Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 54

"என்ன..... என்ன அமுதாம்மா? எப்டி ஒரு நெலமையில வதனிப்புள்ளய இங்க கூட்டிக்கிட்டு வந்த.... அது நம்மள எப்டி கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிடுச்சு இதெல்லாம் மறந்து போயிருச்சு ஒனக்கு? அவ என்ன உம்பொண்டாட்டியாவா ஆகிட்டா? இத ஏன் செய்யல, அத ஏன் செய்யலன்னு எப்டி உரிமை கொண்டாடுவ அவ கிட்ட?"

"அந்தப்புள்ள மனசுக்குள்ள எதையாச்சு நெனச்சு மறுகிட்டே கெடக்குன்னு சொல்லிட்டு தான நெதம் அவ கிட்ட செத்தப் போயி பேசிட்டு வந்த..... அந்த நல்லதனமெல்லாம் இன்னிக்கு காலையில எங்க மேயப் போச்சு? வதனிப்புள்ள உம்பொண்டாட்டியாவே இருந்துருந்தாலும், இன்னிக்கு நீ செஞ்ச காரியம் தப்பு......"

"அதென்ன கேக்குறதுக்கு யாருமில்லன்னு அத்துமீறுற புத்தி? வெட்டிருவேன் பாத்துக்க...... வதனிக்கு ஒரு பிரச்சனையும் வராம பாத்துக்க நான் இருக்கேன்! நீ மேல போயி அவ கிட்ட பேசி, அவள சமாதானம் பண்ணிக் கிழிச்சதெல்லாம் போதும்...... இனிமே தேவையில்லாம அந்த மாடிப்படியில கால வச்சுப் பாரு; பேசிக்குறேன்!" என்று சொன்ன முகிலமுதம் மகனிடத்தில் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி விட்டு பெரிது பெரிதாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார்.

"தப்புதான் அமுதாம்மா.... ஏதோ புத்தி கெட்டுப் போயி வர்த்தினிட்ட அப்டி மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன். இனிமே அப்டிப்பட்ட தப்ப நெனச்சுக் கூட பாக்க மாட்டேன்! அதுக்காக அவள ஒரேடியா பாக்கவே வேணாம்னு எல்லாம் சொல்லாத அமுதாம்மா...... அது எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்!" என்று சொன்னவனிடம்,

"இந்த அறிவு முன்னாலயே இருந்துருக்கணும் ஒனக்கு! அது அம்மாவோ, கூடப் பொறந்தவுகளோ, கட்டிக்கிட்டவளோ,
பெத்துக்கிட்டதுகளோ, கூட வேல பாக்குறவங்களோ, அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களோ யாரா இருந்தாலும் சரி தான்....... பொம்பளைங்கள மதிக்க தெரிஞ்ச ஒரு மனுஷந்தான் ஜெயனு உண்மையிலயே ஒரு நல்ல ஆம்பளயா இருப்பான்....."

"இன்னிக்கு அவள விட ஒஒடம்புல அதிகமா பலம் இருக்குங்கறதால நீ அவள கட்டாயப்படுத்துற..... நாளைக்கு ஒங்கொழந்தய அவ வயித்துல வச்சுருக்கும் போது அந்த மூணு கிலோ உயிர விட அவளுக்குத் தான் பலம் அதிகம்; உள்ள இருக்குறத கஷ்டப்படுத்தணும்னுட்டு அவளே அவ வயித்துல பலத்த காட்டி குத்திக்கிட்டான்னா.......?" என்று அவனிடம் கேட்டுக் கொண்டிருந்த தன்னுடைய தாயின் வாயை அவசரமாக மூடியவன்,

"எம்மா தாயி..... எங்கருந்து நீ எங்க வரைக்கும் போற புண்ணியவதி? அப்டியெல்லாம் வர்த்தினி புள்ள பைத்தியக்காரத்தனமா எதையும் செஞ்சு வக்க மாட்டா; ஒரு காட்டுப்பூவ கூட பறிக்குறதுக்கு எட்டு யோசன யோசிக்குறவ...... வயித்துல இருக்குற உசுரப் போயி கஷ்டப்படுத்தி..... ம்ஹூம்; போம்மா; நீயும் உன் கற்பனையும்?" என்று சொல்ல அவனிடம்,

"இப்ப வலிக்குதுல்ல ஜெயனு உனக்கு? ஏன்...... உம்புள்ளைக்கு கஷ்டம் வந்துருமுன்னு நெனச்சு தான? அதே கஷ்டம் அடுத்தவன் புள்ளைக்கு வந்தா பரவாயில்ல..... அப்டித்தான?" என்று கேட்டார்.

"அதான் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றேன்ல அமுதாம்மா? நீ இரு. நான் போயி இப்பவே அவ கால்ல விழுவுறேன். போதுமா?" என்று சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியேறப் போனான் ஜெயன்.

அவனது டீஷர்ட்டை பின்னிருந்து கொத்தாகப் பற்றியவர்,

"ஒன்னைய மாடிக்கு ஏறாதன்னு கொஞ்ச முன்னால தான் சொன்னேன். மறந்து போயிடுச்சா ஒனக்கு?" என்று கேட்க ஜெயன் செய்வதறியாமல் திகைத்து பின் சலிப்பில் உச்சுக்கொட்டினான்.

"இப்ப என்ன தான் செய்ய சொல்ற என்னைய?" என்று கேட்டவனிடம்,

"காய்கறிக் குருமா ரெடியாகிடுச்சு! இன்னும் செத்த நேரத்துல சப்பாத்தியும் செஞ்சுடுவேன். சத்தமில்லாம சாப்ட்டுட்டு கட்டில்ல கவுந்தடிச்சு தூங்குன்னு சொல்றேன்!" என்று அவனிடம் முகில் சொல்லிக் கொண்டிருக்கையில் வதனி ஜெயனுடைய வீட்டிற்குள் நுழைந்தாள்.

"இந்தா வந்துட்டால்ல..... ஒன்னோட குருமாவ வாசம் புடிச்சுட்டு தான் கீழ ஒடியாந்துருப்பா அமுதாம்மா; இவளால நம்மள உட்டுட்டு தனியா எல்லாம் பொங்கி திங்க முடியாது. என்ன ஹெட்லைட்டு?" என்று கேட்டவனிடம் புரியாத பார்வையுடன்,

"நான் எப்ப தனியா சாப்டப் போறேன்னு சொன்னேன்?" என்று அவனிடம் கேட்டபடி கிச்சனுக்குள் நுழைந்து சப்பாத்திக் கட்டையை எடுத்துக் கொண்டிருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன் தன் தாயை சகட்டுமேனிக்கு முறைத்துக் கொண்டிருந்தான்.

"நாலு நாளு எனக்கு லவ்டேல்ல ஒரு பங்களாவ சுத்தம் பண்ணித் தர்ற வேல இருக்குது அமுதாம்மா. நஸாரு இங்க பாத்துக்குவான்; நான் அங்கணக்குள்ள இருந்துக்குவேன்; வீட்டுக்கு வந்துட்டு வந்துட்டுப் போனா, வேலைய சொன்ன நேரத்துக்குள்ள முடிச்சு தர முடியாது!"

"பொய்ய சொல்லி என்னைய கிறுக்கனாக்கி வெளையாடிக்கிட்டு இருக்கல்ல நீயி..... நாலு நாளைக்கு என் தொந்தரவு இல்லாம ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க!" என்று கோபத்துடன் சொன்னவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான்.

"என்னாச்சு முகில்ம்மா? எதுக்காக திடீர்னு இப்டி கத்திட்டு ரூமுக்குள்ள போயிட்டான்?" என்று கேட்ட வதனியிடம்,

"எங்கிட்ட வாங்குன அறை அப்டி; நீ வேலையப் பாரு வதனிம்மா! அவங்கெடக்குறான்!" என்று சொல்லி விட்டு மகனை கண்டுகொள்ளாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்த முகிலமுதத்திடம்,

"நீங்க டீவி பாருங்க முகில்ம்மா; நான் சப்பாத்திய போட்டு எடுக்குறேன்!" என்று சொல்லி விட்டு பிசைந்து வைத்திருந்த மாவை சப்பாத்தியாக தேய்த்துக் கொண்டிருந்தாள் வதனி.

"எனக்குப் பசிக்குது. எம்புட்டு நேரம் அத உருட்டிக்கிட்டே இருப்ப?" என்று அறைக்கதவை திறந்து கத்தியவனிடம் மெதுவான குரலில்,

"நான் இப்பதான் மாவ கையிலயே தொட்டேன்!" என்றாள் வதனி.

"அப்ப நான் சப்பாத்திய போட்டு எடுக்குறேன்; நீ தேய்ச்சு குடு!" என்று சொன்னவன் அன்னையின் ஏளனப் பார்வையை கண்டுகொள்ளாமல் சமையலறைக்குள் நுழைந்தான்.

முகிலமுதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சமையலறைக்கு வந்த அவளிடம் அவளுக்கு மட்டும் கேட்கும்படியான மெதுவாக,

"இன்னிக்கு நைட்டும் நம்மள டீலுல உட்டுராத! இன்னும் நாலு நாளைக்கு வேற என் நைட்டு கோட்டா எனக்குக் கெடைக்காது!" என்று ஜெயன் தாபக்குரலில் அவளிடம் சொல்ல வதனிக்கு கன்னங்கள் ரெண்டும் சிவந்தது.

"முகில்ம்மா தூங்குனதுக்கு அப்புறமா மேல வா ஜெயன்!" என்று ரகசியக் குரலில் சொன்னவளிடம் கிட்டத்தட்ட அதே டெஸிபலில்,

"எங்க மேல வர்றது? அமுதாம்மா தான் என் செவுள்ளலயே ஒண்ணு விட்டு இனிமே மாடிப்படியில காலயே வைக்கக் கூடாதுன்னு சொல்லிடுச்சே?" என்றான் தலைகவிழ்ந்த படி.

"சரி அப்போ எங்கயாவது வெளிய போகலாம்!" என்று சொன்னவளிடம் ஒரு ரகசிய சிரிப்பை உதிர்த்தவன்,

"சாப்ட்டுட்டு மேல ஏறாம வெயிட் பண்ணு. எஸ்ஸாகிடுவோம்!" என்றான் பெருவிரல் உயர்த்தி.

"ஜெயனு.... பசிக்குதுன்னு அலறிக்கிட்டு இருந்தல்ல? சாப்ட வாடா!" என்று அழைத்த முகிலமுதம் அன்று அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை டீவியைத் தான் ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

இருபது நிமிடங்களுக்குப் பின்னர் கிச்சனுக்குள் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வதனி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஜெயனைப் பார்த்து,

"நீ போய்ப் படுக்கல?" என்று கேட்டார் முகில்.

"படுக்கணும். அதுக்குள்ள என்ன அவசரம் அமுதாம்மா?" என்று கேட்டவனிடம்,

"ரூமுக்குள்ள போயிட்டு போன நோண்டிக்கிட்டு கெட. நான் இன்னிக்கு ஹால்ல படுத்துருக்குறேன். வதனிம்மா நீ மேல கெளம்புடா!" என்று வரிசையாக ஜெயனின் அனைத்து ப்ளானுக்கும் செக்மேட் வைத்தார் முகில்.

"குட்நைட் முகில்ம்மா! குட்நைட் ஜெயன்...!" என்று சற்று ஏமாற்றத்தோடு இருவருக்கும் இரவு வாழ்த்து உரைத்து விட்டு வீட்டிற்கு வெளியே சென்று படிக்கட்டுகளில் ஏறியவளிடம்,

"என்னைய இங்க தனியா விட்டுட்டு மேல போவாதடீ!" என்று கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

"என்ன அண்ணாந்து பாத்து தாடைய தடவிக்கிட்டு கெடக்க....? போ.... உள்ள போயி நேரங்காலத்துல தூங்கு!" என்று சொன்ன அன்னையிடம் ஒன்றும் பேசாமல் தன்னுடைய அறைக்குள் சென்று கதவைச் சாற்றிக் கொண்டான் ஜெயன்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro