Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 6

"ஓ அதைத்தவிர என்ன வேணும்னாலும் சொல்லலாமா....? அப்ப சரி! நான் நிறைய யோசிச்சுட்டேன்! நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா பர்வதவர்த்தினி?" என்று கேட்டவனுடைய கேள்வியில் கண்களை பெரிதாக விரித்தவள், அவனை ஒரு விநோத ஜந்துவை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

"மிஸ்டர்..... முழுசா என்னோட பேர் தெரியுமா ஸார் உங்களுக்கு? பாத்து பத்தே நாள் ஆன பொண்ணு கிட்ட எந்த தைரியத்துல இப்டி ஒரு கேள்விய கேப்பீங்க நீங்க?
வாழ வழியே இல்லய்யா; ஏதாவது காசு, பணம், வேலை, வாழ்க்கை இதுல எதையாவது பிச்சையாப் போடுங்கன்னு உங்க கிட்ட நான் வந்து கேட்டேனா ஸார்?" என்று கோபக்குரலில் அவனிடம் கேட்டவளிடம்,

"உனக்கு நான் பேசுனது சரியா கேக்கலையா இல்ல நீ எம்பேச்ச சரியா கவனிக்கலையான்னு தெரியலம்மா! நான் இங்க வந்ததுல இருந்து ரெண்டு மூணு தடவ உன் பேரச் சொல்லி கூப்ட்டேன்; உன் பேர் கூட எனக்கு தெரியாதுங்குற! உன் பேரு மட்டும் இல்ல பர்வதவர்த்தினி; இப்ப உன்னோட வாழ்க்கை வரலாறே எனக்குத் தெரியும்.....!"

"பொதுவா அமுதாம்மாவோட  மனசுல எதுவுமே ரகசியமா நிக்காது; நீ வேற அவங்கட்ட புழிஞ்சு புழிஞ்சு அழுவுறியா? அவங்க எதோ சீரியல் கதைய சொல்ற மாதிரி எங்கிட்ட எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிப்புடுறாங்க! வாழ வழியே இல்லன்னுட்டு யாரும் யார்கிட்டயும் வாழ்க்கைய பிச்சையா கேட்டெல்லாம் வாங்க முடியாதும்மா! எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அத உங்கிட்ட வந்து சொல்றதுக்கு என்ன பெரிசா தைரியம் வேணும்ங்குற? ம்ம்ம்! எப்டி சொல்லி புரிய வைக்குறது உனக்கு.....?"

"கல்யாணம்னு ஒண்ணு பண்ணுனா இந்த மாதிரி பொண்ணோட தான்யா பண்ணிக்கிடனும் அப்டின்னு ஒவ்வொரு பையனும் அவனோட மனசுக்குள்ள ஒரு பொண்ண பத்தி எதிர்பார்ப்பு வச்சுருப்பான்ல..... அந்த எதிர்பாப்புக்கு பக்காவா பொருந்திப் போற பொண்ணு நீ!" என்று கேட்டவனிடம் தன் தலையில் இருந்த ஸ்கார்ஃபை கழட்டி விட்டு நின்றவள்,

"நானா....?" என்று அழுத்தமான பார்வையுடன் அவனிடம் கேட்டாள்.

"ஆமா.... நீயே தான்! அதென்ன நானான்னு உன்னைய நீயே மேலயும் கீழயுமா ஒரு லுக்கு உட்டுட்டு கேக்குற? என்ன கொறைச்சல் உனக்கு? நல்ல மனசு இல்லையா? நல்ல குணம் இல்லையா? தன்மையான பேச்சு இல்லையா? அனுசரணையான இயல்பு இல்லையா? என்ன இல்ல உங்கிட்ட?"

"அந்த ஆக்ஸிடென்ட பாத்தவுடனே எரிச்சல்ல ஹை ஸ்பீட்ல வந்துட்டு முட்டிக்கிட்டு சாவுங்கடான்னு திட்டிக்கிட்டே தான் எங்கார அங்கிருந்து எடுத்துட்டுப் போனேன். இப்டி ஒரு நல்ல பொண்ணும், அவளோட குடும்பமும் பிரச்சனையில மாட்டி தவிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னு அப்ப எனக்குத் தெரியாது.... உன்னைய பாத்துருந்தேன்னா, கொறைஞ்சபட்சம் அந்த வார்த்தையவாவது சொல்லாம இருந்துருப்பேன்!" என்று வருத்தப்பட்டவனிடம்,

"சரி விடுங்க ஸார்!  உங்க மேல தப்பேயில்லாம உங்களுக்கு அடிபட்டதுக்கு அப்புறமும் அன்பை குடுக்குறதுக்கு நீங்க என்ன கடவுளா? முடிஞ்சத பத்தி இனிமே எத்தன தடவ பேசுனாலும் எதுவும் மாறிடப் போவுதா? விடுங்க!" என்றவளிடம்,

"அதெப்டி விடுறது? நீ ஏன் இப்போ உன்னைய அப்டி ஒரு பார்வை பாத்துக்கிட்ட? மனுஷப் பயலுகளையெல்லாம் கடவுள் இரும்பால படைக்கலேயேம்மா? என்ன..... ஆக்ஸிடென்ட்ல அடிபட்டு எனக்கு கன்னம் கிழிஞ்சு போச்சு; உனக்கு மண்டை கிழிஞ்சு போச்சு! என்ன...... என்னைய விட உனக்கு கொஞ்சம் அதிகமா கிழிஞ்சிருந்தது. அதுனால அவிய்ங்க பாதி வெட்டி உட்ட உன் தலமுடிய நீ முழுசா ஷேவ் பண்ணியிருக்க.... அவ்ளோதான? இதுல என்ன இருக்கு?" என்று கேட்டு தோளைக் குலுக்கினான்.

"ம்ஹூம்! இது சரியில்ல! மனசுல இருக்குறத உள்ளயே வச்சுக்க முடியாம, நான் முகில்ம்மா கிட்ட சொன்னா, நீங்க அத க்ராஸ்டாக்ல கேக்குற மாதிரி கேட்டுட்டு இப்டி வந்து நிக்குறது கொஞ்சங்கூட சரியில்ல ஸார்! நான் வேணும்னா உங்க எதிர்பாப்புக்கு பக்காவா பொருந்திப் போற பொண்ணா இருக்கலாம்; அதுனால நீங்க எங்கிட்ட இப்டி வந்து பேசலாம்!
ஆனா எனக்கு இனிமே லைஃப்ல கல்யாணம்ங்குற பேச்சுக்கே இடமில்ல ஸார்!"

"பனிரெண்டு நாளுக்கு அப்புறம் அந்த..... விஷயம் நடந்துருந்தா, நான் வினோத்தோட பொண்டாட்டியா இருந்துருப்பேன்; இப்ப அவரோட காதலியா இருக்கேன். அவ்வளவு தான் வித்தியாசம்! அதுக்காக வேற யாரையும் என் வாழ்க்கையில அவரோட இடத்துல வச்சு..... ம்ஹூம்! வாய்ப்பே இல்ல; என்னை மன்னிச்சுடுங்க! இனிமே இந்த மாதிரி எப்பவுமே எங்கிட்ட பேசாதீங்க! உங்களுக்கு குடுக்க வேண்டிய பணத்த குடுத்துட்டாலும், நான் இங்கயே தான் இருப்பேன். ஸோ தயவுசெய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க!" என்று அவனைப் பார்த்து கைகூப்பினாள்.

"இங்கயே தான் இருப்பேங்குற? போறப்ப, வர்றப்ப என் கண்ணுல பட்டுட்டே வேற இருக்க! எனக்கு உன்னை பிடிச்சுருக்குது வேற.... ஆனா என்னைய டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு வேற சொல்ற? நான் என்னம்மா செய்யட்டும்? சும்மாவே கல்யாணத்துக்கு போட்டோவுல பொண்ணுங்கள பாக்குறது சலிச்சுப் போயி அத நிறுத்தியே வச்சுருந்தேன்; இனிமே.... நீ சொன்ன மாதிரிதான் ம்ஹூம் அதுக்கு வாய்ப்பேயில்ல! உன்னோட அவரை மாதிரி நினைச்சு நீ எங்கிட்ட பழக வேண்டாம்! அம்மாவ பாக்குற நேரம், அவங்க கிட்ட நீ பேசுற மாதிரி எங்கிட்டயும் பேசவாவது செய்யலாமேம்மா? ஆரம்பத்துலயே கேட் போட்டா நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டவனிடம்,

"இல்ல.... இதெல்லாம் எப்பயுமே சரியா வராது ஸார்!" என்று பயத்தில் கையசைத்தவளிடம்,

"ஷு! இதுக்கு மேல நீ ஒண்ணும் பேசக்கூடாது! நாம ப்ரெண்ட்ஸா தான் இருக்கப்போறோம். என்னடா இந்த ஆளு நம்ம சொல்றத கொஞ்சம் கூட காதுல வாங்கிக்காம மெரட்டுறானேன்னு நீ நினைச்சுக்கிட்டாலும் சரி தான்! இனிமே என்னைப் பாக்கும் போது நீ தலையக் குனிஞ்சுட்டு விறுவிறுன்னு நடக்கக்கூடாது புரியுதா?" என்று கேட்டவனை,

"ஏன்டா.... இருக்குற அரை உயிரை கையோட எடுக்குற மாதிரியே பேசுற?" என்ற கேள்வியோடு முறைத்துக் கொண்டிருந்தாள் வதனி.

"நாம்போயி பருப்ப வேகப்போட்டு உருளைக்கிழங்க பொடி பொடியா வெட்ட ஆரம்பிக்குறேன். நீ இப்ப நாம பேசுனத பத்தி ரொம்ப நேரம் யோசிச்சுட்டே நிக்காம சீக்கிரத்துல கீழ எறங்கி வந்துடு என்னம்மா?" என்று அவளிடம் சொல்லி விட்டு படிகளில் இறங்கிச் சென்றான் ஜனமேஜயன்.

"பிறந்ததுல இருந்து இன்னிக்கு வரைக்கும் நான் கேட்டது எதையாவது நீ எனக்கு ஒழுங்கா குடுத்துருக்கியா? என் வாழ்க்கையில வேலை ஒண்ணே ஒண்ணத் தான் நான் சந்தோஷமா ஜெயிச்சு, அத ரொம்ப பிடிச்சு செஞ்சுட்டு இருக்கேன். அதையும் இப்ப போனானே ஒருத்தன் அவனால விட்டுட்டு போகணும்ங்குற ஒரு நிலைமைக்கு என்னை தள்ளிடாத! தயவுசெய்து நான் உங்கிட்ட கேக்குற ஒண்ணு ரெண்டு வேண்டுதலையாவது கொஞ்சம் காதுல வாங்கிக்க முயற்சி பண்ணு!" என்று போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த
கற்பகாம்பாளிடம் வேண்டுதலை வைத்துக் கொண்டு வதனியும் சமையலை கவனிக்க கீழிறங்கினாள்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro