Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 9

"அடி என் அழகு பட்டனு! நீ சொன்ன பேச்ச நான் எப்ப கேக்கல? எங்க வாப்பா கூட ஃபாரின்ல தான் போயி வேலை பாக்கப் போறேன்னு சொன்னேன். அத நீ வேண்டவே வேண்டாமுன்ன; நீ பன்னென்டாங்கிளாஸ் படிக்கும் போதே நாம ரெண்டு பேரும் நிக்கா பண்ணிக்குவோம்னு சொன்னேன்; லூசாடா நீன்னு என்னைய நல்லா திட்டிட்டு நீ பாட்டுல டிகிரி படிச்சு முடிச்ச! ரெண்டு குழந்தைங்க வேணும்னு கேட்டன்னு நான் உன்ன ரெண்டுதடவ தான் அம்மியாக்குனேன்.... ஆனா அதுல மட்டும் குதா நம்ம கேட்டத விட அதிகமா குடுத்து நம்மள கூடக்கொஞ்சம் சந்தோஷப்பட வச்சுட்டாரு!"

"இப்டி பொறந்ததுல இருந்து உம்பேச்ச தானடீ கேட்டு வாழ்ந்துட்டு இருக்கான் இந்த நஸாரு? இதுல எப்பயாச்சு ஒருக்க ஒரே ஒரு குவார்ட்டர வாங்கி நான் குடிச்சுட்டு வந்தா என்னவாம் உனக்கு?" என்று பாவம் போல பேசியவனின் பேச்சில் தெரிந்த காதலில் சொக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் மரியம்.

"அந்த ஒரு பழக்கத்த மட்டும் விட்டுடு நஸாரு! மத்தபடி நான் உன்னைய எதுக்குமே திட்ட மாட்டேன்!" என்று சொன்னவள் கணவனுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து அவனுடைய முகத்தில் மண்டியிருந்த தாடி மற்றும் மீசையை சீப்பால் வாரிக் கொண்டிருந்தாள்.

"உம்பக்கத்துல வரணும்னா அந்த வாடையே இருக்கக்கூடாதுன்னு சொல்லி சொல்லி இப்பல்லாம் நீ தண்ணிய ரொம்ப கொறைக்க வச்சுட்டடீ! மொத்தமா நிப்பாட்டணும்னா அதுக்கு கொஞ்ச நாள் ஆகும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரேன்!" என்று சொன்னவன் அவளிடம்,

"இப்டி என்னைய தனியா கட்டிப்புடிச்சிக்கிட்டு கொஞ்சறதுக்குத்தான சீக்கிரம் கெளம்புன்னு அதட்டுன? நீ குடுத்த சிக்னலு பாவம் நம்ம ஜெயனு பயலுக்கு கூட புரிஞ்சு போச்சு போலடீ! பாரு, வெளிய போயி நிக்குறன்டா மாப்புளன்னு சொல்லிட்டு அடிச்சுப் பொரண்டு ஓடியே போயிட்டான்! அவனோட அம்மா வீட்ல தனியா இருப்பாங்கடீ! நாங்க கிளம்பட்டுமா? மிச்சத்த ராத்திரில பாத்துக்கலாம்!" என்று கேட்டு அவளைப் பார்த்து கண்சிமிட்டினான்.

"இதுல மட்டும் நல்லா வெவரமா இரு! ஜெயனு அண்ணன அவரு வீட்ல உட்டுட்டு, நீயும் சீக்கிரத்துல வீட்டுக்கு வந்து சேரு! இன்னிக்கு கண்டிப்பா குடிக்கக்கூடாது; உங்கிட்ட இன்னிக்கு நான் நிறைய பேசணும்; வேலை இருக்கு!" என்று அவன் கழுத்தைச் சுற்றி கைகளால் வளையமிட்டவளின் இடையை இறுக்கி அணைத்தான் அவள் கணவன்.

"சும்மா இருக்குறவன இப்டியே கட்டிப்புடிச்சு, காதக் கடிச்சு, உசுப்பேத்தி உட்டுட்டு உம்மேல பாய வச்சுடுவ! அதுக்கு அப்புறம் என்னையத்தான் திட்டுவ..... யேய் பட்டனு! நைட்டு வரைக்கும் தாங்காது போலிருக்குடீ; இங்க தான் யாருமேயில்லல்ல? உதட்டுல மட்டும் ஒண்ணே ஒண்ணுடீ.....!" என்று ஏக்கமாக கேட்டவனிடம் இருந்து சற்றுநேரம் மன்றாடி சிரமப்பட்டு விலகியவள்,

"உன்னைய இங்க வரச்சொன்னா என் மூளைக்கும், மனசுக்கும் என்னமோ கோளாறு புடிச்சுடுது நஸாரு! எல்லாம் வீட்ல வந்து பாத்துக்கலாம்; இப்ப கெளம்பு போ!" என்று சொல்லி விட்டு ஒரு பெருமூச்சுடன் தலையை சிலுப்பிக் கொண்டு தன்னுடைய அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தபடி சென்றாள் மரியம்.

"உங்க அம்மா, அவளோட அப்பா, அம்மா, மூணு பிள்ளைங்க இவங்க எல்லாத்தையும் குறையில்லாம பாத்துக்கணும்! இதுல உனக்கு வேற நீ தனியா நேரம் கேட்டா உம்பொண்டாட்டி என்ன தான்டா பண்ணுவா பாவம்.... ஆனா அந்த புள்ளையவும் சும்மா சொல்லக்கூடாதுடா மாப்ள; வேலைக்கு வேலையும் ஆச்சு! அப்பப்ப உன்னைய மேய்க்குற சாக்குல வந்து பார்த்துக்கிட்ட மாதிரியும் ஆச்சுன்னு உனக்காக என்னமா யோசிக்குறா! நீ குடுத்து வச்சவன்டா!" என்று இன்று காலையில் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நண்பன் பேசிய பேச்சின் நியாபகம் வந்து சிரித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் நஸார்.

"பட்டு சேலையில
நிலவை பக்கம்
பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில்
வானவில்லை இன்றே
பார்க்கின்றேன்

தங்கத்துக்கே
சங்கிலியா
செங்கமலத்துக்கே
மல்லிகையா

தேன் உண்ணும்
திருவாயை நான்
உண்ணும்
நாள் வந்ததோ
ஓ.... ஓ....ஓஹோஹோ!" என்று காரில் பாட்டு பாடிக் கொண்டே வந்தவனைப் பார்த்து எரிச்சலடைந்த ஜெயன்,

"எலே.... சும்ம ஓ ஓன்னு ஒப்பாரி வைக்காம வாடா!" என்று சொல்ல நண்பனுடைய வார்த்தையால்
நஸாருடைய இதயத்தில் கனம் கூடி விட்டது.

"ஏன்டாலேய்... ஒனக்கு ஏன்டா பாட்டுன்னாலே இம்புட்டு அலர்ஜியா இருக்கு? காருல போறப்ப, வாரப்ப நிறைய நேரம் நீயி எஃப்எம்ம தான் கேக்கணும்; இல்ல கஸ்டமர் இஷ்டப்படுற பாட்ட போட்டு உடணும், பெறகேன்டா ஒனக்கு பாட்டுன்னாலே பிடிக்க மாட்டேங்குது?" என்று கேட்ட நண்பனிடம்,

"ஒரு பாட்ட போட்டு உடுங்கன்னு சொல்லிட்டு பின்னால ஒக்காந்து வர்றவங்களோட தொல்ல தாங்க முடியலடா நஸாரு! கைய கோத்துக்குறது, தோள்ல படுத்துக்குறது, மடியில சாஞ்சுக்குறது இப்டி ஏகப்பட்ட சிலுமிசத்த வண்டியில ஓடுற பாட்ட கேக்குற மூடுல செய்றாங்களாமாம்! இதக் கேக்குறவன் என்ன கேனப்பயலா? மத்தவங்களுக்காக பாட்ட போட்டு போட்டு, எனக்கு இப்ப யாராவது பாடுறத இல்ல பாட்டு கேக்குறதயோ பாத்தாலே பிடிக்கலடா மாப்ள! பாட்டே ஒருமாதிரி அலர்ஜியா இருக்குது!" என்ற தன் நண்பனின் பேச்சைக் கேட்டு சிரித்தவன்,

"அது ஒண்ணுமில்லடா மச்சி..... மத்தவிய்ங்க ஜோடியா ஜாலியா இருக்காங்களே, நமக்கு அப்டி செட் ஆகலையேங்குற வயித்துக்கடுப்பா இருக்கும் ஒனக்கு! ஏதாவது நல்ல சூரணம் வாங்கி சாப்டு.... அந்த கடுப்பு சரியாகிடும்!" என்று சொல்ல ஜெயன் பக்கவாட்டில் திரும்பி நஸாரை முறைத்தான்.

"சரி! சரி மொறைக்காத! அம்மாவுக்கு உடம்பு தொடைக்க, பாத்ரூம் போகுறதுக்காக ஹெல்ப் பண்ணன்னு ஒரு வேலையாள போடணும்னு சொல்லிட்டு இருந்தியே? அதுக்கு ஒரு ஆள் பாத்துட்டியாடா?" என்று கேட்டான் நஸார்.

"நான் எங்க ஆள எல்லாம் பாத்தேன்.....? அவ தான் அதுக்கு எல்லாம் விடவேயில்லயே? காலையில அஞ்சரை மணிக்கு மாடியில இருந்து கீழ எறங்கி வர்றவ பல் தேய்ச்சு விடுறது, பாத்ரூம் போக, குளிக்க வைக்கிறது, மதிய சாப்பாட அவங்க படுத்துருக்குற பெட்டுக்கு பக்கத்துல இருக்கிற டேபிள்ல எடுத்து வச்சுட்டுப் போறதுன்னு கொஞ்சங்கூட முகம் சுளிக்காம
ஒவ்வொரு வேலையிலயும் அம்மாவ அப்டி பாத்துக்குறாடா!"

"நிஜமா சொல்றேன். அவ இல்லையின்னா அம்மாவுக்கு காலுல போயி ஏன்டா அடிபட்டதுன்னு ஒவ்வொரு நாளும் யோசிச்சு புலம்பிட்டு இருந்துருப்பேன். இப்ப அந்த கஷ்டம் கஷ்டமாவே தெரியல. அமுதாம்மா படுத்தும் வீட்ல எந்த வேலையும் நடக்காம தேங்கி நிக்கல. அதான் அவகிட்ட நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுட்டேன்!" என்று பேச்சு இதுவரை பளிங்கு பாதையில் செல்வது போல சுமூகமாக சென்று கொண்டிருக்க அந்தப் பேச்சின்  கடைசி வரியில் ஒரு பெரிய ப்ரமிடு வடிவ ஸ்பீடு ப்ரேக்கரை சொருகினான் ஜெயன்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro