குள்ள ஏதாவது வேல வந்துடுச்சா?" என்று கேட்ட ரேணுவிடம்,

"இல்லம்மா! உன்னைப் பார்க்க வரணும்னு தான் நினைச்சுருந்தேன். அதுக்குள்ள நானும், பவியும் அவ தாத்தா, பாட்டிய பத்தி பேசிட்டு இருந்தோம். அதுக்கு மேல அங்க கிளம்பி வர்றதுக்கு எனக்கு மூடு இல்ல! ஸாரிம்மா.... இந்த பெரிசுங்கள ஒருவழி பண்ணிட்டு நான் உன்னை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடுறேன். பை மா!" என்று சொன்னவரிடம் அவசரமாக,

"பார்த்து கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணுங்க சபா!" என்று மட்டும் சொல்லி விட்டு போனை வைத்தார் ரேணுகா.

ஆவடி வரை சென்று தன்னுடைய நண்பரிடம் வேலை சம்பந்தப்பட்ட
ஒரு ஃபைலை வாங்கி வரச்சொல்லி சபாபதி செல்வாவை
அனுப்பி வைத்திருந்தார். அவர்
தனக்கு கொடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் அவ்வளவு தூரம் வரை சென்று சும்மா திரும்பிய செல்வா வீட்டிற்கு வந்த போது வீட்டில் விளக்கெல்லாம் எரிந்து கொண்டிருந்தாலும் அந்த வீடு இருளடைந்து போய் இருந்தது போல் தோன்றியது அவனுக்கு. வாசலிலேயே அவனை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிற்குள் செல்லக்கூட விடாமல் அவனிடம் வம்பிழுக்கும் அவனது வார்டனம்மாவை இன்று வீட்டின் வெளியே காணவில்லை.

இத்தனைக்கும் அவன் கிளம்பிப் போகும் போது அவன் பின்னாலேயே மெதுவாக ஓடிவந்து ரகசியமாக "எங்க போற டாம்பாய்?" என்று கேட்டு விட்டுத்தான் சென்றிருந்தாள் அடங்காப்பிடாரி.

"பாப்பா..... வேலைக்கு போவசொல எங்க போறன்னு கேட்டுனு வெளிய அனுப்பக்கூடாது தங்கம்! இனிமேட்டு இப்டி கேக்காத சரியா?" என்று அவன் அவளிடம் சொன்ன நாளிலிருந்து அவன் வெளியே கிளம்புவதற்கு செருப்பை மாட்டும் முன் அடித்துப் புரண்டு ஓடி வந்து "எங்கடா போற செல்வா?" என்று கேட்டு தன்னை முறைப்பவனை சிரிப்புடன் பார்த்து கையசைத்து விட்டு உள்ளே செல்வாள்.

இப்போது அவளுடைய அப்பாவிடம் கொஞ்சமாக ஒட்டுகிறாள் அல்லவா? அதனால் அவருடன் அமர்ந்து ஏதாவது பேசிக் கொண்டிருப்பாள் என்று நினைத்த படி வீட்டின் உள்ளே வந்தவனுக்கு அங்கும் அவளை காணாததால் சற்றே ஏமாற்றமாக இருந்தது.

"இன்னா வாத்யாரே.... நீ சொல்லிக்கின ஒன்னோட தோஸ்த்து அந்த பரந்தாமே வூட்லயே இல்லயாமே; பைல வாங்கினு வான்னு என்னாண்ட சொல்லி அனுப்ச்சு உட்டியேங்காண்டியும் இப்டி ஒரு ஆளு வர்துன்னு அந்த ஆளாண்ட சொல்லி வக்க தேவல்ல? ஆவடி வரைக்கும் போயினு வந்து காசு தான் வேஸ்ட்டு! ஒரு வேலயும் ஆவல!" என்று வந்ததும் வராததுமாக சலித்துக் கொண்டவனிடம்,

"சரி விடு பரவாயில்ல! நீ சாப்ட்டியா?" என்று கேட்டார் சபாபதி.

"அஆங்! எதுக்கு வெளிய சாப்ட்டுக்கினு..... அம்பது, அறுவது ரூபாய்க்கு சாப்ட்டுக்கினாலும் நம்ம வவுரு அரவவுராவே கெடக்கும்!
மணி ஒன்பதர தான ஆவுது; மாவு ஐஸ்பொட்டிக்குள்ள கெடக்கு; பத்து மினிட்ல பொட்டுக்கடல சட்னிய அரச்சுக்கினா போவுது. நீ மேல போயி பாப்பாவ கூட்டினு வா. நா அதுக்குள்ள ஒரு குளியல போட்டுக்கினு வந்து சட்னி அரச்சு வக்கிறேன். எங்க பெரிசுங்கள..... இன்னுமா வூட்டுக்கு வந்து சேர்ல? அம்மாந்துரம் போன நானே திரும்பி வந்துக்குனேன். அதுங்கள இன்னும் காணும் பாரு வாத்யாரே....?" என்று அவர்களை சபாபதியிடம் போட்டுக் கொடுப்பவன் போல் பேசியவனிடம் உச்சுக்கொட்டிய சபாபதி,

"குளிச்சுட்டு, உன் கிச்சன் வேலைய முடிச்சுட்டு, மேல போய் பவிய நீயே கூட்டிட்டு வா! அவ எம்மேல கொஞ்சம் எரிச்சல்ல இருக்கா!" என்று சொன்னார்.

"இன்னாவாம் அவளுக்கு? சொம்மா மகாராணி உப்பரியைல போய் ஒக்காந்துனு அடைச்சுட்டு கெடப்பா! இவள சமாதானம் பண்றதுக்கு செல்வா போயி போயி கதவாண்ட நின்னுக்கினு யம்மா கதவத்தொற யம்மான்னு அவளாண்ட கெஞ்சினு இருக்கணுமா? ஒம்மேல தான எரிச்சல்ல இருக்கா..... நீயே போயேன்!" என்று சொன்னவனிடம்,

"இப்ப நீ மேல போய் அவள கூட்டிட்டு வரல..... நான் என்னோட பெல்ட்ட கழட்ட வேண்டியிருக்கும்! போறியா, போமாட்டியா?" என்று கேட்டார் சபாபதி.

"தோடா..... தப்பே பண்ணாத.... சொம்மா ஒருத்தர அப்டிலா பெல்ட்ட உருவினு அடிக்க முடியாது தெரியுமா ரூல்ஸூ?" என்று சற்றே தெனாவட்டாக கேட்டவனிடம் அசால்டாக புன்னகைத்தவர்,

"அது ஹோம்லப்பா தம்பி! இது வீடு; இருக்குற கோபத்தயெல்லாம் மொத்தமா எறக்கி வச்சு வெளாசிடுவேன். அப்புறம் நாலு நாள் நீ வேலைக்குப் போக முடியாது. பரவால்லயா?" என்று செல்வா சற்றும் எதிர்பாராத பதிலை சொல்லி அவனை கொஞ்சமாக நடுங்க வைத்தார்.

தன் பயத்தை அவரிடம் காட்டிக் கொள்ளாமல், "யோவ்..... இன்னா என்னாண்ட நீ ஜபரு காட்டிக்கினு இருக்கியா? ஒம்பேச்சதா எப்பவும் நான் கேக்கணும்னு அடம் புடிச்சிக்கினு நிக்குற பாரு! அது ஒன்னாண்ட எனக்கு சுத்தமா பிடிக்கல; ஒம்பேச்சுக்கோசரம் செல்வா ஒன்னியும் மெர்சலாவல. பவி சாப்டாம பசியில இருக்கும். அதுக்கோசரம் மேல போறேன் ஆமா!" என்று அவரிடம் சொன்னவன் தன்னுடைய குளியலை முடித்து விட்டு வந்தவன், அந்த வீட்டின் கிச்சனிலேயே ப்ரிட்ஜில் இருந்த மாவை எடுத்து இட்லி ஊற்றி அடுப்பில் வைத்துக் கொண்டே சட்னியையும் அரைத்து வைத்து விட்டு அடுத்த பதினைந்து நிமிடங்களில் இரவு உணவை தயாராக்கி டைனிங் டேபிள் மேல் கொண்டு வந்து வைத்தான்.

"போடா மேல.....!" என்று சொன்னவரிடம் முகத்தை சுளித்துக் காட்டியவன்,

"எந்நேரமும் மூஞ்சிய இப்டித்தான் வச்சுனு இருப்பியா? உனக்கின்னா இப்போ பவி கீழ இறங்கி வரணும், அவ்ளதான? இத்த கையில புடி!" என்று சொன்னவன் அவனுடைய கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்து விட்டு தன்னுடைய அலைபேசியை எடுத்து சாம்பவிக்கு அழைப்பு விடுத்தான்.

முதல் இரண்டு அழைப்புகள் அவளால் அட்டெண்ட் செய்யப்படவில்லை.

"டேய்..... இங்க இருந்துட்டு, மேல இருக்குற அவளுக்கு நீ கால் பண்றத மாதிரி எங்களுக்கு செய்யத் தெரியாதா? அவ தான் கோபமா இருக்கான்னு சொல்றேன்ல? மரியாதயா மேல ஏறிப் போடா!" என்று சொன்னவரிடம்,

"ஐய..... இப்டி கரைச்சல குடுத்துட்டு இருந்த; குண்டான்ல இருக்குற இட்லி மொத்தத்தையும் ஏவயித்துல கவுத்துக்கினு போயி தூங்கிருவேன் வாத்யாரே! எங்கையில ஒரு வேலயச் சொன்னா அத்த நா செஞ்சு முடிக்குற வரையில ஊடயில புகுந்து உழப்பக்கூடாது! வேல குடுத்த கஸ்மாலம் எம்மாம்பெரிய டோமரா இருந்தாலும் கம்னுதா நிக்கணும்.....!" என்று சொன்னவன் சபாபதியின் கோப முறைப்பில் அடங்கி பவிக்கு மறுபடியும் அழைத்தான்.

"என்னடா சும்மா நை நைன்னு கால் பண்ணிட்டு.....!" என்று கடுப்புடனே ஆரம்பித்தவளிடம்,

"பாப்பா கீழ பெரிய சண்ட! நீ சீக்கிரம் இங்க ஒடியா!" என்று சொல்லி விட்டு காலை கட் செய்து விட்டு "இஹாஹாஹா" என்ற சப்தத்துடன் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான்.

"இப்டி சம்பந்தமேயில்லாம ரெண்டு வார்த்த பேசிட்டு கால கட் பண்ணுனன்னா அவ கீழ இறங்கி வந்துடுவாளாக்கும்! கீழ நாங்க சண்ட போட்டா, மேல அவ ரூம் வரைக்கும் கேக்காதா...... என்னடா லூசுத்தனமா வேல பாத்துட்டு இருக்க!" என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தவரிடம் கண்களால் படிக்கட்டுகளை காட்டியவன்,

"அக்கட சூடு நைனா!" என்றான்.

படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி வந்து கொண்டிருந்த பவி செல்வாவிடம்,

"தாத்தா எங்க செல்வா? அம்மம்மாவும், தாத்தாவும் வீட்டுக்கு வந்த சத்தமே கேக்கலையே..... அப்புறம் எப்டி சண்ட நடந்துச்சு? பொய் சொன்னியாடா?" என்று கேட்டு அவனை ரௌத்ரமாக பார்த்து முறைத்தாள்.

"கீழ சண்ட நடக்குதுன்னு தான பாப்பா சொன்னேன். ஒஅம்மம்மா, தாத்தா, ஒநைனா மூணு பேருமா அடிச்சுக்குறாங்கன்னு சொன்னேன்? சட்னி அரைக்கையில நம்ம கிச்சனு ஜன்னலாண்ட நின்னு ரோட்ட பாத்துக்கினு இருந்தேனா...... நம்ம வெளிசைடு சுவருல ரெண்டு பல்லி சண்ட போட்டுக்கினுருந்துச்சு! அதத்தான் ஒங்கிட்ட சொல்ல வந்தேன். நீ தப்பா புரிஞ்சிகினு தடதடன்னு ஓடியாந்தா நா என்ன பண்ணட்டும்?" என்று அவளிடம் சொன்னவன் பாடு சட்னி ஆக்கப்படுவதற்குள் சபாபதி பவியிடமிருந்து அவனை மீட்டு விட்டு தன் மகளை பற்றி இழுத்து நிறுத்தியிருந்தார். அவனை நாலு அடிகள் அடிக்காமல் தன் தந்தை
தன்னை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருந்ததில் மிகவும் எரிச்சலடைந்து போயிருந்தாள் சாம்பவி.

"டேய்..... எங்க அம்மம்மாவையும், தாத்தாவையும் எப்டி காப்பாத்துறதுன்னு நான் யோசிட்டு இருக்கேன்; நீ என்னடான்னா இந்த விஷயத்த வச்சு விளையாடிட்டு இருக்கியா? அது சரி, எங்க டாடியும், தாத்தா பாட்டியும் ரெண்டு ஸைடா பிரிஞ்சி சண்ட போட்டாங்கன்னாலும் உனக்கென்ன வந்துச்சு? உனக்கெல்லாம் அது ஒரு என்டர்டெயின்மெண்ட் தான? அப்ப இப்டிதான் பேசி விளையாடிட்டு இருப்ப!" என்று சொன்னவளிடம்,

"ஆமா! வெளயாடிட்டு தான் இருப்பேன். நான் ஒன்னியும் ஒன்னையமேரி லூசு இல்ல! குருட்டாம்போக்குல பொய்யான நம்பிக்கைய புடிச்னுக்கினு தொங்குறதுக்கு; எப்பவும் எட்டர, ஒம்போது மணிக்கே வூட்டுக்கு வார ஒஅம்மம்மாவும் தாத்தாவும் இன்னிக்கு இம்மாநேரம் ஆகியும் ஏன் வூட்டாண்ட வரலன்னு யோசுச்யா நீ? அதுகளுக்கு நல்லாத் தெரியும். மாப்ள செம காண்டுல இருக்காப்ல; வூட்டாண்ட போனா நிச்சயமா ஒரு ஏழரை இருக்குன்னு! அதுக்குத்தா எம்மாநேரம் லேட் பண்ண முடியுமோ, அம்மாநேரத்த இழுத்துனு கெடக்குதுக! நீ கேக்காத கணக்க ஒநைனாவாச்சு அதுங்களாண்ட கேட்டாருன்னா எனக்கு சந்தோஷந்தான்! ஆமா..... நீ சொன்னமேரி ஒநைனாவும், பெரிசுங்களும் சண்ட போட்டா எனக்கு சந்தோஷமா தான் இருக்கும். அப்பவாச்சு இம்மா நாளு மூடி வச்சுனு இருந்த ஒங்கண்ணு தொறக்குதான்னு பாப்பம்!" என்று சொன்ன செல்வாவிடம்,

"வாய மூடு இடியட்!" என்று கத்தினாள் சாம்பவி.

கோபம், எரிச்சல், ஏமாற்றம், இயலாமை இப்படி எல்லா உணர்வுகளும் கலந்து நின்ற தன்னுடைய மகளின் தோளைப் பற்றிய சபாபதி, ஏதோ பேச வந்த செல்வாவை இப்போது பேச வேண்டாம் என்று கண்ஜாடை காட்டினார்.

அவன் அமைதியாக நின்று கொண்டிருக்க அவர் தன் மகளிடம்,

"பவிம்மா..... பிரச்சனை தான் இன்னும் ஆரம்பிக்கவேயில்லயே? ரெண்டு சைடும் பேசுனா தான ஏதாவது க்ளாஷ் வர்றதுக்கு? அதுக்குள்ள நம்ம எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகணும்? முதல்ல சாப்டலாம். அப்புறமா நம்ம ஒரு தெளிவான டெஸிஷன் எடுக்கலாம்! வாடா, வந்து உக்காரு வா!" என்று சொன்னவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அவரது இடப்பக்கம் அமர்ந்து கொண்டாள் சாம்பவி.

தந்தை தான் ஒரு முடிவை எடுக்கப் போகிறார் என்றாலும், அவளது கோபம் முழுவதும் இப்போது செல்வாவிடம் தான் இருந்தது. அவனுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களைப் பிடிக்காதென்றாலும், அவன் இப்போது தனக்காக பரிந்து தானே பேசியிருக்க வேண்டும் என்று அவள் மனம் நினைத்தது. என்ன பிரச்சனை வந்தாலும் வயிற்றை முதலில் சமாதானம் செய்வோம் என்று நினைத்த சபாபதி சாப்பிட்டு முடித்து தன் மகளை படுக்கப் போகச் செல்ல அவள் மறுப்பாக தலையசைத்து விட்டு ஹாலில் இருந்த ஸோஃபாவிலேயே சாய்ந்தபடி கண்களை மூடியிருந்தாள்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro