Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஆனந்தம் - 9

தாத்தாவின் அறையினுள் அமர்ந்திருந்த பைரவிக்கு வெளியில் தேவா பெரியவர்களிடம் வாதாடுவது தெளிவாக கேட்டது. திருமணம் முடிந்து சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்திருக்க அவர்களுக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் மொத்தமும் முடிந்திருந்தன.

மதிய உணவை முடித்து இளைஞர்கள் கேரம் போர்டு ஒன்றை எடுத்து வைத்து விளையாட அந்த நேரம் தேவாவிற்கு முக்கியமான அழைப்பு ஒன்று உடனே ஊருக்கு வரும்படி செய்தி தாங்கி வந்தது.

இப்பொழுது தானே திருமணம் நடந்துள்ளது என அவன் தந்தை மறுக்க, வேலை தான் தனக்கு முக்கியமென தேவா பிடிவாதமாய் நின்றான்.

அரை மணி நேரமாக நீளும் அந்த பேச்சைக் கேட்டுக்கொண்டே கட்டிலில் அமர்ந்திருந்த பைரவி எதிலும் நுழையவில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுடன் இருந்தாள்.

"அது எப்படி ப்பா அவன் தான் புரிஞ்சுக்காம மாதிரி பேசுறான், நீங்களும் அவன் பேசுறதுக்கெல்லாம் சரி சரின்னு சொல்றீங்க?" ரத்தினம் தந்தையிடம் சண்டைக்கு நின்றார்.

"அவன் பேசுறது என்ன தம்பி தப்பா இருக்கு? சம்பிரதாயம் எல்லாம் முடிசாச்சு, இங்கேயே நின்னு என்ன பண்ண போறான்? அவரார் பொழப்ப அவரார் பாத்தா தானே துட்டு சம்பாதிக்க முடியும். இல்ல அவசரத்துக்கு உன்கிட்ட வந்து பத்து நூறுன்னு கேட்டா அவனை ஒரு வார்த்தை பேசாம எடுத்து நீட்டிடுவியாடா நீ?" மகனை அர்ஜுனன் அதட்டி கேள்வி கேட்க மொத்தமாய் அமைதியாகிவிட்டார் அவர்.

"எனக்காக நான் சொல்லல ப்பா, நம்ம பாப்பாவ யோசிச்சு பாருங்களேன். ஒடனே கல்யாணம்னு சொன்னோம் இப்ப..."

மாமனாரின் குரல் கேட்கும் பொழுதே கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெடுக்கென திரும்ப, "உன் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா பைரவி?" கேள்வியோடு வாசலில் நின்றான் தேவா.

இல்லை என பைரவி தலையை ஆட்டவும், "சரி வா எடுத்து வை. கிளம்பலாம்" என்றான்.

கண்கள் அவனைத் தாண்டி பெரியவர்களின் அனுமதி தேடிப் பாய, "என் அப்பாவ அய்யப்பா பாத்துக்குவார், நீ வா நேரமாச்சு" அவசரப்படுத்தியவன் பேச்சை மீறவும் முடியாமல் அன்னையின் அனுமதியும் இல்லாமல் தத்தளித்தாள்.

"என்ன யோசனை? வா" மீண்டும் தேவா அழைக்கவும் அறையை விட்டு வெளியில் வர, மகளை பார்த்த சீதா, அவளுக்கு முன்பாகவே தங்களுடைய இல்லத்திற்கு செல்ல பைரவிக்கு தயக்கம் போனது.

வீட்டிற்குள் வந்ததும் மகளை தனியாக அழைத்து சென்று, "எதுக்கு தயங்குற பைரவி? இனி எல்லாமே உனக்கு தேவா தான். அவன் சொல்ற மாதிரியே செய். நாங்க எல்லாரும் உனக்கு அடுத்த படி தான்"

மகளுக்கு போதித்தவர் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க, "இனிமேல் உங்களுக்கு பயம் இருக்காதுல ம்மா?"

மகளின் கேள்வியில் அதிர்ந்து அவளை பார்க்க, சிரித்த பைரவி, "நைட் அடிக்கடி வந்து தூக்கத்த கெடுத்து என்ன செக் பண்ற அவசியம் இருக்காதுல. அதுக்கு சொன்னேன்"

அன்னையை நிதானமாக சிரிப்போடு பார்த்தவள் அவரின் கை பற்றி, "ரொம்ப தேங்க்ஸ்" அவளின் நன்றியை கூட காதில் வாங்கும் நிலையில் அன்னை இல்லை.

எத்தனை ஆழமாய் அவர் செயல் அவளை பாதித்திருக்கும் என நடுங்கியவர் அந்த இடத்திலே சிலையாக நின்றுவிட்டார்.

தன்னுடைய அறைக்குள் நுழைந்த பைரவி தனக்கு தேவையான உடைகளை எடுத்து வைக்காமல் ஒரு வாரமாக நாயகி தன்னை பார்க்கும் பார்வையும், வெட்டும் பேச்சுக்களையும் யோசித்து கலங்கி நிற்க,

"கனவு எப்ப முடியும்?" திடீரென காதுகளுக்கு அருகில் கேட்ட தேவாவின் குரலில் திடுக்கிட்டு உணர்வு பெற்று திரும்ப,

தன்னை விட்டு சில அடி தூரம் தள்ளி நின்றவனை பார்த்து அதிர்ந்தவள் கண்கள் மொத்த அறையையும் சுற்றி வரும் பொழுது தான் கவனித்தாள், அவள் அறையின் கதவு தாழிடப்பட்டிருந்தது.

அதனை கவனித்தவள் விழிகள் கலக்கத்தையும் பயத்தையும் அப்பட்டமாய் காட்டியது.

வியர்வை துளிகள் அரும்பியிருந்த அவள் முகத்தை பார்த்துப் பயந்தவன் அவளை நோக்கி அடி எடுத்து வைத்து, "ஏன்டி இப்டி வேர்க்குது?"

"வராதீங்க... பக்கத்துல வராதீங்க" கணவனை அணையிட்டு தடுத்தது அவள் வார்த்தைகள்.

ஓங்கி அடிக்கும் அவள் வார்த்தைகளும் அந்த கண்களில் தன்னை பார்த்து தோன்றும் பயமும் ஆணின் மனதில் பதிந்து தெளிவடையும் தருவாயில், பைரவி கதவினை நடுங்கும் கைகளால் திறக்க முயன்று தோற்று நின்றாள்.

"நான் துறந்து விடுறேன் இரு" உதவிக்காக அவளை நெருங்கி மேலேயிருந்த தாழை திறக்கப் போனவனை நோக்கி திரும்பிய மனைவியின் கண்களில் தெரிந்த பயம் எதனால் வந்ததென புரிந்த தேவா, செய்ய போன வேலையை அப்படியே திரும்பப் பெற்றான்.

"வெளிய போகணும்னு நினைச்சு கூட பாக்காத" மனைவிக்கு எச்சரிக்கை விடுத்து கால்களை பின்னுக்கு நகர்த்தி மூடிக்கிடந்த இரண்டு ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டான், காற்றோட்டத்திற்காக.

பிறகு காற்றாடியை உயிர்ப்பித்து அவள் கை பிடித்து இழுக்க, பீதியோடு தேவாவிடமிருந்து கையை உருவ முயன்றவளை வம்படியாக ஜன்னல் அருகே நிற்க வைத்த பிறகே கையை எடுத்தான்.

ஜன்னல் கம்பியை இறுக்கமாக பிடித்து கண்களை மூடியிருந்தவள் இமை தாண்டி சில நீர்த் துளிகள் வர, அவளையே பார்த்திருந்த தேவாவிற்கு அவளது மனதின் ஓட்டத்தை புரிய முடிந்தது.

"நான் இப்ப இந்த ரூமை விட்டு போகணும்னு நீ நினைச்சா அந்த எண்ணத்த மாத்திக்கோ பைரவி. நான் இங்க தான் இருப்பேன்" ஆணித்தரமாக அவன் கூறவும் மேலும் சுருங்கிய கண்களோடு தலையை ஜன்னல் கம்பியில் சாய்த்து நின்றாள்.

மனைவி முகம் பார்த்து பல நிமிடங்கள் நின்ற தேவா, அவள் முகம் சற்று சுருக்கத்தை குறைத்து கண்ணீரை சிந்துவதை நிறுத்திய பிறகே ஆசுவாசமடைந்து விலகினான்.

மனதினை திடமாக்கி, "எனக்கு டைம் வேணும்" கண்களை திறந்து அவனை பைரவி பார்த்த அந்த ஒற்றை பார்வையில் மின்னல் கீற்று தேவாவின் கண்களில். வேடனின் அம்பை போல் அல்லவா கூர்மை அந்த விழிகளில்! வியந்தான்.

ஆனாலும் நிதானித்து, "எவ்ளோ டைம் வேணும்னாலும் எடுத்துக்கோ" என்றான் அவளுடைய படுக்கையை அளவிட்டு.

"நான்.. நான் எதுக்கும் ரெடி ஆகல" வார்த்தையை விழுங்கினாள், "நீங்க எதிர்பாக்குற எதுக்கும் நான் இப்ப தயாரா இல்ல"

சுகமாக கட்டிலில் விழுந்தவன் இரண்டு தலையணையை எடுத்து தலைக்கு அணைவாக கொடுத்து படுத்தான் சிரிப்போடு, "பெரிய ஜோசியக்காரி தான் நீ" என்றவன் பார்வை மொத்தமும் அவள் மேல் தான்.

தேவாவை பார்த்தவள் எழுந்து சென்று கதவை திறக்க, வெளியே சென்றுவிடுவாள் என அவன் எதிர்பார்த்திருக்க, அவன் மனைவியோ மீண்டும் உள்ளே வந்து கட்டிலின் விளிம்பில் நின்றாள் அவனிடம் பேசும் எண்ணத்தோடு.

"ஏன் ஆனந்த் என்ன கல்யாணம் பண்ணீங்க?" மீண்டும் கண்கள் கலங்கி விட்டது பெண்ணுக்கு.

தன்னுடைய பெயரை மனைவியின் நா உச்சரித்த சுகத்தை கூட அவள் கண்ணீரினால் அவனால் அனுபவிக்க முடியாமல் போனது.

"உங்க அம்மாக்கும் தங்கச்சிக்கு என்ன சுத்தமா புடிக்கல, உங்க குணத்துக்கு எவ்ளோ நல்ல பொண்ணு கெடச்சிருப்பாங்க தெரியுமா? அவங்க சொல்றத கேட்டு இந்த கல்யாணத்த தடுத்துருக்கலாம்ல?"

"ஏன்டி நீ என்ன கல்யாணம் பண்ணிட்டியா, இல்ல என் அம்மா தங்கச்சிய கல்யாணம் பண்ணியா?" எழுந்து அமர்ந்தான் படுக்கையிலிருந்து,

"என் அம்மாக்கு இந்த சீமை ராஜா பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலும் திருப்தியா இருக்காது. என் தங்கச்சி ஒரு லூசு. இவங்களுக்காக நான் உன்ன வேணாம்னு சொல்லணுமா?" காரமாக வந்தது தேவா கேள்வி.

"உங்கள கல்யாணம் பண்ணா உங்கள மட்டும் இல்லயே, உங்க குடும்பமும் தானே?"

"அப்போ உன் அண்ணனை கல்யாணம் பண்ணிக்க போற என் தங்கச்சிக்கு அந்த நெனப்பு இருந்ததா?" - தேவா

"என்னால அப்டி இருக்க முடியலை, தேவையில்லாம எதை எதையோ யோசிக்க தோணுது. மிரட்டி கல்யாணம் பண்ண வச்ச அம்மா மேல கோவம் வருது, எல்லாத்தையும் வேடிக்க பாத்த அப்பா மேல கோவம் வருது, இந்த கண்டிஷன் போட்ட என் அண்ணன் மேல கோவம் வருது"

கட்டிலை இறுக்கமாக பற்றி அவன் முகம் பார்த்தாள், "எல்லாத்துக்கும் மேல உங்க மேல தான் ரொம்ப ரொம்ப கோவம் வருது"

"நான் என்னடி பண்ணேன்?" சிரித்தான் தேவா.

"நான் கல்யாணத்துக்கு வரலன்னு தெரியும்ல உங்களுக்கு?" - பைரவி

"அதான் வந்தியே" அவன் கிண்டலில் அவள் அவனை முறைக்க புன்னகைத்தான், "ஆமா தெரியும்" என்று.

"தெரிஞ்சும் ஏன் என்ன உங்க வாழ்க்கைல வர வச்சீங்க? என்னால என் பேரு உங்களுக்கும் வரும் ஆனந்த்" - பைரவி

"ஆமா இவ பெரிய செலிபிரிட்டிய, இவ எங்க போனாலும் எல்லாரும் இவள பத்தியே பேசுவாங்க. இந்த ரெண்டு தெருவை தாண்டுனா உன்ன யாருக்கு தெரியும்? இதுல என் ஊர் வர வந்து இவளை சொல்லி என்ன பேசுவாங்களாம்" முறைத்தான் மனைவியை.

"இதான்..." விசும்பினாள் பெரிதாக,

"இதான் எனக்கு பயமா இருக்கு. என் கல்யாணம் பத்தி கேக்க மாட்டிக்கிறீங்க? எதுக்காக என் மேல அத்தனை நம்பிக்கை வச்சிருந்த என் குடும்பத்தை ஏமாத்திட்டு கல்யாணத்துக்கு வரலன்னு கேக்க மாட்டிக்கிறீங்க. என் கவலைல என்னோட அண்ணன் வாழ்க்கையை நான் எதுக்கு கெடுத்தேன்னு ஏன் நீங்க கேக்க மாட்டிக்கிறீங்க?

ஏன் என்ன எந்த கேள்வியும் கேக்க மாட்டிக்கிறீங்க? இப்ப என் மனசு கஷ்டப்படக் கூடாது, தாத்தா வார்த்தைக்காக என்ன நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நாள பின்ன என்ன பத்தி தெரிஞ்சு நீங்களும் என்ன வெறுத்துடுவீங்க" - பைரவி

"அதெல்லாம் தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்? எனக்கு உன்னோட பாஸ்ட் பத்தி எந்த கவலையும் இல்ல பைரவி. இத்தனை நாள் நீ எப்படி இருந்தியோ எனக்கு தெரியல, இனிமேல் எனக்கு என்னோட மனைவி பைரவி மட்டும் தான் வேணும்" - தேவா

"என்னோட பாஸ்ட் நம்ம வாழ்க்கையை நிச்சயம் பாதிக்கும் ஆனந்த், நான்... நா... வேர்... வேர்ஜின் இல்ல"

உடலில் வலுவில்லாமல் கட்டிலில் அமர்ந்த பைரவியின் கன்னங்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன, "உங்களுக்கு என்ன ஏத்துக்க முடியலைன்னா பரவால்ல, நான் இங்கேயே இருந்துக்குறேன். எனக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்க" தொண்டை அடைத்தது பெண்ணுக்கு அவ்வார்த்தைகளை மொழியும் நேரம்.

வார்த்தைகளுக்கு நேர்மாறாக பிரதிபலிக்கும் அந்த சிறிய முகத்தின் உணர்வுகளை ஆராய்ந்த அவள் கணவன், "நேத்து நைட் தூங்குனது சக்கர, ரொம்ப டயர்டா இருக்கேன். உன் திங்ஸ் எடுத்து வச்சிட்டு எழுப்பு" சுகமாக படுத்தவன் கண்களை மூடி உறங்கத் தயாரானான்.

தான் பேசியதை காதில் கேட்டானா? இல்லை என் வார்த்தைகளுக்கு சம்மதம் தெரிவித்து உறங்குகிறானா? இல்லை தான் கன்னி பெண் இல்லை என்பது இவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா என்ற எண்ணமே அவள் மனதை இன்னும் அழுத்தியது.

என்ன மாதிரியான எண்ணங்கள் அவன் மனதில் இப்பொழுது உள்ளதென்று குழப்பத்தோடு பல நிமிடங்கள் இருந்தவள், அவன் வேலை அவசரம் புரிந்து அவசரமாக கண்ணீரை துடைத்து உடைகளை பையில் அடுக்கினாள்.

உறங்குகிறேன் என மனைவியிடம் கூறிய தேவாவிற்கு கண்களை பொய்யாக மூடிக் கிடக்கவே சிரமாக இருந்தது. அவள் எந்நாள் எவ்வுடை அணிவாள், எந்நேரம் எங்கு இருக்க ஆசை கொள்வாள், எவ்வுணவைப் பிடித்து உண்பாள், எதை ரசிப்பாள்,

எதற்கு கோவம் கொள்வாள், எண்ணிறம் பிரியமானதென அவளை பற்றி அணுவும் அறிந்துகொள்ள துடிக்கும் ஒருதலைக் காதலை வளர்ப்பவனிடம் வந்து என்னை தவிக்க விட்டு சென்றிடு என பொய் கூறும் அந்த மங்கையிடம் தன்னுடைய ஆசைகளை கூறினால் ஏற்றுக்கொள்வாளா? என்பதை மட்டும் துளி கூட அறிய முடியாமல் தத்தளித்தான் அவள் கணவன்.

அலுமாரியின் சத்தம் கேட்டு கண்களை தேவா திறக்க, துரிதமாக துணிகளை அடுக்கும் வேலையில் இருந்தாள் அவன் மனைவி.

சில நொடிகளுக்கு முன்பு விவாகரத்து கேட்ட அதே மனைவி தான் இப்பொழுது அவனுக்கு நேரமாவதை உணர்ந்து வேகமாக செயல்படுகிறாளா என்ற வினா.

மீண்டும் கண்களை மூடிக் கொண்ட தேவாவிற்கு எப்பொழுது உறக்கம் தழுவியதென தெரியவில்லை. கைபேசியின் சத்தம் கேட்டு எழுந்தவன், மனைவி அவ்வறையில் இல்லை என பார்த்து சிணுங்கிய கைபேசியை எடுத்தான், "சொல்லு பங்கு" அந்த பக்கம் குணா தான்.

"சரக்கு லாரிக்கு பெர்மிட் இல்லனு சொன்னாய்ங்கல்ல, அது மொத்தமும் அந்த அய்யனார் வேலை தான் மாப்பிள்ளை. இங்கன நல்லவன் மாதிரி நாடகம் ஆடிட்டு இப்போ ஒன்னுமே தெரியாதவன் மாதிரி அந்த லாரி டிரைவர் கரைச்சல் கொடுத்துட்டு இருக்கானாம், கூட போன நம்ம ஆள் அவன் அய்யனார்க்கிட்ட பேசுறத ஒட்டு கேட்ருக்கான்"

"அவனை விடு. இப்ப என்ன தான் பண்றது? அந்த வியாபாரிக்கு தகவல் போச்சுன்னா அடுத்து இனி சரக்கே அனுப்ப முடியாது. வேற லாரி ஏற்பாடு பண்ண சொன்னேன்ல?" - தேவா

"அந்த லாரி டிரைவர் லோடு வண்டிய விட்டு இறங்க கூடாது, பேசுன மொத்த காசும் வரணும்னு சண்டித்தனமா நிக்கிறான்" - குணா

நெற்றியை நீவிவிட்ட தேவா சில நொடிகள் யோசனைக்கு பிறகு, "சரி இரு நான் அந்த ஏரியால யாரையாவது புடிச்சு அனுப்புறேன். வேற வண்டி ரெடியா இருக்கா?"

"இருக்கு மாப்பிள்ளை" - குணா

"நான் பேசுறேன்" ஆந்திராவிற்கு செல்ல வேண்டிய லோட் ஒன்று பெர்மிட் காரணமாக பிரச்சனையாக இருக்க எவரிடம் சென்று உதவி கேட்கலாம் என்ற யோசனையில் நின்ற தேவாவிற்கு சந்தோஷ் தான் வடிகாலாக தெரிந்தான்.

யோசிக்காமல் அவனை அழைத்து விஷயத்தை கூற, உடனே மேலே வந்த சந்தோஷ் தனக்கு தெரிந்த ஆட்களை லாரி நின்ற இடத்திற்கு அனுப்பி காத்திருக்க சில நிமிடங்களில் பிரச்சனை சுமூகமாக தீர்ந்தது.

"ரொம்ப தேங்க்ஸ் மச்சான், பார்ட்டி ரொம்ப கறாரான ஆளு, நேரத்துக்கு சரக்கு போகலனா சாமியாடிடுவான்" சன்னமான சிரிப்போடு நன்றியை தெரிவித்தான்.

"இதுக்கெல்லாம் ஏன்டா இப்டி பேசிட்டு, அதான் பிரச்சனை முடிஞ்சதுல ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல?" சகோதரியை மனதில் வைத்து சந்தோஷ் கேட்டான்.

"இது பிரச்சனை இல்லடா மச்சான். ஒரு நிலம் வாங்குறதுல கொஞ்சம் சிக்கல் இருக்கு அது விசயமா தான் ஒடனே போகணும். எல்லாம் ரெடியா?" மணியை பார்த்து கேட்டான்.

"ம்ம்ம் உனக்காக தான் எல்லாரும் வெயிட் பண்றங்க" எனவும் இருவரும் இறங்கி கீழே வர மொத்த குடும்பமும் பைரவியின் வீட்டில் தான் இருந்தனர். தேவாவின் கண்கள் மனைவியைத் தேட, வரவேற்பறையில் அவள் இல்லை.

"நிவிமா மச்சானுக்கு தண்ணி எடுத்துட்டு வா பாப்போம்"

கிண்டலாக தேவா கேட்கவும், "என் மச்சானுக்கு நான் எடுத்துட்டு வராம உங்க பொண்டாட்டியா எடுத்துட்டு வருவா?" அவளும் கேலியோடு அவனுக்கு கொடுக்க, மனைவியை வீட்டினர் ஏவி விடுவார் என எண்ணிய தேவாவின் கணக்கு தவறாகி போனது.

'அட குட்டி போண்டா, ஒடனே செஞ்சிட்டாலே' நொந்தவன், "சரி அப்டியே ஒரு டீ" என்றான்.

"அவ டீ போட்டா குடிக்க முடியாது தேவா, நானே எடுத்துட்டு வர்றேன்"

சமயலறைக்குள் சென்ற சீதாவிடம், "அத்தை நானும் உங்க பொண்ண பாக்கணும்ங்கிற ஆசைல கேட்டா புரிஞ்சுக்க மாட்டிக்கிறீங்களே" வாய் திறந்து தேவா கூறவும் சிரிப்பலை அவ்விடம் எங்கும் பரவி, சமயலறையில் ஒளிந்திருந்த பைரவியையே தலை தாழ்த்தி சிரிக்க வைத்தது.

அவன் எண்ணம் புரிந்து டீ வைத்து எடுத்து வந்த பைரவி, தன் மக்களே ஆனாலும் கூட்டத்தில் அவன் பேச்சை கேட்டு, வரத் தயங்கி நிற்க சீதா வந்து மகளை அனுப்பி வைத்தார்.

டீ கப்போடு வந்து நின்ற மனைவியை பார்த்த தேவா, ஒப்பனை களைத்து மிகவும் எளிமையாக வந்து நின்ற மனைவியை சிரிப்போடு நோக்கி தேநீரை வாங்கினான்.

"டேய் ரொம்ப சிரிக்காத, பல் கொட்டிட போகுது" அருகில் அமர்ந்த அவன் சகோதரி உறும, வேண்டும் என்றே இன்னும் சிரித்தான் மனைவியைப் பார்த்து.

"சொல்ல போனா இன்னைக்கு உங்க வீட்டுல தான் பசங்க இருக்கணும் மதினி. ஆனா பாருங்க இவன் பிடிவாதம்..." கொக்கி போட்டு பேசிய அன்னையை முறைத்து சபையில் பேச வேண்டும் என்றே வாயை திறந்தான் தேவா.

"இது அவசரத்துல நடந்த கல்யாணம். எங்க வாழ்க்கையை நாங்க எப்ப ஆரம்பிக்கணும்னு நினைக்கிறோமோ அப்போ நாங்களே பாத்துக்குவோம். சாஸ்திரம் சம்ப்ரதாயம் அது இதுனு எந்த வேலையும் வேணாம். இத பத்தி இனிமே யாரும் எங்ககிட்ட பேசவும் கூடாது" அன்னையை பார்த்து அழுத்தி தேவா கூறியதில் நாயகிக்கு மூக்கெல்லாம் சிவந்தது.

"பேசல ப்பா, எதுவும் பேசல. நீ எப்பவும் உன் இஷ்டப்படியே இரு. பெத்தவங்க நாங்க நினைக்கிறது நீ செஞ்சிட்டா தானே தப்பு" பொய்யாக அழுகையை துவங்கிய மனைவியை முறைத்தே அடக்கினார் ராஜரத்தினம்.

"ஏதாவது பிரச்சனை பண்ணனும்னே பேசுறவங்கள என்ன பண்றது? பைரவி கெளம்பலாமா?" பொதுவாக பேசி மனைவியை பார்க்க அவள் தயார் என்னும் விதமாக தலை அசைத்தாள்.

"நாங்களும் உன்கூட தான்டா வர்றோம்" ரத்தினம் மகனை நிறுத்தினார்.

"கல்யாணம் ஆனவங்கள அப்டியே விட முடியாதுல ராசா, அதான் நாங்களும் உங்க கூடயே வர்றோம். வீட்டுல முறைப்படி பைரவி கால் எடுத்து வச்சா தான் நிம்மதியா இருக்கும்" அர்ஜுனன் சொல்ல அதுவே சரியாகப்பட்டு, மகனோடு சேர்ந்து பார்வதி, அர்ஜுனனும் சென்றனர்.

செல்லும் பொழுது நாயகி கையில் பைரவிக்காக சேர்த்து வைத்திருந்த எழுபத்தி ஐந்து பவுன் நகையை கொடுத்து மகளுக்கு தேவையான வெள்ளி பொருட்களையும் கொடுத்தனுப்பினார் பைரவி பெற்றோர்.

வெறுப்போடு தான் வாங்கி வைத்தார் நாயகி அதையும் ஆனாலும், "சந்தோசம் மதினி" என்றுவிட்டார்.

ஒரு மணி நேரத்தில் அவர்கள் குடும்பம் மதுரையில் இருக்க பைரவியை ஆராத்தி எடுத்து வரவேற்று மாமியாரை மட்டும் கவனிக்க துவங்கினார்.

மனைவியை வரவேற்பறையில் விட்ட தேவா தன்னுடைய அறைக்கு சென்று உடையை மாற்றி கீழே வரும் பொழுது பார்வதிக்கு ஒரு பக்கம் அன்னை மறு பக்கம் அமர்ந்திருக்க தந்தை அர்ஜுனனோடு அமர்ந்திருப்பதை பார்த்து மனைவியை தேடினான்.

அவளை எங்கு விட்டு சென்றானோ அதே இடத்தில் கையை பிசைந்து சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள்.

"பைரவி" கணவனின் திடீர் குரலில் திடுக்கிட்டு எழுந்த பைரவி அவனை பார்க்க, "இங்க வா" அழைத்தான்.

அவளுக்கு அதிகம் பயமாக இருந்தது, அனைவர் முன்னிலையிலும் இப்படியா சத்தமாக அழைப்பது என்று. பேத்தியை பேச்சில் இழுக்கப் பார்த்த பார்வதிக்கு தோல்வி கிடைக்க பேரன் அவளை அழைத்ததும் மருமகளிடம் பேச்சை வேண்டும் என்றே இழுத்தார்.

ராஜரத்தினம் மருமகளை பார்த்து சிரிப்போடு தந்தையிடம் பேச இரு பக்கமும் பார்த்து அவனிடம் சென்றாள். 'என்ன இது?' என சங்கடத்தோடு கணவனை பைரவி பார்க்க மாடிப்படி ஏறி பின் தொடரச் சொன்னான்.

படிக்கட்டின் கம்பியைப் பிடித்து பயத்துடன் அவள் நிற்க, "ஏன்டி உனக்கு எதுவும் காக்கா வலிப்பு இருக்கா? எப்ப பாரு கம்பியை புடிச்சு இந்த முழி முழிக்கிற?" ஆச்சிரியமாக கேட்டான் தேவா.

"இல்ல இங்க இருந்தே பேசலாமே" பைரவி தயங்கினாள்.

அவளை முறைத்தவன், "நீயா வந்தா நல்லது இல்லையா தூக்கிட்டு போய்டுவேன்" அவனது மிரட்டலில் அடுத்த நொடி பைரவியின் கால்கள் படிகளில் ஏறியது.

"எப்படி எல்லாம் உன்ன மிரட்ட வேண்டி இருக்கு..." மனைவியோடு மேலே வந்த தேவா மேல் தளத்தை சுற்றி காட்டி தன்னுடைய அறைக்கு அழைத்து செல்ல, கதவை திறந்து வைத்தே வந்தான்.

"நம்ம ரூம்" அவனது அறிமுகத்தில் ஒரு நொடி தடுமாறி பின் தன்னையே மீட்டெடுத்து வந்து அறையை நோட்டமிட்டாள்.

"நீட்டா தான் இருக்கும். இன்னைக்கு காலைல ஊருக்கு வர முன்னாடி ஒரு மணி நேரம் இந்த ரூமை ஒதுங்க வச்சேன்" விழி விரித்து அவனை பார்த்து, "ஒரு மணி நேரமா?" என்றாள்.

"ஆமா, நிக்க நடக்க கூட இடம் இருக்காது, மொத்தமும் குப்பை தான். அம்மா அதெல்லாம் பாக்க முடியாம தான் உன் ரூமை நான் கிளீன் பண்ணவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. மாசத்துல ஒரு நாள் சும்மா கொஞ்சம் மட்டும் சுத்தம் பண்ணுவேன்"

சரி என்னும் விதமாய் கூறி அங்கேயே தயங்கி நிற்க படுக்கையில் அவளை அமர வைத்து அவன் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் தேவா.

"ஆனந்த்..." அவளை பேச விடாமல் கையை காட்டினான், "நான் பேசணும் பைரவி" என்றான்.

அவளும் அமைதியாக இருக்க, "ஏன்டி உனக்கு என் மேல இத்தனை பயம்?"

வேதனையோடு அவளை பார்த்தான், "நான் பக்கத்துல வந்தாலே உன் கண்ணுல தெரியிற அந்த பயம் என்ன கொல்லுதுடி"

"அப்டி இல்ல ஆனந்த்..." - பைரவி

"அப்டி தான். கல்யாணம் பண்ணிட்டேனு உன்ன நெருங்கிடுவேன்னு பயமா? அதான் எல்லார் முன்னாடியும் சொன்னேனே அந்த பேச்சுக்கே இடம் இல்லனு"

பலமாக தலையை ஆட்டினாள், "அப்றம் ஏன் நான் எங்க கூப்பிட்டாலும் இவ்ளோ யோசனை, இவ்ளோ பயம். நான் ஒன்னும் அடுத்த மனுஷன் இல்லையே, சரி என்ன முழுசா ஒரு மாசம் கூட தெரியாது. ஆனா ஒரு பார்வை உன்ன தப்பா பாத்துருப்பேனா?"

நிறுத்தினான் அவளை பார்த்துக்கொண்டே, பிறகு ஏதோ நினைவு வந்தவனாக, "ஓ நான் மத்த பொண்ணுங்ககிட்ட பேசுறத வச்சு இவன் ஒரு பொம்பள பொறுக்கினு முடிவு பண்ணிட்டியா?"

கணவன் கண்களில் தெரிந்த கோவத்தில் வேகமாக பதில் வந்தது, "அப்டிலாம் இல்ல ஆனந்த். நீங்க அப்டி இல்லனு எனக்கு தெரியும்"

"வேற எந்த காரணம் சொல்லுவ?" - தேவா

"காரணம் இல்ல, நான் தான் அப்பயே சொன்னேன்ல எனக்கு டைம் வேணும்" - பைரவி

"அது நமக்கான வாழ்க்கையை ஆரமிக்கிறது, இப்டி பக்கத்துல வந்தா, ஒரே ரூம்ல இருந்தான்னு எல்லா நேரமும் கண்ணுல பயத்தோடேயே என்ன பாக்குறது எவ்ளோ வேதனைனு உனக்கு புரியாது பைரவி"

வேதனை நிறைத்திருந்தது அவன் குரல், "கடைசி வர எனக்கு மனைவியா இருக்க கூட வேணாம் ஆனா அந்த பயம், தயக்கத்தை மட்டும் தூக்கி வச்சிட்டு நம்பிக்கையோட என் கைய புடிச்சிட்டே இரு. போதும்டி.. என் கடைசி காலம் வர" கண்ணீர் பெருகியது மனைவிக்கு கணவனின் சொல்லில் அடக்க முடியாத வருத்தத்தில்.

"சாரி ஆனந்த், நான் என்ன மாத்திக்க பாக்குறேன்"

"இவ்ளோ கஷ்டப்பட்டு அழுதுட்டே எனக்காக நீ மாற வேணாம் பைரவி" அமைதியாக கூறினான்.

கண்களை துடைத்து, "நிஜமா உங்களுக்காக சொல்லல. எனக்காகவும் தான் சொல்றேன். எல்லாமே அவசர அவசரமா நடந்ததால என்னால சட்டுனு உங்களோட நெருக்கத்தை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல" அவன் முகம் பார்த்து கெஞ்சியது அவள் விழிகள்.

"சரி... சரி அப்போ உனக்கு எப்போ என் கூட இருக்க பயம் வராதுன்னு தோணுதோ அப்போ சொல்லு நான் வர்றேன், அது வர தாத்தா வீட்டுலையே இருக்கேன்" இறங்கி வந்தான் மனைவியின் மனம் படித்து.

மூச்சு வாங்கியது பைரவிக்கு, இப்பொழுது தான் மெல்ல மெல்ல அவனோடு இருக்க மனம் பழகி வர, அதற்குள் தன்னை தனியாக விட்டு செல்கிறேன் என்கிறானே என்ற அச்சம்.

"ம்ம்ம்?" - தேவா

வேணாம் என தலை அசைத்தாள், "ஏன்" என்றான் அவனும் உள்ளடக்கிய சிரிப்போடு.

"நீ... நீங்க கூடையே இருந்தா... இருந்தா தானே உங்க மேல பயம் போகும்?"

திக்கி திணறி அவள் கேட்ட கேள்வியில் மீசைக்கடியில் சிரிப்பை மறைத்து, "சூர்? அப்போ நான் இன்னைக்கு வீட்டுக்கே வரலாம்ல?" - தேவா

"ம்ம்ம்" தலையை ஆட்டினாள் பெண்.

"உனக்கு பிரச்சனை இல்லையே?" - தேவா

"இல்ல" - பைரவி

"இந்த ரூம்ல ஒரே ஒரு பெட் தான் இருக்கு, உனக்கு பிரச்சனை இல்லையே" தயங்கிய பாவை பிறகு அவன் முகம் பார்த்து சம்மதமாய் தலை அசைக்க, அவளின் அப்பழுக்கற்ற அந்த பார்வையில் கட்டுண்டு போனான் தேவா.

"சூப்பர். உனக்கு பிரைட் ரைஸ் புடிக்கும் தானே, இங்க ஒரு கடைல ரொம்ப நல்லா இருக்கும். நைட் அத வாங்கி அனுப்புறேன். சாப்பிட்டு படு. நான் வேகமா வந்துடுவேன்னு நினைக்கிறேன்"

அவளை விட்டு எழுந்தவன் ஒரு ஸ்டடி டேபிள் ஒன்றில் இருந்த பெரிய புத்தக குப்பையினுள் கிடந்த பல கோப்புகளில் ஒன்றை தேடிக்கொண்டே, "உன் திங்ஸ் எல்லாம் இங்க வந்து வச்சுக்கோ, கபோர்டுல லெப்ட் சைடு உனக்கு தர்றேன்"

கணவன் பேச்சை கேட்டுக்கொண்டே எழுந்த பைரவி, அலுமாரியின் அளவை பார்க்க எண்ணி அறைக்கு அருகிலே இருந்த அலுமாரியை நெருங்கியவள் அதை சரியாக திறக்கும் பொழுது அவளை பார்த்துவிட்ட தேவா, "வேணா தொறக்காத..."

தேவாவின் வார்த்தையை மனைவி கேட்கும் முன்பே அவள் திறந்திருக்க, அவனது மொத்த உடையும் அவள் காலுக்கடியில் விழுந்து கிடந்தன.

அவள் காலுக்கடியில் விழுந்தது அவனுடைய உடைகள் மட்டுமல்ல, பல ஹெட்போன்ஸ், சார்ஜ்ர், இரண்டு மொபைல், எண்ணெய் டப்பா, பவுடர் டப்பா, சீப்பு, ஷேவிங் கிரீம், லேப்டாப் சார்ஜ்ர், பல மாத மற்றும் வர இதழ்கள், காலண்டர், விசிட்டிங் கார்ட்ஸ், இரு சக்கர வாகனத்திற்கு பயன்படுத்தும் இரும்பு பொருட்கள் என மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் என்னென்ன பயன்படுத்துவானோ அத்தனையும் பாதி பயன்படுத்திய நிலையில் அவன் அலுமாரியில் அடைபட்டுக் கிடந்தது. ஒரு துணி கூட சரியாக மடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இல்லை, அத்தனையும் கசங்கி, துவைத்ததற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.

பைரவியை முந்திக்கொண்டு கீழே கொட்டிக்கிடந்த அத்தனை பொருட்களையும் அள்ளி அலுமாரியில் அமுக்கி அமுக்கி திணித்து கதவை தேவா மூட, கீழே கதவின் விளிம்பில் ஒரு பெட்சீட் எட்டி பார்த்து நின்றது.

மேலே அலமாரியின் கையை பிடித்திருந்த தேவாவால் கீழே இருந்த அந்த துணியை திணிக்க முடியாமல் போக, "சக்கர, அந்த பெட்ஷீட்டை கொஞ்சம் உள்ள தள்ளி விடேன்" என்றான் மூச்சடைக்க.

"ஆஹ்? ம்ம்ம்" அவன் செய்வதையே தள்ளி நின்று விசித்திரமாக பார்த்த பைரவி அவன் கூறியதை செய்ய, எளிதாக கதவை அடைத்து சாவி கொண்டு பூட்டி வைத்தான்.

"பாத்தியா அதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆச்சு, நான் போய்ட்டு வர்றேன்" என்றவன் வெளியே சென்று மீண்டும் கதவிலிருந்து எட்டி பார்த்தான்,

"என்ன ஆனாலும் சரி, அந்த கபோர்டுட மட்டும் தொட்டுடாத" என்ற எச்சரிக்கையோடு வெளியே செல்ல என்ன முயன்றும் பைரவையால் சிரிப்பை வெளிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

அறையை விட்டு வெளியே வந்த தேவா, 'என்னமா நடிப்பை போட வேண்டி இருக்கு, இவளை வழிக்கு கொண்டு வர முன்ன, நான் ஒரு வழி ஆகிடுவேன் போல" புலம்பிக்கொண்டே படிகளில் இறங்கி வீட்டினரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

இளங்கோவன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெரிய கூட்டத்தின் ஒரு பக்கம் அமர்ந்திருந்த அய்யனார், இளங்கோவன் வரவும் விருப்பமில்லாமல் எழுந்து நின்று வணங்கினார்.

"உக்காருங்க ய்யா" தானும் ஒரு நாற்காலியில் அமர்த்த இளங்கோவன் கண்கள் அய்யனாரையும் அவரோடு நிற்கும் அவர் ஆட்களையும் நோட்டமிட்டு திசை மாறியது.

"பஞ்சாயத்தை கூட்டாம இது என்ன தினுசா இருக்கு" கைலியை இழுத்துக்கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்த நால்வர் அய்யனாரின் பக்கம் சென்று நிற்க, அய்யனார் இன்னும் நெஞ்சை தூக்கி அமர்ந்தார்.

"பஞ்சாயத்தை கூட்டுனா வளச்சு போட முடியாதுல ரங்கண்ணே" இழுத்தான் ஒருவன்.

"உங்க இஷ்டத்துக்கு என்னடே பேசிட்டே போறிக? இங்க யார் யாரை வளச்சு போட அலைஞ்சிட்டு இருக்காங்க? சும்மா ராவ கூட்டாதிங்க அப்றம் நடக்குறதே வேற" தேங்காய் ஒரு மூடையை வீட்டில் இறக்க வந்த ஒருவர் இளங்கோவனுக்காக சண்டைக்கு வந்தார்.

"விடு சுப்பு அண்ணே, ஒடம்புல தெம்பில்லாதவன் அடுத்தவன் ரத்தத்தை குடிச்சு தானே உயிர் வாழுவான். இவனுங்க அவனுங்க மாதிரியே நம்மளையும் நினைச்சிட்டானுங்க போல" அய்யனாரை நேரடியாகவே பார்த்த வெற்றி கூற, அய்யனாரின் ஆட்களுக்கு ஆத்திரம் அடங்காமல் கரைபுரண்டோடியது.

"என்னடா ரெண்டு காசு பாத்ததும் உங்களுக்கெல்லாம் பேச சத்து வந்துடுச்சோ, என்னா துள்ளு துள்ளுறீங்க" அவர் எழுந்து வெற்றி பக்கம் சண்டைக்கு போக, சளைக்காமல் தானும் அந்த மனிதரை நோக்கி வெற்றி நடக்க, குணா தான் பிடித்து வைத்தான்.

"ஆமா! இப்ப அதுக்கு என்னங்கிற? சொந்தமா உழைச்சு காசு சம்பாதிக்கிற நாங்க துள்ளுறதுல தப்பில்லை. இப்டியே பேச்ச மாத்தி விட்டு ரவுசா வந்த வேலைய திசை திருப்பி விட தான ஆள கூட்டுறிங்க?" - குணா

"டேய் நீங்க உங்க இடத்துலயே கூட்டத்தை கூட்டி பேசுவீங்க, நாங்க ஆள் வந்தா அதுக்கொரு நொண்டி சாக்க சொல்லுவீங்க"

"தம்பி தேவையில்லாத பேச்சு எதுக்கு, விசயத்துக்கு வாங்க. முன் பணத்தை குடுத்து வச்சிருந்தோம் நாங்க, அது தெரிஞ்சும் நிலத்துக்காரனுக்கு பணத்தாசைய காட்டி நீங்க இடத்தை முடிக்க போனா என்ன அர்த்தம்?" பேச்சை திசை மாற்றி செல்வது அறிந்து நேரடியாக பிரச்சனைக்கு வந்தார் இளங்கோவன்.

"யார் பணத்தை காட்டி ஆசைய தூண்டுனது? உங்க பேரன் அடி மாட்டு விலைக்கு கேட்ருக்கான். வயித்து வலிக்கு விக்கிறவனுக்கு அதுவே போதும்னு யோசிச்சு அந்த நேரம் சட்டுனு சரின்னு சொல்லிட்டான்.

விசயத்த கேள்விப்பட்டு நான் சரியான ரூவாய குடுத்தேன், எனக்கு இடத்தை குடுக்குறான். இதுல உங்களுக்கென்ன கஷ்டம்?" வந்ததிலிருந்து வேடிக்கை மட்டுமே பார்த்த அய்யனார் முதல் முறையாக வாயை திறந்தார்.

"என் பேரன் அடி மாட்டு விலைக்கு பேசுனானு எத வச்சு இவ்ளோ அழுத்தமா பேசுற அய்யனாரே. நிலத்துக்காரன் என்ன விலை சொன்னானோ அதே ரூவாய பேரம் பேசாம அப்டியே பேசி முடிச்சிட்டு கைல அட்வான்ஸ் தொகைய குடுத்தாந்தான்.

அவனுக்கு தெரியும் மண்ண மதிச்சவன் மனச எப்படி குளுருவிக்கணும்னு" நெஞ்சை நிமிர்த்து இளங்கோவன் தோளில் இருந்த துண்டை எடுத்து உதறி மீண்டும் தோளிலே போட்டார்.

"ஓ ஹோ, அப்போ நாங்க பித்தலாட்டம் பண்ணிட்டு இருக்கோமா?" - அய்யனார்

"எப்பா உன்ன இப்ப யாரு அப்டி சொன்னது? நீயாட்டுக்கு வெரசா ஒரு முடிவுக்கு வந்து நிக்காத, நிலத்த விக்கப் போறவன் வந்து நிக்கட்டும் அப்ப தானே யார் சொல்றது உண்மைன்னு தெரிய வரும்" இருவருக்கும் பொதுவாக இருந்த ஒருவர் குரல் கொடுத்தார்.

"அவன் இன்னும் இங்க அஞ்சு நிமிசத்துல நிப்பான். இன்னைக்கே இடத்தை நான் முடிக்க வேண்டியது, இப்ப சமாச்சாரம் இங்க வந்து நிக்கிது, மழை காலம் முடியாகுள்ள நான் நிலைத்த உழுது சோழிய ஆரம்பிக்க வேணாம்?

இதுல இளங்கோவன் அய்யா பேரன் வேற இல்ல. இன்னைக்கே எனக்கு முடிவு தெரிஞ்சாகணும். நான் நாளைக்கு பத்திரம் எழுதியாகணும் சொல்லிட்டேன்"

அய்யனார் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே புல்லட்டின் ஹாரன் சத்தம் கேட்க, மொத்த கூட்டமும் திரும்பி சத்தம் வந்த திசையை பார்த்தது.

"இவன் எதுக்குடா இங்கன வந்தான்? கல்யாணம் ஆகியிருக்கு வர மாட்டான், பிரச்சனைய பெருசாக்காம முடிச்சிடலாம்னு சொன்னவன் எவன்டா?" தன்னுடைய ஆட்களிடம் திரும்பி பற்களை கடித்துக் கேட்டார் அய்யனார்.

"இவனுங்க தானுங்க அய்யா, சொன்னானுங்க" மாறி மாறி கையை காட்ட எரிச்சலடைந்த அய்யனார் தேவாவை பார்த்தார்.

எத்தனை நேரம் இவர்கள் பேச்சை எல்லாம் கேட்டு வேண்டும் என்றே அமைதியாக இருந்தானோ, அய்யனாருக்கு அவன் அமைதி ஆத்திரத்தை கொடுத்தது.

கூலிங் கிளாஸ் அணிந்து தன்னுடைய புல்லட்டில் அமர்த்திருந்தவன் கையில் ஒரு குல்பி ஐஸ் என பார்க்கவே கோவம் கனன்றது அய்யனாருக்கு.

"என்ன சாவாகாசம் தேவா இது? பெரியவங்க உனக்காக காத்துருக்கணுமா?" தாத்தா பேரனை பார்த்து கண்டிக்கவும் அமைதியாக வந்து தாத்தாவின் அருகில் நிற்க, இடத்தை விற்க முடிவெடுத்தவரும் வந்திருந்தார் அந்த நேரம்.

"என்ன சிவநேசா, உன் இடத்தை பத்தின பேச்சு நடக்குறப்போ நீ இவ்ளோ சாவகாசமா வர்ற?" பெரியவர் ஒருவர் கேட்டார்.

"கொஞ்சம் வேலை இருந்ததுங்க அய்யா" என்றார் இளங்கோவனை தலை தூக்கி கூட பார்க்காமல்.

"என்ன தம்பி கோடி ரூவா குடுத்தாலும் கைக்கு அகப்படாம போற இடம் அது, அந்த இடத்தை கம்மியான விலைக்கு கேக்குறதா பேச்சு வருதே, அப்போ சிவநேசன் ஜாஸ்தி பணம் குடுக்குறவங்களுக்கு தானே இடத்தை ஒப்படைப்பான்?"

"கம்மியான விலைனா, எவ்வளோனு சொன்னிங்கன்னா வசதியா போய்டும்"

தேவாவின் பதிலில் அனைவரும் சிவநேசனை பார்க்க, "ஐநூத்தி சொச்சம்" என்றார்.

"ஆத்தி என்னையா அப்டியே மாத்தி பேசுற, நான் தான் கூடையே இருந்தேன்ல தேவா ஆயி..." ஒருவர் இடைபுகுந்தார் சிவநேசனின் பேச்சை கேட்டு.

"மாமா, செத்த பொறுங்க. அண்ணே, நான் ஐநூறுக்கு கேட்டேன்னே வை, தலைவர் எம்புட்டு தர்றேன்னு சொன்னாரு?" - தேவா

"ஆயிரத்தி முன்னூத்தி இருபத்தி அஞ்சுங்க" - சிவநேசன்

"ஆயிரம் ரூவா கம்மியா குடுத்தா புள்ளகுட்டி காரன் அவனும் என்ன தான்யா பண்ணுவான், நல்ல முடிவு தான. நானா இருந்தாலும் அங்கன அதே தான் யோசிப்பேன்" பேசியவர் முன்னே வந்து நின்ற தேவாவை பார்த்து,

"இப்ப எங்க தம்பி போச்சு உங்க வீராப்பு?" - அய்யனார்

"தப்பு தா, அவசரத்துக்கு இடத்தை குடுக்குறேனு சொன்னதும் முத ஆளா போய் நின்னு ஐநூறு ஓவாய்க்கு பேசி முடிச்சது..."

"டேய் மாப்பிள்ளை"

"தேவா" என நண்பர்கள் இருவரும் இடையில் புக, "நிறுத்துங்கடா, பேசிட்டு இருக்கேன்ல" நண்பர்களிடம் கோவமாக பேசியவன் சிவநேசனிடம் திரும்பி,

"மன்னிச்சுக்கோ ண்ணே, பெரிய மனுஷன் நீ உன் கால்ல கூட நான் விழுவேன், ஆனா அவரு சொன்னதை விட நூறு ரூவா சேத்து தாரேன், இந்த சபைல வச்சு எனக்கே இடத்தை தர்றேன்னு சொல்லு.

அமைதியா கெளம்பி போய்கிட்டே இருப்பேன். இல்லையா இந்த இடத்தை நீ விக்கவே முடியாத மாதிரி ஒரே நாள்ல என்னால பண்ண முடியும்"

"என்னடா மெரட்டுறியா? குடலை உருவிடுவேன்" அய்யனாரின் ஆள் ஒருவன் எகிறி வந்தான் தேவா அருகில்.

ஏற்கனவே கோவத்தில் இருந்த தேவாவிற்கு தவறே செய்யாமல் தன் மேல் வீண் பழி ஏற்கவே முடியவில்லை, "ஆமாண்டா மிரட்ட தான் செய்றேன், முடிஞ்சா குடலை உருவு பாக்கலாம்" தானும் எகிறிக்கொண்டு சண்டைக்கு செல்ல, நண்பர்கள் அவனை பிடித்து நிறுத்தினர்.

"டேய் மாப்பிள்ளை, என்ன இது நிதானத்தை இழந்துட்டு?" வெற்றி நண்பனை அதட்டி பிடித்தான்.

"பின்ன என்னடா, இவனுங்களுக்கு நேர்மையா எது செஞ்சாலும் புடிக்காது, இப்டி மெரட்டுனா தான் சரி வரும் போல"

"சபைல பேசுற பேச்சா தேவா இது?"

"சரி நான் பேசல, நான் கேக்குற ரேட்க்கு எனக்கு இடத்தை தர சொல்லுங்க பாப்போம்" - தேவா

"அவன் கேக்குறதும் நியாயம் தானே ய்யா? உனக்கு இன்னும் ரெண்டு லட்சம் காசு பாத்த மாதிரி ஆச்சுல சிவநேசா?"

"அதெல்லாம் முடியாதுங்க, நாங்க தான் இடத்தை பேசி அட்வான்ஸ் குடுத்துட்டோம்ல. இனி அந்த இடம் எங்க அய்யாக்கு தான்" - அய்யனார் ஆள்

"அப்போ அவன் அட்வான்ஸ் போட்ட இடத்தை நீ எதுக்கு நொட்டுன?" - சபையில் ஒருவர்.

"அது இடத்துக்காரனுக்கு கட்டல, என்கிட்ட கை நீட்டிட்டான், அவன் விருப்பம் தானே அது முழுக்க முழுக்க" - அய்யனார்

"நல்லா இருக்குலே உங்க நியாயம். உனக்கு ஒரு சட்டம், ஊருக்கு ஒரு சட்டமா?"

பெரியவர் அய்யனாரிடம் கோவமாக பேசினார், "அவன் தான் நூறு ரூவாய்க்கு மேல கேக்குறான்ல, சிவநேசனுக்கு விருப்பம்னா அவன் வாங்கிக்கணும்" என்றார்.

"அது எப்படிங்க..." என துவங்கிய அய்யனாரை தடுத்தார் இளங்கோவன்,

"அய்யனாரே, நீ இந்த ஊருக்கு தலைவன் தான். அதுக்காக நீயா சட்டம் ஒன்னு உருவாக்கி, நீயே அத உன் இச்சட்டத்துக்கு மாத்தி குட்டைய கெளப்புற பெரிய மனுசன் பண்ற வேலை இல்லை. உன் அப்பன நம்பி உனக்கு இந்த பதவியை குடுத்தேன், அத கெடுத்தன்னு வை, தோலை உருச்சிடுவேன் ஜாக்கிரதை"

"ஓ! கூப்டு வச்சு குடும்பமா மெரட்டுறீங்களா?" அவமானமாய் இருந்தது அய்யனாருக்கு, "நான் ஏமாத்துனேனு சொல்றிங்களா? சரி அந்த இடத்தை சதுரடி ரெண்டாயிரத்துக்கு வாங்குறேன். இந்த ஊர்ல ஒரு இடமும் அந்த விலைக்கு இல்லை.

ஆனா உங்க முன்னாடி நான் என்னோட நியாயத்தை காட்டனும்ல? தர்மத்துக்கு இழைச்சதா நினைச்சுக்குறேன்" என்றார் ஆத்திரமாக.

தேவா இதை எதிர்பார்க்கவே இல்லை ஆனாலும் அத்தனை பணம் கொடுத்து வாங்க அவனிடம் சேமிப்பும் அதிகம் இல்லாமல் போக அமைதியாக நின்றான்.

"என்ன இப்ப பேசுங்க யாராவது" சபையினரை தூண்டி விட்டார் அய்யனார்.

"என்ன மன்னிச்சிடுங்க அய்யா, என்னால நீங்க சொல்ற விலைக்கு அந்த இடத்தை குடுக்க முடியாது" கை எடுத்து அய்யனாரிடம் மன்னிப்பு வேண்டினார் சிவநேசன்.

"எனக்கு என்னோட இடத்துக்கான காசு மட்டும் போதும்ங்க"

தேவாவிடம் திரும்பி, "எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க, தேவா தம்பி ஆயிரத்தி இருநூறுக்கு அட்வான்ஸ் குடுத்துச்சு. அப்றம் தலைவர் வந்து கேக்கவும் கை நீட்டி காசு வாங்கிட்டேன். தலைவர் தான் எங்க கேட்டாலும் ஐநூறுன்னு சொல்ல சொன்னாங்க" உள்ளே சென்றது சிவநேசன் குரல்.

"என்ன அய்யனாரே இது, உன் பதவியை காட்டி அடுத்தவள கெட்டவனா மாத்துறியா?"

"சிவநேசா" அய்யனார் அவரை நோக்கி குரலை உயர்த்த அவருக்கு முன் வந்து நின்றான் தேவா.

"எதுக்கு தலைவாரே இந்த கோவம்?" கிண்டலாக சிரித்தவன், "இப்போ என்ன உனக்கு இந்த இடம் வேணுமா, சரி நீயே வச்சுக்கோ" அதில் இன்னும் கேலி ஒளிந்திருக்க தேவாவின் சட்டையை பிடித்தார் அய்யனார்.

"என்னடா பிச்சை போடுறியா எனக்கு? நீ போடுற பிச்சைல தான் அந்த இடம் எனக்கு கெடைக்கணும்னா அந்த இடம் எனக்கு சுடுகாட்டுக்கு சமம்டே"

தோளில் இருந்த துண்டை எடுத்து காற்றில் ஆவேசமாக உதறியவர் அவ்விடத்தை விட்டு அகல, இதற்காகவே காத்திருந்த தேவாவின் இதழ்களில் புன்னகை.

"தலைவரே, நடந்தே வந்த மாதிரி இருக்கு, வண்டில வந்து வீடு வர விடவா?" உரக்க பேசிய தேவாவின் வார்த்தைகளை காதில் கேட்டு மேலும் தன்னுடைய வேகத்தை கூட்டினார் அய்யனார். 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro