Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 94

ஜெயனும் வர்த்தினியும் அவலாஞ்சிக்கு பயணம் சென்று இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.

தினமும் காலையில் அவனுக்கு இரவில் தேவைப்படும் தீப்பந்தத்திற்குரிய துணியை சுற்றிக் கொடுத்து விட்டு மிருகங்களின் நடமாட்டம் ஏதாவது தென்படுகிறதா என்று தன்னுடைய கூர் கண்களால் ஒருமுறை அந்தப் பகுதியை நோட்டமிட்டு செல்வார் திண்ணன்.

"யோவ் பெர்சு.... நாங்க இன்னும் ரெண்டுநா எல்லாம் இங்க தங்கல. இன்னிக்கே கெளம்புறோம். ராத்திரியாச்சுன்னா இங்க குளிரும், இருட்டும் சேந்துக்கிட்டு ஆளப் போட்டுத் தள்ளிரும் போலருக்குதுய்யா! வர்த்தினியும் பழக்கமில்லாத இந்த எடத்துல இருக்க பயந்துக்கிட்டு ஒன்னைய ஒண்டிக்கிட்டு வந்து படுத்துக்குது!" என்று சொன்னவனைப் பார்த்து புன்னகைத்த படி வதனி தன்னுடைய உடையை மாற்ற மறைப்புக்குள் சென்றாள்.

"அதுக்குத் தானடா இங்க வந்த? என்னவோ புள்ள ஒங்கிட்ட ஒண்டிக்கிட்டு வர்றது புடிக்காத மாதிரியில்ல பேசுறவே?" என்று மென்குரலில் கேட்டவர் தன்னுடைய காரை படிந்த பற்களை ஜெயனிடம் காட்டி வைத்தார்.

"யோவ்.... நா ஒங்கிட்ட என்னத்த சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீ இந்நேரத்துல எடக்கு பேசிக்கிட்டு?" என்று சலித்தவனிடம்,

"எலே...ய்! இன்னிக்குலா மிருகம் எதுவும் எறங்கி வராதுடா கொமரா..... தைரியமாயிரு! அப்டியே நரி, கரடின்னு ஏதாச்சு ஒண்ணு ரெண்டு சுத்துச்சுன்னாலும் நெருப்பேத்தி வச்சுருக்குறத பாத்துட்டு குடிச பக்கம் வராம ஓடிரும்!"

"நீதா அஞ்சாத சிங்கமாச்சுல்லடே.... ஒன்னியும் ஒம்பொண்டாட்டியவும் காப்பாத்திக்கிடுற வலுவில்ல ஒஒடம்புல?" என்று கேட்டவரிடம்,

"ஆமா..... வலு தான? அது எக்கச்சக்கமா கொட்டிக் கெடக்குது ஒடம்புல! யான வந்து எறங்குச்சுன்னா, அது காதப்புடிச்சு கரகரன்னு சுத்தி விடுறேன்..... போய்யா அங்கிட்டு! ஊருக்குள்ள ஆளும் பேருமா இருந்தா தான் நமக்கெல்லாம் லவ்ஸூ கூட ஒழுங்கா வருது!" என்று சொன்னவனுக்கும் திண்ணனுக்கும் குளித்து முடித்து வந்தவள் வரக்காப்பியை போட்டு வந்து கொடுத்திருந்தாள்.

ஜெயன் திண்ணனிடம் மூக்கால் அழுது கொண்டிருந்ததைப் போல அல்லாமல் நிஜத்தில் ஆற்றில் நினைத்த நேரத்திற்கு குளியல், மீன் பிடித்தல், பின் அதனை சமைத்தல் என இருவரும் அந்த குடிசை வீட்டில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தனர்.

"எங்கிட்ட என்னடீ வெக்கமும், கூச்சமும்? மொத ராத்திரி அன்னைக்குதா அவ்ளோ வெக்கப்பட்ட.... பரவாயில்ல; இன்னமும் என்னிய நிமுந்து பாக்கவே இவ்ள யோசிச்சீன்னா எப்ப நம்ம அடுத்தடுத்த படிக்கெல்லாம் போறது? இங்க பாரு ஹெட்லைட்டு!" என்று அவர்களுடைய அந்தரங்க நேரத்தில் அவளிடம் பேசி அவனுக்கு அவளிடமிருந்து என்ன வேண்டுமோ அதையெல்லாம் அவளை பேசி பேசிக் கரைத்தே களவாடிக் கொண்டான் அந்த கடங்காரன்!

மெல்ல மெல்ல வதனியையும் அவளது தேடல்களை அவனிடம் தேடிக் களைப்புறச் செய்தவன் கணக்கில்லாமல் அவளை காதல் செய்தான்.

மோகமும் காதலும் அந்த குடிசையில் இடம் போதாமல் நிரம்பி வழிந்தது. இருவரின் மோகத்தால் விளைந்த முனங்கல்களையும், முத்தங்களையும் கேட்டு அந்தக் காட்டில் இருந்த பறவைகள், மீன்கள் எல்லாம் வெட்கத்தில் காதை மூடிக் கொண்டன.

ஒவ்வொரு முறையும் அவன் அணைப்பால் நொந்து, அவனுடைய முத்தத்தால் சிவந்து, அவனுடைய பற்தடங்களால் உடல் கன்னிப் போய் கிடந்தவள் அவனிடம்,

"ஜெயன்.... என்னடா இப்டி சலிக்காம லவ் பண்ணிட்டே இருக்க? உனக்கு போரடிக்கலையா?" என்று அவன் தோள் வளைவில் தாடையைப் பதித்திருந்து கேள்வி கேட்டாள்.

"லவ் பண்றதுக்கு தானடீ ஹெட்லைட்டு இங்க வரைக்கும் வந்துருக்கோம்..... நீ என்னிய ரசி! நா ஒன்னிய ரசிக்குறேன்!" என்று சொன்னவன் மறுபடியும் ஒருமுறை அவள் மார்பில் புதைந்து கொண்டு குளிருக்கு இதம் தேடினான்.

திண்ணன் காலையில் ஒருமுறை அங்கு வந்து அவர்களுடன் ஒரு வரக்காப்பி அருந்துவதோடு சரி.....! மற்ற நேரங்களில் எங்கு செல்வாரோ, எங்கு தங்கியிருப்பாரோ.....? இந்த இளம் தம்பதியர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் அவர் பாட்டில் வேறிடத்தில் ஒதுங்கிக் கொண்டார்.

"ஏய் ஜெயன் நாம பாட்டுல இங்க வந்து திண்ணன் தாத்தாவோட எடத்துல இருந்துக்கிட்டு, அவர வெளிய அனுப்புனது தப்புப்பா!" என்று வருந்திய மனைவியிடம்,

"அந்த பெர்சு தான நம்மள இங்க கூப்டுச்சு? அதெல்லாம் அவரோட ஆளுங்க டவுனுக்குள்ள நெறய பேரு இருக்காங்க.....  நாம இங்க இருக்குற வரைக்கும் அவரு அவங்க கூட அங்கணக்குள்ள இருந்துக்குவாரு! நீ கவலப்படாத!" என்று சமாதானம் சொன்னான்.

நடுவில் ஒருநாள் காலையில் இருவரும் குளித்து முடித்து வினோத்திற்கும், மனோம்மாவிற்கும் இங்கிருந்தே படையலும் செய்து அதில் இரண்டு கவளத்தை மீன்களுக்கும்  கொடுத்தனர். பெரிய வாயை திறந்து திறந்து மீன்கள் அவற்றை சாப்பிட்டதில் வதனிக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது.

"லவ் யூ வினோ! லவ் யூ மனோம்மா!" என்று வானத்தைப் பார்த்து சொல்லி விட்டு புன்னகைத்த தன்னுடைய மனைவியை பின்னாலிருந்து இறுக்க கட்டிக் கொண்டான் ஜெயன்.

தங்களுடைய விருப்ப விளையாட்டான படங்களை செய்கையின் மூலம் கண்டுபிடிக்கும் விளையாட்டில் வர்த்தினி அன்று ஜெயனிடம் தோற்றுப் போய் அவர்களுடைய ஒப்பந்தப்படி ஒரு பனை ஓலைப் பாயை மட்டும் அவளுடைய உடம்பில் சுற்றிக் கொண்டு வந்தாள்.

அந்த வீட்டின் தரையில் கையை தலைக்கு அண்டுக் கொடுத்து படுத்திருந்தவன் தன்னுடைய மனைவியை அந்தக் கோலத்தில் பார்த்து விட்டு இதழ்களுக்குள் சிரித்தான்.

"என் செல்ல ஹெட்லைட்டு.... நைட்டிய விட இந்த பாயில தான்டீ ஒரு மார்க்கமா இருக்க!" என்று அவளைப் பார்த்து கண்சிமிட்டியவன் வர்த்தினியின் வெட்கப் புன்னகையால் ஈர்க்கப்பட்டு அடுத்த பத்து நிமிடத்தில் அந்த பாய்க்குள் அவனும் சென்றிருந்தான்.

தூரத்து மலையும், சலசலவென ஓடும் சிற்றோடையும், ஓங்கி உயர்ந்து நின்ற மரங்களும் இந்த அழகி மற்றும் அழகனின் கூடலுக்கு தொந்தரவு விளைவிக்காமல் அவை பாட்டில் அமைதியாக தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தன.

யாரென்றே தெரியாத நிலையில்  ஒருவருக்காக ஒருவர் நீட்டிக் கொண்ட உதவிக்கரம் இப்போது இருவராலும் பிரிக்கவே முடியாத ஒரு பந்தத்துக்கான கரமாக மாறியது தான் இவர்கள் இருவரும் கடந்த வந்த பாதையின் முடிவு.

இந்த பாதையில் ஜெயன் வர்த்தினியின் சொந்த வாழ்வும், இருவருடைய பணி வாழ்வும் மேன்மேலும் சிறக்க வேண்டுமென ப்ரார்த்தித்து விடைபெறுவோம்.

அகதியென வந்த அழகி அவனது
ஆதியென ஆகி வாழ்வை
தொடங்கி விட்டாள்!

எபிலாக்

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்

"அடியேய் ஹெட்லைட்டு! ப்ரேக்ல இருந்து கால எடுத்துட்டு ஆக்ஸிலேட்டர குடுறீ..... அப்பத்தா வண்டி நகரும்!" என்று தன் பக்கத்தில் அமர்ந்து தொண்டை தண்ணீர் வற்ற கத்திக் கொண்டிருந்தவனிடம்,

"ஆக்ஸிலேட்டர குடுக்கணும்னியே.... அத
யாரு கிட்ட குடுக்கணும் ஜெயன்?" என்று கேட்டு அவனை ரத்தம் வராமல் கடித்துக் கொண்டிருந்தாள் ஜெயனுடைய கடங்காரி.

"ஆ....ங்! அதையும் ஒம்புள்ள கிட்ட போய் குடு; ஒங்கொப்பன் மவளே....
நாலு நாளுல தீபாவளி வருதுடீ! அங்க கம்பெனியில பசங்க கூட கெடந்து மாரடிக்காம ஞாயித்துக்கெழம நிம்மதியா வீட்ல இருக்கணும்னு நெனச்சேன் பாரு... என்னைய அடிச்சுக்கணும்!" என்று சலித்துக் கொண்டவனிடம்,

"ச்சே....ச்சே! ஒன்ன அடிச்சுக்காத! எனக்கு வலிக்கும்!" என்று சொல்லி விட்டு லேசாக எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ஜெயனின் மேனேஜரம்மா.

ஆம்.... ஜெயனின் ஏஎம் அம்மா இப்போது விஜயவாடா நகரின் ஒரு முக்கிய கிளையின் கிளை மேலாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.

நண்பன் நஸாருடைய ஆசைப்படி ஜெயன் இப்போது Perfect Shine  என்ற பெயரில் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் இவற்றை சுத்தம் செய்யும் நிறுவனத்தின் முதலாளி. வதனிக்கு விஜயவாடாவிற்கு பணி மாற்றல் கிடைத்ததும் ஜெயன் நஸாருடைய முன்பு தான் போய் நின்றான்.

"டேய் நஸாரு..... எனக்கு இங்கணக்குள்ளயே தான் இருக்கணும்னு தான்டா ஆசையா இருக்கு..... ஆனா அவள விட்டுட்டு!" என்று தயங்கியவனை முறைப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு,

"அட கொங்காப்பயலே.... வதனிப்புள்ள இங்கருந்து
கெளம்புச்சுன்னா எளங்கோவ மொதக்கொண்டு ஒங்கம்மா அது கூட கூட்டிக்கிட்டு வதனிப்புள்ள பின்னால போயிடும்! அப்புறம் ஒத்தையாளா இங்க ஒக்காந்துக்கிட்டு நீ என்னத்தடா கிழிக்கப்போற? எல்லாத்தையும் பாத்துக்கலாம்! நீயும் வதனிப்புள்ள கூடயே கெளம்புற புரியுதா?" என்று சொல்லி ஜெயனு
தைரியப்படுத்தி உற்சாகப்படுத்தி வர்த்தினியுடன் கிளம்ப வைத்ததும் இல்லாமல் அவனுக்கென இந்த தொழிலை எடுத்து நடத்த வர்த்தினியிடம் பேசியவனும் நஸாரே தான்!

"இப்ப என்னங்குற? வண்டிய ஓட்டுவியா? மாட்டியா? ஒரு முடிவு எடுத்தன்னா நாம ஆக வேண்டிய வேலையப் பாக்கலாம்!" என்று அவள் முத்தத்திற்கெல்லாம் கரையாமல் கறாராக பேசிக் கொண்டிருந்தவனிடம்,

"போடா.... பெரிய முதலாளி ஆனதுல இருந்து ரொம்பத் தான் பண்ற..... எனக்கு இன்னிக்கு கார் ட்ரைவ் பண்ற ஜெயன லவ் பண்ணனும் போல இருந்துச்சு! அதான் ட்ரைவிங் சொல்லிக் குடுன்னு சாக்கு சொல்லி கொஞ்ச நேரம் ஒன்னைய வெளிய தள்ளிட்டு வந்தேன். இந்தா ஒன்னோட மோனோலிசாவ நீயே ஓட்டு இல்ல இப்டியே இந்த க்ரௌண்டுலயே நிப்பாட்டிட்டு வா..... வர வர ஒனக்கு எம்மேல லவ்வே இல்ல வீட்டுக்கார்!" என்று சொல்லிக் கொண்டே காரை ஆஃப் செய்து ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கியவளை நினைத்து சிரித்துக் கொண்டு தலையை உலுக்கினான் ஜெயன்.

வீடு விட்டால் அலுவலகம்.... ஆறு மணிக்கு முடியும் வேலைக்கு அடுத்த இருபதாவது நிமிடத்தில் வீடு என்று தான் இருப்பதே இந்த ராட்சஸி ஒருத்தியால் தான்..... அது என்ன மாயமோ தெரியவில்லை ஒவ்வொரு நாளும் இவள் மேல் காதல் பித்து தான் பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறான். அப்படி இருந்தாலும் சில நேரங்களில் இப்படியான செல்ல சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் தான் சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை என்று நினைத்தவன் தொண்டையைச் செறுமிக் கொண்டு காரின் ஓட்டுநர் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.

"ரொம்ப கோவமா இருக்கியா? ஒரு ஐஸ்க்ரீம் வாங்கித் தாரேன்..... சாப்புடுறியா?" என்று பின்னால் திரும்பி அவளிடம் கேட்டவனிடம்,

"ஒண்ணும் வேண்டாம்! வீட்டுக்கு கூட்டிட்டுப் போ!" என்றாள் முறைப்புடன்.

பத்து நிமிடங்களில் வீட்டிற்குள் நுழைந்ததும் அப்போது தான் தூங்கி விழித்து ஹாலில் தன் பாட்டியுடன் விளையாடிக்
கொண்டிருந்த தன்னுடைய மகன் பரத்தை தூக்கி கையில் வைத்துக் கொண்டு முத்தமிட்டான் ஜெயன்.

"அப்பா.... எங்க போயிருந்த?" என்று கேட்ட மகனிடம்,

"அம்மாவுக்கு கார் ஓட்ட சொல்லிக் குடுக்க போயிருந்தேன்டா தங்கம்! அம்மா வெளையாடிட்டே இருக்கா; பரத் மாதிரி சொல்லிக் குடுத்தத ஒரு தடவையில கத்துக்க மாட்டேங்குறா! பேட் கேர்ள்!" என்று மகனிடம் மனைவியைப் பற்றி குறை கூறினான்.

மகன் பிறந்த சற்று நேரத்தில் மருத்துவமனையில் வைத்து ஜெயனிடம்,

"நம்ம பையன் எவ்ளோ அழகா இருக்கான்ல ஜெயன்....? இவனுக்கும் ஒன்ன மாதிரி ராஜாவோட பேர தான் வைக்கணும்!" என்று மகனுடைய இளஞ்சிவப்பு நிற கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னவளிடம்,

"என்ன பேரு வேணும்னாலும் வையி! வயித்துல சுமந்தது, கஷ்டப்பட்டு வலியத் தாங்கி இவன பெத்தது இதெல்லாமே நீ தான்! அதுனால இவனோட பேரும் நீ முடிவு பண்றது தான்!" என்று சொன்னான் ஜெயன்.

அப்படியும் அவள் மட்டுமே அந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் முகில்ம்மாவிடமும் சில பெயர்களை சொல்லி அவருடைய விருப்பமும் கேட்டு வைத்த பெயர் தான் பரதன்!

பரதன் அப்படியே ஜெயனுடைய தந்தையினுடைய ஜாடையில் பிறந்திருந்தான். கண்கள் மட்டும் ஜெயனுடையதைப் போல. மிதக்கும் பெரிய கண்கள். அவலாஞ்சி பயணத்தின் விளைவாக வர்த்தினியின்  வயிற்றுக்குள் வாரிசாக வந்து உதித்தவன்!

"அடேய்.... என்ன வந்து நின்னுட்டு புள்ள கிட்டயே கொஞ்சிக்கிட்டு இருக்க? பின்னால பக்கத்துல அவளுக அப்பத புடிச்சு கத்திக்கிட்டே கெடக்குறாளுக; போய் என்னன்னு கேளு போ! அதுகள நல்லா பழக்கி வச்சுருக்கான்; நானும் பாத்தாலும் பாத்தேன்! மாட்டோட இப்டி நெதம் ஒக்காந்து குசலம் விசாரிக்குற ஒருத்தனையும் ஏவாழ்க்கையில பாத்ததில்லம்மா!" என்று சொல்லி சற்றே சடைத்துக் கொண்டார் முகிலமுதம்.

"அதுங்க கூட நம்மள மாதிரியே தான் முகில்ம்மா! பொறந்ததுல இருந்து ஜெயன் அதுங்க கூட பேசுறதால அதுங்களுக்கு இப்போ இவனோட பேச்சு நல்லா புரியுது! இவன் வீட்டுக்குள்ள வந்தவொடனே இவன தேடவும் செய்யுதுங்க!" என்றாள் வதனி.

"கோமதி, எளங்கோ, சிந்து, நர்மதா.....!" என்று ஏலம் விட்டுக் கொண்டே போனவன் பின்புற ஷெட்டில் போய் கோமதிக்கும் அவளின் மூன்று குழந்தைகளுக்கும் ஃபேன் போட்டு விட்டு அவைகளுடன் சிறிது நேரம் அமர்ந்து அளவளாவி விளையாடி விட்டு வந்தான். அவன் அங்கிருந்த நேரத்தில் இங்கு முகில் வதனியிடம்,

"என்னம்மோத்தா..... இவனுக்கு நீ கோமதிய வாங்கிக் குடுத்ததுல இருந்து இவே ஒரு மாட்டுக்கார மடையனாவே ஆகிட்டான்!  நஸாருக்கும், லோகுவுக்கும் தீபாவளிக்கு என்னத்தயாவது வாங்கி வச்சியா இல்லையா? ரெண்டு பயலுவளும் எந்தங்கச்சி எனக்கு ஒண்ணும் குடுக்கலன்னு இங்கயே தேடி வந்து நின்னுரப் போறானுவ....?" என்று கேட்டார் முகில்.

"ஆளாளுக்கு பத்து பக்கத்துக்கு லெட்டர் எழுதி வச்சுருக்கேன் முகில்ம்மா..... அது போக டிசம்பர் மாச லீவுல எல்லாருமா சேந்து குருவாயூர் போயிட்டு வரணும்னு வேற சொல்லியிருக்கேன். இதுவே ரெண்டு பேருக்கும் போதும்னு நெனைக்குறேன்!

"ஏதாவது பொருள வாங்கி குடுக்குறத விட இப்டி எதாவது கதையா எழுதி அனுப்புனா தான் ரெண்டு பக்கிகளும் வாய மூடிக்கிட்டு இருக்குதுக! டூர் போற நேரத்துல பிள்ளைங்க ஆறு பேரையும் சேத்து ஒரு ஃபோட்டோ எடுக்கணும்! வருஷத்துக்கு ஒருக்க மாறிட்டே போறாங்க!" என்று கேட்டவளிடம் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் சென்றார் முகில்.

நஸார், லோகேஷ் இரண்டு பேரையும் அவள் இன்னமும் அண்ணன் என்று கூப்பிட ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவர்களுடைய பெயருக்கு பின்னால் இருந்த ஸார் என்ற கவுரவ அழைப்பு இரண்டு வருடத்தில் எங்கோ தனியாக கழண்டு போய் விழுந்து விட்டது.

"லோக்கி... இங்க சின்னதா ஒரு ப்ராப்ளம்!"

"ஜெயன் அவன் பிஸினஸ்ல என்ன பண்றான்னு அப்பப்ப பாரு நஸார்.....!" என்ற அவளுடைய உரிமையான அழைப்பே நஸாருக்கும், லோகேஷிற்கும் போதுமானதாக இருந்தது. திருமாங்கல்யத்தை  தவிர வதனி தினப்படி அணிகலனாக அணிந்திருப்பது லோகேஷ் அவளுக்கு வாங்கி தந்திருந்த அணிகலன்களைத் தான்!

ஜெயன் விஜயவாடாவிற்கு வந்ததும் அவனுடைய மோனோலிசாவை அவனிடமே அனுப்பி வைத்து விட்டான் நஸார். வண்டிக்கான விலையைக் கூட ஒருதடவை அவர்கள் இங்கு வந்த போது வதனி தான் மரியத்தின் கைகளைப் பிடித்து அவளிடம் திணித்து விட்டாள்.

"என்ன புள்ள நீயி?" என்று கோபமாக கேட்டவளிடம்,

"ஜெயன் ஓட்டுன கார அவங்கிட்டயே குடுக்கணும்னு நீங்க நெனச்சதே பெரிய விஷயம்! இதுக்கும் மேல காசு வாங்கிக்க மாட்டேன்னு சொல்லாதீங்க. எனக்கு கோபம் வரும்!" என்று சொல்லி முடித்து விட்டாள்.

வாழ்க்கையில் தானாக
கிடைத்த அன்பை
அவள்
நிராகரிக்கவும் இல்லை!

உரிமைப்பட்ட இடத்தில்
அவளுக்கு
கிடைக்காத அன்பை
மறுபடி தேடிச் சென்று
அவள்
ஏமாறவுமில்லை!

ஒரு பெண்ணாக, மனைவியாக, மருமகளாக, தங்கையாக, தோழியாக, அலுவலில் அதிகாரியாக இப்படி ஒவ்வொரு பரிமாணத்திலும் வதனி தனக்கு கிடைத்த அருமையான கணவனால் அழகியென தனித்து நின்று மிளிர்ந்தாள்..... இன்னமும்
மிளிர்வாள்!

சுபம்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro